Showing posts with label பிரம்மன். Show all posts
Showing posts with label பிரம்மன். Show all posts

Wednesday, 2 March 2022

திரிபுரவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 108

(திரிபுரவதவ்ருத்தாந்தம்)

Tripura annihilated | Bhavishya-Parva-Chapter-108 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : திரிபுரமெனும் அசுரர்களின் ஆகாய நகரங்கள் மூன்றும் சிவனால் அழிக்கப்பட்டது...

Shiva in chariot and vishnu as bull

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பிராமணரே, முக்கண்ணனான மஹாதேவன் மூன்று நகரங்களுக்கு ஒப்பான விமானங்களில் வானில் பயணித்த அசுரர்களின் மகன்களை எவ்வாறு கொன்றான்? இது குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(1)

Wednesday, 7 July 2021

பிரம்ம வாக்கியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 43

(கஷ்யபாதீந்ப்ரதி ப்ரஹ்மவாக்யம் க்ஷிரோதஸ்யோத்தரே தீரே கஷ்யபாதேர்கமநம் தபஷ்சர்யா ச)

Brahma instructs the devas to go to Vishnu | Bhavishya-Parva-Chapter-43 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் :  பதிவின் சுருக்கம்: பிரம்மனின் சொற்கள்; கசியபரும், அதிதியும் வேண்டிய வரம்; பாற்கடலின் வடகரையில் தவமிருந்த தேவர்கள்...

Lord Vishnu and Goddess Lakshmi in Milk ocean Ksheer Sagar Parkadal

பிரம்மன் {தேவர்களிடம்}, "பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களே, உங்கள் வரவின் நோக்கத்தை நான் அறிந்தேன். ஓ! முன்னணி சூரர்களே, உங்கள் நோக்கம் நிறைவேறும்.{1} தானவர்களில் {அதிதியின் மகன்களின் வழிதோன்றலில்} முதன்மையான பலியை வெல்லப்போகும் அண்டத்தின் தலைவன், மூவுலகங்களையும் வெல்பவன் மட்டுமல்லாமல், தேவர்களாலும் வழிபடத்தகுந்தவனாக இருக்கிறான்.{2,3}

கசியபரிடமும், பிரம்மனிடமும் சென்ற தேவர்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 42

(தேவகணை꞉ ஸஹ கஷ்யபாதித்யோர்-ப்ரஹ்மஸதநகமநகதநம்)

The gods go to Kashyapa for finding out means for the destruction of Bali | Bhavishya-Parva-Chapter-42 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : அதிதியிடம் சென்ற இந்திரன்; தேவர்களை பிரம்மலோகம் அழைத்துச் சென்ற கசியபர்; பிரம்ம சபை வர்ணனை...

Brahmas Hall

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளர்களிலும், முனிவர்களிலும் முதன்மையானவரே, தைத்தியர்களால் {திதியின் மகன்களால்} வெல்லப்பட்ட தேவர்கள் {அதிதியின் மகன்கள்}அதன்பிறகு என்ன செய்தனர்? அவர்கள் தேவலோகத்தை எவ்வாறு மீட்டனர்?" என்று கேட்டான்.(1)

Saturday, 3 July 2021

நரசிம்ம அவதாரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 37

(ந்ருஸிம்ஹாவதாரம்)

The man-lion incarnation of Vishnu: Hiranyakashipu's prayer to Brahma | Bhavishya-Parva-Chapter-37 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : அரிய வரங்களைப் பெற்ற ஹிரண்யகசிபு; நரசிங்க அவதாரம்; ஹிரண்யகசிபுவின் அரண்மனை வர்ணனை...

Hiranyakashipu Threatens Prahlada

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, நான் இதுவரை விஷ்ணுவின் வராக அவதாரத்தைக் குறித்து உனக்கு விளக்கிச் சொன்னேன். இனி அந்தத் தலைவன் {விஷ்ணு}, ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரசிங்க அவதாரத்தைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(1) முன்னர், கிருத யுகத்தில் தைத்திய குலத்தை நிறுவிய மன்னன் ஹிரண்யகசிபு பெருந்தவங்களைச் செய்து வந்தான்.(2) அவன் அசையாமல் இருக்கும் பொருளென ஐயாயிரத்து ஐநூறு {5500} ஆண்டுகள்[1] மௌன விரதம் நோற்று, நீருக்கடியில் வாழ்ந்து வந்தான்.(3) அவனுடைய தற்கட்டுப்பாடு, புலனடக்கம், ஓழுங்குமுறைகள் ஆகியவற்றில் பிரம்மன் பெரும் நிறைவடைந்தான்.(4)

Wednesday, 30 June 2021

அதிகாரப் பகிர்வு | பவிஷ்ய பர்வம் பகுதி – 33

(லோகாநாமாதிபத்யவ்யவஸ்தாபநம்)

Various kings are appointed by Brahma | Bhavishya-Parva-Chapter-33 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : அண்டத்தின் அரசுரிமையில் அமர்த்தப்பட்ட இந்திரன்; பல தேவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படல்...

Lord Brahma creating the univers

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பாரதா, தலைவன் {பிரம்மன்}, சூரியனைப் போன்று பிரகாசம் கொண்ட சக்ரனை {இந்திரனை} மூவுலகங்களுக்கும், தேவர்களுக்கும் மன்னனாக நியமித்தான்.(1) வஜ்ரதாரியும், கவசம் தரித்தவனுமான ஜிஷ்ணுவை அதிதி பெற்றெடுத்தாள். நுண்ணறிவுமிக்கவனும், ஸ்மிருதிகளின் புரவலனுமான அவன் அத்வர்யுக்களால் துதிக்கப்படுகிறான்.(2) தலைவன் சக்ரன், அதிதிக்குப் பிறந்ததும் குசப்புல்லால் மறைக்கப்பட்டான் என்பதால் அந்தத் தேவர்களின் மன்னன் கௌசிகன் என்ற பெயரையும் பெற்றான்.(3) பிரம்மன், ஆயிரங்கண் புரந்தரனை மேலான தலைவனாக நியமித்துவிட்டுப் பிற அரசுகளைப் படிப்படியாகப் பகிர்ந்தளித்தான்.(4)

Tuesday, 29 June 2021

வேதங்கள் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 32

(ஹிரண்யகர்பாத்யுத்பத்திகதநம்)

The creation of Vedas | Bhavishya-Parva-Chapter-32 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹிரண்யகர்பனின் பிறப்பு; காயத்ரி, சாவித்ரி, வேதங்கள் படைக்கப்பட்டது; பிரம்மனின் சந்ததி; தக்ஷன், கசியபர், மனு, தர்மன், சந்திரன்...

One Universe among unlimited material universes

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு அண்டத்தைப் படைக்க விரும்பிய தலைவன் சிந்திக்கத் தொடங்கினான். இவ்வாறு அவன் தியானித்துக் கொண்டிருந்த போது அவனுடைய வாயில் இருந்து ஒரு புருஷன் வெளியே வந்தான்.(1)

Thursday, 24 June 2021

தக்ஷ வேள்வியின் அழிவு | பவிஷ்ய பர்வம் பகுதி – 28

(தக்ஷயஜ்ஞவிநாஷம்)

Siva obstructs Daskha's Sacrifice and Hari fights with him | Bhavishya-Parva-Chapter-28 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : குதிரைவேள்வி செய்த தக்ஷன்; ருத்திரனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் நடந்த போர்; அவிர்ப்பாகம் பெற்ற ருத்திரன்; பௌஷ்கரப் புராணம்...

Daksha and Lord Shiva

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பாரதா, அதன் பிறகு அவர்கள் அனைவரும் அமைதியுடன் வாழ்ந்தனர், செழிப்பான அரசும் நிலைநாட்டப்பட்டது. அந்நேரத்தில் ஆன்ம அறிவியலின் அறிவைப் பொறுத்தவரையில் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாததால் அவர்கள் ஒன்றாகவே ஆத்ம ஞானத்தை விளைவித்தனர். மறுபுறத்தில் பலர் அழுதனர்; மனிதர்களால் அளிக்கப்படும் வேள்விக் காணிக்கைகளைத் தேவர்கள் ஏற்றனர்.(1,2)

Monday, 21 June 2021

பிருதுவின் பதவியேற்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 26

(பிருதுராஜ்யாபிஷேககதநாதி)

An account of Prithu and the churning of the ocean | Bhavishya-Parva-Chapter-26 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பிருது அரியணையில் நிறுவப்பட்டது; பெருங்கடலைக் கடையும் திட்டம் உருவானது...

churning-of-milk-ocean

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "உலகம் முழுவதிலும் அகங்காரமும், அறியாமையும் இவ்வாறு நீடித்திருந்தபோது மக்கள் என்ன செய்தனர்?" என்று கேட்டான்.(1)

Monday, 31 May 2021

தேவாசுரப் போரின் தொடக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 23

(ஈஷபக்திமாஹாத்ம்யம்)

The beginning of fight between Devas and Daityas | Bhavishya-Parva-Chapter-23 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : கசியபரையும், அவரது மகன்களையும் வேள்வி செய்யத் தூண்டிய பிரம்மன்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் தொடங்கிய போர்; விஷ்ணு கொடுக்கும் சத்வ குணம்...

War between devas and asuras

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வேதங்களை நன்கு அறிந்தவர்களும், சடங்குகளை {செயல்களைத்} தவிர்த்ததால் பாவங்கள் அண்டாதவர்களும், நாரதரின் தலைமையிலானவர்களுமான ரிஷிகளும், கந்தர்வர்களும், அந்தப் பிராமணர்களின் முன்னிலையில் சூரியனையும், சந்திரனையும் நிறுத்தி அவர்களை வழிபட்டனர். மேலும் அவர்கள் தந்தையைத் துதிக்கும் ஒரு மகனைப் போல எப்போதும் பெரும்பாட்டனை {பிரம்மன்} வழிபட்டனர்.

Monday, 24 May 2021

யோகத்தின் பயன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 20

(ப்ரவ்ருத்திதர்மபலம்)

The fruits of Yoga | Bhavishya-Parva-Chapter-20 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : தக்ஷன் மகள்களைப் பெற்றது; அவர்களை தர்மன், கசியபர், சோமன் ஆகியோருக்குக் கொடுத்தது; யோகத்தின் பயன்கள்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, கல்வியின் அனைத்து வகைகளிலும் பொருளாக இருக்கும் என நான் நினைக்கும் நித்திய பிரம்மனைக் கொண்ட திரேதா யுகத்தைக் குறித்து நான் அறிய விரும்புகிறேன்" என்றான்.(1)

Sunday, 23 May 2021

மனத்தில் நிலைத்த சிந்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 18

(மநோதாரணவிசாரம்)

The creation of Gandharvas etc | Bhavishya-Parva-Chapter-18 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : அப்சரஸ்கள், கந்தர்வர்கள் ஆகியோரும், சரஸ்வதி தேவியும் மற்றும் பல உயிரினங்களும் படைக்கப்பட்டது; மெய் அறிவியல்களான பிரம்ம யோகம், சாங்கிய யோகம்...


Brahma and Saraswati

வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, "பெரும்பாட்டன் {பிரம்மன்}, தூய புத்தியின் வடிவை ஏற்றுத் தன் மனத்திறன்களின் மூலம் மொத்த படைப்பையும் கருதிப்பார்த்து, புறப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தன் உள் ஆன்மாவை விலக்கி பிரம்மத்தை அடைவதற்கான செயல்களில் ஈடுபடுகிறான். மனக்குவிப்பில் ஈடுபட்டும், பிரம்மத்துடன் ஐக்கியமடைந்தும் அவன் தன் மனத்தால் சந்ததியைப் படைத்தான்.{1,2} எல்லாம் வல்லவனான பிரம்மன் தன் கண்களின் மூலம் அழகிய அப்சரஸ்களையும், தன் மூக்கின் நுனியில் இருந்து தும்புருவையும், பலவண்ண ஆடைகளை உடுத்தியவர்களும், வேதங்களை ஓதுவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும், இசைக்கருவிகளை இசைப்பதிலும் திறன் படைத்தவர்களும், நூற்றுக்கணக்கானவர்களும், ஆயிரக்கணக்கானவர்களுமான கந்தர்வர்கள் பிறரையும் படைத்தான்.{3,4}

Sunday, 2 May 2021

பிரம்மனின் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 14

(பிரஹ்மணோ மாநஸபுத்ராணாமுத்பத்தி)

Brahma's creation | Bhavishya-Parva-Chapter-14 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரம்மனின் மானஸபுத்ரர்கள்; படைப்பு குறித்த விரிவான வர்ணனை...


Brahma's creation

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நீண்ட கைகளைக் கொண்டவனும், பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவனுமான பிரம்மன், அந்தத் தாமரையில் அமர்ந்து, தன் கைகளை உயர்த்தியபடி கடுந்தவத்தைச் செய்தான்.{1} தன் சொந்த பிரகாசத்தில் எரிந்து கொண்டிருந்த அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த யோகியான பிரம்மன், ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியனைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.{2}

Thursday, 29 April 2021

புஷ்கரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 12

(ஸர்வபூதோத்பத்தி꞉)

A description of the earth | Bhavishya-Parva-Chapter-12 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : தாமரையில் பிரம்மனை நிறுவிய நாராயணன்; தாமரையில் வளரும் உறுதியான வேர்களாக மலைகள்....


Lord Brahma

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அப்போது, நித்தியனான ஹரி, பெரும்பிரகாசம் கொண்டதும், பூமியின் குணங்களையும், அடையாளங்களையும் கொண்டதும், பல யோஜனைகள் நீளம் பரந்ததுமான அந்தத் தங்கத் தாமரையில் பிரம்மனை வைத்தான்.{1} யோகிகளில் முதன்மையானவனும், உயிரினங்கள் அனைத்தின் மனமாக இருப்பவனும், அவற்றின் படைப்பாளனுமான அவன், அனைத்தையும் நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான்.{2} புராணங்களை நன்கறிந்த பெரும் முனிவர்கள், நாராயணனின் மேனியில் தோன்றி, பூமியை ஆதரிப்பது இந்தத் தாமரை என்று விளக்குகின்றனர்.{3}(1-3)

Tuesday, 27 April 2021

பொற்றாமரை மலர்ச்சி | பவிஷ்ய பர்வம் பகுதி – 11

(மஹாபத்மோத்பத்தி꞉)

The creation of a lotus after dissolution | Bhavishya-Parva-Chapter-11 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : வசிஷ்டரின் பிறப்பு; ஆகாயம், ஒலி, காற்று ஆகியன படைக்கப்பட்டது; பொற்றாமரை படைப்பு....


Golden Lotus

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தலைவன் {நாராயணன்}, பிராமண முனிவரான ஆபவ வசிஷ்டராகப் பிறப்பெடுத்து, தன் உடலெனும் கொள்கலத்தை மறைத்துத் தவம் பயிலத் தொடங்கினான்.(1) அதன் பிறகு, அண்டத்தின் ஆன்மாவும், அளவற்ற சக்திகளைக் கொண்டவருமான பெரும் வசிஷ்டர், ஐம்பூதங்களையும், பிற உயிரினங்களையும் படைக்க நினைத்தார்.{2}

Wednesday, 10 March 2021

ஹரிஹர ஐக்கியம் | விஷ்ணு பர்வம் பகுதி – 183 – 127

(பிரஹ்மவாக்யாத்க்ருஷ்ணபாணயோர்யுத்தநிவ்ருத்தி꞉ பிதாமஹஜிஜ்ஞாஸயா மார்கண்டேயகர்த்ருகம் ஹரிஹரமாஹாத்ம்யகீர்தனம் ஸ்தவகதனம் ச)

The earth goes to Brahma; Markandeya explains how Brahma, Vishnu, Siva are one | Vishnu-Parva-Chapter-183-127 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சிவனைக் கலங்கடித்த கிருஷ்ணன்; பிரத்யும்னன் செய்த போர்; சிவனிடம் பேசிய பிரம்மன்; சிவ விஷ்ணு ஐக்கியம் நிறுவப்படல்; ஹரிஹராத்மகத் துதி...


Encounter between Shiva and Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{வைஷ்ணவ ஆயுதத்தால்} (சிவனின்) முக்கண்களும் எரிந்து கொண்டிருந்த போது, உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின; நந்தியும், ருத்ரனும், அவனது தேரும் புலப்படவில்லை.(1) அப்போது கோபத்தாலும், பலத்தின் காரணமாகவும் இரண்டு மடங்கு பிரகாசத்துடன் எரிந்து கொண்டிருந்த ருத்ரன், நான்கு பக்கங்களிலும் கூரிய ஈட்டிகளைக் கொண்டதும், திரிபுரமெரிக்கப் பயன்பட்டதுமான தன் கணையை {சதுர்முகப் பாணத்தை} எடுத்துக் கொண்டான்.(2) அந்த முக்கண் தேவன், அந்தக் கணையை எடுத்துத் தன் வில்லில் பொருத்தி அதை ஏவ முற்பட்டபோது, அனைவரின் மனங்களையும் அறியும் உயரான்ம வாசுதேவன் {கிருஷ்ணன்} அதை அறியவந்தான்.(3) அதன்பிறகு, கரநளினம் கொண்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான புருஷோத்தமன் ஜிரும்பணம் {கொட்டாவி} எனும் ஆயுதத்தை எடுத்து, அதைக் கொண்டு ஹரனைக் கொட்டாவி விட வைத்தான் {அவனைச் சோம்பியிருக்கச் செய்தான்}.(4) அசுரர்களையும், ராட்சசர்களையும் வெல்பவனும், வில், கணைகளுடன் கூடியவனுமான தெய்வீக ஹரன், அந்தக் கணையால் கலக்கமடைந்து, நனவை இழந்தான்.(5) {சக்தியால் செருக்கில் இருந்த பாணன், வில், கணைகளுடன் கூடிய ஹரன் கொட்டாவி விடுவதைக் கண்டு அவனைத் தூண்டினான்}.

Wednesday, 18 November 2020

அசுரர்களின் நகரம் - ஷட்புரம் | விஷ்ணு பர்வம் பகுதி – 139 – 083

(ஷட்புரவதம்)

An account of the city of Asuras | Vishnu-Parva-Chapter-139-083 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரம்மன் அசுரர்களுக்கு அளித்த வரம்; பிராமணர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தேவர்களால் கொல்லப்படாதவர்களான அசுரர்கள்; அசுரர்களுக்கு வழிகாட்டிய சிவன்...

Lord Brahma

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! வியாசரின் சீடரே, ஓ! அறநெறிகளை அறிந்தவரே, ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, ஓ! வைசம்பாயனரே, பாரிஜாத மரம் அபகரிக்கப்பட்ட கதையைச் சொன்ன போது, பயங்கரம் நிறைந்த அசுரர்களின் வசிப்பிடமான ஷட்புரத்தைக் குறித்தும் நீர் குறிப்பிட்டீர்.(1) ஓ! தவசிகளிலும், முனிவர்களிலும் முதன்மையானவரே, அந்த அந்தகாசுரர்களின் அழிவை இப்போது சொல்வீராக" என்று கேட்டான்.(2)

Thursday, 28 May 2020

விஷ்ணுவின் மறுமொழி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 55

(விஷ்ணும் ப்ரதி ப்ரஹ்ம வாக்யம்)

Vishnu's reply | Harivamsha-Parva-Chapter-55 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நாரதரிடம் பேசிய விஷ்ணு; சாபத்தின் காரணமாக கசியப முனிவர் வஸுதேவனாகப் பிறந்திருப்பதை விஷ்ணுவுக்குச் சொன்ன பிரம்மன்; வஸுதேவனின் மகனாகப் பிறக்கத் தீர்மானித்த விஷ்ணு...

Vishnu Narada and Brahma

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவர்களை ஆள்பவனும், தலைவனுமான மதுசூதனன், நாரதரின் சொற்களைக் கேட்டுப் புன்னகைத்தவாறே {பின்வரும்} மங்கலச் சொற்களில்,(1) "ஓ! நாரதா, மூவுலகங்களின் நன்மைக்காக நீ என்னிடம் சொன்ன சொற்கள் அனைத்திற்கும் உரிய மறுமொழியைக் கேட்பாயாக.(2) இந்தத் தானவர்கள் அனைவரும் மனித வடிவங்களை ஏற்றுப் பூமியில் பிறந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.(3) கம்ஸனும், பூமியில் உக்ரசேனன் மகனாகப் பிறந்திருக்கிறான் என்பதை அறிவேன். கேசி ஒரு குதிரையாகப் பிறந்திருக்கிறான் என்பதையும் அறிவேன்.(4) குவலயப்பீடன் என்ற யானையையும், சாணூரன் மற்றும் முஷ்டிகன் என்ற மற்போர்வீரர்களையும், காளையின் வடிவில் இருக்கும் தைத்தியன் அரிஷ்டனையும் நான் அறிவேன்.(5) கரனையும், பேரசுரன் பிரலம்பனையும் நான் அறிவேன். பலியின் மகளான பூதனையையும் நான் அறிவேன்.(6) வினதையின் மகனிடம் {கருடனிடம்}[1] கொண்ட அச்சத்தால் யமுனையில் புகுந்து அங்கே வாழும் காளியனை நான் அறிவேன்.(7)

[1] "பாம்புகளை உண்பவனான கருடன்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

மன்னர்கள் அனைவரின் தலைவனான ஜராசந்தன், பிராக்ஜ்யோதிஷ நகரத்தில் வாழும் நரகாசுரனையும் நான் நன்கறிவேன்.(8) பூமியில் சோணிதபுரம் என்ற நகரத்தில் பாணன் ஒரு மனிதனாகப் பிறந்திருக்கிறான். ஆயிரம் கரங்களைக் கொண்டவனும், ஆற்றல்மிகுந்தவனும், செருக்கு நிறைந்தவனுமான அந்த அசுரன் தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். பாரதவர்ஷத்தின் பெரும்பொறுப்பு என்னைச் சார்ந்தது என்பதையும் நான் அறிவேன்.(9,10) இந்த மன்னர்கள் அனைவரும் எவ்வாறு காணாமல் போவர்கள் என்பதையும் நான் அறிவேன். மனித வடிவில் இருப்பவர்களும், போர்க்களத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவர்களுமான அந்தத் தானவர்களின் அழிவையும், சக்ரலோகத்தின் மகிழ்ச்சியையும் நான் காண்கிறேன்.(11) நான் எனக்காகவும், பிறருக்காகவும் யோகத்தில் நுழையப் போகிறேன். நான், மனிதர்களில் உலகிற்குச் சென்று, மனித வடிவை ஏற்று, கம்ஸனின் தலைமையில உள்ள அந்த வலிமைமிக்க அசுரர்கள் அனைவருக்கும் அழிவைக் கொண்டு வருவேன். எந்த வழிமுறையின் மூலம் அவன் {கம்ஸன்} அமைதியை அடைவானோ அவ்வழிமுறையிலேயே நான் அவனைக் கொல்வேன்.(12,13) என் யோகத்தின் மூலம் நான் இந்த வழிமுறைகள் அனைத்தையும் வகுப்பேன். தேவர்களின் எதிரிகள் அனைவரையும் போரில் அழிப்பதே என் தற்போதைய கடமையாகும்.(14) பூமியின் சார்பாகவும், என் ஆணையின் பேரில் பூமிக்கு இறங்கி வந்த தேவர்கள், ரிஷிகள் மற்றும் கந்தர்வர்கள் அனைவரின் சார்பாகவும் தங்களைத் தியாகம் செய்த பெருமைமிக்கவர்கள் அனைவரின் பகைவரையும் நான் கொல்வேன்.(15) ஓ! நாரதா, நான் ஏற்கனவே இதைத் தீர்மானித்துவிட்டேன். பெரும்பாட்டன் பிரம்மன் அங்கே எனக்கு ஒரு வீட்டை அமைக்கட்டும்.(16) ஓ! பெரும்பாட்டனே, நான் எந்த நாட்டில் பிறந்து, எந்த வீட்டில் வாழ்ந்து அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {நாராயணன்}.(17)

பிரம்மன், "ஓ! தலைவா, ஓ! நாராயணா, வெற்றிக்கான திறவுகோலையும், பூமியில் உன் பெற்றோராகப் போவது யார் என்பதையும் என்னிடம் கேட்பாயாக.(18) உன் குடும்பத்திற்கு மகிமையேற்படுத்தும் வகையில் நீ யாதவர்களின் குலத்தில் பிறக்கப் போகிறாய்.(19) நன்மைக்காக இந்த அசுரர்களை ஒழித்தும், உன் பெருங்குடும்பத்தைப் பெருக்கியும் நீ மனித குல வகைகளை {வர்ணங்களை} நிறுவுவாய். இது குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(20)

ஓ! நாராயணா, பழங்காலத்தில் உயரான்ம வருணன் பெரும் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தபோது, அந்த வேள்விக்குப் பால்தரும் பசுக்கள் அனைத்தையும் கசியபர் அபகரித்தார்.(21) கசியபர், அதிதி மற்றும் ஸுரபி என்ற இரு மனைவிகளைக் கொண்டிருந்தார். அவர்கள் வருணனிடம் இருந்து பசுக்களை ஏற்க விரும்பவில்லை[2].(22) அதன்பிறகு என்னிடம் வந்து தலைவணங்கிய வருணன், "ஓ! மதிப்புமிக்கவரே, ஆசான் என் பசுக்கள் அனைத்தையும் அபகரித்துச் சென்றார்.(23) ஓ! ஐயா, அவரது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்ட பின்னரும் அவர் அந்தப் பசுக்களைத் திருப்பித் தரவில்லை. அவர் தமது மனைவியரான அதிதி மற்றும் ஸுரபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.(24) ஓ! தலைவா, என்னுடைய பசுக்களான அவை அனைத்தும் தெய்வீகமான, நித்தியமான பாலை விரும்பும்போதெல்லாம் தரக்கூடியவையாகும். அவை, தங்கள் சக்தியாலேயே தங்களைப் பாதுகாத்துக் கொண்டு கடல்களில் திரிந்து வருபவையாகும்.(25) தேவர்களின் அமுதத்தைப் போல அவை இடையறாமல் பால் தரக்கூடியவை ஆகும். கசியபரைத் தவிர அவற்றைக் கவர்ந்து செல்ல வேறு எவராலும் இயலாது.(26) ஓ! பிரம்மா, தேர்ந்தவராக இருந்தாலும், ஆசானாக இருந்தாலும், யாராக இருந்தாலும் ஒருவர் வழிதவறினால் அவரைக் கட்டுப்படுத்த வேண்டியவர் நீரே. எங்கள் உயர்ந்த புகலிடமாக இருப்பவர் நீரே.(27) ஓ! உலகின் ஆசானே, தங்களுக்குரிய வேலையைச் செய்யாத சக்திவாய்ந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படாவிட்டால் உலகில் ஒழுங்கு நீடிக்காது.(28) நீர் எல்லாமறிந்தவரும், அனைத்தின் தலைவருமாவீர். என் பசுக்களை என்னிடம் தந்தால் நான் பெருங்கடலுக்குச் செல்வேன்.(29) இந்தப் பசுக்களே என் ஆன்மாவாகவும், எனக்கு எல்லையற்ற பலத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன. உமது படைப்புகள் அனைத்திலும் பசுக்களும், பிராமணர்களும் சக்தியின் நித்திய பிறப்பிடங்களாவர்.(30) பசுக்களே அனைத்திலும் முதன்மையாகக் காக்கப்பட வேண்டியவை. அவை பாதுகாக்கப்படும்போது, அவை பிராமணர்களைப் பாதுகாக்கின்றன. பசுக்களையும், பிராமணர்களையும் பாதுகாப்பதன் மூலம் உலகம் ஆதரிக்கப்படுகிறது" என்றான் {வருணன்}.(31)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பழங்காலத்தில் மழையின் தேவனான உயரான்ம வருணன் ஒரு வேதச் சடங்கைச் செய்து கொண்டிருந்தபோது, அந்த வேள்விக்குப் பால்தருபவையும், வருணனுடையவையுமான கறவைப்பசுக்கள் அனைத்தையும் கசியபர் கைப்பற்றினார். கசியபரின் மனைவியரான அதிதி மற்றும் சுரபி ஆகிய இருவரும், பசுக்களைத் திருப்பித் தருமாறு வருணன் அவர்களிடம் பலமுறை வேண்டிக் கேட்டாலும் அவனுக்கு அவற்றைத் திருப்பித்தர மறுத்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பழங்காலத்தில் உயரான்ம வருணன் ஒரு வேள்வியைச் செய்தான். எனினும் கசியபர் அந்த பெரும் வேள்விக்குப் பால் தரும் பசுக்களை அபகரித்தார். அதிதி மற்றும் சுரபி ஆகிய இருவரும் கசியபரின் மனைவியராக இருந்தனர். வருணன் அவர்களை வேண்டிக் கொண்டும் அவர்கள் பசுக்களைத் திருப்பித் தரவில்லை"" என்றிருக்கிறது.

ஓ! அச்யுதா, நீரின் மன்னனான வருணனால் இவ்வாறு சொல்லப்பட்டும், பசுக்கள் களவாடப்பட்டது உண்மையென்பதை அறிந்தும் நான் கசியபனை சபித்தேன்.(32) பசுவைக் களவு செய்த உயரான்ம கசியபனின் அந்தக் கூறுடன் {அம்சத்துடன்} அவன் பூமியில் ஒரு கோபாலனாக {இடையனாகப்} பிறப்பான்.(33) தேவர்கள் பிறப்பதற்கான மரத்துண்டுகளைப் போன்றவர்களும், அவனது மனைவியருமான ஸுரபி மற்றும் அதிதி ஆகிய இருவரும் அவனுடனேயே செல்ல வேண்டும்.(34) அவர்களுடன் கோபாலனாகப் பிறந்து அங்கே மகிழ்ச்சியாக வாழ்வான். கசியபனைப் போன்றே சக்திமிக்க அவனது கூறானவன் {அம்சமானவன்}, வஸுதேவன் என்ற பெயரைப் பெற்று, பூமியில் பசுக்களுக்கு மத்தியில் வாழ்வான். மதுராவுக்கு அருகில் கோவர்த்தனம் என்ற பெயரில் ஒரு மலை இருக்கிறது.(35,36) கம்ஸனுக்குக் கப்பம் கட்டி வாழும் அவன் {கசியபன் / வசுதேவன்}, பசுக்களிடம் பற்று கொண்டவனாக இருப்பான். அவனது மனைவியரான அதிதி மற்றும் ஸுரபி ஆகிய இருவரும் தேவகி மற்றும் ரோஹிணி என்ற பெயரில் வசுதேவனின் இரு மனைவிகளாகப் பிறப்பார்கள்.(37,38) அவன் ஒரு கோபாலனின் குணங்கள் அனைத்தையும் கொண்ட ஒரு சிறுவனாகப் பிறந்து, முன்பு மூன்று காலடிகளைக் கொண்ட உன் வடிவில் நீ வளர்ந்ததைப் போலவே வளர்வான்.(39) ஓ! மதுசூதனா, உலகின் நன்மைக்காக (யோக) வடிவில் உன்னை மறைத்துக் கொண்டு நீ அங்கே செல்வாயாக.(40) உன் வெற்றி மற்றும் ஆசிகளுக்கான வியப்பொலிகளுடன் கூடிய தேவர்கள் அனைவரும் உன்னை வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர்.(41) நீ பூமிக்கு இறங்கி, ரோஹிணி மற்றும் தேவகி ஆகியோருக்கு பிறந்து அவர்களை நிறைவடையச் செய்வாயாக. ஆயிரக்கணக்கான கோபகன்னிகைகளும் {கோபியரும்} பூமியை மறைத்திருப்பார்கள்.(42) ஓ! விஷ்ணு, நீ காட்டில் பசுக்களை மேய்த்துத் திரிந்து வரும்போது, அவர்கள் காட்டு மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் உன் அழகிய வடிவைக் காண்பார்கள்.(43) ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, ஓ! பெருந்தோள்களைக் கொண்ட நாராயணா, கோபாலர்களின் கிராமங்களில் நீ சிறுவனாகச் செல்லும்போது மக்கள் அனைவரும் சிறுவர்களாவார்கள் {சிறுவர்களைப் போலாகிவிடுவார்கள்}.(44) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவனே, காட்டில் பசுக்களை மேய்த்து, மேய்ச்சல் நிலங்களில் ஓடி, யமுனையின் நீரில் நீராடும் அவர்கள் உன்னிடம் பெரும்பற்றும் ஆர்வமும் கொண்ட கோபாலர்கள் அனைவரும் தங்கள் மனங்களை உனக்கே அர்ப்பணித்து, உனக்கு உதவி செய்வார்கள். வஸுதேவனின் வாழ்வு அருளப்பட்டதாக இருக்கும்.(45,46) நீ அவனைத் தந்தை என்றும், அவன் உன்னை மகன் என்றும் அழைப்பீர்கள். கசியபனைத் தவிர வேறு எவனை உன்னால் தந்தையாக ஏற்க முடியும்?(47) ஓ! விஷ்ணு, அதிதியைத் தவிர வேறு எவளால் உன்னைக் கருவில் கொள்ள முடியும்? எனவே, ஓ! மதுசூதனா, தன்வயமான யோகத்துடன் நீ வெற்றியை நோக்கிச் செல்வாயாக. நாங்கள் எங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குச் செல்லப் போகிறோம்" என்றான் {பிரம்மன்}".(48)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தலைவன் விஷ்ணு, தேவர்களைத் தேவலோகத்திற்குச் செல்ல ஆணையிட்டுவிட்டுப் பாற்கடலின் வடக்குப் பகுதியில் உள்ள தன் வசிப்பிடத்திற்குச் சென்றான்.(49) இந்தப் பகுதியில், மேரு மலையில், நடந்து செல்வதற்கு மிகக் கடினமானதும், சூரிய கணநிலை நேரத்தில் அவனது மூன்று காலடிகளைக் கொண்டு வழிபடப்படுவதுமான ஒரு குகை {பார்வதி குகை} இருக்கிறது.(50) எல்லாம்வல்லவனும், நுண்ணறிவுமிக்கவனுமான ஹரி, அந்தக் குகையில் தன் பழைய உடலை விட்டுவிட்டு, தன் ஆன்மாவை வசுதேவனின் இல்லத்திற்கு அனுப்பினான்" என்றார் {வைசம்பாயனர்}[3][4].(51)

[3] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "தேவர்களைத் தங்கள் தெய்வீக உலகங்களுக்குச் செல்ல அனுமதித்த விஷ்ணு, மேரு மலை குறுக்கிடும் தன் வசிப்பிடமான பாற்கடலின் வடக்குப் பகுதிக்குச் சென்றான். இந்த வடக்குப் பகுதியில் இருக்கும் அந்த மலையில் ஆழமானதும், ஊடுருவ முடியாததுமான பார்வதி குகை இருக்கிறது. அங்கே மூன்று காலடிகளில் நடந்தவனும் குள்ளச் சிறுவனுமான வாமனனாக இருந்த விஷ்ணுவின் காலடித்தடங்கள் இருக்கின்றன, அந்தக் காலடித்தடங்கள் மங்கல நாட்களின் போது வழிபடப்படுகின்றன. அப்போது அந்த விஷ்ணு, தன் இன்றியமையாத வடிவத்தை அந்தக் குகையில் எவ்வாறு வைக்கலாம் என்பதையும், மனிதகுலத்தில் தன் எதிர்காலத் தந்தையான வசுதேவனின் இல்லத்தில் எவ்வாறு தான் இணைய வேண்டும் என்பதையும் சிந்தித்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "விஷ்ணு, தேவர்களைச் சொர்க்கத்திற்குச் செல்ல அனுமதித்தான். அவன் க்ஷீரோதக் கடலின் {பாற்கடலின்} வடக்கில் இருக்கும் தன் உலகத்திற்குச் சென்றான். அங்கே மேரு மலையில் ஊடுருவிச் செல்ல மிகக் கடினமானதும், பார்வதி என்ற பெயரைக் கொண்டதுமான ஒரு குகை இருக்கிறது. மூன்று காலடிகளைக் கொண்டவனின் காலடித் தடங்கள் அங்கே இருக்கின்றன, மங்கலத் தருணங்களில் அவை எப்போதும் வழிபடப்படுகின்றன. அந்தப் புராதன இடத்தில் ஹரி தன் உடலை ஓய்வில் கிடத்தினான். அந்தத் தலைவன், தான் வஸுதேவனின் இல்லத்தில் பிறக்கும் வகையில் தன் ஆத்மாவை யோகத்தில் பூட்டினான்" என்றிருக்கிறது.

[4] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் ஹரிவம்சத்தின் முதல் பர்வமான ஹரிவம்ச பர்வம் நிறைவடைகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் முதல்பர்வம் நிறைவடையும் குறிப்புக் கொடுக்கப்படாமல், அடுத்தடுத்த அத்யாயங்களுக்கு அடுத்தடுத்த அத்யாய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 55ல் உள்ள சுலோகங்கள் : 51

 ***ஹரிவம்சத்தின் முதல் பர்வமான ஹரிவம்ச பர்வம் முற்றும்***

***அடுத்தது இரண்டாம் பர்வமான விஷ்ணு பர்வம்***

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Saturday, 23 May 2020

சந்தனுவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 53

(தேவ அம்ச அவதரணம்)

The account of Santanu's family | Harivamsha-Parva-Chapter-53 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பூமியின் நலத்துக்காக பிரம்மனிடம் வேண்டிய தேவர்கள்; பழங்காலத்தில் நடந்தவற்றைச் சொன்ன பிரம்மன்; பெருங்கடலுக்கும், கங்கைக்கும் சாபம் கிடைத்தது; எதிர்காலத்தில் நடக்கப்போவதையும் சொன்ன பிரம்மன்...

Lord Brahma

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பூமியின் சொற்களைக் கேட்ட பிறகு, அவளது நோக்கத்தைக் குறித்து நுட்பமாகச் சிந்தித்த தேவர்கள், பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்},(1) "ஓ! தலைவா, உயிரினங்கள் அனைத்தின் உடல்களைப் படைத்தவர் நீரே. உலகங்கள் அனைத்தின் தலைவன் நீரே. சுமையில் இருந்து பூமியை நீர் விடுவிப்பீராக.(2) ஓ! தலைவா, பேரிடரில் இருக்கும் பூமியின் நோக்கத்தை நிறைவேற்ற விரும்பினால், மஹேந்திரன், யமன், வருணன், வளங்களின் மன்னன் {குபேரன்}, நாராயணன், சந்திரன், சூரியன், காற்றானவன் {வாயு}, ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்திரர்கள், உலகின் குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்}, தெய்வீக மருத்துவர்களான அஸ்வினிகள், சாத்யஸ்கள், பிருஹஸ்பதி, சுக்ராச்சாரியர், காலன், கலி, மஹேஷ்வரன், கார்த்திகேயன் {முருகன்}, யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், சாரணர்கள் ஆகியோர் மற்றும் பெரும்பாம்புகள், பறவைகள், பெரும் மலைகள், கங்கையின் தலைமையிலான ஆறுகளின் பெரும் அலைகளைக் கொண்ட பெருங்கடல்கள் ஆகியனவும் செய்ய வேண்டிய கடமைகளைத் தாமதமில்லாமல் உறுதிசெய்வீராக.(3-8) ஓ! பெரும்பாட்டனே {பிதாமஹரே}, எங்கள் பிறவிக்கூறுகளை {அம்ஸ அவதாரங்களை} கீழே அனுப்பவது எவ்வாறு? எங்களை வானத்தில் உலவும் மன்னர்கள், பூமியில் நடக்கும் மன்னர்கள், அரசவை பிராமணர்கள் மற்றும் பிற இளவரசர்களின் குடும்பங்களில், எந்தப் பெண்ணிடமும் பிறக்காத உடல்களைப் படைக்கவிடுவீராக[1]" என்றனர்.(9-10)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஓ! பெரும்பாட்டனே, தேவர்களாகிய நாங்கள் பூமியைக் காப்பாற்றக்கூடிய முன்மாதிரியான அவதாரங்களை எவ்வழியில் எடுக்க வேண்டும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக. நாங்கள் உமது உத்தரவின் பேரில் எங்களை நாங்களே மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறோம். நீர் விரும்பும் எந்த வடிவையும் ஏற்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். எனவே, வானுலாவிகளாகப் போவது யாவர்? பூமியில் இருக்கப்போவது யாவர்? பிராமண சபைகளின் உறுப்பினர்களாகப் போவது யாவர்? மன்னர்களின் குலங்களில் பிறக்கப்போவது யாவர்? கருவறையற்ற பிறவிகொள்ளப் போவது யாவர்? யார் எந்த உடலை ஏற்க வேண்டும் என்பதை தயவுகூர்ந்து எங்களுக்குச் சொல்வீராக" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இவர்கள் எக்கூறுகளை ஏற்க வேண்டும் என்பதை விரைவாக இவர்களுக்குச் சொல்வீராக. பூமியின் பணியை நிறைவேற்றவும், மன்னர்களுக்கு மத்தியில் பிணக்கை உண்டாக்கவும் இஃது ஏற்படப்போகிறது. ஓ! பெரும்பாட்டனே, எங்களில், பல்வேறு கூறுகளாகப் பிறக்கச்செய்ய செயல்படப் போகிறவர்கள் யாவர்? சொர்க்கத்தில் எஞ்சியிருக்கப் போகிறவர்கள் யாவர்? பூமியில் மன்னர்களாகப் பிறக்கப் போகிறவர்கள் யாவர்? பிராமணர்களுக்கு மத்தியில் துணைப் புரோகிதர்களாக இருக்கப் போகிறவர்கள் யாவர்? பூமியில், கருவறைகளில் இருந்து பிறக்காத உடல்களை உண்டாக்கப் போகிறவர்கள் யாவர்?" என்றிருக்கிறது.

தேவர்கள் அனைவராலும் துதிக்கப்படுபவனும், அனைத்தின் பெரும்பாட்டனுமானவன் {பிரம்மன்}, ஒரு பொதுவான காரியத்திற்காக ஒன்று திரண்டிருக்கும் தேவர்களின் இந்தப் பெருந்தீர்மானத்தைக் கேட்டு, அவர்களிடம்,(11) "ஓ! முன்னணி தேவர்களே, உங்கள் தீர்மானத்தை நான் பெரிதும் விரும்புகிறேன். நீங்கள் உங்கள் சக்தியைக் கொண்டு பூமியில் உங்கள் உடல்களின் கூறுகளைப் படைப்பீராக {அவதாரம் செய்வீராக}.(12) முன்னணி தேவர்களான நீங்கள் அனைவரும் உங்கள் சக்தியுடன் பூமியில் இறங்குவீராக. நீங்கள், மூவுலகங்களின் செழிப்பை அடைந்து, சுமையில் இருந்து பூமியை விடுவிப்பீராக.(13) பழங்காலத்தில் அவளது சுமை குறித்து எனக்குத் தெரியவந்தபோது, அதை அகற்றுவதற்கு நான் என்ன செய்தேன் என்பதைக் கேட்பீராக.(14) 

பழங்காலத்தில் நான் கிழக்குக் கடலின் மேற்குக் கரையில் என் பேரனான பெரும் கசியபனுடன் அமர்ந்திருந்தேன்.(15) வேதங்கள் தொடர்பாக ஏற்கனவே விளக்கப்பட்ட பல்வேறு கருப்பொருட்களையும், புராணங்களில் இருந்து வேறு பகுதிகள் பலவற்றையும் {கசியபனுக்கு} நான் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.(16) இவ்வாறு நான் உரையாடிக் கொண்டிருந்தபோது, உடல்வடிவங்களுடன் கூடிய மருத்துகள், பெருங்கடல் மற்றும் கங்கையுடன் சேர்ந்து நீங்கள் அனைவரும் என்னிடம் வந்தீர்கள்.(17) சந்திரனின் துணையுடன் கூடிய பெருங்கடலானவன், நீர்வாழ் விலங்குகளுடன் கூடிய பலவண்ண உடையை உடுத்திக் கொண்டு விரையும் அலைகளுடனும், பவளங்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு, சிப்பிகள் மற்றும் முத்துகளுடன் ஒளிரும் உடலுடனும், நீர் நிறைந்த ஒரு மேகத்தைப் போல முழங்கிக் கொண்டு என்னை வீழ்த்திவிடுபவனைப் போலத் தன் கரைக்கு வந்தான். உப்பு நீரை வீசியெறிந்து அந்த இடத்தைக் கலங்கடித்தான்.(18-20)

பெருங்கடலானவன் தன் நீரால் அந்த இடத்தைத் தாக்க இருந்தபோது, நான் அவனிடம், "அமைதியாக இருப்பாயாக" என்ற சொற்களைக் கோபத்துடன் சொன்னேன்.(21) "அமைதியாக இருப்பாயாக" என்று நான் சொன்ன உடனேயே அவன் ஒரு வடிவத்தை ஏற்றான். தன் அலைகள் அனைத்துடன் அசையாமல் இருந்த அவன், நல்ல அரச அருளுடன் {நல்ல கம்பீரமான தோற்றத்துடன் / ராஜஷ்ரியஜ்வலனாக} அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(22) உங்களுக்கு நன்மையைச் செய்யவும், சுமையில் இருந்து பூமியை விடுவிக்கவும் விரும்பிய நான், பெருங்கடலையும், கங்கையையும் சபிக்கும் வகையில், "ஓ! பெருங்கடலே, நீ அரச வடிவில் வந்திருப்பதனால் நீ ஒரு மன்னனாவாயாக. பூமியில் உன் சக்தியைக் கொண்டு அருஞ்செயல்கள் பலவற்றைச் செய்யும் வகையில் பெரும் பரதனின் குலத்தில் பிறந்து மனிதர்களைக் காப்பாயாக. பொறுமையற்றவனாக இருந்தாலும் நீ அமைதியாக இருக்கும்படி நான் கேட்ட உடனேயே ஒரு வடிவத்தை ஏற்றாய். எனவே, அழகிய மேனியைக் கொடையாகக் கொண்டவனாக, சந்தனு என்ற பெயரில் நீ பூமியில் கொண்டாடப்படுவாய். மேலும் மாசற்ற அங்கங்களையும், அகன்ற விழிகளையும் கொண்டவளும், ஆறுகளில் முதன்மையானவளுமான இந்தக் கங்கை, அழகிய வடிவில் உன்னுடன் வருவாள்" என்றேன்.(23-27)

நான் இதைச் சொன்னபோது, பெருங்கடலானவன், சோர்ந்த இதயத்துடன் என்னைப் பார்த்தான். அவன் {பெருங்கடல்}, "ஓ! தலைவா, ஓ! தேவர்களின் தேவா, என்னை ஏன் சபித்தீர்? நான் உமது ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடக்கிறேன். எனவே, நான் உமது மகனாவேன். அவ்வாறிருக்கையில், பொருந்தாத சொற்களால் என்னை நீர் சபித்தது ஏன்?(28,29) ஓ! தலைவா, ஓ! தேவர்களின் தேவா, உமது தயவால் என் அலைகள் ஏற்ற இறக்கங்களுடன் பெருகியதால் நான் கலங்கினேன். ஓ! பிரம்மா, இதில் என்னை எவ்வாறு குறைகூற முடியும்?(30) அந்நேரத்தில் காற்றால் வீசப்பட்ட நீரினால் நீர் தீண்டப்பட்டிருந்தாலும் என்னைச் சபிக்க உமக்குக் காரணமேது?(31) வீசும் காற்று, பெருகும் மேகம், சந்திரனுடன் கூடிய பர்வம் {வளர்பிறைச் சந்திரன்} என்ற மூவகை கருவிகளால் நான் கலங்கியிருந்தேன்.(32) ஓ! பிரம்மா, உம்மால் செயலில் நிறுவப்பட்ட இந்த மூன்று கருவிகளால் நான் குற்றமேதும் இழைத்திருந்தால் என்னை மன்னிப்பதே உமக்குத் தகும், இந்தச் சாபத்திற்கு ஒரு முடிவு ஏற்படட்டும்.(33) ஓ! தேவர்களின் தலைவா, சான்றேதும் நீர் கண்டால், குற்றமேதும் இல்லாமலே பெற்ற சாபத்தினால் சோர்வடைந்திருக்கும் என்னிடம் இரக்கம் காட்டுவீராக.(34) ஓ! தலைவா, உமது ஆணையின் பேரில் இந்தக் கங்கை பூமியில் இறங்குவாள். நான் குற்றவாளியாக இருந்தாலும், அப்பாவியான எனக்கு நீர் இரக்கம் காட்ட வேண்டும்" என்றான்.(35)

அப்போது, விளைவுகளை அறியாத தேவர்களின் சாபத்தினால் கலங்கியவனும், அச்சமடைந்திருந்தவனுமான பெருங்கடலிடம் நான், இனிய சொற்களில், "ஓ! பெரும் மனம் கொண்டவனே, ஓ! ஆறுகளின் தலைவா, சுகமாயிருப்பாயாக, அஞ்சாதே, நான் உன்னால் நிறைவடைந்தேன். இனி இந்தச் சாபத்தில் உள்ள எதிர்கால நோக்கத்தைக் கேட்பாயாக.(36,37) ஓ! தலைவா, நீ இந்தக் கடலுடலைத் துறந்து, பாரத குலத்திற்குச் செல்வாயாக. அப்போது, ஓ! பெருங்கடலே, ஓ! பெரும் மன்னா, நீ அரச அருளால் {கம்பீரத் தோற்றத்தால்} சூழப்படுவாய். ஓ! நீரின் தலைவா, நான்கு வர்ணங்களையும் ஆட்சி செய்து நீ நிறைவையடைவாய்.(38,39) ஆறுகளில் முதன்மையானவளான இந்தக் கங்கை ஓர் அழகிய பெண் வடிவை ஏற்று உனக்குத் தொண்டு செய்வாள்.(40) என் ஆணையின் பேரில் ஜானவியுடன் {கங்கையுடன்} விளையாடும் நீ மனிதக் கவலையை அனுபவிக்க மாட்டாய்.(41) ஓ! பெருங்கடலே, விரைவில் கங்கையைத் திருமணம் செய்து கொண்டு என் ஆணையை நிறைவேற்றுவாயாக.(42) வஸுக்கள் தேவலோகத்தில் இருந்து கடத்தப்பட்டு, ரஸாதளத்திற்குள் நுழைந்திருக்கின்றனர். அவர்களை சந்ததியாகப் பெற நான் உன்னை நியமிக்கிறேன்.(43) ஜானவி {கங்கை}, நெருப்பைப் போன்ற பிரகாசமான எட்டு வசுக்களை சந்ததியாகப் பெறுவதற்காக அவர்களைக் கருவில் கொண்டு, தேவர்களின் இன்பத்தைப் பெருக்கட்டும்.(44) வசுக்களைப் பிள்ளைகளாகப் பெற்று, குரு குலத்தைப் பெருகச் செய்து, உன் மனித உடலைக் கைவிட்டு, மிக விரைவில் நீ உன்னுடைய கடலுடலை ஏற்பாய்" என்றேன்.(45)

ஓ! தேவர்களில் முதன்மையானவர்களே, இவ்வாறு பழங்காலத்தில் பூமியின் எதிர்காலச் சுமையைக் கண்டு, தேவலோகத்தில் வாழும் வசுக்கள் பிறக்கப் போகும் சந்தனுவின் குல வித்துகளை உங்கள் நன்மைக்காக நான் விதைத்தேன்.(46,47) இப்போதும் கங்கையின் மகன் {மகனாகப் போகும்} பீஷ்மன் எட்டாம் வஸுவாக தேவலோகத்தில் இருக்கிறான். மற்ற ஏழு வசுக்களும் {கங்கைக்குப் பிறந்து இறந்து} தங்கள் தங்கள் உலகங்களுக்குச் சென்றுவிட்டனர். விஷ்ணு மட்டுமே இப்போது வாழ்கிறான்[2].(48) மன்னன் சந்தனு தன் இரண்டாம் மனைவியிடம் {சத்யவதியிடம்} பெரும் பிரகாசம் கொண்டவனும், பலமிக்கவனுமான மன்னன் விசித்ரவீரியனைப் பெறுவான்.(49) விசித்ரவீரியனின் இரண்டு மகன்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு ஆகிய இருவரும் உலகில் புகழ்பெற்ற இரண்டு மன்னர்களாக இருப்பார்கள்.(50) அவர்களில் பாண்டு, இளமை நிறைந்தவர்களும், அழகியருமான இரண்டு மனைவிகளைக் கொண்டிருப்பான். முதலாமவள் குந்தி என்ற பெயரையும், இரண்டாமவள் மாத்ரி என்ற பெயரையும் கொண்டிருப்பர். அவ்விருவரும் தேவர்களின் மனைவியரைப் போன்றவர்களாக இருப்பர்.(51) திருதராஷ்டிரன், காந்தாரி என்ற பெயரில் ஒரு மனைவியைக் கொள்வான். அவள் தன் கணவனுக்கு உறுதியாகத் தொண்டு செய்ததால் உலகில் புகழ்பெற்றவளாக இருப்பாள்[3].(52) 

[2] ஒப்புநோக்கப்படும் மற்ற இரு பதிப்புகளிலும் "விஷ்ணு மட்டுமே இப்போது வாழ்கிறான்" என்ற வாக்கியம் இல்லை. எட்டாம் வஸுவான பீஷ்மன் மட்டுமே பூமியில் வாழ்வான் என்றிருக்க வேண்டும். அவ்வாறே மற்ற இரு பதிப்புகளிலும் இருக்கிறது.

[3] இங்கே 49 முதல் 52ம் ஸ்லோகம் வரை கடந்த கால வழக்கிலேயே மன்மதநாததத்தரின் உரை இருக்கிறது. தேசிராஜுஹனுமந்தராவ் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் எதிர்கால வழக்கில் இருக்கிறது. எதிர்கால வழக்கே சரியாகத் தோன்றுவதால் நான் அவ்வாறே மாற்றி அமைத்திருக்கிறேன். இதை நோக்க விரும்புவோர் ஆங்கில மொழிபெயர்ப்பைக் காண்க.

இங்கே அவ்வீடு இரண்டு பகை தரப்புகளாகப் பிரியும், அவ்விரு மன்னர்களின் மகன்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் பிளவு ஏற்படும்.(53) இந்த மன்னர்களின் உட்பிளவுகளால், அரச குடும்பங்கள் அனைத்தும் அழிக்கப்படும். அண்ட அழிவின் போது ஏற்படுவதைப் போன்ற பேரச்சம் அப்போது மேலோங்கும்.(54) படைகளுடன் கூடிய மன்னர்கள் அனைவரும், ஒருவரையொருவர் கொல்லும்போதும், நகரங்களும் நாடுகளும் தங்களில் குடியிருப்பவர்களை இழக்கும்போதும், பூமி உய்வை அனுபவிக்கும்.(55) துவாபர யுகத்தின் முடிவில் படைகளுடன் கூடிய மன்னர்கள் அனைவரும் ஆயுதங்களால் அழிக்கப்படுவார்கள் என்று புராணங்களில் நான் படித்திருக்கிறேன். அப்போது சங்கரனின் பிறவிக்கூறானவனும் {அவதாரமும்}, நெருப்பாயுதத்துடன் கூடியவனுமான அஸ்வத்தாமன்,  இரவு உறக்கத்தில் நினைவிழந்தவர்களாகப் போரில் எஞ்சிக் கிடக்கும் மனிதகுலத்தையும் எரிப்பான்.(56,57) காலனைப் போன்றவனான அந்தக் கொடுஞ்செயல்புரிபவன் நிறுத்தும்போது, துவாபர யுகம் தொடர்பான இந்தக் கதையும் முடிவுக்கு வரும்.(58) சிவனின் கூறான அஸ்வத்தாமன், மறையும்போது, மஹேஸ்வரனின் யுகமான பயங்கரம் நிறைந்த கலியுகம் தொடங்கும்.(59) இந்த யுகத்தில் மனிதர்கள் பல கொடுமைகளைச் செய்வார்கள், அறத்தின் ஒரு பகுதி மட்டுமே தழைக்கும். வாய்மை மறைந்து, பொய்மை பெருகும்.(60) இந்த யுகத்தில் மனிதர்கள் மஹேஸ்வரனையும், ஸ்கந்தனையும் மட்டுமே வழிபடுவார்கள்; முதியவர்களும், நீண்ட வாழ்நாளைக் கொண்ட மனிதர்களும் பூமியில் இருக்க மாட்டார்கள்.(61) இவ்வுலகில் மன்னர்களுக்கு மிகச்சிறப்பான அழிவு ஏற்படப்போவதை இவ்வாறு நான் விளக்கினேன். எனவே, ஓ! தேவர்களே, உங்களுக்குரிய கூறுகளுடன் {அம்சங்களுடன்} தாமதமில்லாமல் பூமியில் இறங்குவீராக {அவதரிப்பீராக}.(62) குந்தியும், மாத்ரியும் தர்மனின் கூறுகளைக் கருவில் கொள்ளட்டும்[4], காந்தாரி, பிளவுகள் அனைத்தின் கருவியான கலியைக் கருவில் கொள்ளட்டும்.(63) விதியால் தூண்டப்படும் இம்மன்னர்கள் இரண்டு தரப்புகளாக அமைவார்கள், பூமியை அடைய விரும்பும் அவர்கள் போரை நாடுவார்கள்.(64) உலகங்கள் அனைத்தையும் தாங்கும் பூமி தன் மூல இயல்புக்குள் நுழையட்டும். புனிதமானவையும், நன்கறியப்பட்டவையுமான மன்னர்களின் வழிமுறைகள் இவ்வாறே உண்டாக்கப்பட்டன" என்றான் {பிரம்மன்}.(65) பெரும்பாட்டனின் சொற்களைக் கேட்ட பூமி, மன்னர்களுக்கு அழிவை ஏற்பாடு செய்த மகிழ்ச்சியில் காலனுடன் {காலத்தை அறிந்தவளாகச்} சென்றாள்.(66)

[4] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "குந்தி தர்மதேவனின் அம்சத்துடன் ஒரு மகனையும், மாத்ரி சில அவதாரங்களையும் பெறட்டும். அதே போல காந்தாரி, தொல்லையை உண்டாக்கும் கலியைப் பெறுவாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "குந்தி தர்மன் மற்றும் பிறரின் கூறுகளைப் பெறுவாள், மாத்ரியும் அவ்வாறே பெறுவாள். சச்சரவின் அடித்தளமான கலியின் கூறு காந்தாரியின் கருவறையில் பிறக்கும்" என்றிருக்கிறது.

அதன்பிறகு பிரம்மன், பகைவர்களைக் கொல்வதற்காக தேவர்களை அனுப்பினான். புராதன ரிஷியான நரன், பூமியைத் தாங்கும் (பாம்பு) சேஷன், சனத்குமாரர், சாத்யர்கள், அக்னி, பிற தேவர்கள், வருணன், வசுக்கள், சூரியன், சந்திரன், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ருத்திரர்கள், விஷ்வர்கள், அஷ்வினி இரட்டையர்கள் ஆகியோர் அனைவரும் தங்கள் தங்கள் கூறுகளில் பூமியில் இறங்குவார்கள்.(67-69) ஏற்கனவே நான் {மஹாபாரதம், ஆதிபர்வம், அம்சாவதார பர்வத்தில்} விளக்கியதைப் போலவே, தேவர்களின் கூறுகளான அந்த முதன்மையான புருஷர்கள், பெண்களின் மூலமாகவோ, அல்லாமலோ தைத்திர்கள் மற்றும் தானவர்களை அழிப்பவர்களாப் பூமியில் பிறவியை அடைந்தனர் {அவதரித்தனர்}. அவர்களில் சிலர் தங்கள் குடும்பங்களை ஆல மரங்களைப் போலப் பெருக்கினர். மேலும் சிலர் வஜ்ரத்தைப் போன்ற கடும் உடல்களைக் கொண்டவர்களாக இருந்தனர்.(70,71) அவர்களில் சிலர் பத்து லக்ஷம் யானைகளின் பலத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். சிலர் பேராறுகளைப் போன்று பலம் நிறைந்தவர்களாகவும், சிலர் கதாயுதங்கள், பரிகங்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கையாள வல்லவர்களாகவும் இருந்தனர்.(72) அவர்கள் அனைவரும் மலைகளின் சிகரங்களை நொறுக்கவல்லவர்களாக இருந்தனர். பரிகங்களைப் போன்ற கரங்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மனிதர்கள் விருஷ்ணி குலத்தில் பிறந்தனர்.  தேவர்கள், குரு மற்றும் பாஞ்சால குலங்களில் மன்னர்களாகப் பிறந்தனர். செழிப்பு மிக்க யது குடும்பங்களிலும், பிராமணர்களின் குடும்பங்களிலும், பக்திச் செயல்பாடுகளுடன்  பல வேள்விகளைச் செய்பவர்களாகவும், சாத்திரங்களை நன்கறிந்தவர்களாகவும், வலிமைமிக்க வில்லாளிகளாகவும், வேத சடங்குகள் நோற்பவர்களாகவும், செழிப்பையும், சாதனைகளையும் கொண்டவர்களாகவும் அவர்கள் பிறந்தனர்.(73-75) கோபமடையும்போது, மலைகளையும், ஆறுகளையும், பூமியின் பரப்பையும் அசைக்கக் கூடியவர்களாகவும், வானத்தில் எழக் கூடியவர்களாகவும், பெருங்கடலையே கலங்கடிக்கக்கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தனர்.(76) 

நிகழ்காலம், கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தை ஆள்பவனும், பெரும்பாட்டனுமான பிரம்மன், தேவர்களுக்கு இவ்வாறு ஆணையிட்டு, உலகங்கள் அனைத்தையும் நாராயணனிடம் கொடுத்துவிட்டு அமைதியை அடைந்தான்.(77) எல்லாம்வல்லவனும், புனிதமான புகழைக் கொண்டவனும், செல்வம் மற்றும் உயிரின் தலைவனும், நாராயணனுமான விஷ்ணு, பூமியில் யயாதியின் வழித்தோன்றலும், நுண்ணறிவுமிக்கவனுமான வஸுதேவனின் குடும்பத்தில் {கிருஷ்ணனாகப்} பிறந்த பிறகு, உயிரினிங்களின் நன்மைக்காக என்ன செய்தான் என்பதை மீண்டும் கேட்பாயாக" என்றார் {வைசம்பாயனர்}.(78,79)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 53ல் உள்ள சுலோகங்கள் : 79
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Wednesday, 20 May 2020

சுமையில் இருந்து பூமியை விடுவிக்கும் முன்மொழிவு | ஹரிவம்ச பர்வம் பகுதி – 51

(விஷ்ணு தேவ ஸம்வாதம்)

The proposal of relieving the earth of her burden | Harivamsha-Parva-Chapter-51 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பூமியின் நிலையை நாராயணனிடம் விளக்கிச் சொன்ன பிரம்மன்; நாராயணனுடன் ஆலோசிப்பதற்காக மேரு மலையின் சிகரத்திற்குச் செல்ல வேண்டும் என்று கேட்ட பிரம்மன்...

Lord Vishnu Goddess Lakshmi and Lord Brahma

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அனைவரின் பெரும்பாட்டனான பிரம்மன், விஷ்ணுவின் இந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்களுக்கான நன்மைகள் நிறைந்த சொற்களைச் சொன்னான்.(1) {பிரம்மன்}, "பல்வேறு போர்களில் நீ தேவர்களின் தலைவனாக இருந்து பாதுகாப்பை அளிப்பதால், அவர்களுக்கு அசுரர்களிடம் இருந்து எந்த அச்சமும் ஏற்படவில்லை.(2) பகைவரைக் கொல்பவனும், தேவர்களின் மன்னனுமான நீயே வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக இருப்பதால், அற நோன்புகளில் ஈடுபடும் மனிதர்களுக்கு அச்சம் ஏது?(3) வாய்மைநிறைந்த, பக்திமிக்க மனிதர்கள், தீமைகளில் இருந்து எப்போதும் விடுபட்டவர்களாக இருக்கிறார்கள். மரணத்தால் {மிருத்யுவால்}, பக்திமான்களை முன்முதிர்ந்து {அகாலத்தில்} சந்திக்க முடியாது.(4)

மனிதர்களில் முதன்மையான மன்னர்கள், ஒருவரையொருவர் அஞ்சாமல், தங்கள் ஆறாம் பங்கை[1] அனுபவித்து வருகின்றனர்.(5) அவர்கள், தங்கள் குடிமக்களுக்கு நன்மை செய்து, தங்கள் துணை மன்னர்களால் {தங்களின் கீழ் கப்பம் கட்டி ஆளும் சிற்றரசர்களால்} பழிக்கப்படாமல், அவர்களிடம் இருந்து முறையாகக் கப்பம் ஈட்டித் தங்கள் கருவூலங்களைச் செல்வத்தால் நிரப்புகின்றனர்.(6) அவர்கள், மென்மையான தண்டனைகள் அளித்து, தங்கள் தங்களுக்குரிய செழிப்பான மாகாணங்களைச் சகிப்புத் தன்மையுடன் ஆட்சி செய்து, நான்கு வர்ணங்களையும் பாதுகாத்து வருகின்றனர்.(7) அவர்கள், தங்கள் குடிமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமலும், தங்கள் அமைச்சர்களால் நன்கு போற்றப்பட்டும், படையின் நான்கு பிரிவுகளால் பாதுகாக்கப்பட்டும் ஆறு வழிமுறைகளில்[2] திறம்படச் செயலாற்றுகின்றனர்.(8) அவர்கள் அனைவரும், வில் அறிவியலை நன்கறிந்தவர்களாக, வேத சடங்குகளைச் செய்பவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் அனைவரும் அபரிமிதமான கொடைகளுடன் வேள்விகளைச் செய்து தேவர்களை வழிபட்டு வருகிறார்கள்.(9) அவர்கள், தொடக்கச் சடங்குகளைச் செய்து {தீக்ஷை பெற்று}, வேதங்களைக் கற்று, எண்ணங்கள், சொற்கள், மற்றும் செயல்களில் தூய்மையின் மூலம் பெரும் முனிவர்களையும், புனிதமான சிராத்தங்களின் நூற்றுக்கணக்கில் செய்வதன் மூலம் பித்ருக்களையும் தணிவடையச் செய்கின்றனர்.(10) உலகில் வேதம், வழக்கம், சாத்திரம் சார்ந்த பொருள் எதையும் அவர்கள் அறியாதவர்களாக இல்லை.(11) பெரும்பிரம்மனை நம்புபவர்களும், பெரும் ரிஷிகளைப் போலப் பிரகாசிப்பவர்களுமான அந்த மன்னர்கள் அனைவரும் மீண்டும் பொற்காலத்தைத் திரும்பக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.(12)

[1] மக்களின் வருமானத்தில் ஆறில் ஒரு பங்காகப் பெறப்படும் வரி


[2] "படையின் குணங்களான அமைதி, போர், அணிவகுப்பு, நிறுத்தம், பிளவுகளை விதைத்தல் மற்றும் பாதுகாப்பை நாடல் என்பவை ஒரு மன்னனுக்குரிய ஆறு வழிமுறைகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.


அவர்களது {அந்த மன்னர்களின்} சக்தியின் மூலம் வாசவன் {இந்திரன்} நல்ல மழையைப் பொழிகிறான், காற்றானவன் {வாயு}, மாசுகள் நீங்கியவனாகப் பத்துத் திசைகளிலும் வீசிக் கொண்டிருக்கிறான்.(13) பூமியானவள் தீய சகுனங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டிருக்கிறாள், கோள்கள் சுகமாக வானத்தில் உலவுகின்றன. விண்மீன்களுடன் கூடிய சந்திரன் வானத்தில் அழகாக நகர்ந்து வருகிறான்.(14) சூரியன், வழக்கமாக அடுத்தடுத்து விளைபவற்றை உண்டாக்கி, தன்னிரு பாதைகளில் {உத்தராயண / தக்ஷிணாயனமாக} நகர்கிறான். பல்வேறு பலியுணுகளால் {ஆகுதிகளால்} தணிக்கப்படும் நெருப்பானவன் {அக்னி} இனிய நறுமணத்துடன் திகழ்கிறான்.(15) இவ்வாறு முறையாகச் செய்யப்பட்டுப் பெருகும் வேள்விகளால் மொத்த உலகும் அமைதியடைந்து, மரணத்திடம் மனிதர்கள் அச்சமடையாமல் இருக்கின்றனர்.(16) ஒருவரையொருவர் பின்தொடர்பவர்களும், புகழ்மிக்கவர்களும், பலமிக்கவர்களுமான மன்னர்களின் சக்தியால் பூமியானவள் ஒடுக்கப்படுகிறாள்.(17) இந்தக் கனத்தால் களைத்தும், மன்னர்களால் தாக்கப்பட்டும் வரும் பூமியானவள், முழுகும் நிலையிலுள்ள ஒரு படகைப் போல எங்கள் முன் வந்திருக்கிறாள்.(18) மன்னர்களால் ஒடுக்கப்படுகிறவளும், அழிவுக்கால நெருப்புக்கு ஒப்பானவளும், நடுங்கும் மலைகள், மற்றும் கலங்கும் கடல்களுடன் கூடியவளுமான பூமியானவள் மீண்டும் மீண்டும் வியர்த்தவளாகிறாள்.(19) க்ஷத்திரியர்களின் உடல், சக்தி, பலம் மற்றும் பரந்த நிலங்களுடன் கூடிய பூமியானவள் எப்போதும் அமைதியாக இருக்கிறாள்.(20)

ஒவ்வொரு நகரத்தின் மன்னனும், ஒரு கோடி படைவீரர்களால் சூழப்பட்டிருக்கிறான்; ஒவ்வொரு நாட்டிலுமுள்ள நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிராமங்கள் செழிப்பில் வளர்ந்து வருகின்றன, மேலும் ஆயிரக்கணக்கான மன்னர்களின் பெரும்படை மற்றும் லட்சக்கணக்கான கிராமங்களால் பூமியானவள் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறாள்.(21,22) காலத்தைத் தன் முன் கொண்டவளாகவும், அனைத்து நோய்களில் இருந்தும் விடுபட்டவளாகவும், சக்தியிழந்தவளாகவும் பூமியானவள் என் வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஓ! விஷ்ணு, அவளது மிகச் சிறந்த புகலிடம் நீயே.(23) ஓ! மதுசூதனா, மனிதச் செயல்பாடுகளுக்கான களமான இந்தப் பூமியானவள், பெரிதும் தாக்கப்படுகிறாள். நித்தியமானவளும், அண்டத்தின் வசிப்பிடமுமான பூமியானவள், சிதைவடையாமல் இருக்கச் செய்வதே உனக்குத் தகும்.(24) ஓ! மதுசூதனா, அவளை ஒடுக்குவது பெருங்கொடுமையாகும், ஏனெனில், அவள் தாக்கப்படுவதால் மனித செயல்கள் அனைத்தும் முடிவை நெருங்கி, அண்டத்தின் நலம் சீர்குலையும்.(25) மன்னர்களால் ஒடுக்கப்படும் பூமியானவள், முற்றிலும் சோர்வடைந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. அவள், தன் உறுதியையும், இயல்பான சகிப்புத் தன்மையையும் கைவிட்டு பொறுமையிழந்தவளாக இருக்கிறாள்.(26) அவளது வரலாற்றை நாங்கள் கேட்டோம். நீயும் அதைக் கேட்டாய். எனவே, சுமையில் இருந்து அவளை விடுவிப்பதற்காக நாங்கள் உன்னுடன் ஆலோசிக்க வேண்டும்.(27)

இந்த மன்னர்களில் பலர், நீதிமிக்க வழிகளைப் பின்பற்றி, தங்கள் நிலப்பகுதிகளைப் பெருக்கிக் கொள்கின்றனர். மனிதர்களுக்கு மத்தியில் பிற வர்ணங்கள் மூன்றும் பிராமணர்களைப் பின்பற்றுகின்றன.(28) சொற்கள் அனைத்தும் வாய்மை நிறைந்தவையாகவும், வர்ணங்கள் அனைத்தும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்றுபவையாகவும், பிராமணர்கள் அனைவரும் வேதங்களைக் கற்பவர்களாகவும், பிற மனிதர்கள் அனைவரும் பிராமணர்களிடம் அர்ப்பணிப்புமிக்கவர்களாகவும் இருக்கின்றனர்.(29) இவ்வாறே மனிதர்கள், நீதியின் கருவிகளாக உலகில் இருக்கிறார்கள். அறத்திற்குக் கேடு நேராத நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.(30) இவ்வுலகமானது, பக்திமான்களின்றி வேறு எவரின் இலக்குமல்ல. அவர்கள் {அந்த பக்திமான்கள்} அடைய முயலும் மிகச்சிறந்த பொருள் அறமாகும். எனவே, பூமியைச் சுமையில் இருந்து விடுவிக்க மன்னர்களின் அழிவு அவசியமாகிறது. எனவே, ஓ! பெருமைமிக்கவனே, எங்களுடன் ஆலோசிக்க வருவாயாக. நமக்கு முன் பூமியைக் கொண்டு மேரு மலையின் சிகரத்திற்கு நாம் செல்வோமாக" {என்றான் பிரம்மன்}.(31,32)

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனும், பெரும்பிரகாசம் கொண்டவனும், அனைவரின் பெரும்பாட்டனுமான பிரம்மன், இதைச் சொல்லிவிட்டு, பூமியுடன் சேர்ந்து ஓய்ந்திருந்தான் {காத்திருந்தான்}" என்றார் {வைசம்பாயனர்}.(33)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 51ல் உள்ள சுலோகங்கள் : 33

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

நாராயணாஷ்ரமம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 50

(நாராயண ஆஷ்ரம வர்ணனம்)

An account of Narayanashrama | Harivamsha-Parva-Chapter-50 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரம்மலோகத்தில் நாராயணாஷ்ரமத்தில் நுழைந்த விஷ்ணு; விஷ்ணுவின் துயில்; விஷ்ணு உறங்கும்போது அவனது கடமைகளைச் செய்யும் இந்திரன்; விஷ்ணுவுடன் பிறந்த மாயை; முனிவர்கள் வேண்டியது; விஷ்ணு விழித்தது...

Lord Vishnu's sleep

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு ரிஷிகளால் வழிபடப்பட்ட அந்தத் தேவன் {நாராயணன்}, புராணங்களில் விளக்கப்பட்டுள்ளபடியே நாராயணனின் ஆசிரமமான பிரம்மனின் தெய்வீக வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்[1].(1) அவன் {நாராயணன்}, அந்த ரிஷிகள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வழிபட்டு, தாமரையில் உதித்த தலைமைத் தேவனான பிரம்மனை வணங்கி ஏற்கனவே குறிப்பிடப்பட்ட உலகத்திற்குள் நுழைந்தான்.(2) அந்தத் தலைவன், தன் பெயரையே கொண்ட நாராயண ஆசிரமத்திற்குள் நுழைந்த பிறகு தன் ஆயுதங்கள் அனைத்தையும் விட்டான்.(3) அங்கே அவன், பெருங்கடலுக்கு ஒப்பான தன் வசிப்பிடம் தேவர்களாலும், இறப்பற்ற முனிவர்களாலும் நிறைந்திருப்பதைக் கண்டான்.(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பிரம்மலோகத்தைச் சேர்ந்த முனிவர்களின் வணக்கத்தைப் பெற்றுக் கொண்ட தேவன் ஸ்ரீஹரி, பிரம்மனின் பணிவிணக்கத்தைப் பெற்று பிரம்மனின் வசிப்பிடத்திற்குச் சென்று, நாராயணாஷ்ரமம் என்றழைக்கப்படுவதும், புனிதமானதும், புராணங்களில் புகழப்படுவதும், பிரம்மலோகத்திலேயே இருப்பதுமான நாராயணனின் ஆசிரமத்திற்குள் நுழைந்தன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "முனிவர்களால் வணங்கப்பட்ட தலைவன் ஹரி, புராதனமானதும், தெய்வீகமானதும், நாராயணனின் ஆசிரமல்லாமல் வேறில்லாததுமான பிரம்மனின் வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்" என்றிருக்கிறது.

அந்த வசிப்பிடம், சம்வர்த்தக மேகங்கள் மற்றும் பிற மேகங்களால் மறைக்கப்பட்டு, விண்மீன்கள் உலகின் இருளால் சூழப்பட்டு, தேவர்களும், அசுரர்களும் அடைவதற்கு அப்பால் இருந்தது.(5) அங்கே காற்று வீசுவதில்லை, சூரியனும், சந்திரனும் ஒளிர்வதில்லை. அது தாமரை உந்தி தேவனுடைய உடலின் பிரகாசத்தால் மறைக்கப்பட்டிருந்தது.(6) ஆயிரம் தலைகளுடன் சடாமுடி தரித்த அந்தத் தேவன் {நாராயணன்} அங்கே நுழைந்து, படுத்துக்கிடப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான்.(7) கரிய கண்களைக் கொண்டதும், மனிதர்களின் இறுதி நாட்களை அறிந்ததும், மரணம் போன்றதுமான துயில் {உறக்கம்} அந்த உயரான்ம தேவன் முன்பு தோன்றியது.(8)

புலன்களை ஆளும் திறனை அடைந்தவனும், நோன்பு நோற்பவர்களில் முதன்மையானவனுமான ஹரி, பெருங்கடலின் நீரைப் போலக் குளிர்ந்த தெய்வீகப் படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்டான்[2].(9) ரிஷிகளும், தேவர்களும், அண்டத்தைப் படைப்பதற்காக இவ்வாறு துயில் கொண்டவனும், எல்லாம் வல்லவனுமான பெரும் விஷ்ணுவை வழிபடத்தொடங்கினர்[3].(10) அவன் உறங்கிக் கொண்டிருந்தபோது, சூரியனைப் போன்ற பிரகாசமிக்கதும், தொடக்கமும் முடிவுமாக இருக்கும் குடிமுதல்வன் பிரம்மனின் (பிரம்மன் அமர்வதற்குண்டான) இருக்கையுமான ஒரு தாமரை அவனது உந்தியில் உதித்தது.(11) ஆயிரம் இதழ்களையும், அழகிய வண்ணத்தையும் கொண்ட அந்தத் தாமரை, மென்மையானதாகவும், நன்கு அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. பெரும் முனிவனான பிரம்மன், மாசற்ற ஆசையின் சரடான தன் கையை உயர்த்தி, காலத்தால் கொண்டுவரப்படும் உலகங்கள் அனைத்தின் மாற்றங்களுக்குரிய சக்கரத்தைச் சுழற்றுகிறான்[4].(12)


[2] "இது விஷ்ணுவின் சமாதி அல்லது தீவிர தியானம் குறித்த ஓர் உருவகக் கதை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "இவ்வாறு சமாதியில் ஈடுபட்டான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] "பிரம்மனால் அண்டத்தின் படைப்பு நிகழ்த்தப்பட்டது என்பது இங்கே பொருள். உலகில் வெளிப்படும் மாற்றங்கள் அனைத்தும் அவனது பணிகளே. இந்தப் படைப்பும் அவனது ஆசையின் விளைவே. முதலில் அவன் விருப்பத்தை வளர்க்கிறான், பிறகு படைப்புத் தொழிலில் ஈடுபடுகிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அவனுடைய மூச்சுக் காற்றின் மூலம் அசைக்கப்பட்டு, அவனது வாயில் இருந்து குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்} வெளிவருகிறார்கள். சில வேளைகளில் அவர்கள் கீழே விழுகிறார்கள், சில வேளைகளில் அவர்கள் மேலே உயர்கிறார்கள்.(13) இவ்வாறு அவனால் படைக்கப்படும் மனிதர்கள், மீண்டும் பிரம்மனால் நான்கு வகையினராகப் பிரிக்கப்படுகின்றனர். பிறகு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள பணிகளைச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் இலக்குகளை அடைகின்றனர்.(14) பிரம்மனாலும், இறப்பிலிகளான ரிஷிகளாலும் கூட இவ்வாறு தமஸில் மறைக்கப்பட்டு யோகத் துயிலில் ஈடுபடும் விஷ்ணுவைப் புரிந்து கொள்ள முடியாது[5].(15) நாராயணன் எப்போது உறங்குகிறான், எப்போது தன் படுக்கையில் அமர்ந்து கொள்கிறான் என்பதைப் பெரும்பாட்டனின் தலைமையிலான பிராமண முனிவர்களால் காண முடியாது.(16) இந்த உடலில் விழித்திருப்பவன் எவன்? துயில்பவன் எவன்? இயன்றும், பணியைச் செய்யாதவன் எவன்? பல்வேறு இன்பநுகர் பொருட்களில் இன்புற்றிருப்பவன் எவன்? பிரகாசிப்பவன் எவன்? நுட்பத்திலும் நுட்பமானவன் எவன்?(17)

[5] "இஃது இருள் {தமோ} குணமாகும். விஷ்ணு, படைக்கும் விருப்பத்தைக் கொள்ளும்போது, தன் வடிவத்தைத் தியானத்தில் ஈடுபடுகிறான் என்பது இந்த வாக்கியத்தின் பொருளாகும். சத்வம் அல்லது நல்லியல்பின் குணம் அவனில் பேராதிக்கம் செலுத்தும்போது, அவன் படைப்புத் தொழிலில் இருந்து முற்றிலும் ஓய்கிறான். அவன் படைப்பதில் விருப்பம் கொள்ளும்போது, தமஸ், அல்லது இருளின் குணம் அவனில் ஆதிக்கம் செலுத்துகிறது. அவனில் ஏற்படும் இந்த விருப்பத்தின் பிறப்பிடமே படைப்பின் வேராக இருக்கிறது. நம் முன்பு இருக்கும் மொத்த அண்டமும் அவனது விருப்பத்தின் விளைவில் வந்த வெளிப்பாடே ஆகும். இந்து தொன்மவியலின்படி படைப்பும் {தோற்றமும்}, கலைப்பும் {அழிவும்} இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்தப் படைப்புகள் ஒவ்வொன்றும் தலைவனின் தூய்மையான, முற்றான விருப்பத்தைச் சார்ந்திருக்கிறது. உயர்ந்த தலைவனான விஷ்ணு, படைக்கும் விருப்பத்தை வளர்க்கும்போது, அவன் தன் சொந்த வடிவைத் தியானிப்பதில் ஈடுபடுகிறான். இவ்வாறு தியானிப்பதே, உறக்கமென உருவகமாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தியானத்தில் இருந்தே, இந்தப் பெரும்பணிக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பிரம்மன் உண்டாகிறான். ஆனால் அவனும் தலைவனின் விருப்பத்தைச் சார்ந்திருக்கிறான். அடுத்ததாகப் பிரம்மன், பல்வேறு குடும்பங்களை {குலங்களை} தோற்றுவிப்பவர்களான குடிமுதல்வர்களை உண்டாக்குகிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஸ்ருதிகளில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு வாதங்களின் மூலம் ரிஷிகள் அவனது இருப்பைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். பிறப்பாலோ, செயலாலோ எவராலும் அவனைக் கண்டுபிடிக்க முடியாது.(18) புராதன ரிஷிகள் அவனது மகிமைகளைப் புராணங்களில் பாடியிருக்கின்றனர். அவனால் தொகுக்கப்பட்ட பாடல்களின் மூலம் அவனது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.(19) அவனது புராதன வரலாறும் தேவர்களுக்கு மத்தியில் கேள்விப்படப்படுகிறது. பெரும் புராணங்களுக்குப் பிறகு, அவனது செயல்களைப் போற்றும் பதிவுகள் வேறேதும் இல்லை.(20)

வேதங்கள், மனிதர்களின் பழக்க வழக்கங்கள் தொடர்பான ஸ்ருதிகள் அனைத்தும், தேவர்களின் தேவனான அவனது ஆற்றலால் நிறைந்திருக்கின்றன.(21) அனைத்து உயிரினங்களின் பிறப்பிடமான அந்தத் தலைவன், உலகங்கள் அனைத்தும் படைக்கப்படும் நேரத்தில் தோன்றுகிறான். அந்த மதுசூதனன், தானவர்களின் அழிவுக்காக விழித்திருக்கிறான்.(22) இறப்பற்றவனான இந்தப் புருஷன் உறங்கச் செல்லும்போது, தேவர்களாலும் அவனைக் காண முடியாது. அவன் கோடையின் முடிவில் உறங்கச் சென்று, மழையின் முடிவுக்குப் பிறகு விழித்துக் கொள்கிறான்.(23) அவன், வேதங்கள், வேள்விகள் மற்றும் பிற துணை சடங்குகளோடு அடையாளங்காணப் படுபவனாவான். புருஷர்களில் முதன்மையான இவனே, விளக்கப்படும் வேள்விகளின் போக்காக {வேள்வி வழிகளாக} இருக்கிறான்.(24)

அவன் உறங்கும்போது, மந்திரங்களால் புனிதப்படும் வேள்விகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. கூதிர்கால வேள்வி நடைபெறும்போது மதுசூதனன் விழிக்கிறான்.(25) விஷ்ணு உறங்கச் செல்லும்போது, நீரின் தலைவனான புரந்தரன், அவனது கடமைகள் அனைத்தையும் செய்து நீரைப் பொழிகிறான்.(26) இருள் என்றும், உறக்கம் என்றும் உலகில் இருப்பதும், மன்னர்களுக்கு மரண இரவைப் போன்றதுமான மாயையானது, போரிடுவதன் மூலம் ஒருவரையொருவர் கொல்வோருக்குச் சீரழிவைக் கொண்டு வருகிறது.(27) இருளெனும் தன்னுடலால் அஃது {அந்த மாயை} இரவுகளையும், பகல்களையும் அழிக்கிறது. மேலும் இந்தப் பயங்கர மாயை, உலகின் உயிரினங்கள் அனைத்தினுடைய பாதி வாழ்நாளை {வாழ்வில் பாதி நாட்களைக்} களவாடுகிறது.(28)

பெருங்கடலில் கிட்டத்தட்ட முழுகியவர்களைப் போல, இந்த உறக்கத்தால் பீடிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கொட்டாவி விடும் மக்கள் சிலரால், இதன் {இந்த மாயையின்} சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாது.(29) {அதிக} உணவு அல்லது {வீண்} உழைப்பால் உண்டாகும் உறக்கம், இவ்வுலகில் மனிதர்கள் எவருக்கும் நன்மையை உண்டாக்காது.(30) இவ்வுலகில் உயிரினங்களின் கனவு முடிந்ததும் அது வலுவிழக்கிறது; மேலும் அஃது, அவர்களின் மரண வேளையில் அவர்களின் உயிர்க் காற்றுகள் அனைத்தையும் அழிக்கிறது.(31) நாராயணனைத் தவிரத் தேவர்களில் எவராலும், இந்தத் துயிலின் சக்தியைத் தாக்குப்பிடிக்க இயலாது. இந்த மாயை அல்லது தோற்ற மயக்கமானது, அனைவரையும் அழிக்கும் விஷ்ணுவின் உடலிலேயே தோன்றிய பெண் துணையாகும்.(32)

தாமரைக் கண்களைக் கொண்ட இவள் {மாயை}, நாராயணனின் முகத்தில் காணப்பட்டாள். உயிரினங்கள் அனைத்தையும் கலங்கடிக்கும் இவள், எந்த நேரத்திலும் உலகங்கள் அனைத்தையும் உண்டுவிடக் கூடியவளாவாள்.(33) மனித குலத்தின் நன்மைக்காக இவள் விஷ்ணுவால் பராமரிக்கப்படுகிறாள். தன் கணவனுக்குத் தொண்டு செய்யும் கற்புநிறைந்த பெண்ணாக இவள் அனைவராலும் போற்றப்படுகிறாள்.(34) தலைவன் விஷ்ணு, இந்த உறக்கத்தால் பீடிக்கப்பட்டவனாக நித்திய உலகைக் கலங்கடித்து, நாராயண ஆசிரமத்தில் உறங்கினான்.(35) அந்த உயரான்ம தேவன் இவ்வாறு உறங்கும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளும், மிகச்சிறந்த சத்ய, திரேதா யுகங்களும் கடந்து சென்றன.(36) துவாபர யுகத்தின் நெருக்கத்தில், மனித குலத்தின் துயரங்களைக் கண்டு, பெரும்பிரகாசம் கொண்ட தேவனின் மகிமைகளைப் பெரும் முனிவர்கள் பாடத் தொடங்கிய போதே அவன் விழித்தான்.(37)

ரிஷிகள், "ஓ! தலைவா, ஏற்கனவே அனுபவிக்கப்பட்ட ஒரு மாலையைத் தூக்கி எறிவதைப் போல உன் சுயமாகப் பிறந்த இந்த உறக்கத்தைப் கைவிடுவாயாக. பிரம்மனும், தேவர்கள் அனைவரும் உன்னைக் காணக் காத்திருக்கின்றனர்.(38) ஓ! ரிஷிகேசா, தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், பிரம்ம ஞானத்தை நன்கறிந்தவர்களும், அவனது மகிமைகளைப் பாடுபவர்களுமான இந்த ரிஷிகள் அனைவரும் உன்னை வரவேற்கின்றனர்.(39) ஓ! விஷ்ணு, நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று மற்றும் நீரென்ற ஐம்பூதங்களோடும் அடையாளங்காணப்படும் இந்த முனிவர்களின் மங்கலச் சொற்களைக் கேட்பாயாக.(40) ஓ! தேவர்களும், சப்தரிஷிகளும், இந்த முனிவர்கள் அனைவரும், அழகிய தெய்வீகப் பாடல்களால் உன் மகிமைகளைப் பாடுகின்றனர்.(41) ஓ! பேரொளி கொண்டவனே, ஓ! ஆயிரம் இதழ் தாமரையை உந்தியில் கொண்டவனே, தேவர்களின் சில முக்கிய வேலைகளுக்காக நீ தேவைப்படுகிறாய்" என்றனர்".(42)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ரிஷிகேசன், நீரின் அளவைக் குறைத்து, இருளை அகற்றி, பேரழகில் ஒளிர்ந்தபடியே எழுந்தான்.(43) அவன், உலகத்திற்காகப் பெரிதும் வருந்துபவர்களும், தன்னிடம் ஏதோ பேச விரும்பியவர்களுமான தேவர்கள் அனைவரையும், பெரும்பாட்டனையும் அங்கே கண்டான்.(44) உறக்கத்தால் சோர்வில் இருந்து விடுபட்ட கண்களுடன் கூடிய தலைவன் நாராயணன், நல்ல ஞானத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும் நிறைந்த சொற்களில் அவர்களிடம் பேசினான்.(45)

விஷ்ணு, "ஓ! தேவர்களே, உங்கள் சச்சரவு தோன்றியது எங்கே? உங்கள் அச்சம் யாரிடம் இருந்து வந்தது? தேவையை உணர்வது யார்? {தேவையை உணர்வது} எதற்காக? நான் உங்களுக்கு உதவுவது எவ்வாறு?(46) தானவர்களின் மூலம் உலகிற்குப் பேரிடரேதும் ஏற்பட்டதா? மனிதர்கள் தங்கள் பலவீனத்தினால் ஏதேனும் தீப்பேற்றை அடைந்தனரா? தாமதமேதும் இல்லாமல் இவை அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன்.(47) மிகச் சிறந்த என் படுக்கையைத் துறந்து, உங்களுக்கு நன்மை செய்வதற்காகப் பிரம்மவாதிகளின் மத்தியில் நான் நிற்கிறேன். நான் உங்களுக்குச் செய்ய வேண்டியதென்ன?" என்று கேட்டான் {விஷ்ணு}" என்றார் {வைசம்பாயனர்}.(48)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 50ல் உள்ள சுலோகங்கள் : 48
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்