(ஸோமோத்பத்தி வர்ணனம்)
An account of the birth of the moon | Harivamsa-Parva-Chapter-25 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : அத்ரி முனிவரின் கண்களில் இருந்து பிறந்த சந்திரன்; சந்திரனின் சக்தியால் பூமியில் பெருகிய தாவரங்கள்; சந்திரன் செய்த ராஜசூயம்; பிருஹஸ்பதியின் மனைவியான தாரையை அபகரித்த சந்திரன்; சந்திரனுக்குத் தாரையிடம் பிறந்த புதன்; புதனின் மகன் புரூரவஸ்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, பழங்காலத்தில் பிரம்மன் சந்ததியைப் படைக்கும் விருப்பத்தை வளர்த்தபோது அவனது மனத்தில் பெறப்பட்ட மகனே, சோமனின் தந்தையும், தெய்வீக முனிவருமான அத்ரியாவார்.(1) அத்ரி, தம் மகன்கள் அனைவருடன் கூடியவராகத் தமது சொற்கள், மனம் மற்றும் செயல் ஆகியவற்றின் மூலம் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்யத் தொடங்கினார்.(2) கபடமற்றவரும், பெரும்பிரகாசம், அறம்சார்ந்த ஆன்மாவை, உறுதியான நோன்பு ஆகியவற்றைக் கொண்டவருமான அந்த முனிவர் {அத்ரி}, முன்பொரு காலத்தில் தன் கரங்களை உயர்த்திய படி மிகச் சிறந்த அமைதி தவத்தை {மௌனவிரதத்தை / அனுத்தம தவத்தை} மூவாயிரம் தேவ வருடங்கள் பயின்றார். இதை நாம் கேள்விப்படுகிறோம்.(3,4)
