(ஐலோத்பத்திவர்ணனம்)
Vaivaswata Manu's Offspring - Emergence of lady Ila | Harivamsa-Parva-Chapter-10 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : வைவஸ்வத மனுவின் மகன்கள்; மனு செய்த வேள்வி; வேள்வியில் உண்டான இளை; இளைக்கும் புதனுக்கும் பிறந்த ஐலன்; பூமியைப் பத்துப் பகுதிகளாகப் பிரித்துக் கொண்ட மனுவின் மகன்கள்; வைவஸ்வத மனுவின் நான்காவது மகன் ஸர்யாதியின் பேரன் ரேவதன்; குசஸ்தலை நாட்டை அடைந்த ரேவதன் மகன் ரைவதன்; பிரம்மலோகத்தில் இசை பயின்ற ரைவதனும் அவனுடைய மகள் ரேவதியும்; பலராமன் ரேவதி திருமணம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, வைவஸ்வத மனுவுக்கு, இக்ஷ்வாகு, நாபாகன், திருஷ்ணு, சர்யாதி, நரிஷ்யன் {நரிஷ்யந்தன்}, பிரங்ஷன் {பிரமசு}, நாபாகாரிஷ்டன், கொருஷன் {கரூஷன்}, மற்றும் பிருஷத்ரன் என ஒன்பது மகன்கள் இருந்தனர்.(1,2) ஓ! மன்னா, சந்ததியை விரும்பிய குடிமுதல்வன் {வைவஸ்வத} மனு, ஒரு வேள்வியை மித்ரன் மற்றும் வருணனின் முன்னிலையில் செய்தான்.(3) ஓ! பரதனின் வழித்தோன்றலே, இந்த ஒன்பது மகன்களும் பிறப்பதற்கு முன்னர் அந்த {வைவஸ்வத} மனு, நிகழ்வேள்வியில் மித்ரன் மற்றும் வருணனின் பகுதிகளுக்குப் பலியுணவு {காணிக்கை / படையல்} அளித்தான். இந்தக் பலியுணவு அளிக்கப்பட்ட போது, தேவர்களும், கந்தர்வர்களும், மனிதர்களும், தவசிகளும் பெரும் மகிழ்ச்சியை அடைந்து, ஆச்சரியமடைந்து, "ஓ!, இவனது தவசக்தி அற்புதமானது. ஓ!, இவனது சாத்திர அறிவு அற்புதமானது" என்றனர்.(4-6)
