Showing posts with label நாராயணன். Show all posts
Showing posts with label நாராயணன். Show all posts

Sunday, 2 May 2021

பிரம்மனின் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 14

(பிரஹ்மணோ மாநஸபுத்ராணாமுத்பத்தி)

Brahma's creation | Bhavishya-Parva-Chapter-14 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரம்மனின் மானஸபுத்ரர்கள்; படைப்பு குறித்த விரிவான வர்ணனை...


Brahma's creation

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நீண்ட கைகளைக் கொண்டவனும், பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவனுமான பிரம்மன், அந்தத் தாமரையில் அமர்ந்து, தன் கைகளை உயர்த்தியபடி கடுந்தவத்தைச் செய்தான்.{1} தன் சொந்த பிரகாசத்தில் எரிந்து கொண்டிருந்த அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த யோகியான பிரம்மன், ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியனைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.{2}

Saturday, 1 May 2021

மதுகைடபர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 13

(மதுகைடபவரப்ரதாநம்)

The world of creation begins: The birth of Madhu and Kaitabha | Bhavishya-Parva-Chapter-13 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : மது கைடபர்களின் தோற்றமும், அழிவும்...


Madhu-Kaitabha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஆயிரம் யுகங்களின் சுழற்சிக்குப் பிறகு சத்ய யுகத்தின் தொடக்கத்தில் தாமஸ குணம் (ஒழுங்கற்ற போக்கு) நிலவியது. இந்த நேரத்தில் படைப்புக்குத் தடையாக இருக்கும் பேரசுரன் மது தன் பிறப்பை அடைந்தான்.{1} சில காலம் கழித்து, ரஜஸ குணத்தின் மூலம் மதுவுக்கு உதவி செய்வதற்காகக் கைடபன் என்ற இரண்டாம் அசுரன் படைக்கப்பட்டான்.{2} மது, கைடபன் என்ற பெயர்களைக் கொண்டவர்களும், பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்களும், முறையே ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களைக் கொண்டவர்களுமான அந்தப் பேரசுரர்கள் இருவரும் ஒற்றைப் பெருங்கடலின் நீரைக் கலங்கடிக்கத் தொடங்கினர்.{3} அவர்கள் கருநீலத்திலும், சிவப்பு நிறத்திலும் ஆடைகள் உடுத்தியிருந்தனர், எரியும் வெண்பற்களைக் கொண்டிருந்தனர், செருக்கில் மிதந்திருந்த அவர்கள் ஒளிரும் கேயூரங்களையும், கங்கணங்களையும் அணிந்திருந்தனர்.{4} 

Thursday, 29 April 2021

புஷ்கரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 12

(ஸர்வபூதோத்பத்தி꞉)

A description of the earth | Bhavishya-Parva-Chapter-12 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : தாமரையில் பிரம்மனை நிறுவிய நாராயணன்; தாமரையில் வளரும் உறுதியான வேர்களாக மலைகள்....


Lord Brahma

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அப்போது, நித்தியனான ஹரி, பெரும்பிரகாசம் கொண்டதும், பூமியின் குணங்களையும், அடையாளங்களையும் கொண்டதும், பல யோஜனைகள் நீளம் பரந்ததுமான அந்தத் தங்கத் தாமரையில் பிரம்மனை வைத்தான்.{1} யோகிகளில் முதன்மையானவனும், உயிரினங்கள் அனைத்தின் மனமாக இருப்பவனும், அவற்றின் படைப்பாளனுமான அவன், அனைத்தையும் நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான்.{2} புராணங்களை நன்கறிந்த பெரும் முனிவர்கள், நாராயணனின் மேனியில் தோன்றி, பூமியை ஆதரிப்பது இந்தத் தாமரை என்று விளக்குகின்றனர்.{3}(1-3)

Tuesday, 27 April 2021

பொற்றாமரை மலர்ச்சி | பவிஷ்ய பர்வம் பகுதி – 11

(மஹாபத்மோத்பத்தி꞉)

The creation of a lotus after dissolution | Bhavishya-Parva-Chapter-11 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : வசிஷ்டரின் பிறப்பு; ஆகாயம், ஒலி, காற்று ஆகியன படைக்கப்பட்டது; பொற்றாமரை படைப்பு....


Golden Lotus

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தலைவன் {நாராயணன்}, பிராமண முனிவரான ஆபவ வசிஷ்டராகப் பிறப்பெடுத்து, தன் உடலெனும் கொள்கலத்தை மறைத்துத் தவம் பயிலத் தொடங்கினான்.(1) அதன் பிறகு, அண்டத்தின் ஆன்மாவும், அளவற்ற சக்திகளைக் கொண்டவருமான பெரும் வசிஷ்டர், ஐம்பூதங்களையும், பிற உயிரினங்களையும் படைக்க நினைத்தார்.{2}

Saturday, 24 April 2021

நான் நாராயணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 10

(ஏகார்ணவே பகவந்மார்கண்டேயஸம்வாத꞉)

The God after dissolution | Bhavishya-Parva-Chapter-10 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : நாராயணனின் வயிற்றுக்குள் இருந்து வெளிப்பட்ட மார்க்கண்டேயர்; ஒற்றைப் பெருங்கடலையும், சிறுவனையும் கண்டு கலங்கியது; மார்க்கண்டேயருக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...


Markandeya-Rishi-sees-the-illusory-potency-of-the-Lord

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு அனைத்தும் ஒற்றைப் பெருங்கடலாக மாற்றப்பட்டதும், பெருஞ்சிறப்புவாய்ந்த தலைவன் ஹரி, பொருள் காரணமாக அமைந்திருந்த அண்டத்திற்கு அழிவை ஏற்படுத்தித் தூய புத்தியாக நிலைத்திருக்கிறான்.{1,2} ரஜஸ் குணத்திற்கு அப்பாற்பட்டவனும், நித்தியனெனக் கல்விமான்களால் சொல்லப்படும் பெரியவனுமான நாராயணன், தன் நனவால் மறைக்கப்பட்டவனாக, ரஜஸ் குணம், பூதங்கள் ஆகியவற்றின் பயனாக இருக்கும் கடக்கப்பட முடியாத பெருங்கடலுக்குள் மூன்று யுகங்கள் உறங்கிக் கிடக்கிறான்.{3,4} தலை, பாதங்கள் முதலியவற்றைக் கொண்ட புருஷனை யோகத்தாலும், வேள்விகளாலும் அடையலாம், ஆனால் மஹாபுருஷன் அவனிடம் இருந்து வேறுபட்டவனாவான். இந்தத் தூய புத்தி அனைத்திலும் கிடக்கிறது.{5}

Monday, 19 April 2021

ஒற்றைப் பெருங்கடலாக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 09

(ஏகார்ணவவிதி꞉)

The work of dissolution described | Bhavishya-Parva-Chapter-09 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஒற்றைப் பெருங்கடலில் நாராயணன்...


Narayana in ekArnava

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஏழு வடிவங்களைக் கொண்டவனும், யோகியுமான நாராயணன், நெருப்பின் வடிவை ஏற்று எரியும் தழல்களைக் கொண்டு பெருங்கடல்களை வற்ற செய்வான்.{1} ஆறுகள், பெருங்கடல்களின் வடிவில் உள்ள ஆசைகள் அனைத்தையும், மலைகளின் வடிவில் இருக்கும் அவற்றின் சக்திகளையும் தன் சக்தியால் அழிப்பான்.{2} திரளாகவும் {ஸ்தூலமாகவும்}, நுட்பமாகவும் {சூக்ஷுமமாகவும்} உள்ள இரண்டையும் அவன் அழிப்பான். அந்த இரண்டின் வேராக இருக்கும் பிரம்மத்தில் அனைத்தையும் நிலைநிறுத்தி மீண்டும் அண்டத்தைப் படைப்பதற்காகக் குணங்கள் அனைத்தையும் வற்ற செய்வான்.{3} விளைவுகளை உண்டாக்கும் காரணியான பிரம்மத்தில் இருக்கும் சிறப்பை அவன் உயிரினங்களுக்குக் கொடுப்பான். அந்த நேரத்தில் அவன் இவை அனைத்தையும் அழிப்பான்.{4} ஹரியானவன், காற்றைப் போலச் சக்தி நிறைந்தவனாக இருப்பினும், மொத்த அண்டத்தையும் வென்று, ஐந்து உயிர் மூச்சுகளையும், ஐம்புலன்களையும் மேல்நோக்கி இழுப்பான்.{5}

Saturday, 10 April 2021

கடவுளின் இயற்பண்புகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 07

(புஷ்கரப்ராதுர்பாவ:)

Attributes of God | Bhavishya-Parva-Chapter-07 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : கடவுளின் குணங்கள் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; வைசம்பாயனரின் விடை...


Vishnu on Sesha

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}[1], "ஓ! யோகத்தை அறிந்தவர்களின் தலைவரே, தேவர்களும், ரிஷிகளும் அண்டத்தில் எவ்வாறு பிறந்தனர் என்பதையும், பெருங்கடலின் நீரில் கிடந்து உறங்கும் தாமரை உந்தியோனின் {பத்மநாபனின்} சக்தியையும் எனக்கு விரிவாக விளக்கிச் சொல்வீராக. அவனது மகிமைகளைக் கேட்டு நான் இன்னும் தணிவடையவில்லை.(1,2) புருஷோத்தமன் எவ்வளவு காலம் அங்கே கிடந்தான்? காலத்தின் பிறப்புக்குக் காரணனான அவன் அந்த நேரத்தில் ஏன் உறங்கிக் கொண்டிருந்தான்?(3) தேவர்களின் தெய்வீக மன்னனான அவன் எவ்வளவு காலத்திற்குப் பிறகு விழித்தான்? விழித்தெழுந்ததும் அவன் ஏன் இந்த அண்டத்தைப் படைத்தான்?{4} ஓ! பெரும் முனிவரே, முன்பிருந்த குடிமுதல்வர்கள் யாவர்? அந்த நித்திய புருஷன் ஏன் உலகங்களைப் படைத்தான்?{5}

Thursday, 28 May 2020

விஷ்ணுவின் மறுமொழி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 55

(விஷ்ணும் ப்ரதி ப்ரஹ்ம வாக்யம்)

Vishnu's reply | Harivamsha-Parva-Chapter-55 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நாரதரிடம் பேசிய விஷ்ணு; சாபத்தின் காரணமாக கசியப முனிவர் வஸுதேவனாகப் பிறந்திருப்பதை விஷ்ணுவுக்குச் சொன்ன பிரம்மன்; வஸுதேவனின் மகனாகப் பிறக்கத் தீர்மானித்த விஷ்ணு...

Vishnu Narada and Brahma

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவர்களை ஆள்பவனும், தலைவனுமான மதுசூதனன், நாரதரின் சொற்களைக் கேட்டுப் புன்னகைத்தவாறே {பின்வரும்} மங்கலச் சொற்களில்,(1) "ஓ! நாரதா, மூவுலகங்களின் நன்மைக்காக நீ என்னிடம் சொன்ன சொற்கள் அனைத்திற்கும் உரிய மறுமொழியைக் கேட்பாயாக.(2) இந்தத் தானவர்கள் அனைவரும் மனித வடிவங்களை ஏற்றுப் பூமியில் பிறந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.(3) கம்ஸனும், பூமியில் உக்ரசேனன் மகனாகப் பிறந்திருக்கிறான் என்பதை அறிவேன். கேசி ஒரு குதிரையாகப் பிறந்திருக்கிறான் என்பதையும் அறிவேன்.(4) குவலயப்பீடன் என்ற யானையையும், சாணூரன் மற்றும் முஷ்டிகன் என்ற மற்போர்வீரர்களையும், காளையின் வடிவில் இருக்கும் தைத்தியன் அரிஷ்டனையும் நான் அறிவேன்.(5) கரனையும், பேரசுரன் பிரலம்பனையும் நான் அறிவேன். பலியின் மகளான பூதனையையும் நான் அறிவேன்.(6) வினதையின் மகனிடம் {கருடனிடம்}[1] கொண்ட அச்சத்தால் யமுனையில் புகுந்து அங்கே வாழும் காளியனை நான் அறிவேன்.(7)

[1] "பாம்புகளை உண்பவனான கருடன்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

மன்னர்கள் அனைவரின் தலைவனான ஜராசந்தன், பிராக்ஜ்யோதிஷ நகரத்தில் வாழும் நரகாசுரனையும் நான் நன்கறிவேன்.(8) பூமியில் சோணிதபுரம் என்ற நகரத்தில் பாணன் ஒரு மனிதனாகப் பிறந்திருக்கிறான். ஆயிரம் கரங்களைக் கொண்டவனும், ஆற்றல்மிகுந்தவனும், செருக்கு நிறைந்தவனுமான அந்த அசுரன் தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். பாரதவர்ஷத்தின் பெரும்பொறுப்பு என்னைச் சார்ந்தது என்பதையும் நான் அறிவேன்.(9,10) இந்த மன்னர்கள் அனைவரும் எவ்வாறு காணாமல் போவர்கள் என்பதையும் நான் அறிவேன். மனித வடிவில் இருப்பவர்களும், போர்க்களத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவர்களுமான அந்தத் தானவர்களின் அழிவையும், சக்ரலோகத்தின் மகிழ்ச்சியையும் நான் காண்கிறேன்.(11) நான் எனக்காகவும், பிறருக்காகவும் யோகத்தில் நுழையப் போகிறேன். நான், மனிதர்களில் உலகிற்குச் சென்று, மனித வடிவை ஏற்று, கம்ஸனின் தலைமையில உள்ள அந்த வலிமைமிக்க அசுரர்கள் அனைவருக்கும் அழிவைக் கொண்டு வருவேன். எந்த வழிமுறையின் மூலம் அவன் {கம்ஸன்} அமைதியை அடைவானோ அவ்வழிமுறையிலேயே நான் அவனைக் கொல்வேன்.(12,13) என் யோகத்தின் மூலம் நான் இந்த வழிமுறைகள் அனைத்தையும் வகுப்பேன். தேவர்களின் எதிரிகள் அனைவரையும் போரில் அழிப்பதே என் தற்போதைய கடமையாகும்.(14) பூமியின் சார்பாகவும், என் ஆணையின் பேரில் பூமிக்கு இறங்கி வந்த தேவர்கள், ரிஷிகள் மற்றும் கந்தர்வர்கள் அனைவரின் சார்பாகவும் தங்களைத் தியாகம் செய்த பெருமைமிக்கவர்கள் அனைவரின் பகைவரையும் நான் கொல்வேன்.(15) ஓ! நாரதா, நான் ஏற்கனவே இதைத் தீர்மானித்துவிட்டேன். பெரும்பாட்டன் பிரம்மன் அங்கே எனக்கு ஒரு வீட்டை அமைக்கட்டும்.(16) ஓ! பெரும்பாட்டனே, நான் எந்த நாட்டில் பிறந்து, எந்த வீட்டில் வாழ்ந்து அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {நாராயணன்}.(17)

பிரம்மன், "ஓ! தலைவா, ஓ! நாராயணா, வெற்றிக்கான திறவுகோலையும், பூமியில் உன் பெற்றோராகப் போவது யார் என்பதையும் என்னிடம் கேட்பாயாக.(18) உன் குடும்பத்திற்கு மகிமையேற்படுத்தும் வகையில் நீ யாதவர்களின் குலத்தில் பிறக்கப் போகிறாய்.(19) நன்மைக்காக இந்த அசுரர்களை ஒழித்தும், உன் பெருங்குடும்பத்தைப் பெருக்கியும் நீ மனித குல வகைகளை {வர்ணங்களை} நிறுவுவாய். இது குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(20)

ஓ! நாராயணா, பழங்காலத்தில் உயரான்ம வருணன் பெரும் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தபோது, அந்த வேள்விக்குப் பால்தரும் பசுக்கள் அனைத்தையும் கசியபர் அபகரித்தார்.(21) கசியபர், அதிதி மற்றும் ஸுரபி என்ற இரு மனைவிகளைக் கொண்டிருந்தார். அவர்கள் வருணனிடம் இருந்து பசுக்களை ஏற்க விரும்பவில்லை[2].(22) அதன்பிறகு என்னிடம் வந்து தலைவணங்கிய வருணன், "ஓ! மதிப்புமிக்கவரே, ஆசான் என் பசுக்கள் அனைத்தையும் அபகரித்துச் சென்றார்.(23) ஓ! ஐயா, அவரது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்ட பின்னரும் அவர் அந்தப் பசுக்களைத் திருப்பித் தரவில்லை. அவர் தமது மனைவியரான அதிதி மற்றும் ஸுரபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.(24) ஓ! தலைவா, என்னுடைய பசுக்களான அவை அனைத்தும் தெய்வீகமான, நித்தியமான பாலை விரும்பும்போதெல்லாம் தரக்கூடியவையாகும். அவை, தங்கள் சக்தியாலேயே தங்களைப் பாதுகாத்துக் கொண்டு கடல்களில் திரிந்து வருபவையாகும்.(25) தேவர்களின் அமுதத்தைப் போல அவை இடையறாமல் பால் தரக்கூடியவை ஆகும். கசியபரைத் தவிர அவற்றைக் கவர்ந்து செல்ல வேறு எவராலும் இயலாது.(26) ஓ! பிரம்மா, தேர்ந்தவராக இருந்தாலும், ஆசானாக இருந்தாலும், யாராக இருந்தாலும் ஒருவர் வழிதவறினால் அவரைக் கட்டுப்படுத்த வேண்டியவர் நீரே. எங்கள் உயர்ந்த புகலிடமாக இருப்பவர் நீரே.(27) ஓ! உலகின் ஆசானே, தங்களுக்குரிய வேலையைச் செய்யாத சக்திவாய்ந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படாவிட்டால் உலகில் ஒழுங்கு நீடிக்காது.(28) நீர் எல்லாமறிந்தவரும், அனைத்தின் தலைவருமாவீர். என் பசுக்களை என்னிடம் தந்தால் நான் பெருங்கடலுக்குச் செல்வேன்.(29) இந்தப் பசுக்களே என் ஆன்மாவாகவும், எனக்கு எல்லையற்ற பலத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன. உமது படைப்புகள் அனைத்திலும் பசுக்களும், பிராமணர்களும் சக்தியின் நித்திய பிறப்பிடங்களாவர்.(30) பசுக்களே அனைத்திலும் முதன்மையாகக் காக்கப்பட வேண்டியவை. அவை பாதுகாக்கப்படும்போது, அவை பிராமணர்களைப் பாதுகாக்கின்றன. பசுக்களையும், பிராமணர்களையும் பாதுகாப்பதன் மூலம் உலகம் ஆதரிக்கப்படுகிறது" என்றான் {வருணன்}.(31)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பழங்காலத்தில் மழையின் தேவனான உயரான்ம வருணன் ஒரு வேதச் சடங்கைச் செய்து கொண்டிருந்தபோது, அந்த வேள்விக்குப் பால்தருபவையும், வருணனுடையவையுமான கறவைப்பசுக்கள் அனைத்தையும் கசியபர் கைப்பற்றினார். கசியபரின் மனைவியரான அதிதி மற்றும் சுரபி ஆகிய இருவரும், பசுக்களைத் திருப்பித் தருமாறு வருணன் அவர்களிடம் பலமுறை வேண்டிக் கேட்டாலும் அவனுக்கு அவற்றைத் திருப்பித்தர மறுத்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பழங்காலத்தில் உயரான்ம வருணன் ஒரு வேள்வியைச் செய்தான். எனினும் கசியபர் அந்த பெரும் வேள்விக்குப் பால் தரும் பசுக்களை அபகரித்தார். அதிதி மற்றும் சுரபி ஆகிய இருவரும் கசியபரின் மனைவியராக இருந்தனர். வருணன் அவர்களை வேண்டிக் கொண்டும் அவர்கள் பசுக்களைத் திருப்பித் தரவில்லை"" என்றிருக்கிறது.

ஓ! அச்யுதா, நீரின் மன்னனான வருணனால் இவ்வாறு சொல்லப்பட்டும், பசுக்கள் களவாடப்பட்டது உண்மையென்பதை அறிந்தும் நான் கசியபனை சபித்தேன்.(32) பசுவைக் களவு செய்த உயரான்ம கசியபனின் அந்தக் கூறுடன் {அம்சத்துடன்} அவன் பூமியில் ஒரு கோபாலனாக {இடையனாகப்} பிறப்பான்.(33) தேவர்கள் பிறப்பதற்கான மரத்துண்டுகளைப் போன்றவர்களும், அவனது மனைவியருமான ஸுரபி மற்றும் அதிதி ஆகிய இருவரும் அவனுடனேயே செல்ல வேண்டும்.(34) அவர்களுடன் கோபாலனாகப் பிறந்து அங்கே மகிழ்ச்சியாக வாழ்வான். கசியபனைப் போன்றே சக்திமிக்க அவனது கூறானவன் {அம்சமானவன்}, வஸுதேவன் என்ற பெயரைப் பெற்று, பூமியில் பசுக்களுக்கு மத்தியில் வாழ்வான். மதுராவுக்கு அருகில் கோவர்த்தனம் என்ற பெயரில் ஒரு மலை இருக்கிறது.(35,36) கம்ஸனுக்குக் கப்பம் கட்டி வாழும் அவன் {கசியபன் / வசுதேவன்}, பசுக்களிடம் பற்று கொண்டவனாக இருப்பான். அவனது மனைவியரான அதிதி மற்றும் ஸுரபி ஆகிய இருவரும் தேவகி மற்றும் ரோஹிணி என்ற பெயரில் வசுதேவனின் இரு மனைவிகளாகப் பிறப்பார்கள்.(37,38) அவன் ஒரு கோபாலனின் குணங்கள் அனைத்தையும் கொண்ட ஒரு சிறுவனாகப் பிறந்து, முன்பு மூன்று காலடிகளைக் கொண்ட உன் வடிவில் நீ வளர்ந்ததைப் போலவே வளர்வான்.(39) ஓ! மதுசூதனா, உலகின் நன்மைக்காக (யோக) வடிவில் உன்னை மறைத்துக் கொண்டு நீ அங்கே செல்வாயாக.(40) உன் வெற்றி மற்றும் ஆசிகளுக்கான வியப்பொலிகளுடன் கூடிய தேவர்கள் அனைவரும் உன்னை வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர்.(41) நீ பூமிக்கு இறங்கி, ரோஹிணி மற்றும் தேவகி ஆகியோருக்கு பிறந்து அவர்களை நிறைவடையச் செய்வாயாக. ஆயிரக்கணக்கான கோபகன்னிகைகளும் {கோபியரும்} பூமியை மறைத்திருப்பார்கள்.(42) ஓ! விஷ்ணு, நீ காட்டில் பசுக்களை மேய்த்துத் திரிந்து வரும்போது, அவர்கள் காட்டு மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் உன் அழகிய வடிவைக் காண்பார்கள்.(43) ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, ஓ! பெருந்தோள்களைக் கொண்ட நாராயணா, கோபாலர்களின் கிராமங்களில் நீ சிறுவனாகச் செல்லும்போது மக்கள் அனைவரும் சிறுவர்களாவார்கள் {சிறுவர்களைப் போலாகிவிடுவார்கள்}.(44) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவனே, காட்டில் பசுக்களை மேய்த்து, மேய்ச்சல் நிலங்களில் ஓடி, யமுனையின் நீரில் நீராடும் அவர்கள் உன்னிடம் பெரும்பற்றும் ஆர்வமும் கொண்ட கோபாலர்கள் அனைவரும் தங்கள் மனங்களை உனக்கே அர்ப்பணித்து, உனக்கு உதவி செய்வார்கள். வஸுதேவனின் வாழ்வு அருளப்பட்டதாக இருக்கும்.(45,46) நீ அவனைத் தந்தை என்றும், அவன் உன்னை மகன் என்றும் அழைப்பீர்கள். கசியபனைத் தவிர வேறு எவனை உன்னால் தந்தையாக ஏற்க முடியும்?(47) ஓ! விஷ்ணு, அதிதியைத் தவிர வேறு எவளால் உன்னைக் கருவில் கொள்ள முடியும்? எனவே, ஓ! மதுசூதனா, தன்வயமான யோகத்துடன் நீ வெற்றியை நோக்கிச் செல்வாயாக. நாங்கள் எங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குச் செல்லப் போகிறோம்" என்றான் {பிரம்மன்}".(48)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தலைவன் விஷ்ணு, தேவர்களைத் தேவலோகத்திற்குச் செல்ல ஆணையிட்டுவிட்டுப் பாற்கடலின் வடக்குப் பகுதியில் உள்ள தன் வசிப்பிடத்திற்குச் சென்றான்.(49) இந்தப் பகுதியில், மேரு மலையில், நடந்து செல்வதற்கு மிகக் கடினமானதும், சூரிய கணநிலை நேரத்தில் அவனது மூன்று காலடிகளைக் கொண்டு வழிபடப்படுவதுமான ஒரு குகை {பார்வதி குகை} இருக்கிறது.(50) எல்லாம்வல்லவனும், நுண்ணறிவுமிக்கவனுமான ஹரி, அந்தக் குகையில் தன் பழைய உடலை விட்டுவிட்டு, தன் ஆன்மாவை வசுதேவனின் இல்லத்திற்கு அனுப்பினான்" என்றார் {வைசம்பாயனர்}[3][4].(51)

[3] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "தேவர்களைத் தங்கள் தெய்வீக உலகங்களுக்குச் செல்ல அனுமதித்த விஷ்ணு, மேரு மலை குறுக்கிடும் தன் வசிப்பிடமான பாற்கடலின் வடக்குப் பகுதிக்குச் சென்றான். இந்த வடக்குப் பகுதியில் இருக்கும் அந்த மலையில் ஆழமானதும், ஊடுருவ முடியாததுமான பார்வதி குகை இருக்கிறது. அங்கே மூன்று காலடிகளில் நடந்தவனும் குள்ளச் சிறுவனுமான வாமனனாக இருந்த விஷ்ணுவின் காலடித்தடங்கள் இருக்கின்றன, அந்தக் காலடித்தடங்கள் மங்கல நாட்களின் போது வழிபடப்படுகின்றன. அப்போது அந்த விஷ்ணு, தன் இன்றியமையாத வடிவத்தை அந்தக் குகையில் எவ்வாறு வைக்கலாம் என்பதையும், மனிதகுலத்தில் தன் எதிர்காலத் தந்தையான வசுதேவனின் இல்லத்தில் எவ்வாறு தான் இணைய வேண்டும் என்பதையும் சிந்தித்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "விஷ்ணு, தேவர்களைச் சொர்க்கத்திற்குச் செல்ல அனுமதித்தான். அவன் க்ஷீரோதக் கடலின் {பாற்கடலின்} வடக்கில் இருக்கும் தன் உலகத்திற்குச் சென்றான். அங்கே மேரு மலையில் ஊடுருவிச் செல்ல மிகக் கடினமானதும், பார்வதி என்ற பெயரைக் கொண்டதுமான ஒரு குகை இருக்கிறது. மூன்று காலடிகளைக் கொண்டவனின் காலடித் தடங்கள் அங்கே இருக்கின்றன, மங்கலத் தருணங்களில் அவை எப்போதும் வழிபடப்படுகின்றன. அந்தப் புராதன இடத்தில் ஹரி தன் உடலை ஓய்வில் கிடத்தினான். அந்தத் தலைவன், தான் வஸுதேவனின் இல்லத்தில் பிறக்கும் வகையில் தன் ஆத்மாவை யோகத்தில் பூட்டினான்" என்றிருக்கிறது.

[4] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் ஹரிவம்சத்தின் முதல் பர்வமான ஹரிவம்ச பர்வம் நிறைவடைகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் முதல்பர்வம் நிறைவடையும் குறிப்புக் கொடுக்கப்படாமல், அடுத்தடுத்த அத்யாயங்களுக்கு அடுத்தடுத்த அத்யாய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 55ல் உள்ள சுலோகங்கள் : 51

 ***ஹரிவம்சத்தின் முதல் பர்வமான ஹரிவம்ச பர்வம் முற்றும்***

***அடுத்தது இரண்டாம் பர்வமான விஷ்ணு பர்வம்***

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Friday, 22 May 2020

தேவர் சபைக் கூட்டம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 52

(விஷ்ணும் ப்ரதி ப்ருதிவ்யா வாக்யம்)

The assembly of gods | Harivamsha-Parva-Chapter-52 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தேவர்களுடன் மேரு மலைக்குச் சென்ற நாராயணன்; விஷ்ணுவிடம் மன்றாடிய பூமாதேவி...

Lord Vishnu and Goddess Earth

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மேகத்தின் நிறத்தைக் கொண்டவனும், செவ்வையற்ற நாளில் அதன் {மேகத்தின்} முழக்கத்தைப் போன்ற குரலைக் கொண்டவனுமான தலைவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, மேகங்களால் மறைக்கப்பட்ட ஒரு மலையைப் போலத் தேவர்களுடன் சென்றான்.(1) அந்நேரத்தில், கருநீல மேனியைக் கொண்ட ஹரி, சந்திரனுடன் கூடிய ஒரு மேகத்தைப் போல ரத்தினங்கள் மற்றும் முத்துக்கள் சூடிய ஒளிரும் சடாமுடியைத் தரித்தான்.(2) மயிர்கள் நிமிர்ந்து நிற்கும் அவனது அகன்ற மார்பில், ஸ்ரீவத்சம் எனும் மாயக்குறி இருந்தது.(3) உலகின் ஆசானான அந்த நித்திய ஹரி, இரண்டு துண்டுகளாக இருந்த மஞ்சள் உடையைச் சூடி, மாலைநேர மேகங்களால் மறைக்கப்பட்ட ஒரு மலையைப் போலத் தெரிந்தான்.(4) அவன், கருடனின் முதுகில் ஏறி செல்லத் தொடங்கியபோது, அவனில் கண்கள் நிலைத்திருந்த தேவர்களும், தாமரையில் பிறந்த தேவனும் (பிரம்மனும்) அவனைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினர்.(5) ரத்தினங்கள் நிறைந்த அந்த மலையை உடனே அடைந்த அவர்கள், அங்கே தங்கள் இதயங்களால் {தங்கள் இதய விருப்பங்களின்படி} கட்டப்பட்ட சபா மண்டபத்தைக் கண்டனர்.(6)

சுமேரு மலையின் சிகரத்தில் கட்டப்பட்டிருந்த அது, சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்தது. அதன் தூண்கள் தங்கத்தாலானவையாகவும், அதன் நுழைவாயில்கள் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டனவாகவும் இருந்தன.(7) மனத்தால் கட்டப்பட்ட அதனில் பல்வேறு ஓவியங்களும், நூற்றுக்கணக்கான தேர்களும் இருந்தன. அதன் சாளரங்கள் ரத்தினமயமான வலைகளால் மறைக்கப்பட்டிருந்தன. அது விரும்பிய எங்கும் செல்லவல்லதாகவும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது.(8) அது பலவகைப்பட்ட ரத்தினங்களாலும், பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட மலர்களாலும் நிறைந்திருந்தது. தெய்வீக மாயை நிறைந்த அந்தத் தெய்வீக சபா மண்டபம், விஷ்வகர்மனால்[1] கட்டப்பட்டதாகும்.(9) மகிழ்ச்சி நிறந்த மனங்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும், மங்கலமான அந்தச் சபா மண்டபத்தில் தங்கள் ஒவ்வொருவருக்கும் முறையாக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் சரியாக அமர்ந்தனர்.(10) தேர்கள், இருக்கைகள், பத்ராஸனங்கள்[2], பீடங்கள்[3] குத இருக்கைகள்[4] ஆகியவற்றில் அவர்கள் அமர்ந்தனர்.(11) அதன்பிறகு, பிரம்மனின் ஆணையின் பேரில் அங்கே எவ்வொலியும் எழாத வகையில் பிரபஞ்சனக் காற்றானது, அந்தச் சபா மண்டபத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சுற்றித் திரியத் தொடங்கியது.(12) அந்தத் தேவ சபையில் அனைத்தும் ஒலியற்று அமைதியாக இருந்தபோது, அவலநிலையில் இருந்த பூமியானவள், பரிதாபகரமான முறையில் அவர்களிடம் {தேவர்களிடம்} பேசத் தொடங்கினாள்.(13)

[1] "இவன் தேவர்களின் கட்டடக் கலைஞனாவான் {சிற்பி}" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[2] "மிகச் சிறந்த இருக்கை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "சீடனுக்காகக் குசப் புற்களால் முறையாக அமைக்கப்பட்ட இருக்கை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] "ஒரு வகை மரத்தாலான இருக்கைகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

பூமி, "ஓ! தேவா, என்னை நீ ஆதரிப்பாயாக. மொத்த அண்டமும் உன்னால் நிலைத்திருக்கிறது. உயிரினங்களையும், மூவுலகங்களையும் பாதுகாப்பவன் நீயே.(14) உன் ஆற்றலினாலும், பலத்தினாலும் நீ நீடிக்கச் செய்யும் எதையும், உன் உதவியின் மூலம் நான் பின்னர்த் தாங்குகிறேன்.(15) நீ தாங்கும் எதையும் நான் தாங்குகிறேன், மேலும், நீ நீடிக்கச் செய்யாத எதையும் நானும் வைத்துக் கொள்வதில்லை. உன்னால் தாங்கமுடியாத எதுவும் இந்த அண்டத்தில் இல்லை.(16) ஓ! தலைவனான நாராயணா, பல்வேறு யுகங்களில், உலகின் நன்மைக்காகச் சுமையில் இருந்து என்னை நீ விடுவித்திருக்கிறாய்.(17) நான் உன் ஆற்றலால் பீடிக்கப்பட்டு, பாதாள லோகத்திற்குச் சென்றேன். ஓ! தேவர்களில் முதன்மையானவனே, நான் உன் தயவில் இருக்கிறேன். என்னை நீ காப்பாயாக.(18) தீயவர்களான தானவர்கள் மற்றும் ராட்சசர்களால் நான் தாக்கப்பட்டிருக்கிறேன். என் நித்திய மீட்பன் நீயே, உன் தயவிலேயே எப்போதும் நான் இருக்கிறேன்.(19) சுமைகள் அனைத்திலிருந்தும் என்னை விடுவிக்கும் நாராயணனின் புகலிடத்தை நான் நாடாதவரை, பேரச்சத்தின் ஆதிக்கத்திலேயே நான் இருப்பேன் என்பதை நூறு மடங்கு {நூறு வழிகளில்} அறிந்திருக்கிறேன்.(20)

தாமரையில் உதித்த பிரம்மனால் உழவு, வணிகம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான பிற வழிமுறைகள் அமைக்கப்படுவதற்கு முன்னர், நான் பழங்காலத்தில் அளவில் சிறுத்திருந்தேன். மண்ணாலான இருபெரும் அசுரர்கள் என்னைப் பிணைத்துக் கொண்டு முன் பிறந்திருந்தனர்.(21) இந்த உயரான்ம விஷ்ணு பெருங்கடலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இவனது காதுகளில் இருந்து உண்டான அவர்கள், இரண்டு மரத்துண்டுகளைப் போல இருந்தனர்.(22) பெரும்பாட்டனால் {பிரம்மனால்} அனுப்பப்பட்ட காற்றானது {வாயு}, உயிர் மூச்சின் வடிவில் அவ்விரு தானவர்களின் உடலுக்குள் நுழைந்தது. அதன்பிறகு அந்தப் பேரசுரர்கள் இருவரும் வானத்தை மறைத்தபடி வளரத் தொடங்கினர்.(23) உயிர் மூச்சுகளைக் கொடையாகப் பெற்ற அவ்விருவரையும் பிரம்மன் கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டான். அவர்களில் ஒருவன் மென்மையானவனாகவும், மற்றவன் கடுமையானவனாகவும் தோன்றினான்.(24) நீரில் பிறந்த தலைவனான பிரம்மன், அவர்களுக்குப் பெயர்களைக் கொடுத்தான். மென்மையானவன் மது என்று பெயரிடப்பட்டான், கடுமையாக இருந்த மற்றவன் கைடபன் என்று அழைக்கப்பட்டான்.(25)

அவ்விரு தைத்தியர்கள் இவ்வாறு பெயரிடப்பட்டபோது, தங்கள் பலத்திலும், அச்சமற்ற நிலையிலும் செருக்கு மிகுந்தவர்களாக ஒரே நீர்ப்பரப்பாக மாற்றப்பட்ட உலகில் போரை நாடித் திரியத் தொடங்கினர்.(26) அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், இவ்வாறு அவர்கள் அணுகுவதைக் கண்டு, அண்டப் பெருங்கடலான நீரில் மறைந்து போனான்.(27) நான்கு முகங்களைக் கொண்ட பெரும்பாட்டன் {பிரம்மன்}, தாமரை உந்தி {பத்மநாபனான} விஷ்ணுவின் உந்தியில் உதித்த தாமரையில் கமுக்கமாக வாழ விரும்பினான்.(28) நாராயணனின் பேரர்களான மதுவும், கைடபனும் இவ்வாறு நீரில் நீண்ட பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தபோதும் கிஞ்சிற்றும் கலக்கமடையாதிருந்தனர்.(29) பல ஆண்டுகள் கழிந்த பிறகு, மது மற்றும் கைடபன் என்ற அவ்விரு அசுரர்கள், பிரம்மன் இருந்த இடத்திற்கு வந்தனர்.(30)

பிரம்மன், பயங்கரமானவர்களும், பேருடல் படைத்தவர்களும், அடக்கப்பட முடியாதவர்களுமான அவ்விரு தானவர்களையும் கண்டு, {தான் இருந்த} தாமரையின் தண்டால் நாராயணனைத் தொந்தரவு செய்தான். பெரும் பிரகாசம் கொண்டவனும், தாமரை உந்தி கொண்டவனுமான அந்தத் தேவன் இதனால் தன் படுக்கையில் இருந்து எழுந்தான்.(31) அந்த நேரத்தில் மூவுலகங்களும் நீரால் மறைக்கப்பட்டிருந்ததால், அந்த நீர்ப்பரப்பில் நாராயணனுக்கும், மதுகைடபர்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடைபெற்றது.(32) அந்தப் பயங்கரப்போர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்தது, அந்தப் போரினால் அந்தத் தானவர்கள் இருவரும் கிஞ்சிற்றும் களைப்படையவில்லை.(33) நீண்ட காலத்திற்குப் பிறகு, போரில் பயங்கரர்களான அவ்விரு தானவர்களும், இதய மகிழ்ச்சியுடம் தலைவன் நாராயணனிடம், "உன்னுடனான போரில் நாங்கள் பெரும் நிறைவடைந்தோம். பெரும் விருப்பத்திற்குரிய எங்கள் காலன் {மரணம்} நீயே. நீர் நிறையாத பூமியில் ஓரிடத்தில் எங்களுக்கு அழிவைக் கொண்டு வருவாயாக.(34,35) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, உன்னால் கொல்லப்பட்டு, போரில் எங்களை வீழ்த்தும் உனக்கே நாங்கள் மகன்களாவோம்" என்றனர்[5].(36)

[5] தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில், "நீ எங்களுடன் செய்த போரில் நாங்கள் நிறைவடைகிறோம், சூழ்நிலை அமைந்தால் எங்களுக்குக் காலனாகப் போகும் உன்னைப் பாராட்டுகிறோம். ஆனால் நாங்கள் எங்களைக் கொல்பவர்களின் மகனாவோம் என முன்பே விதிக்கப்பட்டிருக்கிறோம். எனவே, பூமியில் நீரில்லாத ஓரிடத்தில் எங்களை நீ வீழ்த்தப் பரிந்துரைக்கிறோம். அதன் மூலம் நாங்கள் உன் மகன்களாக மீண்டும் பிறப்போம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ! தேவர்களில் உயர்ந்தவனே, உன்னுடனான இந்தப் போரால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்தப் போரில் உன் கைகளால் எங்களுக்கு மரணம் ஏற்படும் என்பதில் செருக்குக் கொள்கிறோம். எனினும், நீரில்லாத ஓரிடத்தில் எங்களைக் கொல்வாயாக. நாங்கள் கொல்லப்பட்டதும், நாங்கள் உன் மகன்களாப் பிறக்க வேண்டும். போரில் எங்களை ஒருவன் வீழ்த்தினால், நாங்கள் அவனது மகன்களாக வேண்டும்" என்றிருக்கிறது.

போரில் நாராயணன், தன் இரு கைகளிலும் அவ்விரு அசுரர்களையும் பற்றி அவர்களைத் தாக்கினான். அதன் பேரில் மதுவும், கைடபனும் மரணத்தைச் சந்தித்தனர்.(37) இவ்வாறு கொல்லப்பட்ட இரு தைத்தியர்களும் நீரால் நிறைந்தனர். அவர்கள் இருவரின் உடல்களும் ஒன்றாக இணைந்தன. பிறகு, நீரின் அலைகளால் கடையப்பட்ட அவர்கள் கொழுப்பை வெளியிடத் தொடங்கினர். நீர் அந்தக் கொழுப்பால் மறைக்கப்பட்டது. ஓ! பாவமற்றவனே, அதன்பின்னர் அவர்கள் மறைந்தனர், தலைவன் நாராயணன், தன் படைப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டான்.(38-39) மது மற்றும் கைடபன் என்ற அசுரர்களின் கொழுப்பால் நான் மறைக்கப்பட்டதால் மேதினி என்ற பெயரைப் பெற்றேன். இந்தத் தாமரை உந்தி தேவனின் சக்தியால் நான் நித்திய அண்டமானேன்[6].(40)

[6] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "அப்போது நாராயணன், நீரற்ற தளமான தன் உள்ளங்கைகளெனும் கிண்ணத்திற்குள் அவர்களைத் தட்டினான்; தன் கக்கங்களுக்குள் வைத்து மது மற்றும் கைடபன் என்ற அவ்விரு அசுரர்களையும் தாக்கினான்; அவர்கள் நசுக்கிக் கொன்று, அவர்களின் எச்சங்களைத் தன்னைச் சுற்றி இருந்த நீருக்குள் வீசி எறிந்தான். இவ்வாறு கொல்லப்பட்டு, நீரில் வீசப்பட்ட அவ்விரு அசுரர்களின் சடலங்களும் நீரில் மிதந்து ஒன்றாக இணைந்தன, பிறகு அலைகளால் தாக்கப்பட்ட அந்த உடலானது தன் கொழுப்பை நீரில் வெளியிட்டு, நீரின் மொத்த பரப்பிலும் அந்தக் கொழுப்பின் நுரை பரவியதால் அவ்விரு அசுரர்களின் உடல்களும் மறைந்தன. ஓ! பாவமற்ற ஜனமேஜயா, அதன்பிறகு, நாராயணன், படைப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டான். அந்த அசுரர்களின் கொழுப்பில் கொஞ்சத்தைத் திரட்டி என்றென்றும் நான் கடினப்படுத்தப்பட்டேன். அதே வேளையில் எஞ்சிய கொழுப்பானது மறைந்து போன அந்த அசுரர்களுடன் மறைந்தே போனது. அசுரர்களின் கொழுப்பான மேதஸ் என்னை மூடியதன் விளைவால் நான் மேதினி என்ற பெயரைப் பெற்றேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தப் போரில் தைத்தியர்களைத் தன் கரங்களில் பற்றிய அவன் {நீரற்ற இடமான} அங்கேயே அவர்களை நசுக்கினான். இவ்வாறு மதுவும், கைடபனும் கொல்லப்பட்டனர். அவன் அவர்களது உடலை நீரில் வீசினான். நீரின் அலைகளில் வீசப்பட்டதும் அந்தத் தைத்தியர்களின் உடல்கள் ஒன்றாகி, கொழுப்பை வெளியிடும் வகையில் கடையப்பட்டன. அந்தக் கொழுப்பு நீரை மறைத்ததும் உடல்கள் மறைந்தன. இவ்வாறு சிறப்புமிக்க நாராயணன், குடிமக்களைப் படைக்கத் தொடங்கினான். அந்தத் தைத்தியர்களின் கொழுப்பால் படைக்கப்பட்டதாலேயே நான் மேதினி என்று அழைக்கப்பட்டு வருகிறேன்" என்றிருக்கிறது.

மீண்டும் அந்தத் தலைவன், மார்க்கண்டேய முனியின் முன்னிலையில் ஒரு பன்றியின் {வராகத்தின்} வடிவை ஏற்றுத் தன் தந்தம் ஒன்றால் நீரில் இருந்து என்னை உயர்த்தினான்.(41) மீண்டும் மற்றொரு நேரம் கனல்தெறிக்கும் உங்கள் முன்னிலையில் பலம்நிறைந்தவனான விஷ்ணு, தைத்திய தலைவன் பலியிடம் இருந்து என்னை விடுவித்தான்.(42) இப்போது ஒடுக்கப்படுகிறவளும், பாதுகாக்க யாரும் அற்றவளுமான நான், தன் பற்றார்வங்களில் எப்போதும் விருப்பம் கொண்டவனும், அண்டத்தின் தலைவனுமான கதாதரனின் புகலிடத்தை நாடுகிறேன்.(43) பொன்னுக்குக் காரணம் நெருப்பு {அக்னி}, வீண்மீன்களுக்குக் காரணம் சூரியன், அவ்வாறே எனக்கு ஆதரவு நாராயணன் ஆவான்.(44) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டத்தை நான் தனியாகவே தாங்குகிறேன். என்னால் தாங்கப்படும் இவை அனைத்தையும் கதாதரன் ஆதரிக்கிறான்.(45)

என் சுமையில் இருந்து என்னை விடுவிக்க விரும்பிய ஜமதக்னியின் மகன் ராமர் {பரசுராமர்}, என்னை இருபத்தோரு முறை க்ஷத்திரியர்கள் அற்றவளாகச் செய்தார்.(46) பிருகுவின் மகனான ராமர், ஒரு வெற்றித்தூணை எழுப்பி, தன் தந்தையின் ஈமச் சடங்கில் அரசக் குருதியைக் கொண்டு என்னைத் தணிவடையச் செய்து, பிறகு கசியபரிடம் தெரிவித்தார்.(47) கொழுப்பு, இறைச்சி, எலும்புகளில் இருந்து வெளிவரும் கெட்ட நாற்றத்தால் நிறைந்தவளாக, க்ஷத்திரியர்களின் குருதியால் நிரம்பியவளாக, மாதவிடாய் காலத்தில் இருக்கும் ஓர் இளங்காரிகையைப் போலக் கசியபரின் முன்பு நான் தோன்றினேன்.(48) அப்போது பிராமண முனிவரான கசியபர் என்னிடம், "ஓ! பூமியே, நீ ஏன் இவ்வளவு மனச்சோர்வுடன் இருக்கிறாய்? ஒரு வீரனின் மனைவியாக இருந்து கொண்டு, நீ ஏன் அவமான நோன்பை நோற்கிறாய்?" என்று கேட்டார்[7].(49) அதற்கு நான் உலகின் குடிமுதல்வரான கசியபரிடம், "ஓ! பிராமணரே, பெரும்பார்க்கவர் {பரசுராமர்} என் கணவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்.(50) ஆயுதங்களில் வாழும் பலமிக்க க்ஷத்திரியர்கள் அனைவரையும் நான் இழந்துவிட்டேன், நான் என் கணவனை இழந்துவிட்டேன். நான் என்னில் வெறுமையான நகரங்களைச் சுமக்க விரும்பவில்லை. எனவே, ஓ! மதிப்புக்குரிய ஐயா, கிராமங்கள் மற்றும் நகரங்களால் நிறைந்திருப்பவளும், கடல்களால் மாலையிடப்பட்டவளுமான என்னைப் பாதுகாக்க வல்ல மன்னனை எனக்கு அளிப்பீராக" என்று கேட்டேன்.

[7] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "பூமிப்பெண்ணே, உன் முகம் எதனால் தாழ்ந்திருக்கிறது. நீ வீரர்களின் மனைவித்தன்மை என்ற நோன்பு {வீரபத்னீவிரதத்தை} மேற்கொண்டாலும் மனந்தளர்ந்திருக்கிறாயே" என்று கேட்பதாக இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஏன் உன் முகம் தாழ்ந்திருக்கிறது? துணிச்சல்மிக்கவர்களின் மனைவியாக இருக்கும் நோன்பை நீ மேற்கொள்கிறாய். ஒரு வீரனுக்கு மனைவியாக இருக்கும் அந்நோன்பைப் பின்பற்றுவாயாக" என்றிருக்கிறது.

என் சொற்களைக் கேட்ட எல்லாம்வல்ல தலைவன் {கசியபர்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்னார். அதன்பிறகு மனிதர்களின் மன்னனான மனுவை எனக்குக் கொடுத்தார்.(53) அதன்பிறகு மனுவில் இருந்து தோன்றியவர்களும், தேவர்களைப் போன்றவர்களுமான இக்ஷ்வாகு குல மன்னர்களை அடைந்த நான், சக்திமிக்கக் காலத்தின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு மன்னனின் கைகளில் இருந்து மற்றொரு மன்னனின் கைகளுக்குக் கொடுக்கப்பட்டேன்.(54) அந்தத் தலைவன் {கசியபர்}, மனிதர்களின் மன்னனான நுண்ணறிவுமிக்க மனுவை எனக்குக் கொடுத்தபோது, பெரும் முனிவர்களின் குடும்பங்களில் பிறந்த பல மன்னர்கள் என்னை ஆட்சி செய்தனர்.(55) வீர க்ஷத்திரியர்கள் பலர் என்னை வென்று தேவலோகம் சென்றனர். காலத்தின் ஆதிக்கத்தின் கீழ் அவர்கள் என்னில் மறைந்தனர்.(56) போரில் எப்போதும் வெல்பவர்களான சக்திவாய்ந்த க்ஷத்திரியர்கள், என் நிமித்தமாக இவ்வுலகில் ஒருவரோடொருவர் போரிட்டனர், இன்னும் போரிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.(57) உன்னால் அனுப்பப்பட்ட விதியின் எல்லை இதுதான். உனக்கு என்னிடம் பரிவிரக்கம் இருந்தால், என் சுமையில் இருந்து என்னை விடுவிக்க நீ விரும்பினால், உலகின் நன்மைக்காகவும், மன்னர்களின் அழிவுக்காகவும் ஒரு போரை ஏற்பாடு செய்வாயாக. எழில்மிகுந்த சக்கரதரனே எனக்குப் பாதுகாப்பை அருள்வாயாக.(58,59) சுமையால் ஒடுக்கப்பட்டு வந்த என்னை அதலிருந்து விடுவிக்க விரும்பினால், நாராயணனே எனக்கு ஆணையிடட்டும்" என்றாள் {பூமாதேவி}" என்றார் {வைசம்பாயனர்}.(60)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 52ல் உள்ள சுலோகங்கள் : 60
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Wednesday, 20 May 2020

சுமையில் இருந்து பூமியை விடுவிக்கும் முன்மொழிவு | ஹரிவம்ச பர்வம் பகுதி – 51

(விஷ்ணு தேவ ஸம்வாதம்)

The proposal of relieving the earth of her burden | Harivamsha-Parva-Chapter-51 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பூமியின் நிலையை நாராயணனிடம் விளக்கிச் சொன்ன பிரம்மன்; நாராயணனுடன் ஆலோசிப்பதற்காக மேரு மலையின் சிகரத்திற்குச் செல்ல வேண்டும் என்று கேட்ட பிரம்மன்...

Lord Vishnu Goddess Lakshmi and Lord Brahma

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அனைவரின் பெரும்பாட்டனான பிரம்மன், விஷ்ணுவின் இந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்களுக்கான நன்மைகள் நிறைந்த சொற்களைச் சொன்னான்.(1) {பிரம்மன்}, "பல்வேறு போர்களில் நீ தேவர்களின் தலைவனாக இருந்து பாதுகாப்பை அளிப்பதால், அவர்களுக்கு அசுரர்களிடம் இருந்து எந்த அச்சமும் ஏற்படவில்லை.(2) பகைவரைக் கொல்பவனும், தேவர்களின் மன்னனுமான நீயே வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக இருப்பதால், அற நோன்புகளில் ஈடுபடும் மனிதர்களுக்கு அச்சம் ஏது?(3) வாய்மைநிறைந்த, பக்திமிக்க மனிதர்கள், தீமைகளில் இருந்து எப்போதும் விடுபட்டவர்களாக இருக்கிறார்கள். மரணத்தால் {மிருத்யுவால்}, பக்திமான்களை முன்முதிர்ந்து {அகாலத்தில்} சந்திக்க முடியாது.(4)

மனிதர்களில் முதன்மையான மன்னர்கள், ஒருவரையொருவர் அஞ்சாமல், தங்கள் ஆறாம் பங்கை[1] அனுபவித்து வருகின்றனர்.(5) அவர்கள், தங்கள் குடிமக்களுக்கு நன்மை செய்து, தங்கள் துணை மன்னர்களால் {தங்களின் கீழ் கப்பம் கட்டி ஆளும் சிற்றரசர்களால்} பழிக்கப்படாமல், அவர்களிடம் இருந்து முறையாகக் கப்பம் ஈட்டித் தங்கள் கருவூலங்களைச் செல்வத்தால் நிரப்புகின்றனர்.(6) அவர்கள், மென்மையான தண்டனைகள் அளித்து, தங்கள் தங்களுக்குரிய செழிப்பான மாகாணங்களைச் சகிப்புத் தன்மையுடன் ஆட்சி செய்து, நான்கு வர்ணங்களையும் பாதுகாத்து வருகின்றனர்.(7) அவர்கள், தங்கள் குடிமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமலும், தங்கள் அமைச்சர்களால் நன்கு போற்றப்பட்டும், படையின் நான்கு பிரிவுகளால் பாதுகாக்கப்பட்டும் ஆறு வழிமுறைகளில்[2] திறம்படச் செயலாற்றுகின்றனர்.(8) அவர்கள் அனைவரும், வில் அறிவியலை நன்கறிந்தவர்களாக, வேத சடங்குகளைச் செய்பவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் அனைவரும் அபரிமிதமான கொடைகளுடன் வேள்விகளைச் செய்து தேவர்களை வழிபட்டு வருகிறார்கள்.(9) அவர்கள், தொடக்கச் சடங்குகளைச் செய்து {தீக்ஷை பெற்று}, வேதங்களைக் கற்று, எண்ணங்கள், சொற்கள், மற்றும் செயல்களில் தூய்மையின் மூலம் பெரும் முனிவர்களையும், புனிதமான சிராத்தங்களின் நூற்றுக்கணக்கில் செய்வதன் மூலம் பித்ருக்களையும் தணிவடையச் செய்கின்றனர்.(10) உலகில் வேதம், வழக்கம், சாத்திரம் சார்ந்த பொருள் எதையும் அவர்கள் அறியாதவர்களாக இல்லை.(11) பெரும்பிரம்மனை நம்புபவர்களும், பெரும் ரிஷிகளைப் போலப் பிரகாசிப்பவர்களுமான அந்த மன்னர்கள் அனைவரும் மீண்டும் பொற்காலத்தைத் திரும்பக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.(12)

[1] மக்களின் வருமானத்தில் ஆறில் ஒரு பங்காகப் பெறப்படும் வரி


[2] "படையின் குணங்களான அமைதி, போர், அணிவகுப்பு, நிறுத்தம், பிளவுகளை விதைத்தல் மற்றும் பாதுகாப்பை நாடல் என்பவை ஒரு மன்னனுக்குரிய ஆறு வழிமுறைகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.


அவர்களது {அந்த மன்னர்களின்} சக்தியின் மூலம் வாசவன் {இந்திரன்} நல்ல மழையைப் பொழிகிறான், காற்றானவன் {வாயு}, மாசுகள் நீங்கியவனாகப் பத்துத் திசைகளிலும் வீசிக் கொண்டிருக்கிறான்.(13) பூமியானவள் தீய சகுனங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டிருக்கிறாள், கோள்கள் சுகமாக வானத்தில் உலவுகின்றன. விண்மீன்களுடன் கூடிய சந்திரன் வானத்தில் அழகாக நகர்ந்து வருகிறான்.(14) சூரியன், வழக்கமாக அடுத்தடுத்து விளைபவற்றை உண்டாக்கி, தன்னிரு பாதைகளில் {உத்தராயண / தக்ஷிணாயனமாக} நகர்கிறான். பல்வேறு பலியுணுகளால் {ஆகுதிகளால்} தணிக்கப்படும் நெருப்பானவன் {அக்னி} இனிய நறுமணத்துடன் திகழ்கிறான்.(15) இவ்வாறு முறையாகச் செய்யப்பட்டுப் பெருகும் வேள்விகளால் மொத்த உலகும் அமைதியடைந்து, மரணத்திடம் மனிதர்கள் அச்சமடையாமல் இருக்கின்றனர்.(16) ஒருவரையொருவர் பின்தொடர்பவர்களும், புகழ்மிக்கவர்களும், பலமிக்கவர்களுமான மன்னர்களின் சக்தியால் பூமியானவள் ஒடுக்கப்படுகிறாள்.(17) இந்தக் கனத்தால் களைத்தும், மன்னர்களால் தாக்கப்பட்டும் வரும் பூமியானவள், முழுகும் நிலையிலுள்ள ஒரு படகைப் போல எங்கள் முன் வந்திருக்கிறாள்.(18) மன்னர்களால் ஒடுக்கப்படுகிறவளும், அழிவுக்கால நெருப்புக்கு ஒப்பானவளும், நடுங்கும் மலைகள், மற்றும் கலங்கும் கடல்களுடன் கூடியவளுமான பூமியானவள் மீண்டும் மீண்டும் வியர்த்தவளாகிறாள்.(19) க்ஷத்திரியர்களின் உடல், சக்தி, பலம் மற்றும் பரந்த நிலங்களுடன் கூடிய பூமியானவள் எப்போதும் அமைதியாக இருக்கிறாள்.(20)

ஒவ்வொரு நகரத்தின் மன்னனும், ஒரு கோடி படைவீரர்களால் சூழப்பட்டிருக்கிறான்; ஒவ்வொரு நாட்டிலுமுள்ள நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிராமங்கள் செழிப்பில் வளர்ந்து வருகின்றன, மேலும் ஆயிரக்கணக்கான மன்னர்களின் பெரும்படை மற்றும் லட்சக்கணக்கான கிராமங்களால் பூமியானவள் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறாள்.(21,22) காலத்தைத் தன் முன் கொண்டவளாகவும், அனைத்து நோய்களில் இருந்தும் விடுபட்டவளாகவும், சக்தியிழந்தவளாகவும் பூமியானவள் என் வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஓ! விஷ்ணு, அவளது மிகச் சிறந்த புகலிடம் நீயே.(23) ஓ! மதுசூதனா, மனிதச் செயல்பாடுகளுக்கான களமான இந்தப் பூமியானவள், பெரிதும் தாக்கப்படுகிறாள். நித்தியமானவளும், அண்டத்தின் வசிப்பிடமுமான பூமியானவள், சிதைவடையாமல் இருக்கச் செய்வதே உனக்குத் தகும்.(24) ஓ! மதுசூதனா, அவளை ஒடுக்குவது பெருங்கொடுமையாகும், ஏனெனில், அவள் தாக்கப்படுவதால் மனித செயல்கள் அனைத்தும் முடிவை நெருங்கி, அண்டத்தின் நலம் சீர்குலையும்.(25) மன்னர்களால் ஒடுக்கப்படும் பூமியானவள், முற்றிலும் சோர்வடைந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. அவள், தன் உறுதியையும், இயல்பான சகிப்புத் தன்மையையும் கைவிட்டு பொறுமையிழந்தவளாக இருக்கிறாள்.(26) அவளது வரலாற்றை நாங்கள் கேட்டோம். நீயும் அதைக் கேட்டாய். எனவே, சுமையில் இருந்து அவளை விடுவிப்பதற்காக நாங்கள் உன்னுடன் ஆலோசிக்க வேண்டும்.(27)

இந்த மன்னர்களில் பலர், நீதிமிக்க வழிகளைப் பின்பற்றி, தங்கள் நிலப்பகுதிகளைப் பெருக்கிக் கொள்கின்றனர். மனிதர்களுக்கு மத்தியில் பிற வர்ணங்கள் மூன்றும் பிராமணர்களைப் பின்பற்றுகின்றன.(28) சொற்கள் அனைத்தும் வாய்மை நிறைந்தவையாகவும், வர்ணங்கள் அனைத்தும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்றுபவையாகவும், பிராமணர்கள் அனைவரும் வேதங்களைக் கற்பவர்களாகவும், பிற மனிதர்கள் அனைவரும் பிராமணர்களிடம் அர்ப்பணிப்புமிக்கவர்களாகவும் இருக்கின்றனர்.(29) இவ்வாறே மனிதர்கள், நீதியின் கருவிகளாக உலகில் இருக்கிறார்கள். அறத்திற்குக் கேடு நேராத நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.(30) இவ்வுலகமானது, பக்திமான்களின்றி வேறு எவரின் இலக்குமல்ல. அவர்கள் {அந்த பக்திமான்கள்} அடைய முயலும் மிகச்சிறந்த பொருள் அறமாகும். எனவே, பூமியைச் சுமையில் இருந்து விடுவிக்க மன்னர்களின் அழிவு அவசியமாகிறது. எனவே, ஓ! பெருமைமிக்கவனே, எங்களுடன் ஆலோசிக்க வருவாயாக. நமக்கு முன் பூமியைக் கொண்டு மேரு மலையின் சிகரத்திற்கு நாம் செல்வோமாக" {என்றான் பிரம்மன்}.(31,32)

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனும், பெரும்பிரகாசம் கொண்டவனும், அனைவரின் பெரும்பாட்டனுமான பிரம்மன், இதைச் சொல்லிவிட்டு, பூமியுடன் சேர்ந்து ஓய்ந்திருந்தான் {காத்திருந்தான்}" என்றார் {வைசம்பாயனர்}.(33)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 51ல் உள்ள சுலோகங்கள் : 33

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

நாராயணாஷ்ரமம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 50

(நாராயண ஆஷ்ரம வர்ணனம்)

An account of Narayanashrama | Harivamsha-Parva-Chapter-50 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரம்மலோகத்தில் நாராயணாஷ்ரமத்தில் நுழைந்த விஷ்ணு; விஷ்ணுவின் துயில்; விஷ்ணு உறங்கும்போது அவனது கடமைகளைச் செய்யும் இந்திரன்; விஷ்ணுவுடன் பிறந்த மாயை; முனிவர்கள் வேண்டியது; விஷ்ணு விழித்தது...

Lord Vishnu's sleep

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு ரிஷிகளால் வழிபடப்பட்ட அந்தத் தேவன் {நாராயணன்}, புராணங்களில் விளக்கப்பட்டுள்ளபடியே நாராயணனின் ஆசிரமமான பிரம்மனின் தெய்வீக வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்[1].(1) அவன் {நாராயணன்}, அந்த ரிஷிகள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வழிபட்டு, தாமரையில் உதித்த தலைமைத் தேவனான பிரம்மனை வணங்கி ஏற்கனவே குறிப்பிடப்பட்ட உலகத்திற்குள் நுழைந்தான்.(2) அந்தத் தலைவன், தன் பெயரையே கொண்ட நாராயண ஆசிரமத்திற்குள் நுழைந்த பிறகு தன் ஆயுதங்கள் அனைத்தையும் விட்டான்.(3) அங்கே அவன், பெருங்கடலுக்கு ஒப்பான தன் வசிப்பிடம் தேவர்களாலும், இறப்பற்ற முனிவர்களாலும் நிறைந்திருப்பதைக் கண்டான்.(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பிரம்மலோகத்தைச் சேர்ந்த முனிவர்களின் வணக்கத்தைப் பெற்றுக் கொண்ட தேவன் ஸ்ரீஹரி, பிரம்மனின் பணிவிணக்கத்தைப் பெற்று பிரம்மனின் வசிப்பிடத்திற்குச் சென்று, நாராயணாஷ்ரமம் என்றழைக்கப்படுவதும், புனிதமானதும், புராணங்களில் புகழப்படுவதும், பிரம்மலோகத்திலேயே இருப்பதுமான நாராயணனின் ஆசிரமத்திற்குள் நுழைந்தன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "முனிவர்களால் வணங்கப்பட்ட தலைவன் ஹரி, புராதனமானதும், தெய்வீகமானதும், நாராயணனின் ஆசிரமல்லாமல் வேறில்லாததுமான பிரம்மனின் வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்" என்றிருக்கிறது.

அந்த வசிப்பிடம், சம்வர்த்தக மேகங்கள் மற்றும் பிற மேகங்களால் மறைக்கப்பட்டு, விண்மீன்கள் உலகின் இருளால் சூழப்பட்டு, தேவர்களும், அசுரர்களும் அடைவதற்கு அப்பால் இருந்தது.(5) அங்கே காற்று வீசுவதில்லை, சூரியனும், சந்திரனும் ஒளிர்வதில்லை. அது தாமரை உந்தி தேவனுடைய உடலின் பிரகாசத்தால் மறைக்கப்பட்டிருந்தது.(6) ஆயிரம் தலைகளுடன் சடாமுடி தரித்த அந்தத் தேவன் {நாராயணன்} அங்கே நுழைந்து, படுத்துக்கிடப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான்.(7) கரிய கண்களைக் கொண்டதும், மனிதர்களின் இறுதி நாட்களை அறிந்ததும், மரணம் போன்றதுமான துயில் {உறக்கம்} அந்த உயரான்ம தேவன் முன்பு தோன்றியது.(8)

புலன்களை ஆளும் திறனை அடைந்தவனும், நோன்பு நோற்பவர்களில் முதன்மையானவனுமான ஹரி, பெருங்கடலின் நீரைப் போலக் குளிர்ந்த தெய்வீகப் படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்டான்[2].(9) ரிஷிகளும், தேவர்களும், அண்டத்தைப் படைப்பதற்காக இவ்வாறு துயில் கொண்டவனும், எல்லாம் வல்லவனுமான பெரும் விஷ்ணுவை வழிபடத்தொடங்கினர்[3].(10) அவன் உறங்கிக் கொண்டிருந்தபோது, சூரியனைப் போன்ற பிரகாசமிக்கதும், தொடக்கமும் முடிவுமாக இருக்கும் குடிமுதல்வன் பிரம்மனின் (பிரம்மன் அமர்வதற்குண்டான) இருக்கையுமான ஒரு தாமரை அவனது உந்தியில் உதித்தது.(11) ஆயிரம் இதழ்களையும், அழகிய வண்ணத்தையும் கொண்ட அந்தத் தாமரை, மென்மையானதாகவும், நன்கு அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. பெரும் முனிவனான பிரம்மன், மாசற்ற ஆசையின் சரடான தன் கையை உயர்த்தி, காலத்தால் கொண்டுவரப்படும் உலகங்கள் அனைத்தின் மாற்றங்களுக்குரிய சக்கரத்தைச் சுழற்றுகிறான்[4].(12)


[2] "இது விஷ்ணுவின் சமாதி அல்லது தீவிர தியானம் குறித்த ஓர் உருவகக் கதை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "இவ்வாறு சமாதியில் ஈடுபட்டான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] "பிரம்மனால் அண்டத்தின் படைப்பு நிகழ்த்தப்பட்டது என்பது இங்கே பொருள். உலகில் வெளிப்படும் மாற்றங்கள் அனைத்தும் அவனது பணிகளே. இந்தப் படைப்பும் அவனது ஆசையின் விளைவே. முதலில் அவன் விருப்பத்தை வளர்க்கிறான், பிறகு படைப்புத் தொழிலில் ஈடுபடுகிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அவனுடைய மூச்சுக் காற்றின் மூலம் அசைக்கப்பட்டு, அவனது வாயில் இருந்து குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்} வெளிவருகிறார்கள். சில வேளைகளில் அவர்கள் கீழே விழுகிறார்கள், சில வேளைகளில் அவர்கள் மேலே உயர்கிறார்கள்.(13) இவ்வாறு அவனால் படைக்கப்படும் மனிதர்கள், மீண்டும் பிரம்மனால் நான்கு வகையினராகப் பிரிக்கப்படுகின்றனர். பிறகு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள பணிகளைச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் இலக்குகளை அடைகின்றனர்.(14) பிரம்மனாலும், இறப்பிலிகளான ரிஷிகளாலும் கூட இவ்வாறு தமஸில் மறைக்கப்பட்டு யோகத் துயிலில் ஈடுபடும் விஷ்ணுவைப் புரிந்து கொள்ள முடியாது[5].(15) நாராயணன் எப்போது உறங்குகிறான், எப்போது தன் படுக்கையில் அமர்ந்து கொள்கிறான் என்பதைப் பெரும்பாட்டனின் தலைமையிலான பிராமண முனிவர்களால் காண முடியாது.(16) இந்த உடலில் விழித்திருப்பவன் எவன்? துயில்பவன் எவன்? இயன்றும், பணியைச் செய்யாதவன் எவன்? பல்வேறு இன்பநுகர் பொருட்களில் இன்புற்றிருப்பவன் எவன்? பிரகாசிப்பவன் எவன்? நுட்பத்திலும் நுட்பமானவன் எவன்?(17)

[5] "இஃது இருள் {தமோ} குணமாகும். விஷ்ணு, படைக்கும் விருப்பத்தைக் கொள்ளும்போது, தன் வடிவத்தைத் தியானத்தில் ஈடுபடுகிறான் என்பது இந்த வாக்கியத்தின் பொருளாகும். சத்வம் அல்லது நல்லியல்பின் குணம் அவனில் பேராதிக்கம் செலுத்தும்போது, அவன் படைப்புத் தொழிலில் இருந்து முற்றிலும் ஓய்கிறான். அவன் படைப்பதில் விருப்பம் கொள்ளும்போது, தமஸ், அல்லது இருளின் குணம் அவனில் ஆதிக்கம் செலுத்துகிறது. அவனில் ஏற்படும் இந்த விருப்பத்தின் பிறப்பிடமே படைப்பின் வேராக இருக்கிறது. நம் முன்பு இருக்கும் மொத்த அண்டமும் அவனது விருப்பத்தின் விளைவில் வந்த வெளிப்பாடே ஆகும். இந்து தொன்மவியலின்படி படைப்பும் {தோற்றமும்}, கலைப்பும் {அழிவும்} இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்தப் படைப்புகள் ஒவ்வொன்றும் தலைவனின் தூய்மையான, முற்றான விருப்பத்தைச் சார்ந்திருக்கிறது. உயர்ந்த தலைவனான விஷ்ணு, படைக்கும் விருப்பத்தை வளர்க்கும்போது, அவன் தன் சொந்த வடிவைத் தியானிப்பதில் ஈடுபடுகிறான். இவ்வாறு தியானிப்பதே, உறக்கமென உருவகமாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தியானத்தில் இருந்தே, இந்தப் பெரும்பணிக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பிரம்மன் உண்டாகிறான். ஆனால் அவனும் தலைவனின் விருப்பத்தைச் சார்ந்திருக்கிறான். அடுத்ததாகப் பிரம்மன், பல்வேறு குடும்பங்களை {குலங்களை} தோற்றுவிப்பவர்களான குடிமுதல்வர்களை உண்டாக்குகிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஸ்ருதிகளில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு வாதங்களின் மூலம் ரிஷிகள் அவனது இருப்பைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். பிறப்பாலோ, செயலாலோ எவராலும் அவனைக் கண்டுபிடிக்க முடியாது.(18) புராதன ரிஷிகள் அவனது மகிமைகளைப் புராணங்களில் பாடியிருக்கின்றனர். அவனால் தொகுக்கப்பட்ட பாடல்களின் மூலம் அவனது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.(19) அவனது புராதன வரலாறும் தேவர்களுக்கு மத்தியில் கேள்விப்படப்படுகிறது. பெரும் புராணங்களுக்குப் பிறகு, அவனது செயல்களைப் போற்றும் பதிவுகள் வேறேதும் இல்லை.(20)

வேதங்கள், மனிதர்களின் பழக்க வழக்கங்கள் தொடர்பான ஸ்ருதிகள் அனைத்தும், தேவர்களின் தேவனான அவனது ஆற்றலால் நிறைந்திருக்கின்றன.(21) அனைத்து உயிரினங்களின் பிறப்பிடமான அந்தத் தலைவன், உலகங்கள் அனைத்தும் படைக்கப்படும் நேரத்தில் தோன்றுகிறான். அந்த மதுசூதனன், தானவர்களின் அழிவுக்காக விழித்திருக்கிறான்.(22) இறப்பற்றவனான இந்தப் புருஷன் உறங்கச் செல்லும்போது, தேவர்களாலும் அவனைக் காண முடியாது. அவன் கோடையின் முடிவில் உறங்கச் சென்று, மழையின் முடிவுக்குப் பிறகு விழித்துக் கொள்கிறான்.(23) அவன், வேதங்கள், வேள்விகள் மற்றும் பிற துணை சடங்குகளோடு அடையாளங்காணப் படுபவனாவான். புருஷர்களில் முதன்மையான இவனே, விளக்கப்படும் வேள்விகளின் போக்காக {வேள்வி வழிகளாக} இருக்கிறான்.(24)

அவன் உறங்கும்போது, மந்திரங்களால் புனிதப்படும் வேள்விகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. கூதிர்கால வேள்வி நடைபெறும்போது மதுசூதனன் விழிக்கிறான்.(25) விஷ்ணு உறங்கச் செல்லும்போது, நீரின் தலைவனான புரந்தரன், அவனது கடமைகள் அனைத்தையும் செய்து நீரைப் பொழிகிறான்.(26) இருள் என்றும், உறக்கம் என்றும் உலகில் இருப்பதும், மன்னர்களுக்கு மரண இரவைப் போன்றதுமான மாயையானது, போரிடுவதன் மூலம் ஒருவரையொருவர் கொல்வோருக்குச் சீரழிவைக் கொண்டு வருகிறது.(27) இருளெனும் தன்னுடலால் அஃது {அந்த மாயை} இரவுகளையும், பகல்களையும் அழிக்கிறது. மேலும் இந்தப் பயங்கர மாயை, உலகின் உயிரினங்கள் அனைத்தினுடைய பாதி வாழ்நாளை {வாழ்வில் பாதி நாட்களைக்} களவாடுகிறது.(28)

பெருங்கடலில் கிட்டத்தட்ட முழுகியவர்களைப் போல, இந்த உறக்கத்தால் பீடிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கொட்டாவி விடும் மக்கள் சிலரால், இதன் {இந்த மாயையின்} சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாது.(29) {அதிக} உணவு அல்லது {வீண்} உழைப்பால் உண்டாகும் உறக்கம், இவ்வுலகில் மனிதர்கள் எவருக்கும் நன்மையை உண்டாக்காது.(30) இவ்வுலகில் உயிரினங்களின் கனவு முடிந்ததும் அது வலுவிழக்கிறது; மேலும் அஃது, அவர்களின் மரண வேளையில் அவர்களின் உயிர்க் காற்றுகள் அனைத்தையும் அழிக்கிறது.(31) நாராயணனைத் தவிரத் தேவர்களில் எவராலும், இந்தத் துயிலின் சக்தியைத் தாக்குப்பிடிக்க இயலாது. இந்த மாயை அல்லது தோற்ற மயக்கமானது, அனைவரையும் அழிக்கும் விஷ்ணுவின் உடலிலேயே தோன்றிய பெண் துணையாகும்.(32)

தாமரைக் கண்களைக் கொண்ட இவள் {மாயை}, நாராயணனின் முகத்தில் காணப்பட்டாள். உயிரினங்கள் அனைத்தையும் கலங்கடிக்கும் இவள், எந்த நேரத்திலும் உலகங்கள் அனைத்தையும் உண்டுவிடக் கூடியவளாவாள்.(33) மனித குலத்தின் நன்மைக்காக இவள் விஷ்ணுவால் பராமரிக்கப்படுகிறாள். தன் கணவனுக்குத் தொண்டு செய்யும் கற்புநிறைந்த பெண்ணாக இவள் அனைவராலும் போற்றப்படுகிறாள்.(34) தலைவன் விஷ்ணு, இந்த உறக்கத்தால் பீடிக்கப்பட்டவனாக நித்திய உலகைக் கலங்கடித்து, நாராயண ஆசிரமத்தில் உறங்கினான்.(35) அந்த உயரான்ம தேவன் இவ்வாறு உறங்கும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளும், மிகச்சிறந்த சத்ய, திரேதா யுகங்களும் கடந்து சென்றன.(36) துவாபர யுகத்தின் நெருக்கத்தில், மனித குலத்தின் துயரங்களைக் கண்டு, பெரும்பிரகாசம் கொண்ட தேவனின் மகிமைகளைப் பெரும் முனிவர்கள் பாடத் தொடங்கிய போதே அவன் விழித்தான்.(37)

ரிஷிகள், "ஓ! தலைவா, ஏற்கனவே அனுபவிக்கப்பட்ட ஒரு மாலையைத் தூக்கி எறிவதைப் போல உன் சுயமாகப் பிறந்த இந்த உறக்கத்தைப் கைவிடுவாயாக. பிரம்மனும், தேவர்கள் அனைவரும் உன்னைக் காணக் காத்திருக்கின்றனர்.(38) ஓ! ரிஷிகேசா, தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், பிரம்ம ஞானத்தை நன்கறிந்தவர்களும், அவனது மகிமைகளைப் பாடுபவர்களுமான இந்த ரிஷிகள் அனைவரும் உன்னை வரவேற்கின்றனர்.(39) ஓ! விஷ்ணு, நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று மற்றும் நீரென்ற ஐம்பூதங்களோடும் அடையாளங்காணப்படும் இந்த முனிவர்களின் மங்கலச் சொற்களைக் கேட்பாயாக.(40) ஓ! தேவர்களும், சப்தரிஷிகளும், இந்த முனிவர்கள் அனைவரும், அழகிய தெய்வீகப் பாடல்களால் உன் மகிமைகளைப் பாடுகின்றனர்.(41) ஓ! பேரொளி கொண்டவனே, ஓ! ஆயிரம் இதழ் தாமரையை உந்தியில் கொண்டவனே, தேவர்களின் சில முக்கிய வேலைகளுக்காக நீ தேவைப்படுகிறாய்" என்றனர்".(42)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ரிஷிகேசன், நீரின் அளவைக் குறைத்து, இருளை அகற்றி, பேரழகில் ஒளிர்ந்தபடியே எழுந்தான்.(43) அவன், உலகத்திற்காகப் பெரிதும் வருந்துபவர்களும், தன்னிடம் ஏதோ பேச விரும்பியவர்களுமான தேவர்கள் அனைவரையும், பெரும்பாட்டனையும் அங்கே கண்டான்.(44) உறக்கத்தால் சோர்வில் இருந்து விடுபட்ட கண்களுடன் கூடிய தலைவன் நாராயணன், நல்ல ஞானத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும் நிறைந்த சொற்களில் அவர்களிடம் பேசினான்.(45)

விஷ்ணு, "ஓ! தேவர்களே, உங்கள் சச்சரவு தோன்றியது எங்கே? உங்கள் அச்சம் யாரிடம் இருந்து வந்தது? தேவையை உணர்வது யார்? {தேவையை உணர்வது} எதற்காக? நான் உங்களுக்கு உதவுவது எவ்வாறு?(46) தானவர்களின் மூலம் உலகிற்குப் பேரிடரேதும் ஏற்பட்டதா? மனிதர்கள் தங்கள் பலவீனத்தினால் ஏதேனும் தீப்பேற்றை அடைந்தனரா? தாமதமேதும் இல்லாமல் இவை அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன்.(47) மிகச் சிறந்த என் படுக்கையைத் துறந்து, உங்களுக்கு நன்மை செய்வதற்காகப் பிரம்மவாதிகளின் மத்தியில் நான் நிற்கிறேன். நான் உங்களுக்குச் செய்ய வேண்டியதென்ன?" என்று கேட்டான் {விஷ்ணு}" என்றார் {வைசம்பாயனர்}.(48)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 50ல் உள்ள சுலோகங்கள் : 48
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Tuesday, 19 May 2020

நாராயணனின் குணங்கள் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 49

(லோக வர்ணனம்)

Attributes of Narayana | Harivamsha-Parva-Chapter-49 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நாராயணனின் இயல்புகளை விவரித்த வைசம்பாயனர்; பிரம்மலோகத்தில் நடைபெறும் வேள்வியில் ரிஷிகள் தன்னை வழிபடப்படுவதைக் கண்ட நாராயணன்; விஷ்ணுவைத் துதித்த தேவர்களும், ரிஷிகளும்...

Yajna avatar of Lord Vishnu

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பிராமணரே, தேவர்களின் தேவனான வைகுண்டன், நீரில் பிறந்த பிரம்மனுடன் அவனது உலகிற்கு {பிரம்மலோகத்திற்குச்} சென்ற பிறகு என்ன செய்தான்?(1) தைத்தியர்களின் படுகொலை நிறைவடைந்தபின், நீரில் பிறந்த தேவன், தேவர்களால் கௌரவிக்கப்படும் விஷ்ணுவைத் தன்னுலகிற்கு ஏன் அழைத்துச் சென்றான்.(2) உயிரினங்களைப் படைப்பவனான தலைவன் பிரம்மன் என்ன வகை யோகத்தைச் செய்கிறான்? என்ன வகைக் கட்டுப்பாடுகளை நோற்கிறான்? பிரம்மனின் உலகம் எவ்வகையானது?(3) அவன் இங்கே இல்லாதபோது, {பிரம்மலோகத்தில் இருக்கும்போது}, தேவர்களாலும், அசுரர்களாலும் துதிக்கப்படும் வகையில் இந்தப் பேரண்டம் எவ்வாறு செழிப்படைகிறது?(4) கோடையின் முடிவில் அவன் ஓய்வெடுத்துக் கிடப்பதும், மழை அணுகுகையில் விழித்தெழுவதும் எவ்வாறு? உலகின் பணியைச் செய்து கொண்டே அவன் பிரம்மலோகத்தில் எவ்வாறு வாழ்ந்தான்?(5) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {விப்ரேந்திரரே}, தேவர்களின் நிலத்தில் இந்தத் தலைவனின் தெய்வீக ஒழுக்கத்தை உண்மையில் நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நாராயணன், பிரம்மனின் உலகதிற்குச் சென்ற பிறகு அவனுடன் {பிரம்மனுடன்} விளையாடியதெவ்வாறு என்பதைக் கேட்பதற்கு முன், அவனுடைய செயல்களை இப்போது விரிவாகக் கேட்பாயாக.(7) அவனது விருப்பத்திற்கு ஏற்ப அமையும் அவனது மிக நுட்பமான போக்கைத் தேவர்களாலும் அறிந்து கொள்ள முடியாது. ஓ! மன்னா, நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(8) இந்தத் தலைவன் நாராயணன், மூவுலகங்களுக்கு ஒப்பானவனாவான் {அவனே மூவுலகங்களாகவும் இருக்கிறான்}. மேலும் அந்த மூன்று உலகங்களும் அவனால் ஊடுருவப்பட்டிருக்கின்றன. அவன் சொர்க்கத்தின் தேவர்களுக்கு ஒப்பானவன் {அவனே தேவர்களாக இருக்கிறான்}, அவர்களும் அவனுக்கு ஒப்பானவர்கள்.(9) உலகின் மறு எல்லைக்குச் செல்ல விரும்பும் மனிதர்கள் பலராலும் அவனது எல்லையைக் காண முடியாது. இந்த மாதவனே அனைத்தின் எல்லையாக இருக்கிறான்.(10) இருளில் இருப்பதைப் போலப் புலன்களால் உண்மை வடிவம் மறைக்கப்பட்டதும், தேவர்கள் நாடுவதுமான பிரம்மலோகத்தில், அவன் பழங்காலத்தில் செய்த செயல்களைக் கேட்பாயாக.(11)

பிரம்மலோகத்திற்குச் சென்று, பெரும்பாட்டனின் மேன்மையைக் கண்ட விஷ்ணு, வேதங்களால் அனுமதிக்கப்பட்ட படைப்புகளுடன், ரிஷிகள் அனைவரையும் கௌரவித்தான்.(12) பெருஞ்சக்தி கொண்டவனான விஷ்ணு, பகலின் முதல் பகுதிக்கான சடங்குகளைச் செய்து, காலையில் பெரும் முனிவர்களால் பலியுணவுகள் {ஆகுதிகள்} காணிக்கையளிக்கப்படும் நெருப்பிடம் {அக்னியிடம்} வந்தான்.(13) அவன், தன் உடலானது, வேள்விக்கு மத்தியில் மிகச் சிறப்பாக இருப்பதையும், பலியுணவுகளுடன் பெரும் முனிவர்களால் வழிபடப்படுவதையும், வேள்விக் காணிக்கைகளில் தன் பங்கை உண்பதையும் கண்டான்.(14) எண்ணத்தால் புரிந்து கொள்ளப்படுவதற்கு அப்பாற்பட்டவனான நாராயணன், பிரம்மசக்தியுடன் கூடியவர்களும், வழிபடத்தகுந்தவர்களுமான ரிஷிகளை வணங்கி, நித்தியமான பிரம்மலோகத்தில் திரியத் தொடங்கினான்.(15)

அங்கே வேள்வியில் உலவிக் கொண்டிருந்த அவன், சஷாலங்களால்[1] உச்சிப் பகுதிகள் அலங்கரிக்கப்பட்டவையும், பிராமண முனிவர்களால் குறிக்கப்பட்டவையுமான நூற்றுக்கணக்கான வேள்வித்தம்பங்களை {யூபங்களைக்} கண்டான்.(16) அவன், பலியுணவுகளின் புகையை நுகர்ந்தும், இருபிறப்பாளர்களால் ஓதப்படும் வேதங்களின் ஒலியைக் கேட்டும், வேள்வியின் வடிவில் தானே வழிபடப்படுவதைக் கண்டும், அங்கே திரிந்து கொண்டிருந்தான்.(17) சபையின் தேவர்களும், ரிஷிகளும் தங்கள் கரங்களில் புனிதப் புல்லையும், அர்க்கியத்தையும்[2] எடுத்துக் கொண்டு,(18) "தேவர்களிடம் உள்ள எந்தச் சக்தியும் நாராயணனிடம் இருந்தே வெளிப்படுகிறது, தேவர்களால் செய்யப்படும் எதுவும் மதுசூதனனிடம் இருந்தே வருகிறது.(19) கல்விமான்களிடம் இருந்து மக்கள் கேட்கும் சோமன் மற்றும் நெருப்பின் {அக்னியின்} உலகங்களாக அந்த நித்திய விஷ்ணுவே இருக்கிறான்.(20) பாலில் இருந்து தயிரும், தயிரிலிருந்து தெளிந்த நெய்யும் உண்டாவதைப் போலவே, தியானத்தினால் உடலும், புலன்களும் கலங்கும்போது, ஜனார்த்தனனிடமிருந்து உலகம் உண்டாகிறது[3].(21) புலன்களாலும், ஐம்பெரும் பூதங்களாலும் அறிந்து கொள்ளப்படும் பேரான்மாவைப் போலவே, இந்த ஹரியும் தேவர்களாலும், வேதங்களாலும், உலகங்கள் அனைத்தாலும் அறிந்து கொள்ளப்படுகிறான்.(22) மனிதர்களின் உலகில் ஐம்பூதங்கள் மற்றும் புலன்களுக்கிடையிலான உறவு உணரப்படுவதைப் போலவே தேவலோகத்தில் தேவர்களின் பலமும், செழிப்பும் விஷ்ணுவிடம் இருந்து உண்டாகிறது.(23) எதையும் சாராதவனும், பெரும்புனிதனும், உலகங்களின் {உலகங்களை இணைக்கும்} சரடாக இருப்பவனும், வேள்விகளைச் செய்வோருக்கு, அவற்றின் பலன்களை அளிப்பவனும், மந்திரங்களையே போன்றவனுமான நாராயணன், அந்த மந்திரங்களாலேயே வழிபடப்படுகிறான்" என்றனர்.(24)

[1] "மரத்தாலானதும், வேள்வித்தம்பத்தின் உச்சியில் இருப்பதுமான ஒரு வளையமாகும்" என மன்மதநாததத்தல் இங்கே விளக்குகிறார்.


[2] "கால் கழுவதற்குரிய நீர்" என மன்மதநாததத்தல் இங்கே விளக்குகிறார்.


[3] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "பாலில் இருந்து தயிரும், கடைந்த தயிரிலிருந்து வெண்ணையும் எவ்வாறு வருகின்றனவோ அவ்வாறே இந்த அண்டமும் நெருப்பு மற்றும் சோமனில் இருந்து கடைந்த கழிவாகும், மேலும் இவை அனைத்தும் எல்லாம்வல்லவனிடம் இருந்து கடைந்தெடுக்கப்பட்ட கழிவுகள் என்றே அறிஞர்கள் கருதுகிறார்கள்" என்றிருக்கிறது.


ரிஷிகள், "ஓ! தேவர்களில் முதன்மையானவனே, ஓ! பெரும்பிரகாசம் கொண்டவனே, ஓ! தாமரை உந்தி தேவா, சுகமாக வந்தாயா? மந்திரங்களுக்கு இணக்கமாக வழங்கப்படும் இந்த வேள்விக் காணிக்கையை ஏற்றுக் கொள்வாயாக.(25) வேள்வியில் புனிதப்படுத்தப்பட்ட இந்நீரின் புனிதக் கொள்ளிடம் நீயே. மந்திரங்களில் குறிப்பிடப்படும் விருந்தினனாக எப்போதும் அறியப்படும் நீ இப்போது புலப்படுகிறவனாக  வந்திருக்கிறாய்.(26) ஓ! நாராயணா, விஷ்ணு இல்லாமல் எந்த வேள்விக்கும் ஒருபோதும் அனுமதியில்லை என்பதால், நீ போர்க்களத்திற்குப் புறப்பட்டதும் எங்கள் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.(27) இன்று கொடைகளுடன் கொண்டாடப்படும் வேள்வியின் பலனை நாங்கள் அடையப் போகிறோம். எங்கள் அனைவராலும் நீ வழிபடப்படுவதை நீயே காண்கிறாய்" என்றனர்.(28)

அந்தத் தலைவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, பதிலுக்குப் பிராமணர்களை வழிபட்டான். தன்னுலகில் இருந்த பெரும்பாட்டன் பிரம்மன், இதனால் பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்" என்றார்{வைசம்பாயனர்}.(29)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 49ல் உள்ள சுலோகங்கள் : 29
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

விஷ்ணுவிடம் சென்ற காலநேமி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 48

(காலநேமி வதம்)

Kalanemi goes to Vishnu | Harivamsha-Parva-Chapter-48 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நாராயணனிடம் சென்ற காலநேமி; காலநேமிக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம்; கருடனைத் தலையில் தாக்கி வீழ்த்திய காலநேமி; காலநேமியின் கரங்களையும், தலைகளையும் கொய்த நாராயணன்; காலநேமியைத் தன் மார்பால் தாக்கி கீழே வீழ்த்திய கருடன்; விஷ்ணுவைப் புகழ்ந்த பிரம்மன்; தேவர்களுக்கு உறுதியளித்த விஷ்ணு...

Kalnemi Garuda and Vishnu

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அவனது {காலநேமியின்} அறமற்ற செயல்களினால் நாராயணனின் வேதங்கள், அறம், பொறுமை, வாய்மை, செழிப்பு என்ற இந்த ஐந்தும் அவனை (காலநேமியைப்) பின்தொடரவில்லை.(1) வேதமும், பிறவும் இல்லாத காரணத்தால் தானவர்களின் மன்னன், தன் கண்ணியத்தை அடைவதற்காக நாராயணனை அணுகினான்.(2) அங்கே அவன், கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதங்களுடன் சுபர்ணனில் அமர்ந்திருப்பதைக் கண்டான். தானவர்களின் அழிவுக்காக அவன் அழகிய கதாயுதத்தைச் சுழற்றினான்.(3) அதிக நீர் கொண்ட மேகத்தின் வண்ணம் கொண்டவனும் {கருப்பானவனும்}, மின்னலுக்கு ஒப்பான ஆடை அணிந்தவனுமான அந்தத் தேவன், கசியபரின் மகனான அந்தப் பறவையின் {கருடனின்} மீது சுகமாக அமர்ந்திருந்தான்.(4)

தடுக்கப்படமுடியாதவனான விஷ்ணு, அசுரர்களை அழிப்பதற்காகப் போரில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட காலநேமி, கனத்த இதயத்துடன்,(5) "இவனே நமது மிகப் பயங்கர எதிரியாவான். இவனை எவ்வழிமுறையினாலும் வீழ்த்தமுடியாது என்று சொல்கிறார்கள். நமது மூதாதையரான தானவர்கள், மற்றும் பெருங்கடலில் வாழ்ந்த மதுகைடபர்களின் பகைவன் இவனே. காட்டில் பிறந்த நமது தைத்தியர்கள் பலரைக் கொன்றவன் இவனே. போரில் சிறிதும் இரக்கமற்றவனும், சிறுவனைப் போல வெட்கமேயில்லாதவனும் இந்த ஆயுததாரியே. நம் தானவப் பெண்களின் மயிரை மழிக்கச் செய்தவன் {தானவப் பெண்களை விதவையாக்கியவன்} இவனே.(6-8)

தேவர்களின் விஷ்ணுவும், சொர்க்கத்தின் வைகுண்டமும், நீரில் வாழும் பாம்புகளின் அனந்தனும், படைப்பாளர்களைப் படைப்பவனும் இவனே.(9) தேவர்களால் வழிபடப்படுபவனும், நமக்கு எப்போதும் தீங்கிழைத்து வருபவனும் இவனே. இவனது கோபத்தைத் தூண்டியதால் {என் தந்தையான} ஹிரண்யகசிபு கொல்லப்பட்டார்.(10) தேவர்கள், அவனைப் பின்பற்றுவதன் மூலம் வேள்விக்காணிக்கைகளில் சிறந்த பங்கையும், பெரும் முனிவர்களால் நெருப்பில் காணிக்கையளிக்கப்படும் மூவகைப் பலியுணவுகளையும் {ஆகுதிகளையும் / திருப்படையல்களையும்} பெறும் உரிமையைப் பெறுகின்றனர்.(11) தேவர்களிடம் பகைமை பாராட்டுவோர் அனைவரின் மரணத்திற்கான கருவியானவன் இவனே. நம் குலத்தில் பிறந்த தானவர்கள் அனைவரும் போரில் இவனது சக்கரத்தாலே கொல்லப்பட்டனர்.(12)

தேவர்களுக்காகத் தன் உயிரையும் பணயம் வைத்து, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தன் சக்கரத்தைப் போரில் பகைவரின் மீது ஏவுபவன் இவனே.(13) தீயமனம் கொண்ட இவனே, தைத்தியர்களுக்குக் காலனைப் போன்றவன். காலனுக்கே ஒப்பான நான் இருக்கும்போது, தவிர்க்க முடியாத மரணத்தை இவன் விரைவில் சந்திப்பான்.(14) இன்று இந்த விஷ்ணு தற்செயலாக என் முன் தோன்றியிருக்கிறான். போரில் என்னால் கலங்கடிக்கப்படும் இவன் என் முன்னே அவமானத்தை அடைவான்.(15) தானவர்களுடைய அச்சத்தின் பிறப்பிடமாக இருக்கும் இந்த நாராயணனைப் போரில் கொன்று என் மூதாதையரை நான் வழிபடப்போகிறேன்.(16) நான் நாராயணனின் தொண்டர்களையும் கொல்வேன். இவன் மீண்டும் பிறந்தாலும் தானவர்களை ஒடுக்கவே செய்வான்[1].(17)

[1] தேசிராஜு ஹனுந்தராவ் பதிப்பில், "இந்த விஷ்ணு தேவன், தற்செயலாக என் முன் வந்திருக்கிறான். இப்போது இவன் என் வீரத்தின் மூலம் என்னிடம் வீழ்வான். அல்லது, என் கண்களால் இவன் அடிபடுவான். எதை அவன் விரும்புவானோ அதையே அவன் அடைவான். இப்போது அசுரர்களுக்கு அச்சமேற்படுத்தும் இந்த நாராயணனைப் போரில் கொல்வதன் மூலம் என் மூதாதையரின் கொலைகளுக்கு நான் பழிதீர்த்து, அதன் மூலம் கணப்பொழுதில் இவனது தொண்டர்களைப் போரில் ஒழிப்பேன். இந்தத் தேவன், சகோதரப் பகைக்கான எந்த முகாந்தரமும் அற்ற அசுரப் பிறப்பில் பிறந்திருந்தாலும், எப்போதும் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டுக் கொடுமை செய்யும் கொடூரன் என்பதால் இவன் ஈடு செய்யப்பட வேண்டும் {இவனைக் கொல்ல வேண்டும்}" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "நற்பேற்றின் காரணமாக இந்த விஷ்ணு இப்போது என் முன் தோன்றியிருக்கிறான். இவன் என் முன் வணங்க வில்லையெனில், இப்போதே இவனை என் கணைகளால் நொறுக்குவேன். முன்னர்ப் போர்களில் நமக்குத் தீங்கிழைத்த இவனை நற்பேற்றின் காரணமாகவே நான் எதிர்கொள்கிறேன். இந்த நாராயணனே தானவர்களைக் கொல்பவனும், அவர்களை அச்சத்தில் பீடித்தவனுமாவான். இந்தப் போரில் நாராயணனைக் கொல்ல வேகமான கணைகளை நான் பயன்படுத்தப் போகிறேன். இவன் நம் உற்றானாக இருப்பினும் போர்களில் தானவர்களைத் தடுக்கிறான்" என்றிருக்கிறது. உற்றான் என்பதன் அடிக்குறிப்பில், "தேவர்களுக்கும், அசுரர்களும் தந்தை ஒருவரே {கசியபரே} என்பதால் அவர்கள் சகோதரர்களாவர்" என்றிருக்கிறது.


பழங்காலத்தில் இந்த அனந்தனே, (தாமரை உந்தி கொண்ட) பத்மநாபனாக மீண்டும் கொண்டாடப்பட்டான். மொத்த அண்டமும் ஒரே நீர்ப்பரப்பாக மாறியபோது, இவன், மது மற்றும் கைடபர் என்ற இரு தானவர்களைத் தன் கால் மூட்டுகளுக்கிடையை வைத்துக் கொன்றான்.(18) இவன், தன்னையே இரண்டாகப் பகுத்துப் பழங்காலத்தில் சிங்கமனிதனின் {நரசிம்ம} வடிவை ஏற்று என் தந்தையான ஹிரண்யகசிபுவைக் கொன்றான்.(19) தேவர்களின் தாயான அதிதி, குள்ளனின் வடிவை ஏற்று, மூன்று காலடிகளால் மூவுலகங்களையும் கைப்பற்றி, மன்னன் பலியின் வேள்வியில் அவனையே {அந்த பலியையே} கொன்றவனை நல்ல முறையில் கருவில் கொண்டாள்.(20) இப்போது இந்தத் தாரகப் போரில் இவன் என்னுடன் மோதி, தேவர்களுடன் சேர்ந்து மரணத்தைச் சந்திக்கப் போகிறான்" என்றான் {காலநேமி}.(21)

இவ்வாறு அந்தப் போர்க்களத்தில் இனிமையற்ற சொற்களால் நாராயணனை நிந்தித்த காலநேமி போருக்கான தன் விருப்பத்தை வெளிப்படுத்தினான்.(22) அசுரர்களின் மன்னனால் இவ்வாறு நிந்திக்கப்பட்டாலும் அந்தக் கதாதரன் (விஷ்ணு) இயல்புக்கு மீறிய பொறுமை கொண்டவனாகக் கோபமடையாதிருந்தான்.(23) மாறாகப் புன்னகைத்தவாறே அவன் {விஷ்ணு}, "ஓ! தைத்தியா, வரம்புக்குட்பட்ட பலத்தைக் கொண்டிருந்தாலும் நீ கோபத்தால் என்னை நிந்திக்கிறாய். நீ பொறுமையை மீறிவிட்ட உன் குற்றத்தின் காரணமாகக் கொல்லப்படுவாய்.(24) உண்மையில் நீ இழிந்தவன், உன் வீண் பேச்சுகளுக்கு ஐயோ. பெண்கள் முழங்கும் இடத்தில் ஆண்கள் இருப்பதில்லை.(25) ஓ! தைத்தியா, நீ உன் மூதாதையரின் கால்தடங்களைப் பின்பற்றிச் செல்லப் போவதை நான் காண்கிறேன். பிரஜாபதியால் அமைக்கப்பட்ட விதிகளை அலட்சியம் செய்துவிட்டு எவனால் சுகமாக இருக்க முடியும்?(26) தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் உன்னை இன்று நான் கொல்லப் போகிறேன். நான் மீண்டும் தேவர்களை அவர்களுக்கு உரிய நிலைகளில் நிறுவப் போகிறேன்" என்றான் {விஷ்ணு}.(27)

ஸ்ரீவத்ஸம் எனும் மாயச் சின்னத்தைத் தன் மார்பில் கொண்ட நாராயணன், போர்க்களத்தில் இதைச் சொன்னதும், கோபத்தில் தன் ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அந்தத் தானவன் சிரிக்கத் தொடங்கினான்.(28) அனைத்து ஆயுதங்களையும் ஏந்தவல்ல நூறு கரங்களை உயர்த்திய அவன், கோபத்தால் சிவந்த கண்களுடன் விஷ்ணுவின் மார்பைத் தாக்கினான்.(29) மயன் மற்றும் தாரனின் தலைமையிலான பிற தானவர்களும் விஷ்ணுவை நோக்கி விரைந்து சென்றனர்.(30) பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த பெரும்பலமிக்கத் தைத்தியர்களால் இவ்வாறு தாக்கப்பட்டாலும், தலைவன் நாராயணன், ஒரு மலையைப் போல அந்தப் போரில் அசையாதிருந்தான்.(31) சுபர்ணனுடன் போரில் ஈடுபட்டு, பெரும் கோபம் கொண்டிருந்த அந்தப் பேரசுரன் காலநேமி, தன் பலம் அனைத்தையும் திரட்டிக் கரங்களின் அதிர்வில் எரிந்து கொண்டிருந்த பயங்கரமான பெரும் கதாயுதம் ஒன்றை எடுத்துக் கருடன் மீது அதை வீசினான். அந்தத் தைத்தியனின் அருஞ்செயலைக் கண்டு விஷ்ணுவே ஆச்சரியத்தில் நிறைந்தான்.(32) பறவைகளின் மன்னனான சுபர்ணனின் தலை மீது அந்தக் கதாயுதம் விழுந்தபோது, காயமடைந்த உடலுடன் அவன் பூமியில் விழுந்தான்.(33)

பிறகு அந்தப் பெரும்போரில், மண்ணாங்கட்டிகளையும், கற்களையும், வஜ்ரங்களைக் கொண்டு விஷ்ணுவையும், கருடனையும் அந்தத் தானவர்கள் தாக்கத் தொடங்கினர். நாராயணன் அந்தப் போர்க்களத்தில் திரிந்த போது, தேவர்கள் அவனது மகிமைகளைத் துதித்தனர். {அவர்கள்}, "ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுவையும், கைடபனையும் கொண்டவனே, உனக்கு மகிமை உண்டாகட்டும். நகங்களால் ஹிரண்யகசிபுவைக் கிழிந்தெறிந்தவன் நீ" {என்று துதித்தனர்}. தேவர்களால் இவ்வாறு துதிக்கப்பட்ட நாராயணன் போர்க்களத்தில் இருந்து எழுந்தான். விஷ்ணு கொல்லப்பட்டதாகக் கருதிய தானவர்களின் மன்னன் {காலநேமி} தன் சங்கை முழங்கினான். பெரும் அசுரர்கள் மூன்று வகை மிருதங்கங்களை இசைத்து அந்த இசையின் துணையுடன் நடனம் ஆடினர். அந்நேரத்தில் பெரும் விழா நடப்பது போன்ற தோற்றத்தை அஃது ஏற்படுத்தியது. சுபர்ணன் காயமடைந்திருப்பதையும், தன்னுடலுக்குச் சிறிதும் தீங்கு நேராததையும் கண்ட வைகுண்டன், கோபத்தால் கண்கள் சிவக்கத் தன் சக்கரத்தை எடுத்தான்.(34,35) அப்போது அந்தத் தலைவன், சுபர்ணனுடன் சேர்ந்து பெரும் உற்சாகம் அடைந்தான். அவனுடைய கரங்கள் பத்துத் திக்குகளையும் மறைக்கும் வகையில் பெருகின.(36) திக்குகள் அனைத்தையும், வானுலகையும், பூமியையும் நிறைத்த அவன், உலகங்கள் அனைத்தையும் மீண்டும் தாக்கும் விருப்பத்தில் தன் சக்தியைப் பெருக்கினான்.(37) முனிவர்களும், கந்தர்வர்களும், தேவர்களின் வெற்றிக்காக வானத்தில் பெரும் வடிவை ஏற்றிருந்த மதுசூதனனின் மகிமைகளைப் பாடத் தொடங்கினர்.(38)

அந்தத் தலைவன் {விஷ்ணு}, தன் கிரீடத்தால் தேவலோகத்தையும், தன் ஆடையால் வானம் மற்றும் மேகங்களையும், தன் காலால் பூமியையும், தன் கரங்களால் திக்குகள் அனைத்தையும் மறைத்தான். பிறகு கோபமடைந்தவனான அந்தக் கதாதரன், ஒப்பற்ற அருஞ்செயல்களைச் செய்ய வல்லதும், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டதுமான தன் சக்கரத்தை எடுத்து, அதன் சக்தியின் மூலம் அந்தப் போரில் தானவர்களின் பிரகாசத்தை அழித்துக் காலநேமியின் கரங்களைத் துண்டித்தான். அது {அந்தச் சக்கரம்} சூரியக் கதிர்களுக்கு ஒப்பான ஆயிரம் தழல்களுடன் எரியும் நெருப்பைப் போலப் பயங்கரமாகவும், அதே வேளையில் அழகாகவும், தங்கச்சக்கரங்களால் மறைக்கப்பட்டதாகவும் இருந்தது. அது வஜ்ரத்தைப் போன்ற வலுவுள்ளதாகவும், பயங்கரமானதாகவும், தானவர்களின் குருதி, கொழுப்பு மற்றும் எலும்புகளால் பூசப்பட்டதாகவும் இருந்தது. தாக்குவதில் தனக்கேதும் ஒப்பில்லாததும், கத்தியைப் போன்று கூர்மையுள்ளதும், விரும்பிய இடமெங்கும் செல்லவல்லதும், எந்த வடிவத்தையும் ஏற்கவல்லதுமாக அஃது இருந்தது. சுயம்புவால் அமைக்கப்பட்ட அது, பகைவர்களுக்குப் பயங்கரமானதாகவும், பெரும் முனிவர்களின் கோபத்தைக் கொண்டதாகவும், போர்க்களத்தில் உயர்ந்ததாகவும் இருந்தது. அது வீசப்பட்டபோது, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் கலக்கமடைந்தன, இறைச்சியில் வாழும் உயிரினங்கள் பெரும் நிறைவை அடைந்தன[2].(39-46) பிறகு, ஹரியானவன், நெருப்பின் அரவலைப் போன்ற காட்டுச் சிரிப்புடன் கூடிய அந்த அசுரனின் பயங்கரமான நூறு முகங்களைத் தன் பலத்தால் கலங்கடிக்கத் தொடங்கினான்.(47) அந்தத் தானவன், தனது கரங்கள் துண்டிக்கப்பட்டாலும், தன் தலைகள் அறுக்கப்பட்டாலும் போரில் கிஞ்சிற்றும் நடுங்காமல், கிளைகள் அனைத்தையும் இழந்த ஒரு மரத்தைப் போல அங்கே நின்று கொண்டிருந்தான்.(48)

[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் ஸ்லோகம் எண் 39 முதல் 46 வரை, இடையில் ஸ்லோக எண்கள் பிரிக்கப்படாமல் ஒரே மூச்சாகவே சொல்லப்பட்டுள்ளது. தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில் 40ம் ஸ்லோகத்தின் அடிக்குறிப்பில், "இங்கிருந்து 45ம் ஸ்லோகம் வரை ஏகன்வயம் ஆகும். அஃதாவது ஒரே மூச்சில் படிக்க வேண்டியதாகும்" என்றிருக்கிறது.


அதற்குப் பிறகு, பெருஞ்சிறகுகள் இரண்டையும் விரித்துக் காற்றின் திசைவேகத்தை ஏற்ற கருடன், தன் மார்பின் தாக்குதால் காலநேமியைக் கீழே வீழ்த்தினான். அப்போது தலைகளையும், கரங்களையும் இழந்திருந்த அவனது உடல் தேவலோகத்தை விட்டு அகன்று உருண்டு, வானத்தில் இருந்து பூமியில் விழுந்தது.(49,50) அந்தத் தைத்தியன் கொல்லப்பட்டபோது, முனிவர்களும் தேவர்களும், "நன்று செய்தாய், நன்று செய்தாய்" என்று சொல்லி வைகுண்டனைப் புகழத் தொடங்கினர்.(51) போரில் அவனது ஆற்றலைக் கண்டவர்களும் விஷ்ணுவின் கரங்களின் மூலம் பிணைக்கப்பட்டவர்களுமான தானவர்கள் பிறர் போர்க்களத்தில் அசைய முடியாதவர்களாக இருந்தனர். அந்தத் தலைவன், சில தைத்தியர்களின் மயிரையும், சிலரின் தொண்டைகளையும் பற்றி, சிலரின் முகத்தில் காயமேற்படுத்தி, சிலரின் இடுப்பையும் பற்றித் தூக்கினான்.(53) அவர்கள் தங்கள் சக்தியையும், உயிரையும் இழந்தவர்களாகக் கதாயுதம் மற்றும் சக்கரத்தால் முற்றாக அழிக்கப்பட்டு, வானத்தில் இருந்து பூமியில் விழுந்தனர்.(54) தைத்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, புருஷர்களில் முதன்மையான கதாதரன் வெற்றியை அடைந்து, தேவர்களின் மன்னனுக்கு நன்மை செய்தபடி அங்கே நின்றிருந்தான்.(55) தாரகனுடனானதும், பலரைக் கலங்கச் செய்ததுமான அந்தப் பயங்கரப் போர் முடிந்தவடைந்த பிறகு, பிரம்மன், பிராமண முனிவர்களுடனும், கந்தர்வர்களுடனும், அப்சரஸ்களுடன் அங்கே விரைந்து வந்தான். தேவர்களுக்குத் தேவனான அவன் {பிரம்மன்} ஹரியை வழிபட்டவாறே பேசினான்.(56,57)

பிரம்மன், "ஓ! தலைவா, நீ பெரும்பணியைச் செய்தாய்; தேவர்களைத் தைத்திருந்த ஈட்டி வேரோடு பிடுங்கப்பட்டது. தைத்தியர்களின் அழிவில் நாங்கள் நிறைவடைந்தோம்.(58) போரில் கொல்லப்பட்ட இந்தக் காலநேமியை நீ தனியாகவே அழித்தாய். உன்னைத் தவிர வேறு யாராலும் அவனைக் கொல்ல முடியாது.(59) இந்தத் தானவன், தேவர்களையும், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் வீழ்த்தி முனிவர்களைத் துன்புறுத்திவந்தான்; என்னிடமும் முழங்கி வந்தான்.(60) காலனைப் போன்ற காலநேமியை அழித்த உன் பெருஞ்செயலால் நான் பெரும் நிறைவடைந்தேன்.(61) நீ சுகமாகச் செல்வாயாக; பிராமண முனிவர்களும், உன் சபை உறுப்பினர்களும் காத்திருக்கும் மிகச் சிறந்த தேவலோகத்துக்குச் செல்ல எங்களை அனுமதிப்பாயாக.(52) ஓ! அச்யுதா, ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, மஹாரிஷிகளுடன் சேர்ந்து தெய்வீகத் துதிகளைக் கொண்டு உன்னை நான் அங்கே வழிபடப்போகிறேன்.(63) ஓ! வரமளிப்பவர்களில் முதன்மையானவனே, நீ தேவர்களுக்கும், தைத்தியர்களுக்கு வரங்களை அளிப்பவனாக இருப்பினும், நானும் ஒன்றை உனக்களிப்பேன்.(64) ஓ! நாராயணா, இந்தப் போரில் மூவுலகங்களையும் முட்களில் இருந்து விடுவித்து விட்டாய் என்பதால், இனி மூவுலகங்களிலும் செழிப்புமிக்க அரசை உயரான்ம சக்ரனுக்கு {இந்திரனுக்கு} அளிப்பாயாக" என்றான்.(65)

தெய்வீகப் பிரம்மனால் இவ்வாறு சொல்லப்பட்ட தலைவன் ஹரி, இந்திரனிடமும், தேவர்கள் பிறரிடமும் இந்த மங்கலச் சொற்களைச் சொன்னான்.(66) {ஹரி}, "புரந்தரன் தலைமையில் இங்கே கூடியிருக்கும் தேவர்களே, கவனமாகக் கேட்பீராக.(67) இந்தப் போரில் பலமிக்கத் தானவர்கள் பலரையும், காலநேமியையும், தேவர்களின் மன்னனைவிடவும் மேன்மையான பிறரையும் நாம் கொன்றிருக்கிறோம்.(68) இந்தப் பயங்கரப் போரில் விருசனனின் மகனான பலியும், பேருடல் படைத்த ராகுவும் வெளிவந்தனர்.(69) தேவர்களின் மன்னனும், வருணனும் தாங்கள் விரும்பும் உலகங்களுக்குச் செல்லட்டும். யமன் தெற்கையும், வளங்களின் மன்னன் வடக்கையும் கைப்பற்றிப் பாதுகாக்கட்டும்.(70) முன்பைப் போலவே, சந்திரன் உரிய காலத்தில் விண்மீன்களுடன் கூடி இருக்கட்டும். சூரியன், நிலநடுப் புள்ளிகளுடன் கூடி, வருடம் முழுவதும் பருவகாலங்களைப் பகிரட்டும். தவசிகளால் கௌரவிக்கப்படும் வேள்விகள் முறையாக நடைபெறட்டும், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி விப்ரர்கள் நெருப்பில் பலியுணவுகளை {ஆகுதிகளை} காணிக்கை அளிக்கட்டும்.(72) தேவர்கள் திருப்படையல் பலிகளாலும், மஹாரிஷிகள் வேதங்கள் ஓதுவதிலும், பித்ருக்கள் செய்யப்படும் சிராத்தங்களாலும் முன்பைப் போலவே நிறைவை அடையட்டும்.(73) காற்று {வாயு} தன் போக்கில் வீசட்டும், நெருப்பு {அக்னி}, மூன்று வகை வடிவங்களில் மூளட்டும், மூன்று வர்ணங்களும் தங்கள் இயல்பான குணங்களின் மூலம் உலகத்திற்கு நிறைவைக் கொண்டு வரட்டும்.(74)

தொடக்கச் சடங்குகளை {தீக்ஷைகளைச்} செய்யத் தகுந்த பிராமணர்களால் வேள்விகள் செய்யப்படட்டும். உரிய வேள்விக் கொடைகள் அனைத்தும் பகிரப்படட்டும்.(75) சூரியன், கண்கள் அனைத்திற்கும் நிறைவை அளிக்கட்டும், சந்திரன், சாறுகள் அனைத்தையும் திளைக்கச் செய்யட்டும், காற்று {வாயு}, உயிரினங்கள் அனைத்தின் உயிர் மூச்சுகளைத் திளைக்கச் செய்யட்டும், இவர்கள் அனைவரும் மங்கலமான நல்ல பணிகளைச் செய்யட்டும்.(76) மூவுலகங்களின் அன்னைகளும், பெரும் மலைகளில் இருந்து நீரைக் கொண்டு வருபவையுமான ஆறுகள், உரிய வகையில் படிப்படியாகப் பெருங்கடலுக்குச் செல்லட்டும்.(77) தானவர்களிடம் கொண்ட அச்சங்கள் அனைத்தையும் களைந்து தேவர்கள் அமைதியை அனுபவிக்கட்டும். ஓ! தேவர்களே, சுகமாகச் செல்வீராக, நான் பிரம்மனின் நித்திய உலகிற்குச் செல்லப் போகிறேன்.(78) அசுரர்கள் பெரும் வஞ்சகம் நிறைந்தவர்கள் என்பதால் நீங்கள் உங்கள் தேவலோகத்தில், அதிலும் குறிப்பாகப் போர்க்களத்தில் எப்போதும் நம்பிக்கையுடன் வாழாதீர்கள்.(79) வலுவற்ற ஒரு புள்ளியைக் கண்டாலும் உடனே அவர்கள் மக்களைத் தாக்குவார்கள். உலகின் இந்த ஒழுங்கு நிரந்தரமானதல்ல. நீங்கள் மென்மையானவர்களாகவும், எளிமையானவர்களாகவும் இருக்கிறீர்கள், உங்கள் மனம் எப்போதும் எளிய காரியங்களிலேயே உலவுகிறது.(80) ஓ! தேவர்களே, உங்களுக்குத் தீங்கிழைக்கும் விருப்பத்தை வளர்க்கும் இந்தத் தீய அசுரர்கள் அனைவருக்கும் நான் கலக்கத்தைக் கொண்டுவருவேன்.(81) நீங்கள் தானவர்களிடம் பேரச்சத்தை வளர்த்துக் கொள்ளும்போதெல்லாம், நான் உடனே வந்து பாதுகாப்பை உங்களுக்கு உறுதி செய்வேன்" என்றான் {விஷ்ணு}.(82)

பெருஞ்சிறப்புமிக்கவனும், வாய்மையைத் தன் ஆற்றலாகக் கொண்டவனுமான நாராயணன், இவ்வாறு தேவர்களிடம் சொல்லிவிட்டு, பிரம்மனுடன் சேர்ந்து தன்னுலகிற்குச் சென்றான்.(83) இதுவே நீ கேட்டதும், தாரகனை வேராகக் கொண்டதுமான நாராயணன் மற்றும் தானவர்களுக்கிடையில் நடந்த அற்புதம் நிறைந்த போராகும்" என்றார் {வைசம்பாயனர்}.(84)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 48ல் உள்ள சுலோகங்கள் : 84
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்