(த்வாரவதீநகரநிர்மாணம்)
The laying out of Dwarka | Vishnu-Parva-Chapter-115-059 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : விஷ்வகர்மன் துவாரகை நகரத்தைப் பெரியதாக அமைத்தல்; தேவசபையான சுதர்மம் துவாரகைக்குக் கொண்டு வரப்பட்டது; யாதவர்களை சுகமாகக் கவனித்துக் கொண்ட கிருஷ்ணன்; ரேவதியை மணந்த பலராமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தெளிந்த விடியலில் சூரியன் உதித்தபோது, யதுகுல ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அந்தக் காலைக்கான தன் தூய்மைச் சடங்குகளைச் செய்துவிட்டு, காட்டுப்புறத்தில் சிறிது நேரம் அமர்ந்து ஒரு கோட்டை கட்டுவதற்கான இடத்தைத் தேடத் தொடங்கினான். யது குலத்தின் முக்கிய உறுப்பினர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர்.(1,2) பிறகு ரோஹிணி நட்சத்திர ஆதிக்கம் கொண்ட ஒரு மங்கல நாளில் பிராமணர்களுக்கு ஏராளமான கொடைகளை அளித்து, அவர்களைக் கொண்டு மங்கலச் சடங்குகளைச் செய்தான். அதன் பிறகு கோட்டை கட்டும் பணியைத் தொடங்கினான்.(3)
