(வஜ்ரநாபவதம்)
The destruction of Vajranabha | Vishnu-Parva-Chapter-154-098 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : வஜ்ரநாபனுக்கும், பிரத்யும்னனுக்கும் இடையில் நடந்த கடும்போரில் இருவரும் மயக்கமடைந்தது; சக்கர ஆயுதத்தால் வஜ்ரநாபனைக் கொன்ற பிரத்யும்னன்; சுநாபனின் மரணம்; நான்காகப் பிரிக்கப்பட்ட வஜ்ரநாபனின் நாடு...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உலகின் விழியான சூரியன் உதித்து மூன்று முஹூர்த்தங்கள் கடந்ததும், பாம்புகளின் பகைவனான கருடனைச் செலுத்திக் கொண்டு தேவன் ஹரி அங்கே வந்தான்.(1) ஓ! குருவின் வழித்தோன்றலே, பறவைகளின் மன்னனான கருடன், அன்னப்பறவைகளையும், காற்றையும், மனத்தையும் விட வேகமாகச் ஆகாய லோகத்தில் இருக்கும் சக்ரனிடம் சென்றான்.(2) தலைவன் கிருஷ்ணன், வாசவனின் அருகில் வந்ததும் தைத்தியர்களின் அச்சத்தைப் பெருகச் செய்யும் பாஞ்சஜன்ய சங்கத்தை முழக்கினான்.(3) பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னன் அவ்வொலியைக் கேட்டு தன் தந்தையின் அருகில் வந்தபோது, கேசவன் அவனிடம், "விரைவாக வஜ்ரநாபனைக் கொல்" என்றான்.(4) மீண்டும் அவன், "கருடனின் முதுகில் ஏறி அங்கே செல்வாயாக" என்றான். தேவர்களில் முதன்மையான இந்திரனையும், உபேந்திரனையும் வணங்கிவிட்டு அவ்வாறே அவன் செய்தான் {கருடனின் முதுகில் ஏறிச் சென்றான்}.(5)



