Showing posts with label யசோதை. Show all posts
Showing posts with label யசோதை. Show all posts

Monday, 28 February 2022

நந்தனும் யசோதையும் | பவிஷ்ய பர்வம் பகுதி – 105

(நந்தயஷோதயோர்கோவர்தநே ஷ்ரீக்ருஷ்ணதர்ஷநம்)

Nanda and Yashoda | Bhavishya-Parva-Chapter-105 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்:  நந்தகோபரும், யசோதையும், ஆயர்பாடி மக்களும் கோவர்த்தன மலையில் கிருஷ்ணனையும், பலராமனையும் சந்தித்தது...


Balarama Nanda Krishna Yashoda

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "யசோதையும், நந்தகோபனும் நீண்ட நாட்களாகக் கிருஷ்ணனைக் காண விரும்பினர். எனவே, அவன் தன் தமையனுடன் {பலராமனுடன்} கோவர்த்தன மலைக்கு வந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். கோபர்கள், கோபிகைகள் ஆகியோர் அனைவரையும் திரட்டிக் கொண்டும், வெண்ணெய், தயிர், சுண்டவைக்கப்பட்ட பால், பாயஸம், காட்டு மலர்கள், மயில் இறகுகளாலான கைவளைகள் ஆகியவற்றையும், இன்னும் பிற பரிசுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டும் அவர்கள் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(1-3)

Wednesday, 17 June 2020

காளியனை அடக்கிய கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 67 – 012

(காளியதமனம்)

Krishna subdues Kalya | Vishnu-Parva-Chapter-67-012 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : மடுவுக்குள் குதித்த கிருஷ்ணன்; காளியனின் கட்டுக்குள் அசைவில்லாமல் கிடந்த கிருஷ்ணன்; காளியனை அடக்கிப் பெருங்கடலுக்கு அனுப்பியது...

Krishna Kaliya

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணன் இவ்வாறு சிந்தித்து ஆற்றங்கரைக்குச் சென்றான். அவன், தன் உடையை {இடுப்புக்கச்சையை} உறுதியாகக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியுடன் அந்தக் கதம்ப மரத்தில் ஏறினான்.(1) மேக வண்ணனும், தாமரைக் கண்ணனுமான கிருஷ்ணன், அம்மரத்தின் உச்சிக்கு ஏறி, சிங்க முழக்கம் செய்து, தலைகீழாக மடுவுக்குள் பாய்ந்தான்.(2) அந்த யமுனை ஆற்று மடு, அவன் குதித்ததால் கலங்கியது. அதன்காரணமாகச் சிதறும் மேகங்களைப் போல நீர் (அனைத்துப் பக்கங்களிலும்) கரைபுரண்டது.(3) அந்தப் பாம்பின் (காளியனின்) பெரிய வசிப்பிடம் அவ்வொலியால் நடுங்கியது. கோபத்தால் கண்கள் சிவந்த பாம்புகள் நீரில் இருந்து எழுந்தன.(4) அதன் பிறகு மேக வண்ணம் கொண்டவனும், கடுஞ்சினத்தால் கண்கள் சிவந்தவனும், ஐந்து தலைகள், நெருப்பு போன்ற முகங்கள் {படங்கள்}, மற்றும் நாவுகளைக் கொண்டவனும், பாம்புகளின் மன்னனுமான காளியன் நெருப்பின் தழல்களைப் போன்று பிரகாசிப்பவனாகக் காணப்பட்டான்.(5,6)

தீ போலெரியும் அவனது தலைகள் மொத்த மடுவையே மறைத்தன, பெரியவையும், பயங்கரமானவையுமான ஐந்து முகங்கள் {படங்கள்} (நீருக்கு) மேலே காணப்பட்டன.(7) அந்தப் பாம்புகளின் மன்னன் தன் சக்தியாலும், கோபத்தாலும் எரிந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த நீர் கொதிப்பது போலத் தெரிந்தது, அச்சத்தால் பீடிக்கப்பட்ட யமுனை ஆறானவள், தன் நீரோட்டத்திற்கு எதிராகத் தப்பி ஓடினாள்.(8) மடுவுக்கு வந்து சிறுவனைப் போல விளையாடிக் கொண்டிருக்கும் கிருஷ்ணனைக் கண்ட அவனது {காளியனின்} கோப நெருப்பு நிறைந்த வாயில் இருந்து காற்றுப் பலமாக வீசியது.(9) பாம்புகளின் மன்னனான அவனுடைய {காளியனின்} வாயிலிருந்து புகையுடன் கூடிய தீப்பொறிகள் வெளிப்பட்டன. பாம்புகளின் மன்னனான அவனருகில் கரையில் வளர்ந்திருந்த பெரும் மரங்கள் அனைத்தும், யுக முடிவின் அவதாரத்திற்கே ஒப்பான[1] அவனிடம் வெளிப்பட்ட கோபநெருப்பால் உடனே எரிக்கப்பட்டன.(10) அதன் பிறகு அவனது மகன்களும், மனைவிகளும்[2], ஒப்பற்ற சக்தியைக் கொண்ட வேறு முன்னணி பாம்புகளான அவனது பணியாட்களும் நச்சுப்புகையுடன் கூடிய பயங்கர நெருப்பைக் கக்கியபடியே அங்கே வந்தனர்.(11,12)

[1] "ஒரு யுகம் முடியும்போது உலகில் உள்ள அனைத்தும் அழிவை அடையும். இந்தப் பாம்பின் பயங்கர நஞ்சின் மூலம் அனைத்தும் அழிக்கப்பட்டதால் இங்கே சொல்லப்பட்ட யுகமுடிவாகவே இந்தப் பாம்பு ஒப்பிடப்படுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[2] இங்கே மன்மதநாததத்தரின் பதிப்பில், "அவனது மகன் தாரனும்" என்று இருக்கிறது. மற்ற பதிப்புகளில் தாரன் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாக அந்தச் சொல் தாரங்கள் என்று மனைவிகளைக் குறிக்கும் சொல்லாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. சித்திரசாலை பதிப்பில், "பெருஞ்சக்தி கொண்ட பெரும்பாம்புகளான அவனது மகன்கள், மனைவிகள், பணியாட்கள் மற்றும் பிறர், நச்சுப்புகையுடன் கூடிய பயங்க நெருப்பைத் தங்கள் வாய்களில் இருந்து உமிழ்ந்தபடியே அங்கே வந்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவனது மகன்கள், மனைவிகள், பணியாட்கள் மற்றும் பிற பெரும்பாம்புகள் தங்கள் வாய்களில் இருந்து நச்சுப் புகையுடன் கூடிய பயங்கரத் தழல்களைக் கொப்புளித்தனர்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அவனுடைய அளவற்ற காந்தி கொண்ட, மனைவிகள், புத்ரர்கள் பணி செய்வோர் பருத்த நாகஷ்ரேஷ்டர்கள் ஆகிய அந்தப் பாம்புகள் பயங்கர விஷாக்னியை முகத்திலிருந்து கக்கிக் கொண்டு வெளிக்கிளம்பின" என்றிருக்கிறது. எனவே இங்கே இந்த மொழிபெயர்ப்பிலும், "மகன்கள் மற்றும் தாரங்கள்" என்று மற்ற பதிப்புகளில் காணப்படும் சொற்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதன்பிறகு அவர்கள், தங்கள் தலைகளால் அமைத்துக் கொண்ட வளையத்திற்குள் கிருஷ்ணனை நுழையச் செய்தனர். அவனது கைகளும், கால்களும் {கட்டப்பட்டு} எந்த முயற்சியிலும் ஈடுபட இயலாத நிலையில் அவன் ஒரு மலையைப் போல அங்கே அசையாமல் நின்றான்.(13) முன்னணி பாம்புகள், தங்கள் பற்களால் கெடுக்கப்பட்ட {நச்சு} நீரை கிருஷ்ணன் மீது தெளித்தன. எனினும் சக்திவாய்ந்தவனான கிருஷ்ணன் மாளாமல் இருந்தான்.(14) அதேவேளையில், அச்சத்தால் நிறைந்த ஆயர்குலச் சிறுவர்கள் அழுது கொண்டே விரஜத்திற்கு {பிருந்தாவனத்தில் புதிதாக அமைந்த கோகுலத்திற்குத்} திரும்பி, ஒடுங்கிய குரலில்,(15) "கிருஷ்ணன் தன் மூடத்தனத்தால் காளியன் மடுவில் மூழ்கினான். பாம்புகளின் மன்னன் அவனை விழுங்குகிறான். தாமதிக்காமல் அனைவரும் வருவீராக.(16) நந்தரிடமும், அவரது தொண்டர்களிடமும் விரைந்து சென்று, கிருஷ்ணன் பாம்பால் மடுவுக்குள் இழுக்கப்படுகிறான் என்பதை அவர்களிடம் சொல்வீராக" என்றனர்.(17)

இடியைப் போல விழுந்த அந்தச் சொற்களைக் கேட்ட நந்தகோபன் துன்புற்றுப் பெரும் இன்னலடைந்து, சிறப்புமிக்க அந்த மடுவுக்கு விரைந்து சென்றான்.(18) இளமையுடன் கூடிய ஸங்கர்ஷணன் {பலராமன்}, சிறுவர்கள், முதியவர்கள், இளம்பெண்கள் ஆகியோருடன் கூடிய விரஜவாசிகள் அனைவரும் அந்தப் பாம்புகளின் மன்னனுடைய நீர்நிலையை {காளியன்மடுவை} வந்தடைந்தனர்.(19) அந்த மடுவின் கரையை வந்தடைந்த நந்தனின் தலைமையிலான ஆயர்கள் அனைவரும், வெட்கம், ஆச்சரியம் மற்றும் கவலையால் பீடிக்கப்பட்டவர்களாகத் தங்கள் கண்கள் நிறைந்த கண்ணீருடன் அழுதுபுலம்பத் தொடங்கினர். சிலர் "ஓ! மகனே" என்றும்; வேறு சிலர், "ஐயோ நமக்குக் கேடு வந்தது" என்றும் கதறினர்.(20,21) அச்சத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டவர்களான இன்னும் சிலர், "ஐயோ! நாம் அனைவரும் கொல்லப்பட்டோம்" என்று சொல்லி அழுதனர்.

உரக்க அழுது கொண்டிருந்த பெண்கள், யசோதையிடம் சென்று, "ஐயோ, நாம் அனைவரும் கொல்லப்பட்டோம். பாம்புகளின் மன்னனுடைய ஆதிக்கத்தில் கட்டுப்பட்டிருக்கும் உன் மகனைப் பார். பாம்பின் தலையால் கடையப்படும் அமுதத்தைப் போல அங்கே அவன் நடுங்கிக் கொண்டிருக்கிறான்.(22,23) இந்த அவலநிலையில் உன் மகனைக் கண்டும் உன் இதயம் பிளக்காமல் இருப்பதால் உண்மையில் அது கல்லாலானது" {என்று யசோதையிடம் சொல்லிவிட்டு}.(24) {மடுவுக்குள் இறங்கும் யசோதையைக் கண்டு மீண்டும் தங்களுக்குள்} துன்பத்தால் நிறைந்து தன் மகனின் முகத்தில் தன் பார்வையை நிலைக்கச் செய்து, மயக்கமடைந்தவரைப் போல மடுவின் கரையில் நிற்கும் நந்தகோபரைப் பாருங்கள்.(25) மாறாக யசோதையைப் பின்தொடர்ந்து பாம்புகளின் வசிப்பிடமான இந்த மடுவுக்குள் நாமும் நுழைவோம். தாமோதரனில்லாமல் ஒருபோதும் நாம் விரஜத்திற்கு {ஆய்ப்பாடிக்குத்} திரும்புவதில்லை.(26) கிருஷ்ணன் இல்லாத விரஜம், சூரியனில்லாத பகலைப் போலவோ, சந்திரனில்லாத இரவைப் போலவோ, காளையிடம் இருந்த பிரிக்கப்பட்ட பசுவைப் போலவோ ஒருபோதும் அழகாகத் தோன்றாது. கன்றில்லாத பசுவைப் போலக் கிருஷ்ணனிடம் இருந்து பிரிக்கப்பட்டிருக்கும் நாம் அங்கே செல்ல மாட்டோம்" என்றனர்.(27)

கிருஷ்ணனின் மனம், உடல், புத்தி ஆகியவற்றையே கொண்டிருந்தாலும், {கிருஷ்ணனில் இருந்து பிரிந்த} தனியான வேறு நபராகவும் இருந்த ஸங்கர்ஷணன் {பலராமன்}, ஆயர்கள், ஆய்ச்சியர்கள், நந்தன் ஆகியோரின் புலம்பல்களையும், யசோதையின் அழுகையையும் கேட்டுக் கோபமடைந்தவனாகக் கிருஷ்ணனிடம்,(28,29) "ஓ! கிருஷ்ணா, ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, ஓ! ஆயர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனே, நஞ்சுமிக்க இந்தப் பாம்பு மன்னனை விரைவாக அழிப்பாயாக.(30) ஓ! தம்பி, ஓ! என் தலைவா, நம் உறவினர்களான இவர்கள் அனைவரும் மனித புத்தியையே கொண்டிருப்பதால், உன்னை மனிதனெனக் கருதி அழுது புலம்புகிறார்கள்" என்றான்.(31)

ரோஹிணி மகனின் {ரோஹிணேயனின் / பலராமனின்} இந்த ஞானச் சொற்களைக் கேட்ட கிருஷ்ணன், தன் கரங்களை விளையாட்டாக உயர்த்தி, பாம்புகளின் சுருள்களை நொடித்து எழுந்தான்.(32) அவன், நீருக்கு மேலிருந்த பாம்புமன்னனின் தலைகளில் தன் பாதங்களை வைத்து, அவனது தலையைத் தன் கைகளால் பிடித்தான்.(33) அப்போது அழகான அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டிருந்த கிருஷ்ணன், சக்தியுடன் அவனது {காளியனின்} நடுத்தலையில் ஏறி நடனம்புரியத் தொடங்கினான்.(34) இவ்வாறு கிருஷ்ணனால் நசுக்கப்பட்ட அந்தப் பாம்பு மன்னனின் தலைகள் வெளிறி, அவற்றில் இருந்து குருதி வெளியேறத் தொடங்கியது. அப்போது அவன் (காளியன்) அச்சம் நிறைந்த சொற்களில் அவனிடம் {கிருஷ்ணனிடம்},(35) "ஓ! அழகிய முகம் கொண்ட கிருஷ்ணா, அறியாமையால் நான் உன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தினேன். ஆனால் இப்போது உன்னால் வெல்லப்பட்டவனாக, அடக்கப்பட்டவனாக, என் நஞ்சு அழிக்கப்பட்டவனாக இருக்கிறேன். எனக்கு என் உயிரை அளித்து, என் மனைவி, பிள்ளைகள் மற்றும் நண்பர்களுடன் நான் யாருக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதை எனக்கு ஆணையிடுவாயாக" என்றான் {காளியன்}.(36,37)

பாம்புகளின் பகைவனையே[3] தன் வாகனமாகக் கொண்ட தலைவன் கிருஷ்ணன், ஐந்து தலைகளைக் கொண்ட அந்தப் பாம்புமன்னனைக் கண்டும், துயர்மிக்க அவனது சொற்களைக் கேட்டும், கோபமேதுமற்றவனைப் போல,(38) "ஓ! பாம்பே, இந்த யமுனையின் நீரில் நீ வாழ நான் அனுமதிக்க விரும்பவில்லை. எனவே நீ உன் மனைவி மற்றும் உற்றாருடன் பெருங்கடலுக்குச் செல்வாயாக.(39) இதன் பிறகு உன் மகன்கள் மற்றும் பணியாட்களில் யாரேனும் இந்த மாகாணத்தின் நீரிலோ, நிலத்திலோ காணப்பட்டால் அவன் என்னால் கொல்லப்படுவான்.(40) ஓ! பாம்புகளின் மன்னா, இந்த நீர் அனைவருக்கும் நலந்தருவதாக அமையட்டும், நீ ஆழ்கடலுக்குச் செல்வாயாக. இதன் பிறகும் நீ இங்கிருந்தால் உன் உயிருக்கு முடிவை ஏற்படுத்தும் பேரிடர் உனக்கு நேரும்.(41) பாம்புகளின் பகைவனான கருடன், உன் தலையில் என் பாதச்சுவடுகளைக் கண்டால் பெருங்கடலில் உன்னைக் கொல்லாதிருப்பான்" என்று மறுமொழி கூறினான் {கிருஷ்ணன்}.(42)

[3] "விஷ்ணுவின் வாகனமான கருடனை இது குறிக்கிறது. கருடன் பாம்புகளை விழுங்குபவன் என்பதால் அவற்றின் பகைவனாவான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

(தலைவனால் இவ்வாறு சொற்றப்பட்ட) பாம்புகளில் முதன்மையான காளியன், தன் தலையில் கிருஷ்ணனின் பாதச் சுவடுகளைச் சுமந்து கொண்டு, ஆயர்களின் முன்னிலையில் அந்த மடுவில் இருந்து அரவாரமின்றித் தப்பிச் சென்றான்.(43) இவ்வாறு பாம்புகளின் மன்னன் வீழ்த்தப்பட்டுத் தப்பிச் சென்ற பிறகு, அந்தத் தலைவன் {கிருஷ்ணன்} நீரில் இருந்து வெளியே வந்து, கரையில் நின்றான். ஆச்சரியத்தால் நிறைந்த ஆயர்கள் அவனது மகிமைகளைப் பாடி அவனை வலம் வந்தனர்.(44) அதன்பிறகு காட்டில் வாழ்பவர்களான அந்தக் கோபர்கள் நந்தனிடம் மகிழ்ச்சியாக, "உண்மையில் இத்தகைய {பலம்வாய்ந்த} மகனைப் பெற்ற நீர் பேறுபெற்றவரும், தேவர்களின் அன்புக்குரியவரும் ஆவீர்.(45) ஓ! பாவமற்றவரே, பலம் மிக்கவனும், நீண்ட விழிகளைக் கொண்டவனுமான கிருஷ்ணனே இன்று முதல் ஆபத்துகளில் ஆயர்களின் புகலிடமாகவும், தொழுவத்தில் பசுக்களின் பாதுகாவலனாகவும் இருப்பான்.(46) யமுனையின் நீர் எங்கும் இனிமை நிறைந்ததாகவும், நலந்தருவதுமாக இருக்கிறது. இன்றிலிருந்து நமது பசுக்கள் அனைத்தும் கரையில் இருக்கும் ஒவ்வொரு படியிலும் மகிழ்ச்சியாகத் திரியும்.(47) சாம்பலில் மறைந்த நெருப்பைப் போல விரஜத்தில் இருந்த கிருஷ்ணனை {கிருஷ்ணனின் மகிமையை} உண்மையாக அறியாததாலேயே நாங்கள் ஆயர்களாக இருக்கிறோம்" என்றனர்.(48)

அதன்பிறகு ஆச்சரியத்தால் நிறைந்த கோபர்கள் {ஆயர்கள்}, அழிவற்றவனான கிருஷ்ணனைத் துதித்து, சைத்திரரதத் தோட்டத்தில் நுழையும் தேவர்களைப் போலத் தங்கள் குடிலுக்குள் நுழைந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(49)

விஷ்ணு பர்வம் பகுதி – 67 – 012ல் உள்ள சுலோகங்கள் : 49
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Saturday, 13 June 2020

கிருஷ்ணனின் குறும்புகள் | விஷ்ணு பர்வம் பகுதி – 62 – 007

(யமலார்ஜுனபங்கம்)

The childish freaks of Krishna | Vishnu-Parva-Chapter-62-007 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணன் மற்றும் பலராமனின் குறும்புகள்; உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணன்; மருத மரங்களை முறித்தல்...

Arjuna trees and Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "காலஞ் செல்லச் செல்ல கிருஷ்ணன் மற்றும் ஸங்கர்ஷணன் என்ற பெயர்களைக் கொண்ட அந்தச் சிறுவர்கள் இருவரும் தங்கள் கால்களில் தவழத் தொடங்கினர்.(1) உதயச் சூரியனுக்கு ஒப்பானவர்களும், ஒரே அச்சில் வார்க்கப்பட்ட ஈருடல்களில் ஒருவருமான அந்த அழகிய சிறுவர்கள் இருவரும்,(2) ஒரே வடிவத்தை ஏற்கவும், ஒரே படுக்கையில் கிடக்கவும், ஒரே உணவில் வாழவும், ஒரே உடைகளை உடுத்தவும் தொடங்கினர்.(3) உலகங்களின் சான்றுடன் அடையாளங்காணப்படும் அந்தப் பெருஞ்சக்திகள் இரண்டும், ஒரே உடலாக இருப்பினும், அசுரர்களின் அழிவுக்காகவும், வேள்விகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஒரே பெரும்பணியை நிறைவேற்றுவதற்காகவும் இரு மனித வடிவங்களை ஏற்றனர். அவர்களே மொத்த அண்டத்தின் பாதுகாவலர்களாக இருப்பினும், இந்தக் காரணத்திற்காக அவர்கள் கோபர்களாக {இடையர்களாகப்} பிறந்தனர்.(4,5) அங்கே அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, வானத்தில் தங்கள் கதிர்களால் ஒன்றையொன்று பீடிக்கும் சூரியனையும், சந்தினையும் போலத் தெரிந்தனர்.(6)

பாம்புகளைப் போன்ற கரங்களைக் கொண்ட அவர்கள் எங்கும் திரிபவர்களாக, புழுதியால் மறைக்கப்பட்ட செருக்குமிக்க யானைகள் இரண்டைப் போலத் தெரிந்தனர்.(7) சில சமயங்களில் சாம்பலும், பசுஞ்சாணப் பொடியும் பூசப்பட்டவர்களாக நெருப்பின் ஈரிளவரசர்களை {அக்னிகுமாரர்களைப்} போல ஒளிர்ந்தனர்.(8) சில சமயங்களில் முழங்கால்களில் நடந்து, பசுத்தொழுவங்களுக்குள் நுழைந்து, பசுஞ்சாணத்தால் மறைக்கப்பட்ட மேனிகளுடனும், மயிர்களுடனும் அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர்.(9) சில சமயங்களில் அந்தச் சிறுவர்கள் இருவரும் விரஜத்தில் வசிப்போரிடம் {கோகுலவாசிகளிடம்} குறும்புகள் செய்து, சிரிப்பால் தங்கள் தந்தைக்கு மகிழ்ச்சியை உண்டாக்கினர்.(10) சந்திரனைப் போன்ற முகங்களைக் கொண்ட அந்த அழகிய சிறுவர்கள் இருவரும், கண்களுக்குத் தொல்லை கொடுக்கும் தங்கள் கூந்தலுடன், அறிவார்வத்தால் நிறைந்தவர்களாக, மிக அழகானவர்களாகத் தெரிந்தார்கள்.(11) அதிக விளையாட்டுத்தனம், மற்றும் குறும்புத்தனத்துடன் வளர்ந்த அவர்கள் விரஜம் {கோகுலம் / ஆயர்பாடி} முழுவதும் திரிந்தனர். அவர்களை நந்தனால் (எந்த வழிமுறைகளினாலும்) தடுக்க முடியவில்லை.(12)

ஒரு நாள் கோபமடைந்த யசோதை, தாமரைக் கண்ணனான கிருஷ்ணனை வண்டியின் அருகே கொண்டு சென்றாள். ஒரு கயிற்றை அவனது இடுப்பைச் சுற்றிப்பூட்டி, அதை ஓர் உரலில் கட்டி மீண்டும் மீண்டும் அவனை அதட்டும் வகையில், "உன்னால் முடிந்தால் போ" என்று சொன்னாள். இதைச் சொல்லிவிட்டு அவள் தன் பணியில் ஈடுபட்டாள்.(13,14) யசோதை இவ்வாறு வீட்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கிருஷ்ணன், விரஜத்தில் வசிப்போரை {கோகுலவாசிகளை} வியப்படையச் செய்யும் நோக்கில் முற்றத்தை விட்டு வெளியேறினான்.(15) அந்த உரலுடன் முற்றத்தை விட்டு வெளியே சென்ற கிருஷ்ணன், யமலம் மற்றும் அர்ஜுனம் என்ற பெரும் மரங்கள் இருந்த காட்டுக்குச் சென்றான்.(16) உரலை அந்த மரங்கள் இரண்டிற்கும் இடையில் வைத்து அவன் இழுக்கத் தொடங்கினான். அவன் இவ்வாறு உரலை இழுக்கும்போது மரங்களின் வேர்களில் அஃது உறுதியாக அகப்பட்டது.(17) அப்போது அவன் அர்ஜுனம் மற்றும் யமலம் என்ற அந்த மரங்களை இழுக்கத் தொடங்கினான். இவ்வாறு அவனால் பெருஞ்சக்தியுடன் இழுக்கப்பட்ட அந்த மருத மரங்கள் இரண்டும் தங்கள் கிளைகள் மற்றும் வேர்களுடன் முறிந்து விழுந்தன.(18)

தெய்வீக பலம் கொண்ட அந்தத் தலைவன் {கிருஷ்ணன்} ஆயர்களுக்கு இதைக் காட்டும் வகையில் அங்கே சிரிக்கத் தொடங்கினான். அந்தக் கயிறு அவனுடைய சக்தியால் வலுவடைந்தது.(19) அப்போது யமுனை ஆற்றங்கரைக்குச் சென்று கொண்டிருந்த கோபிகைகள் {ஆய்ச்சியர்}, அந்நிலையில் இருக்கும் குழந்தையைக் கண்டு அச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் அழுது கொண்டே யசோதையை அணுகினர்.(20) வருத்தமுடைய முகங்களுடன் கூடிய அந்தப் பெண்கள் அவளிடம் {யசோதையிடம்}, "ஓ! யசோதா, ஒரு கணமும் தாமதிக்காமல் எங்களுடன் விரைந்து வருவாயாக.(21) விருப்பப் பொருட்களை அருள்வதால் தேவர்களாக வழிபடப்படப்படும் பெரும் மரங்கள் இரண்டும் உன் மகனின் மீது வீழ்ந்தன.(22) (பசுவின்) மடியின் கீழ் உள்ள கன்றைப் போலக் கயிற்றால் கட்டப்பட்டிருந்த உன் பிள்ளை அந்த இரண்டு மரங்களுக்கு இடையில் சிரித்துக் கொண்டிருக்கிறான்.(23) ஓ! மூடப்பெண்ணே, எழுந்து வருவாயாக. உன்னை ஞானியாக நினைக்கிறாய் ஆனால் முட்டாளாக இருக்கிறாய். யமனின் வாயில் இருந்து விடுபட்டவனைப் போல உன் மகன் உயிரோடு இருக்கிறான்" என்றனர்.(24)

இதைக் கேட்டதும் அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவள் {யசோதை} ஓலமிடத் தொடங்கினாள். பிறகு வேரோடு முறிந்து கிடக்கும் அந்த இரண்டு மரங்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.(25) அங்கே தன் பிள்ளை, தன் இடையைச் சுற்றிய கயிற்றுடன் உரலை இழுத்துக் கொண்டு இரு மரங்களுக்கிடையில் இருப்பதை அவள் கண்டாள்.(26) விரஜத்தை {கோகுலத்தைச்} சேர்ந்தவர்களும், முதியவர்களும், இளைஞர்களுமான ஆயர்கள், மற்றும் ஆய்ச்சியர்கள் அனைவரும் அந்த அற்புதக் காட்சியைக் காண்பதற்கு அங்கே விரைந்து சென்றனர்.(27)

காட்டில் திரிபவர்களான ஆயர்கள் தங்களுக்குப் பேசத் தொடங்கி, "நம் கிராமத்தின் அளவுள்ள இந்தப் பெரும் மரங்கள் இரண்டையும் வேரோடு முறித்தது யார்?(28) புயலோ, மழையோ, இடியோ, யானைகளின் குறும்போ இங்கே ஏதும் இல்லை. பிறகு இந்த மரங்கள் இரண்டும் திடீரென எவ்வாறு விழுந்தன?(29) ஐயோ, தரையில் விழுந்து கிடக்கும் இந்த மரங்கள் இரண்டும், நீரில்லாத மேகங்களைப் போலத் தங்கள் அழகை இழந்தன. ஓ! நந்தா, இந்த மருத மரங்கள் இரண்டும், உனக்குப் பெரிய அளவில் சாதக நிலையை ஏற்படுத்தியவையாகவும், உனக்கு நன்மை செய்பவையாகவும் இருந்திருக்கின்றன. இவை பெரியவையாக இருந்தாலும், உன் பிள்ளையின் உடலில் சிறு காயத்தையும் ஏற்படுத்தாமல் காக்கும் வகையில் விழுந்திருக்கின்றன.(30,31) இதற்கு முன்பு பூதனை கொல்லப்பட்டாள், வண்டி நொறுகியது. மரங்கள் முறிந்த இந்நிகழ்வு விரஜத்தில் {ஆய்ப்பாடியில் / கோகுலத்தில்} மூன்றாவது நிமித்தமாகும்.(32) இந்நிமித்தங்கள் நன்மையைத் தெரிவிக்கவில்லை என்பதால் இனியும் கோபர்கள் {ஆயர்கள்} இந்தக் கிராமத்தில் வாழ்வது நல்லதல்ல" என்றனர்.(33)

அதன்பிறகு நந்தன், தாமரைக் கண்ணனான கிருஷ்ணனை உரலில் இருந்து விடுவித்து, தன் மடியில் அமர்த்தி, இறந்தோரின் நாட்டில் இருந்து திரும்பிவந்தவனைப் பார்ப்பது போல மீண்டும் மீண்டும் அவனைப் பார்த்தும், மகிழ்ச்சியை அடையாதிருந்தான். பிறகு அவன், யசோதையை அதட்டிவிட்டு, ஆயர்கள் அனைவரும் பின்தொடர விரஜத்திற்கு {ஆய்ப்பாடிக்கு / கோகுலத்திற்குத்} திரும்பினான்.(34,35) கிருஷ்ணன் கயிற்றால் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அந்தக் கிராமத்தின் ஆயர்கள் அனைவராலும் அந்த நாள் முதல் தாமோதரன் என அழைக்கப்பட்டான்.(36) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ஆயர்களுக்கு மத்தியில் வெறும் சிறுவனாக அவன் வாழ்ந்து வந்தாலும், இந்த அற்புதச் செயல்கள்[1] அனைத்தையும் செய்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(37)

[1] "கிருஷ்ணனின் தொடக்கக் கால வாழ்க்கையில் நேரும் இந்த அற்புதங்கள் அனைத்தும் வைஷ்ணவப் படைப்புகள் அனைத்திலும் மிகப் பெரியதான ஸ்ரீமத்பாகவதத்திலும் விளக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணனின் மீமானிட சக்தியைக் காட்டும் நோக்கில் அவை பதிவு செய்யப்படுகின்றன. இந்துக்கள் அவனை விஷ்ணுவின் அவதாரமாகக் கருதுகின்றனர், அவன் தெய்வமாக இல்லாவிட்டால் இந்த அற்புதச் செயல்களை அவனால் செய்திருக்க முடியாது என்பதைக் காட்டுவதற்காக இவை சொல்லப்படுகின்றன. தங்கள் நாயகனின் மீமானிட சக்தியையும், பிறப்பையும் நிரூபிக்கும் அற்புதச் செயல்களைப் பதிவு செய்வதில் தொடக்கக் கால எழுத்தாளர்கள் சிறப்புக் கவனத்தைச் செலுத்தியிருக்கின்றனர். இது தொடக்கக் கால இந்து ஆசிரியர்களால் மட்டுமே செய்யப்பட்டதல்ல, மேற்கத்திய எழுத்தாளர்களும் இதைச் செய்திருக்கிறார்கள். பைபிள் பழைய ஏற்பாட்டின் அற்புதங்கள் இந்த வாதத்திற்கு வலுசேர்ப்பனவாகும். {புதிய ஏற்பாட்டிலும் பல அற்புதங்கள் உண்டு} கிருஷ்ணனின் தொடக்கக் கால வாழ்வில் அவர் செய்த இந்த அற்புதங்கள், விஷ்ணுபுராணம், பாகவதபுராணம், ஹரிவம்சம் ஆகிய முக்கியமான மூன்று படைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

விஷ்ணு பர்வம் பகுதி – 62 – 007ல் உள்ள சுலோகங்கள் : 37
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Friday, 12 June 2020

கிருஷ்ணனின் மீமானிடச் செயல்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 61 – 006

(சகடபங்கபூதனாவதௌ)

Superhuman deeds of Krishna. He upsets a carriage and kills Putana | Vishnu-Parva-Chapter-61-006 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சகடாசுரனையும், பூதனையையும் கொன்ற கிருஷ்ணன்...

Sakatasura killed by Shri Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தலைவன் {விஷ்ணு}, தன்னை முறையாக வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே நந்தனின் கிராமத்தில் {கோகுலத்தில்} ஒரு குறிப்பிட்ட காலத்தைக் கோபாலனாகக் கழித்தான்.(1) அவ்விரு சிறுவர்களில் மூத்தவனுக்கு ஸங்கர்ஷணன் {பலராமன்} என்றும், இளையவனுக்குக் கிருஷ்ணன் என்றும் பெயர்கள் சூட்டப்பட்டன. அவர்கள் அங்கே பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.(2) கிருஷ்ணனாக அவதரித்த தலைவன் ஹரி, மேகம் போன்ற கருநீல நிறத்தை ஏற்று, பெருங்கடலில் உள்ள மேகத்தைப் போல அங்கே ஆயர்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்தான்.(3)

ஒரு நாள் ஒரு வண்டியின் அடியில் கிருஷ்ணன் உறங்கிக் கொண்டிருந்த போது, மகன்களிடம் அன்பு கொண்டவளான யசோதை, அவனை அங்கேயே விட்டுவிட்டு யமுனை ஆற்றுக்குச் சென்றாள்.(4) அப்போது கிருஷ்ணன் ஒரு குழந்தையைப் போல விளையாட்டாகத் தன் கைகளை வீசி அழத் தொடங்கினான். அவன் தன் கால்களை உயர்த்தி, அவற்றில் ஒன்றால் அந்த வண்டியைப் புரட்டிப் போட்டான். பிறகு தன் கால்களால் தவழ்ந்தபடியே பாலுக்காக அவன் அழத் தொடங்கினான்.(5,6) அதே வேளையில் நீராடி முடித்த யசோதை, கட்டப்பட்டிருக்கும் கன்றை நோக்கிச் செல்லும் பசுவைப் போலத் தன் முலைப் பாலால் மேனி நனைந்தவளாக, அச்சத்தால் மனம் பீடிக்கப்பட்டவளாக அங்கே வந்தாள்.(7) அங்கே அவள் காற்றேதும் இல்லாமலே புரட்டப்பட்டுக் கிடக்கும் வண்டியைக் கண்டாள். அதன்பிறகு உரக்க அழுதபடியே விரைவாகத் தன் குழந்தையை எடுத்துக் கொண்டாள்.(8)

அந்த வண்டி எவ்வாறு புரண்டது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை; அச்சத்தால் நிறைந்த அவள் தன் பிள்ளையிடம் {கிருஷ்ணனிடம்},(9) "ஓ! என் குழந்தாய், உன் தந்தை பெருங்கோபம் கொண்டவர். வண்டியின் அடியில் நீ உறங்கியதையும், அது புரண்டதையும் அறிய வரும்போது அவர் என்ன சொல்வார் என நான் அறியேன்.(10) {வண்டியின் அடியில் நீ நசுங்கியிருந்தால்} நீராடலால் எனக்கு என்ன பயன்? ஆற்றுக்கு நான் செல்ல வேண்டிய காரியமென்ன? என்னுடைய இந்த மூடச் செயலின் விளைவாலேயே புரட்டப்பட்ட வண்டியின் அடியில் நான் உன்னைக் காண்கிறேன்" என்றாள்.(11)

பட்டுடை தரித்தவனான நந்தன், தன் பசுக்களை மேய்ப்பதற்காகக் காட்டுக்குச் சென்றிருந்தான். அவன், விரஜத்தில் {கோகுலத்தில்} உள்ள தன் வீட்டுக்குத் திரும்பியபோது, வண்டி {சகடாசுரன்} தலைகீழாகப் புரண்டு கிடப்பதைக் கண்டான். அதன் சக்கரங்கள் இரண்டும் மேலே உயர்ந்திருந்தன. அச்சுகள், குடங்கள் மற்றும் தடிகள் அனைத்தும் உடைந்திருந்தன.(12,13) இதைக் கண்டதும் பேரச்சம் கொண்ட அவன், விரைந்து வந்து கண்கள் நிறைந்த கண்ணீருடன், "என் மகன் நலமா?" என்று மீண்டும் மீண்டும் கேட்டான்.(14) அவன் {நந்தன்} தன் மகன் {கிருஷ்ணன்} யசோதையின் முலையுண்பதைக் கண்ட போது, தன் கவலையில் இருந்து விடுபட்டு, "காளைகள் சண்டையிடாமல் வண்டி புரண்டதெவ்வாறு?" என்று கேட்டான்.(15)

அச்சமடைந்த யசோதை, ஒடுங்கிய குரலுடன், "ஓ! மென்மையானவரே {சாதுவே}, இந்த வண்டியைப் புரட்டியது எவர் என்பதை நான் அறியேன். நான் என் துணியைத் துவைப்பதற்காக ஆற்றுக்குச் சென்றிருந்தேன். நான் திரும்பி வந்தபோது இது புரண்டு கிடப்பதைக் கண்டேன்" என்றாள்.(16,17)

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சிறுவர்கள், "நாங்கள் விரும்பியபடி உலவிக் கொண்டிருந்தபோது, இந்தச் சிறுவன் தன் காலால் வண்டியைப் புரட்டிப் போட்டதைக் கண்டோம்" என்றனர். இதைக் கேட்ட நந்தகோபன் பெரும் ஆச்சரியமடைந்தான்.(18,19) மனம்நிறைந்தவனும், அச்சமடைந்தவனுமான அவன், இஃது எவ்வாறு நேருமெனச் சிந்திக்கத் தொடங்கினான். சாதாரண மனித புத்தியைக் கொண்ட ஆயர்கள் பிறர், அந்தச் சிறுவர்களின் சொற்களில் நம்பிக்கையேதும் கொள்ளவில்லை.(20) அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தவர்களாகவும், அதன்படியே கண்கள் அகல விரிந்தவர்களாகவும் அந்த வண்டியைத் திருப்பி அதன் சக்கரங்களைக் கட்டினர்".(21)

Putana killed by Shri Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒரு காலத்தில் நடு இரவில் கம்ஸனின் செவிலியும் {தாதி / வளர்ப்புத்தாய்}[1], பயங்கரம் நிறைந்தவளும், விரும்பிய வடிவை ஏற்கவல்லவளுமான பூதனை, உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பறவையின் வடிவை ஏற்று, தன் சிறகுகளை அசைத்தபடி கோபர்களின் கிராமத்திற்கு {கோகுலத்திற்குச்} சென்றாள்.(22,23) பூதனை, புலி போல முழங்கியபடியே நடு இரவில் விரஜத்திற்குள் {கோகுலத்திற்குள்} நுழைந்து ஒரு பெண்ணின் வடிவை ஏற்றாள். பால் நிறைந்த முலைகளுடன் கூடிய அவள், வண்டியின் சக்கரத்திற்கடியில் கிடந்தாள். விரஜத்தில் வசிப்பவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவள் கிருஷ்ணனுக்குப் பால் கொடுக்கத் தொடங்கினாள்.(24,25) அப்போது கிருஷ்ணன், பாலோடு சேர்ந்து அவளது உயிர்மூச்சுகள் அனைத்தையும் பருகி, பயங்கர ஒலியை எழுப்பினான். முலைகள் சிதைந்த அவளும் கீழே பூமியில் விழுந்தாள்.(26) நந்தனும், ஆயர்கள் பிறரும், யசோதையும் அந்த ஒலியைக் கேட்டு விழித்தெழுந்தனர். அவர்கள் அனைவரும் அச்சத்துடன் கூடியவர்களாக அருகருகே நின்றனர்.(27) நனவையும், முலைகளையும் இழந்தவளான பூதனை வஜ்ரத்தால் {இடியால்} நசுங்கியவளைப் போல அங்கே தரையில் கிடப்பதை அவர்கள் கண்டனர்.(28) "இஃது என்ன? இதைச் செய்தது யார்?" என்று அலறியபடியே நந்தனின் தலைமையிலான ஆயர்கள் அனைவரும் அவளைச் சூழ்ந்து நின்றனர்.(29) "ஆச்சரியம், ஆச்சரியம்" என்று மீண்டும் மீண்டும் சொல்லி ஆச்சரியமடைந்தபடியே தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.(30)

[1] சித்திரசாலை பதிப்பில், "பூதனை கம்ஸனின் வளர்ப்புத்தாய்" என்று சொல்லப்பட்டிருக்கிறாள். பிபேக்திப்ராயின் பதிப்பில், "செவிலித் தாய்" என்றிருக்கிறது. உ.வே.எஸ். இராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் வளர்ப்புத் தாய் என்றே இருக்கிறது. மூலத்தில், "தா⁴த்ரீ கம்ஸஸ்ய போ⁴ஜஸ்ய பூதனேதி பரிஸ்ஹ்ருதா" என்றிருக்கிறது.

ஆச்சரியத்தால் நிறைந்தவர்களான ஆயர்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்ற பிறகு, நந்தன் யசோதையிடம் மதிப்புடன், "ஓ! புத்திசாலிப் பெண்ணே, நான் பேராச்சரியம் அடைந்தேன். இதன் காரணத்தை என்னால் அறிய இயலவில்லை. அஃது எதுவாக இருந்தாலும், உண்மையில் நான் அஞ்சுகிறேன். என் மகனுக்கு ஆபத்து ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டான்.(31,32)

அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த யசோதையும், "ஓ! மதிப்புக்குரிய ஐயா, என் மகனுடன் உறங்கிக் கொண்டிருந்த நான், இந்தப் பயங்கர ஒலியால் விழித்தெழுந்தேன். எனவே, முன்பு என்ன நடந்தது என்பதை நான் அறியேன்" என்று மறுமொழி கூறினாள்.(33)

யசோதையின் இந்த மறுமொழியைக் கேட்ட நந்தன், தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆச்சரியத்தால் நிறைந்து, கம்ஸனிடமிருந்து ஏற்படப்போகும் அச்சத்தை எதிர்பார்த்திருந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(34)

விஷ்ணு பர்வம் பகுதி – 61 – 006ல் உள்ள சுலோகங்கள் : 34
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

விரஜ கிராம விவரிப்பு | விஷ்ணு பர்வம் பகுதி – 60 – 005

(கோவ்ரஜகமனம் - நந்தவ்ரஜகமனம்)

A description of village Vraja | Vishnu-Parva-Chapter-60-005 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : குழந்தைகள் இருவரின் பாதுகாப்பு குறித்து நந்தகோபனை எச்சரித்து அனுப்பிய வஸுதேவன்; கோகுலத்திற்குச் சென்ற நந்தகோபன்...

Vraja village Gokulam

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வஸுதேவன், விரஜ கிராமத்தில் {கோகுலத்தில் / இடைச்சேரியில்}[1] சந்திரனைவிட அழகான ஒரு மகனை {பலராமனை} ரோஹிணி பெற்றாள் என்பதை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தான்.(1) அவன் {வஸுதேவன்} தாமதமேதும் செய்யாமல் நந்தகோபனிடம், இனிய சொற்களில், "யசோதையுடன் சேர்ந்து விரஜத்திற்கு விரைந்து செல்வாயாக[2]. அவ்விரு சிறுவர்களின் பிறப்பின் விளைவாகச் செய்ய வேண்டிய {ஜாதகர்மம் உள்ளிட்ட} பல்வேறு சடங்குகளைச் செய்து, அவர்களை விரஜத்தில் {கோகுலத்தில்} மகிழ்ச்சியுடன் வளர்ப்பாயாக.(2,3) ரோஹிணி பெற்ற என் மகனை {பலராமனை} விரஜத்தில் கவனமாகப் பாதுகாப்பாயாக. அப்போதுதான் பித்ருக்களின் பட்டியலில் மகனைக் கொண்டவனாக என் பெயர் குறிப்பிடப்படும்[3].(4) ஐயோ, என் ஒரே மகனின் முகத்தையும் நான் காண இயலாதவனானேன். நான் விவேகத்துடன் கூடியவனாக இருப்பினும், இஃது {இந்நிலை} என் ஞானத்தைக் களவாடுகிறது.(5)

[1] இங்கே குறிப்பிடப்படும் விரஜம் எனும் கிராமம், கோகுலம், இடைச்சேரி, ஆய்ப்பாடி, ஆயர்பாடி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இடையர்கள் / ஆயர்கள் / கோபாலர்கள் / மேய்ப்பர்கள் இருக்கும் இடம் என்பதைக் குறிக்கும் பொதுப்பெயராக இஃது இருக்க வேண்டும்.

[2] இந்த அத்தியாயத்தின் தொடக்க வரிகளைக் கொண்டு நந்தகோபன் அதுவரை மதுராவில் இருந்தான் என்பதும், வஸுதேவனின் மற்றொரு மனைவியான ரோஹிணி கோகுலத்தில் இருந்தாள் என்பதும், மதுராவில் இருந்த நந்தகோபனை கோகுலம் சென்று விடுமாறு வஸுதேவன் பணித்தான் என்பதும் தெரிகிறது. மேலும் மூலத்தின் இந்த அத்தியாயத்தின் தலைப்பாக நந்தவ்ரஜகமனம் என்றிருக்கிறது. அதை விரஜத்திற்கு இடம்பெயர்ந்த நந்தன் என்று மொழிபெயர்க்கலாம்.

[3] சித்திரசாலைப் பதிப்பில், "சிறுவனும் என் மகனுமான ரோஹிணேயனை விரஜத்தில் கவனமாகப் பாதுகாப்பாயாக. நான், குழந்தை கொண்டவர்களின் விவாதப் பொருள் ஆவேன். (ஒரு தந்தையின் கடமைகளைச் செய்யாததற்காக நான் அவர்களால் பழிக்கப்படுவேன்)" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், விரஜம் சென்றதும் அவர்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பாயாக. ரோஹிணியின் மகனையும் என் மகனையும் விரஜத்தில் பாதுகாப்பாயாக. குழந்தைப் பருவத்தில் அனைவரும் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். மனிதர்கள் குழந்தைப்பருவத்தில் மூடர்களாகவும் இருப்பார்கள். குழந்தைப்பருவத்தில் அனைவரும் கடுமைமிக்கவர்களாகவும் இருப்பார்கள். எனவே கவனத்துடன் இருப்பாயாக. பிள்ளைகளைக் கொண்டோரின் மத்தில் பித்ருபக்ஷத்தில் நான் விவாதத்திற்குரிய பொருளாவேன்" என்றிருக்கிறது. விரஜத்தில் பாதுகாப்பாயாக என்பதன் அடிக்குறிப்பில், "ரோஹிணியின் மகன் என்று சொல்வதில் பலராமனையும், தன் மகன் என்று சொல்வதில் கிருஷ்ணனையும் குறிப்பிடுகிறார் வஸுதேவன்" என்றிருக்கிறது. பித்ருபக்ஷம் என்பதன் அடிக்குறிப்பில், "இது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் ஈமச் சடங்குகள் நடைபெறும் காலம்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ரோஹிணி பெற்ற என் பிள்ளையையும் கோகுலத்தில் நன்கு காப்பீராக. நான் ஒரே குழந்தையின் முகத்தைப் பார்க்கவில்லையென்று புத்ரர்களுடைய ஜ்ஞாதிகளால் நிந்திக்கப்படுபவன்" என்றிருக்கிறது.

தீயவனான இந்தக் கம்ஸன், குறிப்பாகக் குழந்தைகளைக் கொல்லும்போது சற்றும் இரக்கம் கொள்வதில்லை என்பதால் நான் அஞ்சுகிறேன். அதையுந்தவிர, இவ்வுலகில் குழந்தைகளைப் பல்வேறு ஆபத்துகளும் அச்சுறுத்துகின்றன. எனவே, ஓ! நந்தா, உன் மகனை {கிருஷ்ணனைக்} கவனித்துக் கொள்வதைப் போலவே ரோஹிணியின் மகனையும் {பலராமனையும்} கவனித்துக் கொள்வாயாக.(6,7) என் மகன் மூத்தவன், உன் மகன் இளையவன். அவர்களுடைய பெயர்கள் ஒரே பொருளைக் கொண்டவை. எனவே, அவர்களை நிகரான கவனத்துடன் வளர்ப்பாயாக.(8) அவர்கள் இருவரும் நிகர்வயது கொண்டவர்கள். ஓ! கோபாலா, உன்னுடைய கவனமான வளர்ப்பிலும், விரஜத்தின் {கோகுலத்தின்} அருளிலும் அவர்கள் வளருமாறு கவனித்துக் கொள்வாயாக.(9) குழந்தைப்பருவத்தில் ஒவ்வொருவரும் தங்கள் வழியில் செயல்பட்டுக் குறும்புகளையும், தவறுகளையும் செய்கிறார்கள். எனவே அவர்களைப் பெருங்கவனத்துடன் பயிற்றுவிப்பாயாக.(10) தீயவனான கேசியினாலும், ஊர்வன மற்றும் பூச்சிகள் {புழுக்கள்} பலவற்றாலும், கழுகுகளாலும் அனைத்து வகை அச்சமும் ஏற்படும் என்பதால் பிருந்தாவனத்தில் உன் பசுத்தொழுவங்களை அமைக்காதே. பசுத்தொழுவத்தில் பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளிடம் இருந்து அந்தச் சிறுவர்கள் இருவரையும் பாதுகாப்பாயாக.(11,12) ஓ! நந்தா, கிட்டத்தட்ட இரவு முடியப் போகிறது. விரஜத்திற்கு விரைந்து செல்வாயாக. தெற்கில் உள்ள பறவைகளும் உன்னிடம் அதையே செய்யுமாறு கேட்டுக் கொள்வதைக் காண்பாயாக" என்றான் {வஸுதேவன்}.(13)

நந்தன், பெரும் மனம் கொண்ட வஸுதேவனின் இந்த ரகசிய செய்தியைக் கேட்டுப் பெரிதும் நிறைவடைந்து, யசோதையுடன் சேர்ந்து தன் வாகனத்தில் ஏறினான்.(14) அவன், மனிதர்களால் தோள்களில் சுமக்கப்படும் ஒரு வாகனத்தில் {பல்லக்கில்} குழந்தையான அந்த இளவரசனை {கிருஷ்ணனை} வைத்தான்.(15) பிறகு அவன், ஏராளமான நீர் தெளிக்கப்பட்டதும், குளிர்ந்த காற்றால் நிறைந்திருந்ததும், யமுனைக் கரையில் அமைந்ததுமான ஒரு சாலையின் வழியே சென்றான்.(16)

இவ்வாறே சற்றுத் தொலைவு சென்றதும், குளிர்ந்த காற்றால் நிறைந்திருப்பதும், கோவர்த்தன மலையின் அருகே, யமுனைக் கரையில் பசுக்களின் அழகிய கிராமமாக அமைந்ததுமான விரஜத்தை {கோகுலத்தைக்} கண்டான்.(17) அஃது இனிய குரலெழுப்பும் விலங்குகளாலும், கொடிகளால் மறைக்கப்பட்ட பெரும் மரங்களாலும், பால் கொடுப்பவையும், மேய்ந்து கொண்டிருப்பவையுமான பசுக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(18) அந்த இடம், பசுக்கள் சுகமாகத் திரியும் அளவுக்கு அழகிய சமவெளிகளைக் கொண்டதாகவும், நல்ல சமமான படிக்கட்டுகளுடன் கூடிய தடாகங்களைக் கொண்டதாகவும் இருந்தது. {அங்கே இருந்த} மரங்கள், காளைகளின் கொம்புகள் மற்றும் திமில்களால் கீறப்பட்டிருந்தன.(19) கழுகுகள், காட்டுப்பூனைகள், வல்லூறுகள், இறைச்சியை விரும்புபவையும், பின்தொடர்ந்து வருபவையுமான பிற பறவைகள், சிறுத்தைகள் மற்றும் சிங்கங்கள் ஆகியன எப்போதும் அங்கே வாழ்ந்து வந்தன. இதன் காரணமாக அந்த இடம் கொழுப்பு, மஜ்ஜை மற்றும் எலும்புகளால் நிறைந்திருந்தது.(20) ஏராளமான புற்களால் மறைக்கப்பட்டிருந்ததும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள் மற்றும் முழங்கும் புலிகளால் நிறைந்திருந்ததுமான அந்த இடம், இனிய கனிகளால் சூழபட்ட மரங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டதாகவும், பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளின் மங்கல ஒலிகளை எதிரொலிப்பதாகவும் இருந்தது. அந்த அழகிய கிராமம் {விரஜம் / கோகுலம்} கோபிகைகளால் நிறைந்திருந்தது.(21,22) வாகனங்களுக்கான சாலைகள் அகன்றவையாக இருந்தன. முட்களால் அது மறைக்கப்பட்டதாகவும், வீழ்ந்த பெரும் மரங்களால் அவற்றின் புறவெளிகள் நிறைந்தவையாகவும் இருந்தன.(23)

அதன் சுற்றளவு தோறும் நிலத்தில் கன்றுகளைக் கட்டும் கயிறுகளும், முளைகளும் பொருத்தப்பட்டிருந்தன; அங்கே பசுஞ்சாணம் நிறைந்திருந்தது. புற்களால் மறைக்கப்பட்ட குடில்களும், மடங்களும் அங்கே இருந்தன.(24) மத்து கடையும் ஒலியால் அது நிறைந்திருந்தது. செழிப்பின் அனைத்து அறிகுறிகளையும் கொண்டவர்களும், நன்கு வளர்ந்தவர்களுமான அரசு அதிகாரிகளும், மகிழ்ச்சி நிறைந்த மனிதர்களும் அங்கே எப்போதும் வாழ்ந்து வந்தனர்.(25) அங்குள்ள நிலம் மோர் சிந்தியதாகவும், தயிராடைகளால் நனைந்ததாகவும் இருந்தது. தயிர் கடையும் கோபிகைகளின் ஒலியால் அது நிறைந்திருந்தது.(26) நன்கு தடுக்கப்பட்ட கதவுகளால் பசுத்தொழுவங்கள் அனைத்தும் முறையாகப் பாதுகாக்கப்பட்டிருந்தன; அவற்றின் உள்ளே பசுக்களுக்கான கொட்டில்கள் இருந்தன. ஆயர்களின் விளையாட்டு மைதானங்களாலும், காகங்களின் இறகுகளை {காகபக்ஷம்} அணிந்த சிறுவர்களாலும் அது நிறைந்திருந்தது.(27)

நீல ஆடைகளை உடுத்திய இளமை நிறைந்த கோபிகைகள் நெய் தயாரித்தனர், இந்தக் காரணத்தால் அங்கே இனிய நறுமணம் கொண்ட காற்று வீசியது.(28) காட்டு மலர்மாலைகளால் தலை அலங்கரிக்கப்பட்டவர்களும், மார்புகளை மறைக்கும் கச்சை அணிந்தவர்களுமான கோபிகைகள், தங்கள் தலைகளில் பாற்குடங்களுடன் எப்போதும் அங்கே நடந்து கொண்டிருந்தனர்.(29) யமுனைக் கரையில் இருந்த சாலை நீர் சுமக்கும் கோபிகைகளால் நிறைந்திருந்தது. நந்தகோபன் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் இவ்வழியில் தன் கிராமத்தில் நுழைந்தபோது, அவனது குலத்தைச் சேர்ந்த மனிதர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது.(30) முதியவர்களான கோபர்களும், கோபிகைகளும் வெளியே வந்து அந்நகரத்தில் அவனை வரவேற்றனர். அவனும் அந்த இனிமை நிறைந்த இடத்திற்குத் தன் விருப்பத்தின்படியே சென்றான்.(31) அதன் பிறகு அவன் {நந்தகோபன்}, வஸுதேவனின் அன்புக்குரிய மனைவியான ரோஹிணியிடம் சென்று, உதயச் சூரியனுக்கு ஒப்பான பூடகப் புருஷனான கிருஷ்ணனை அங்கே வைத்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(32)

விஷ்ணு பர்வம் பகுதி – 60 – 005ல் உள்ள சுலோகங்கள் : 32
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்