(ப்ருதூபாக்யானம்)
A query regarding the origin of the aricles of food!| Harivamsa-Parva-Chapter-04 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : அதிஷ்டாத்ர தேவதைகளை நியமித்த பிரம்மன்; வைவஸ்வத மனுவிடம் தன் அரசை ஒப்படைத்த பிரம்மன்; வேனனின் மகன் பிருது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குடிமுதல்வன் {பிரம்மன்}, வேனனின் மகனான பிருதுவை உயர் தனித் தலைவனின் அலுவலில் {பூமியின் பேரரசனாக} நிறுவிய பிறகு, சோமனுக்கும், பிறருக்கும் அரசுகளை அளிக்கத் தொடங்கினான்.(1) அவன் சோமனை இருபிறப்பாளர்கள், மூலிகைகள், கோள்கள், நட்சத்திரங்கள், வேள்விகள் மற்றும் கடுந்தவங்கள் ஆகியவற்றின் பொறுப்பில் நியமித்தான்.(2) அதன் பிறகு அவன் {பிரம்மன்} வருணனை நீர்நிலைகளின் மன்னனாகவும், வைஸ்ரவணனை மன்னர்களின் தலைவனாகவும், விஷ்ணுவை ஆதித்யர்களின் மன்னனாகவும், பாவகனை வசுக்களின் மன்னனாகவும், தக்ஷனைக் குடிமுதல்வர்களின் {பிரஜாபதிகளின்} மன்னனாகவும், வாசவனை {இந்திரனை} மருத்துகளின் மன்னனாகவும், ஒப்பற்ற சக்தி கொண்ட பிரல்ஹாதனை {பிரஹலாதனை} தைத்தியர்கள் மற்றும் தானவர்களின் மன்னனாகவும், சூரியனின் மகனான யமனைப் பித்ருக்களின் மன்னனாகவும், நாராயணனை மாத்ரிகள், நோன்புகள், மந்திரங்கள், பசுக்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், மன்னர்கள், ஆகியோரின் மன்னனாகவும், காளையைச் சின்னமாகக் கொண்ட சிவனைச் சாத்யர்கள் மற்றும் ருத்திரர்களின் மன்னாகவும் நிறுவினான்.(3-7) பிறகு அவன் விப்ரசித்தியைத் தானவர்களின் மன்னனாகச் செய்து, கதாதாரியான கிரீசனை (சிவனை) பூதகணங்கள் அனைத்தின் மன்னனாக்கினான்.(8)