Showing posts with label மயன். Show all posts
Showing posts with label மயன். Show all posts

Saturday, 16 May 2020

தேவர்களின் போர் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 46

(தே³வாஸுரஸங்க்³ராமவர்ணனம்)

The battle of the gods | Harivamsha-Parva-Chapter-46 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சந்திரனைப் போரிடத் தூண்டிய இந்திரன்; அசுரப்படையைக் கலங்கடித்த வருணனும், சந்திரனும்; மற்றொரு மாயையை உண்டாக்கிய மயன்; அக்னி மற்றும் வாயு தேவர்களை ஏவிய விஷ்ணு; மீண்டும் வீழ்ந்த அசுரப்படை; போர்க்களம் புகுந்த காலநேமி...

Kalanemi

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவர்களைப் பெருகச் செய்பவனும், தேவர்களின் மன்னனுமானவன் {இந்திரன்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, பனியைத் தன் ஆயுதமாகக் கொண்ட சோமனை முதலில் போருக்கு அனுப்பினான்.(1)

சக்ரன் {இந்திரன் வருணனிடம்}, "ஓ! சுதாகரா[1], அசுரர்களை அழிப்பதற்காகவும், தேவர்களை வெற்றியடையச் செய்வதற்காகவும், சுருக்குக்கயிற்றை ஏந்தியவனுக்கு {பாசதரனுக்கு_வருணனுக்கு}[2] உதவி செய்யவும் புறப்பட்டுச் செல்வாயாக.(2) ஒளிக்கோள்கள் அனைத்தின் தலைவனும், சூரியனுக்கே தலைவனுமான நீ ஒப்பற்ற சக்தியைக் கொடையாகப் பெற்றிருக்கிறாய்[3]. சாறுகளின் ஞானத்தைக் கொண்டவர்கள், உன்னைச் சாறுகள் அனைத்துடன் அடையாளங்காணப்படுபவனாகக் கருதுகிறார்கள்.(3) பெருங்கடலிலும் உன்னுடைய சுற்றுப்பாதையிலும் பெருக்கமும், சுருக்கமும் வெளிப்படுகின்றன. அண்டத்துடன் காலத்தை இணைத்து பகல்களையும் இரவுகளையும் நீயே உண்டாக்குகிறாய்[4].(4) குழிமுயலுக்கு ஒப்பான பூமியின் நிழல் உன்னுடலில் இருக்கிறது. விண்மீன்களில் பிறந்த சோமதேவர்களும் இதை அறியமாட்டார்கள்[5].(5)

[1] "இது சந்திரனின் பெயராகும். இந்து தொன்மங்களின்படி சந்திரன் அமுதத்தின் சுரங்கமாவான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பிலும், பிபேக்திப்ராயின பதிப்பிலும் இங்கே சோமா என்று அழைப்பதாகவே இருக்கிறது.

[2] "இது சுருக்குக்கயிற்றை {பாசத்தைத்} தன் ஆயுதமாகக் கொண்ட வருணனின் பெயராகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், "ஒளிக்கோள்கள் அனைத்தின் தலைவன்" என்றே இருக்கிறது.

[4] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "தொடர்ந்து ஒன்றுக்கொன்று தொடர்புறும் வளர்தலும், தேய்தலும், அல்லது அலையின் உள்வாங்கலும், பெருக்கமும் உன்னிலும், பெருங்கடலிலும் வெளிப்படுகின்றன. அதேவேளையில் நீங்கள் இருவரும் தேய்ந்து உள்வாங்கும் உங்கள் பகுதிகளை மீட்டெடுக்கவல்லவர்களாக இருக்கிறீர்கள். அதேபோலவே, அசுரர்களை எதிர்த்துப் போரிடுவதற்காகப் பெருங்கடலின் தேவனான வருணனுடன் கரங்கோர்ப்பாயாக. இரவும், பகலும் நீ சுழல்வதால், கால அளவீட்டுக்கு நீயே அளவுகோலாக இருக்கிறாய்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "உன்னுடைய வளர்ச்சியும், தேய்வும் பெருங்கடலிலும், வானத்தில் நீ வலம் வருவதிலும் வெளிப்படையாகத் தெரிகிறது. இரவும், பகலும் நீ வலம் வருவதே அண்டத்தில் காலத்தை அளக்கும் தரமாகப் பயன்படுத்தப்படுகிறது" என்றிருக்கிறது.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பளபளப்பான உன் மேற்பரப்பில் குழிமுயலாக வெளிப்படும் உலகின் நிகழ் குறிக்கப்பட்டுள்ளது, விண்மீன்களின் அறிவியலில் திறன்பெற்ற சோதிடர்களும் அதன் உண்மைத்தன்மையை அறிய முடியாதென வாதிடுகிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "குழிமுயலின் தடயம் உன் மடியில் இருக்கிறது, அஃது உலகங்களின் நிழலன்றி வேறேதுமில்லை. சோம தேவனை அறியோதவனால் நட்சத்திரங்களைக் குறித்து அறிந்தவனாக இருக்க மாட்டான்" என்றிருக்கிறது.

சூரியப் பாதைக்கும், பிற ஒளிக்கோள்களுக்கும் மேல் நீ இருக்கிறாய். உன்னுடல் மற்றும் கதிர்களால் உலகுக்கு ஒளியூட்டி நீ இருளை விலக்குகிறாய்.(6) வெண்கதிர்களையும், குளிர்ந்த உடலையும் கொண்டவனும், ஒளிக்கோள்களின் தலைவனுமான நீ, உன் மடியில் குழிமுயலைக் கொண்டவனாகவும், காலத்தின் புலப்படாத ஆன்மாவாகவும், வேள்விகளில் வழிபடப்படுபவனாகவும், வேள்விகளின் சாறாகவும், நித்தியனாகவும்,(7) கோள்களின் மன்னனாகவும், செயலின் பிறப்பிடமாகவும், நீரில் பிறந்தவனாகவும், குளிர்ந்த கதிர்களைக் கொண்டவனாகவும், அமுதச் சுரங்கமாகவும், நிலையற்றவனாகவும், வெண் குதிரைகளைக் கொண்டவனாகவும் இருக்கிறாய்.(8) அழகு பொருந்தியவற்றின் அருளாகவும், சோமதேவர்களின் சோமனாகவும், உலகங்கள் அனைத்திலும் எழில்மிகுந்தவனாகவும் நீ இருக்கிறாய். இருளை விலக்கும் நீ கதிர்களின் மன்னனாக இருக்கிறாய்.(9) வருணனுக்கும், அவனது படைக்கும் நீ துணையாக இருந்து, போரில் எங்களை எரிக்கும் இந்த அசுர மாயையை அழிப்பாயாக" என்றான் {இந்திரன்}.(10)

சோமன் {சந்திரன் இந்திரனிடம்}, "ஓ! அண்டத்தின் தலைவா, ஓ! தேவர்களின் மன்னா, போருக்காக நீ என்னிடம் கேட்டதை நான் செய்வேன். அசுர மாயையை விலக்கவல்ல பனியை நான் பொழிவேன்.(11) இந்தப் பெரும்போரில் தானவர்கள், பனியால் மறைக்கப்பட்டும், என் குளிரால் எரிக்கப்பட்டும், தங்கள் மாயாசக்திகளையும், அகந்தையையும் இழக்கப் போவதை நீ காண்பாய்" என்றான்".(12)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பயங்கரம் நிறைந்த தானவர்கள், மேகத்திரள்களைப் போலச் சந்திரனால் வெளியிடப்பட்ட புகைபோன்ற பனிப்பொழிவில் மறைக்கப்பட்டனர்.(13) பாசதரனான வருணனும், வெண்கதிர்களைக் கொண்ட சந்திரனும் தங்கள் பாசக்கயிற்றின் வீச்சுகளாலும், பனிப்பொழிவினாலும் அந்தப் பெரும்போரில் அசுரர்களைக் கொல்லத் தொடங்கினர்.(14) நீரின் தலைவர்களான அவ்விருவரும், போர்க்களத்தில் நீரைப் பொழிந்தும், பாசக்கயிறு மற்றும் குளிரைக் கொண்டும் போரிட்டுப் பொங்கும் கடல்களைப் போலத் திரியத் தொடங்கினர்.(15) அண்ட அழிவின் போது அபரிமிதமான மழையைப் பொழியும் பிரவர்த்தக மேகத்தால் உலகம் மறைக்கப்படுவதைப் போல, அந்தத் தானவப் படையும், வருணன் மற்றும் சோமனின் நீரால் மறைக்கப்பட்டது.(16) சந்திரனும், வருணனும் தங்கள் கதிர்களையும், பாசக்கயிற்றையும் எடுத்துக் கொண்டு தைத்திய மாயையை அழித்தனர்.(17) குளிர்ந்த நீரால் சோர்ந்தும், பாசக்கயிற்றால் பிணைக்கப்பட்டும் சிகரங்களை இழந்த மலைகளைப் போல இருந்த தைத்தியர்கள், (முற்றிலும்) செயலற்றவர்களாக ஆனார்கள்.(18) சந்திரனால் கொல்லப்பட்டும், குளிரால் நசுக்கப்பட்டும், பனியால் தங்கள் உடல்கள் மறைக்கப்பட்டும் அணைந்த நெருப்பைப் போல அந்தத் தைத்தியர்கள் கீழே விழத் தொடங்கினர்.(19) அசுரர்களின் பல்வேறு தேர்களும் தங்கள் மிளிர்வை இழந்து, வானிலிருந்து கீழே விழவும், மேலே எழவும் தொடங்கின.(20)

தானவன் மயன், பனியால் மறைக்கப்பட்டும், பாசக்கயிற்றால் கட்டப்பட்டும் இருந்த தானவர்களின் முன்பு மீண்டும் மற்றொரு பெரும் மாயை வெளிப்படுத்தினான்.(21) அப்போது அவன், தன் மகன் கிரௌஞ்சனால் உண்டாக்கப்பட்டதும், விரும்பிய இடம் எங்கும் செல்லவல்லதுமான மாயப் பெருமலையை வானத்தில் பரப்பினான். அது கற்களாலும், பாறைகளாலும் நிறைந்திருந்தது. அதன் சிகரங்கள் பெருமரங்களால் மறைக்கப்பட்டிருந்தன., அதன் குகைகளில் சிங்கங்களும், புலிகளும், யானைகளும் நிறைந்திருந்தன. கதறும் மான்களாலும், காற்றில் அசையும் மரங்களாலும் அது நிறைந்திருந்தது.(22-24) அந்த மாய மலையானது, பாறைகளையும், மரங்களையும் பொழிந்து, தேவர்களைக் கொன்று, தானவர்களை மீட்டது.(25) அதன்பிறகு, சந்திரனாலும், வருணனாலும் உண்டாகப்பட்ட மாயை விலகி, அந்தப் போர்க்களத்தில் மயனின் மாயை இரும்பு மேகங்கள் மற்றும் பாறைகளால் தேவர்களை மறைத்தது.(26)

மலைகளின் திரட்சியாலும், மரங்கள் நிறைந்திருந்ததாலும் ஏற்கனவே சமமற்றதாக இருந்த பூமியானது, எவரும் கடக்கக் கடினமான மலைகளால் அடர்த்தியாக மறைக்கப்பட்டது.(27) சில தேவர்கள் பாறைகளால் காயமடைந்தனர், சிலர் கற்களால் தாக்குண்டனர், அந்தப் போரில் வேறு சிலர் மரங்களால் சுற்றி வளைக்கப்பட்டனர்.(28) கதாதரன் (விஷ்ணுவைத்) தவிரத் தேவர்களின் படையைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் தங்கள் விற்களை இழந்தனர், அவர்களது ஆயுதங்கள் நொறுங்கின. அவர்கள் அனைவரும் செயற்றவர்களானார்கள்.(29) ஆனால், அண்டத்தின் அழகிய தலைவனான கதாதரன், போரில் நிலைத்திருந்தாலும், தன் பொறுமையின் காரணமாகக் கிஞ்சிற்றும் கலக்கமடையவோ, கோபமடையவோ இல்லை.(30) சரியான காலத்தைக் குறித்த ஞானம் கொண்டவனும், அண்ட அழிவின் போது தோன்றும் மேகத்திற்கு ஒப்பானவனுமான ஜனார்த்தனன், தேவர்களும், அசுரர்களும் தாக்கப்படுவதைக் காணும் பொருட்டும், சரியான காலத்திற்காகவும் போர்க்களத்தில் காத்திருந்தான்.(31)

அதன்பிறகு அவன், போர்க்களத்தில் மயனால் உண்டாக்கப்பட்ட மாயை அழிக்குமாறு நெருப்பு மற்றும் காற்றிடம் {அக்னி மற்றும் வாயு தேவர்களிடம்} ஆணையிட்டான்.(32) விஷ்ணுவின் ஆணைப்படி ஒன்றோடொன்றாக இணைந்த நெருப்பும், காற்றும், பெருகி வரும் தழல்களை மேலும் பெருக்கி அந்த மாயையை அழித்தன.(33) காட்டுப் போக்கில் பெருகும் நெருப்பாலும், காற்றாலும் அந்த மாய மலை எரிக்கப்பட்டு அந்தப் போரில் அழிக்கப்பட்டது.(34) நெருப்பால் உதவப்பட்ட காற்றானது, அண்ட அழிவுக் காலத்தில் பெருகுவதைப் போலப் பெருகிற்று. மேலும், காற்றால் உதவப்பட்ட நெருப்பானது அசுரர்களின் படையை எரித்தது.(35) காற்று வீசத் தொடங்கியதும், நெருப்பு அதைப் பின்தொடர்ந்தது; அசுரர்களின் படைக்கு மத்தியில் நெருப்பும், காற்றும் விளையாடிக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை அஃது ஏற்படுத்தியது.(36) தானவர்கள் அனைவரும் எரிக்கப்பட்டு, அவர்களது தேர்கள் கீழே விழத்தொடங்கும்போது, நெருப்பு தன் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிய போது, அசுரர்களைக் கொல்வதைத் தவிர்த்துக் காற்றைப் போலத் தேர்கள் அனைத்துப் பக்கங்களில் கீழே விழுந்து கொண்டிருந்த போது, தைத்தியர்கள் செயலற்றவர்களாகி, மூவுலகங்களும் அவர்களது கட்டுகளிலிருந்து விடுபட்டபோது, அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தேவர்கள் மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர்.(37-39)

ஆயிரங்கண் தேவன் {இந்திரன்} வெற்றியடைந்து, அசுரன் மயன் தோல்வியைச் சந்தித்தபோது, அனைத்துத் திசைகளும் தெளிவடைந்து, அறச்சடங்குகள் நீடிக்கத் தொடங்கின.(40) சந்திரனின் பாதை தெளிவடைந்தது, சூரியன் அதன் வழியில் வைக்கப்பட்டது, பூதங்கள் அனைத்தும் தங்கள் இயல்பான வகைக்கு மீண்டன, நல்லொழுக்கத்தை விரும்பும் மனிதர்கள் சுகமாக இருந்தனர்.(41) இறந்தோரின் ஆட்சியாளன் {மிருத்யு} எந்தப் பாகுபாடுமின்றித் தன் பணியைச் செய்யத் தொடங்கினான், நெருப்பில் பலியுணவுகள் படைக்கப்பட்டன, தேவர்கள், வேள்விக் காணிக்கைகளில் தங்கள் பங்கைப் பெறவும், தேவலோகத்தைப் பயன்படுத்தவும் உரிமைபெற்றனர்[6].(42) திக்பாலர்கள், தங்கள் தங்களுக்குரிய மாகாணங்களில் திரியத் தொடங்கினர், தவம் செய்ய விரும்பிய தூய மனிதர்கள் புகழடையத் தொடங்கினர், பக்தியில்லாத மனிதர்கள் எவரும் இல்லை என்ற நிலை இருந்தது.(43) தேவர்களைச் சார்ந்தவர்கள் மகிழ்ந்திருந்தனர், தைத்தியர்களைச் சார்ந்தவர்கள் அடங்கியிருந்தனர். அறம் {தர்மம்} மூன்று கால்களையும், மறம் {அதர்மம்} ஒரு காலின் வடிவையும் ஏற்று நின்றன.(44) பெரும் வாயில் திறந்திருந்தது, அறவழிகள் தோன்றின, உலகின் ஆசிரமங்களும் {வாழ்வுமுறைகளும்}, வர்ணங்களும் தங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்கின.(45) திரிந்து கொண்டிருந்த மன்னர்கள், தங்கள் குடிமக்களைப் பாதுகாக்கத் தொடங்கினர், தேவர்களைத் துதிக்கும் துதிகள் பாடப்பட்டன.(46) பாவங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன, பயங்கரச் செருக்குத் தணிக்கப்பட்டது, நெருப்பு மற்றும் காற்றுக்குரிய அந்தப் போர் முடிவுக்கு வந்தது. அவை {காற்றும், நெருப்பும்} வெற்றியடைந்ததால் மக்கள் அவற்றுக்கு மேன்மையை வழங்கினர்.(47)

[6] தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில், "நெருப்பில் இடப்படும் பலியுணவுகளில் தங்கள் பங்கை தவறாமல் பெற்ற தேவர்கள், பலியுணவை அளிப்பவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் வழக்கமான பயணத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சொர்க்கத்தின் நிமித்தமாகத் தேவர்களுக்குச் செய்யப்படும் வேள்விகளைச் செய்யத் தொடங்குவது உறுதிசெய்யப்பட்டது" என்றிருக்கிறது.

காலநேமி என்ற பெயரைக் கொண்ட புகழ்பெற்ற தானவன் {ஹிரண்யகசிபுவின் மகன்}, காற்றுக்கும், நெருப்புக்கும் அசுரர்கள் அஞ்சுவதைக் கேட்டுப் போர்க்களத்தில் தோன்றினான்.(48) அவனது மகுடம், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய முகடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது; அங்கதத்தால் அவன் அலங்கரிக்கப்பட்டிருந்தான், மந்தர மலையைப் போன்ற நூற்றுக்கணக்கான வெள்ளி ஆயுதங்கள், அவனது நூறு கரங்களை அலங்கரித்தன.(49) அவன் நூறு முகங்களையும், நூறு தலைகளையும் கொண்டிருந்தான். அந்த அழகிய அசுரன், நூறு சிகரங்களைக் கொண்ட ஒரு மலையைப் போல அங்கே தோன்றினான்.(50) கோடை காலத்தில் புல் குவியலில் பெருகும் நெருப்பைப் போல அவன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான். அவன், புகை போன்ற மயிரையும், பச்சைவண்ண தாடியையும், பெரும் பற்களையும், உதடுகளால் அலங்கரிக்கப்பட்ட முகத்தையும் கொண்டிருந்தான். அவன் மூன்று உலகங்களுக்கும் இடைப்பட்ட வெளியில் மிகப்பெரும் பரிமாணத்துடன் கூடிய பேருடலுடன் வாழ்ந்திருந்தான்.(51,52) அவன் வானத்தைத் தன் கரங்களால் உயர்த்தி, மலைகளைத் தன் கால்களால் வீசி, நீர் நிறைந்த மேகங்களைத் தன் மூச்சால் சிதறடித்தான்.(53)

பெரியவையும், சிவந்தவையும், கோணலாகத் தெரிபவையுமான கண்களுடன் கூடியவனும், இந்திரன் போன்ற பலமிக்கவனுமான அந்தத் தானவன் {காலநேமி},(54) எரித்துவிடுபவனைப் போலத் தேவர்களைக் கண்டு முழங்கி, பத்துத் திக்குகளையும் மறைத்தான். அண்ட அழிவின் போது தோன்றும் பசித்த, செருக்குமிக்க மிருத்யுவைப் போல அந்தத் தானவன் அணுகுவதை அவர்கள் {தேவர்கள்} கண்டனர்.(55) மாலைகளால் மறைக்கப்பட்டவனும், அசையும் மலைகளைப் போல உயர்ந்திருந்தவனுமான அந்தத் தானவன், அழகிய உள்ளங்கையைக் கொண்ட தன் வலது கையில் உயர்ந்திருந்தவையும், நன்கு பளபளப்பாக்கப்பட்ட விரல்கவசங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தன் விரல்களை "கொல்லப்பட்ட தானவர்களே எழுவீராக" எனச் சொல்வது போல உயர்த்தினான்.(56,57)

அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேவர்கள், பகைவருக்குக் காலனைப் போன்ற காலநேமியைப் போரில் கண்டனர்.(58) அந்தக் காலநேமி, மூன்று காலடிகளைக் கொண்ட இரண்டாம் நாராயணனைப் போலச் செல்வதை உயிரினங்கள் கண்டன.(59) காற்றால் அசையும் உடையுடன் கூடிய அந்த அசுரன், தன் முன்னங்காலை உயர்த்தி, தேவர்களை அச்சத்தால் பீடித்தபடியே போர்க்களத்திற்கு வந்தான்.(60) காலநேமி, அசுர மன்னன் மயனுடன் சேர்ந்து கொண்டு போருக்குச் செல்லத் தொடங்கினான். அவர்கள் இந்திரனையும், விஷ்ணுவையும் போலத் தோன்றினர்.(61) அப்போது, காலனைப் போல அணுகும் பயங்கரம் நிறைந்த காலநேமியைக் கண்ட தேவர்கள் அனைவரும் கவலையில் நிறைந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(62)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 46ல் உள்ள சுலோகங்கள் : 62
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Friday, 15 May 2020

தேவாசுரப் போர் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 45

(தே³வாஸுரஸங்க்³ராமவர்ணனம்ி)

The fight between the gods and demons | Harivamsha-Parva-Chapter-45 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தேவாசுரப் போரில் மயனின் மாயத்தீயால் சாதக நிலையை அடைந்த அசுரர்கள்; மாயத்தீயின் வரலாற்றை இந்திரனிடம் சொன்ன வருணன்; ஊர்வரின் கடுந்தவம்; ஊர்வரின் மகன் ஔர்வன்; ஔர்வனுக்கு வரமளித்த பிரம்மன்...

Vedic Chanting

{வைசம்பாயனர்}, "அதன்பிறகு, ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய தேவ மற்றும் அசுரப் படைகளுக்கு இடையில் ஒரு பயங்கரப்போர் நடைபெற்றது.(1) பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த தானவர்கள், மலைகளோடு மோதும் மலைகளைப் போலத் தேவர்களுடன் போரிட்டனர்.(2) இவ்வாறு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில், நியாயமான முறையிலும், நியாயமற்ற முறையிலும், பணிவுடனும், செருக்குடனும் ஓர் அற்புதப் போர் நடைபெற்றது.(3) அப்போது வேகமாகச் செல்லும் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்களும், கைகளில் வாள்களுடன் கூடிய படைவீரர்களும் வானத்தில் இருந்து விழுந்தனர். கதாயுதங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இவற்றாலும், கணைகள், முழுமையாக வளைக்கப்பட்ட விற்கள் மற்றும் தண்டங்களுடன் கூடிய அந்தத் தேவாசுரப் போர் மிகப் பயங்கர நிலையை அடைந்தது. அஃது உலகமெங்கும் பீதியை உண்டாக்கி, அண்ட அழிவின் போது சுழலும் மேகங்களைப் போன்ற ஒரு பயங்கரத் தோற்றத்தை ஏற்படுத்தியது.(4-6)

தானவர்கள், தங்கள் கைகளால் பரிகங்களையும், கற்களையும் வீசி, அந்தப் போரில் இந்திரனையும், தேவர்கள் பிறரையும் தாக்கத் தொடங்கினர்.(7) அந்தப் பெரும்போரில் வெற்றிக்கான அறிகுறிகள் அனைத்துடன் தோன்றிய பெரும்பலம் மிக்கத் தானவர்களால் பெரிதும் தாக்கப்பட்ட தேவர்களின் (முகங்கள்) நிறம் மங்கின. திதியின் மகன்களுடைய ஆயுதங்களின் வலைப்பின்னல்களால் அவர்கள் கலங்கடிக்கப்பட்டனர்; அவர்களது {தானவர்களின்} பரிகங்களால் அவர்களின் {தேவர்களின்} தலைகள் துண்டிக்கப்பட்டன, அவர்களது உடல்கள் சிதைக்கப்பட்டன, அவர்களது காயங்களில் இருந்து ஏராளமான குருதி வெளியேறியது.(8,9) தானவர்களின் சுருக்குக்கயிறுகளால் {பாசங்களால்} சிதைக்கப்பட்டு, அவர்களது கணைகளால் காயமடைந்து, அவர்களது பெண்களின் மாயைகளால் பீடிக்கப்பட்ட தேவர்கள் அசைவற்று நின்றனர்.(10) கலக்கமடைந்திருந்த அவர்கள் உயிர்வாழ்வதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. தேவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தாதவாறு அசுரர்கள் அவர்களைச் செயலற்றவர்களாக்கினர்.(11)

தேவர்களின் ஆயிரங்கண் மன்னன் {இந்திரன்}, தன் வஜ்ரத்தைக் கொண்டு தானவர்களின் கணைகளை அறுத்துத் தாக்குப்பிடித்து, அவர்களது மாயப் பாசத்தை விலக்கியபடியே தானவர்களின் பயங்கரப் படைக்குள் புகுந்தான்.(12) அவன் தன் கரிய ஆயுதங்களால் முன்னணியில் நின்று கொண்டிருந்த தைத்தியர்கள் அனைவரையும் கொன்று, மொத்த அசுரப் படையையும் இருளில் மறைத்தான்.(13) தேவர்களின் மன்னனுடைய {இந்திரனின்} சக்தியால் இவ்வாறு இருளில் மூழ்கிய அவர்களால் {அசுரர்களால்}, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.(14) அதன்பிறகு மாயச் சுருக்குக் கயிற்றில் இருந்து விடுபட்ட தேவர்கள், இருளில் மூழ்கியிருந்த தானவர்களை மிகக் கவனமாகக் கொல்லத் தொடங்கினர்.(15) இவ்வாறு தாக்கப்பட்டு, நினைவை இழந்து, இருளின் காரணமாகக் கரு வண்ணத்தில் இருந்த தானவர்கள், சிறகுகள் துண்டிக்கப்பட்ட மலைகளைப் போலக் கீழே விழத் தொடங்கினர்.(16) பூதங்களைப் போன்ற மேங்களைக் கொண்டதும், இருளில் பீடிக்கப்பட்ட பெருங்கடலுக்கு ஒப்பானதுமான தானவர்களின் மன்னனுடைய அரண்மனை, அப்போது இருளின் வடிவம் போலவே தோற்றமளித்தது.(17)

தானவன் மயன், இருளெனும் மாயையை எரித்து, அழிவுக்கால நெருப்புக்கு ஒப்பான காட்டுத்தீயெனும் மிகப் பயங்கர மாயையை {ஔர்வ நெருப்பை} உண்டாக்கினான். மயன் உண்டாக்கிய மாயை இருளனைத்தையும் அழித்தபோது, தைத்தியர்கள், சூரியனைப் போன்ற பிரகாசமான வடிவங்களை ஏற்று மீண்டும் போர்க்களத்தில் தோன்றினர்.(18-19)

மாயக் காட்டுத்தீயால் எரிக்கப்பட்ட தேவர்கள், பனியில் கிடந்த சோமனின் முன்பு தோன்றினர். காட்டுத்தீயால் மிளிர்வழிந்து, அதனால் எரிக்கப்பட்ட தேவர்கள், துயரால் பீடிக்கப்பட்டவர்களாக வஜ்ரதாரியான தங்கள் மன்னனிடம் {இந்திரனிடம்} சென்று இதைச் சொல்லி அவனது புகலிடத்தை நாடினர். மயனின் மாயையால் தேவர்களின் படைவீர்கள் பீடிக்கப்பட்டு, தானவர்களால் எரிக்கப்பட்டபோது, தேவர்களின் மன்னனால் அழைக்கப்பட்ட வருணன் இவ்வாறு {பின்வரும் கதையைச்} சொன்னான்.(20-22).

வருணன், "ஓ! தேவர்களின் மன்னா, பழங்காலத்தில் பிராமண முனிவரான பிருகுவின் மகனும் {பிருகுவின் வழித்தோன்றலும்}, சக்திமிக்கவரும், பிரம்மன் செய்ததைப் போன்ற சாதனைகளால் அலங்கரிக்கப்பட்டவருமான ஊர்வர் கடுந்தவங்களைச் செய்து வந்தார். நித்தியனான சூரியனைப் போல அவர் தமது தவங்களால் மொத்த உலகையும் பீடித்து வந்தார். தேவர்கள் மற்றும் தவசிகளுடன் கூடிய பிராமண முனிவர்கள் அவர் முன்பு தோன்றினர்.(23,24) {வேறு காரியத்திற்காக அங்கே வந்திருந்த} தானவ மன்னன் ஹிரண்யகசிபு, பெருஞ்சக்திமிக்க அந்த ரிஷியிடம் அதை {அவர்கள் வந்திருப்பதைச்} சொன்னான்.(25)

அப்போது அந்தப் பிராமண முனிவர்கள், பின்வரும் புனிதச் சொற்களை அவரிடம் சொன்னார்கள்: "தனியாக, பிள்ளையேதுமற்றவனாக, உன் குலத்தைத் தழைக்கச் செய்யும் சிந்தனையே இல்லாதவனாக நீ இருப்பதால், இந்த ரிஷிக்குடும்பம் இப்போது அழியப்போகிறது. நீ பிரம்மச்சரிய வாழ்வைப் பின்பற்றி இந்தக் கடுந்தவங்களைச் செய்து வருகிறாய்.(26,27) தற்கட்டுப்பாடுடைய ரிஷிகளின் குடும்பங்கள் பலவும், சந்ததியேதும் இல்லாததன் விளைவால் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. ஒரேயோருடல்தான் இருக்கிறது.(28) சந்ததியில்லாமல் இந்தக் குடும்பங்கள் அனைத்தும் அழிவை அடைந்தால், அவர்கள் பெருகுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லாமல் போகும். தவசிகளில் முதன்மையான நீ பிரம்மனின் பிரகாசத்துடன் இருக்கிறாய்.(29) எனவே, உன் குலத்தைப் பெருக்கவும், உன்னை நீயே பெருக்கிக் கொள்ளவும் நினைப்பாயாக. உன் பெருஞ்சக்தியை அர்ப்பணித்து உன்னுடைய இரண்டாம் உடலை உண்டாக்குவாயாக" என்றனர்.(30)

இவ்வாறு ரிஷிகளால் சொல்லப்பட்டதும், தற்கட்டுப்பாடுடைய அந்தத் தவசி மனம் கலங்கியவராக அவர்களைப் பழித்து,(31) "காட்டில் கிழங்குகளை உண்டு வாழ்வதும், ஆரியர்களின் அறங்களைப் பின்பற்றுவதும் முனிவர்களின் நித்திய கடமை என்று பழங்காலத்தில் விதிக்கப்பட்டுள்ளது.(32) பிரம்மனிடம் இருந்து பிறந்த பிராமணர்களால் நன்கு பயிலப்பட்ட பிரம்மச்சரிய நோன்பு அந்தப் பிரம்மனையே கலங்கடித்தது. இல்லறத்தாராக வாழும் பிராமணர்களின் மூன்று கடமைகள், புரோகிதர்களாகப் பணியாற்றுவதும் {யஜனம்}, கற்பிப்பதும் {அத்யாபனம்}, கட்டணம் ஏற்பதும் {ப்ரதிக்ரஹம் / கொடைபெறுதலும்}[1] ஆகும். ஆசிரமத்தில் வாழும் நமது கடமை (பிரம்மச்சரிய நோன்பைக் கடைப்பிடித்துக்) காட்டில் வாழ்வதே ஆகும்.(33,34) கடுந்தவங்களைப் பயின்று, எண்ணம், சொற்கள், செயல்கள் ஆகியவற்றில் கற்பை {தூய்மையை} முதன்மையாகக் கொண்டு, நீரை உணவாக்கி வாழும் முனிவர்களும், காற்றை உண்டு வாழ்பவர்களும், தந்தூலூகலிகர்களும்[2], அஷ்மகுட்டர்களும்[3], தசநாபர்களும்[4], பஞ்சாதபர்களும்[5] மிகச்சிறந்த நிலையை {கதியை} அடைகின்றனர்.(35,36) எண்ணம், சொற்கள் மற்றும் செயல்களில் கொள்ளும் கற்பின் {தூய்மையின்} மூலமே பிராமணர்கள் தங்கள் பிராமணத்தன்மையை அடைகின்றனர். மிகச்சிறந்த உலகத்தில் வாழும் பிரம்மவாதிகள் இதைப் பதிவு செய்திருக்கின்றனர்.(37)

[1] தக்ஷிணை ஏற்பதாக இருக்க வேண்டும்.

[2] "இவர்கள் தானியத்தை நசுக்காமல் {பல்லைக் கொண்டே நசுக்கி} உண்ணும் துறவிகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "இவர்கள் எதையும் {எந்த உணவையும்} கல்லால் உடைத்து, சிதைத்து உண்ணும் துறவிகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] "இவர்கள் மலைச்சிகரத்தில் தவம் பயிலும் துறவிகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[5] "இவர்கள் நெருப்பின் மத்தியில் தவம்பயிலும் துறவிகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

பொறுமை பிரம்மச்சரியத்தில்[6] வசிக்கிறது, தவம் பிரம்மச்சரியத்தில் இருக்கிறது, அதை {பிரம்மச்சரியத்தைப்} பயிலும் பிராமணர்கள் தேவலோகத்தை அடைகின்றனர்.(38) ஸித்தியில்லாமல்[7] யோகமில்லை, யோகமில்லாமல் புகழேதும் இல்லை. இவ்வுலகில் பிரம்மச்சரியத்தைவிட மகிமையான தவம் வேறேதும் இல்லை.(39) ஒருவன், ஐம்பூதங்களையும், ஐம்புலன்களையும் அடக்கி பிரம்மச்சரியம் பயில வேண்டும். பிரம்மச்சரியத்தைவிடப் பெரிய தவம் வேறென்ன இருக்கிறது?(40) சந்நியாசிகள் செய்ய வேண்டிய யோகப் பயிற்சி இல்லாமல் மயிரை மழித்துக் கொள்வதும், (மறுமைக்கச் செல்ல வேண்டிய) உறுதிப்பாடு கொள்ளாமல் (மக்களை நிறைவடையச் செய்வதற்காகச் சாந்திராயணம் போன்ற) கடும் நோன்பை நோற்பதும், பிரம்மச்சரியமில்லாமல் அறம் பயில்வதுமென்ற இந்த மூன்றும் தம்பம்[8] {ஏய்ப்பு} என்று சொல்லப்படுகின்றன.(41) பிரம்மன், தன் மனத்தில் பெற்ற சந்ததியைப் படைத்தபோது, மனைவி எங்கே இருந்தாள்? உடனுறைவு எங்கே நிகழ்ந்தது? மனக்கலக்கம் எங்கே இருந்தது?(42)

[6] "எண்ணம், சொற்கள் மற்றும் செயல்களில் கற்பு" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[7] "யோகப்பயிற்சிகளின் நிறைவை அடைதலையும், அதன் நோக்கத்தை அடைவதையும் இது குறிக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[8] "இதற்கு வஞ்சனை என்று பொருள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

தற்கட்டுப்பாடுடைய முனிவர்களான நீங்கள் பெருந்தவச் சக்தி கொண்டவர்கள். எனவே நீங்கள், குடிமுதல்வப் பணிகளின் மூலம் உங்கள் மனத்தில் பிறக்கும் சந்ததியைப் படைப்பீராக.(43) தவசிகள் தங்கள் மனத்தில் பிறக்கும் பிறப்பிடத்தின் மூலம் சந்ததியை உண்டாக்க வேண்டும். அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், தங்கள் மனைவியரிடம் பிள்ளைகளைப் பெறவும் கூடாது.(44) பக்திமான்களான நீங்கள் அனைவரும் பல்வேறு அறப் பயிற்சிகள் குறித்துச் சொன்னது, முற்றான முறைகேடாக எனக்குத் தோன்றுகிறது.(45) நான் ஒரு மனைவியை மணந்து கொள்ளாமல், மனத்தோடு அடையாளங்காணப்படுவதும், ஆன்மாவைக் கொண்டதுமான என்னுடைய இந்தப் பிரகாசமான உடலைக் கொண்டு, என் உடலில் பெறப்படும் ஒரு மகனை உண்டாக்குவேன்.(46) காட்டின் விதிமுறைகளின்[9] மூலம் என்னுடைய இந்த உடலில் இருந்து, உயிரினங்களை எரிக்கவல்ல இரண்டாம் உடலொன்றை நான் படைக்கப்போகிறேன்" என்றார் {ஊர்வர்}.(47)

[9] "காட்டில் வாழும் முனிவர்களால் பின்பட்டப்படும் விதிமுறைகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அதன்பிறகு அவர் {ஊர்வர்} தபத்ததில் ஈடுபட்டு, தமது தொடையை நெருப்பில் இட்டு, ஒரு தர்ப்பையைக்[10] கொண்டு ஒரு மகனைக் கொடுக்கவல்ல அரணியைக்[11] கடைந்தார். அப்போது அண்டத்தையே எரிக்க விரும்பும் ஒரு மகனின் வடிவில் தழல்கள் சூழ்ந்த நெருப்பானது திடீரென்று வெளி வந்தது.(48,49) அனைத்தையும் அழிக்கவல்லதும், கோபம் நிறைந்ததுமான அந்த ஔர்வ நெருப்பானது, மூவுலகங்களையும் எரிக்க விரும்புவதைப் போல ஊர்வரின் தொடைகளைப் பிளந்து வந்தது[12].(50)

[10] "குசம் அல்லது வேள்விப்புல்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[11] "அரைப்பதன் மூலம் நெருப்பை மூட்டவல்ல மரம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[12] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "பிறகு, தவத்தில் ஈடுபட்ட ஊர்வர், இரண்டு அரணிக்குச்சிகளைத் தேய்த்து, அவற்றில் சடங்குக்கான நெருப்பை உண்டாக்கி, நெருப்பை மூட்டத் தன் தொடையில் தர்ப்பைப் புல்லைவைத்து, நெருப்பைப் போன்ற மகனைப் பெற ஒற்றை எண்ணத்துடன் தொடர்ந்து கவனித்து வேத மந்திரங்களுடன் அதைப் பற்ற வைத்தார். அப்போது திடீரென விறகில்லா தழல்களில் முறுக்கிப்பின்னப்பட்டதும், அண்டத்தையே எரித்துவிடும் பேராவல் கொண்டவதுமான ஒரு தனியுரு ஊர்வ முனிவரின் தொடையைப் பிளந்து கொண்டு தோன்றிற்று. மூவுலகங்களையும் சாம்பலாக்கவல்ல சீற்றம் கொண்டதும், ஊர்வ முனிவரிடமிருந்து வெளியே வந்ததும், அனைத்தையும் அழிக்கவல்லதுமான அந்த நெருப்பானது ஔர்வ நெருப்பு என்று அழைக்கப்பட்டது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "ஊர்வர் தவம் செய்தார். கொஞ்சம் தர்ப்பைப் புல்லை எடுத்து, அதைத் தமது தொடையில் பிசைந்தார். அவர் தமது சக்திகளைக் கொண்டு, நெருப்பை மூட்டவும், உண்டாக்கவும் அவை இரண்டையும் பயன்படுத்தினார். அந்த நெருப்பில் இருந்து அண்டத்தை எரிக்க விரும்பும் மகன் ஒருவன் உண்டானான். அவன் ஊர்வரின் தொடையைத் துளைத்ததன் மூலம் தோன்றியதால் ஔர்வ நெருப்பு என்று அறியப்பட்டான்" என்றிருக்கிறது.

அவன் {ஔர்வநெருப்பு} பிறந்த உடனேயே, தன் தந்தையிடம் {ஊர்வரிடம்}, "ஓ! தந்தையே, நான் பசியால் பீடிக்கப்படுகிறேன். என்னை விட்டால் மொத்த உலகையும் நான் உண்டுவிடுவேன்" என்றான்.(51) தேவலோகம் வரை உயர்ந்த தழல்களுடன் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில், அனைத்தையும் அழிக்கும் அந்த நெருப்பானது, பத்து திசைகளையும், பூதங்கள் அனைத்தையும் முற்றாக எரித்து, தன்னைப் பெருக்கிக் கொண்டது.(52) அதே வேளையில் அனைத்து உயிரினங்களின் ஆசானான தலைவன் பிரம்மன், அந்த முனிவர் தமது சிறப்புமிக்க மகனைப் பெற்ற இடத்திற்குச் சென்றான்.(53) அங்கே அவன் {பிரம்மன்}, முனிவர்களுடன் கூடிய உலகங்கள், ஊர்வரின் தொடையில் பிறந்த நெருப்பு மகனுடன் சுடர்விட்டெரிவதையும், ஔர்வ நெருப்பின் கோபத்தால் தாக்கப்படுவதையும் கண்டான்.(54)

அப்போது பிரம்மன், ஊர்வ ரிஷியைக் கௌரவித்து, அவரிடம், "உலகின் மீது கருணை கொண்டு, உன் மகனின் சக்தியைத் தாங்குவாயாக. ஓ! விப்ரா, உன்னுடைய இந்த மகனுக்குப் பொறுமையெனும் மிகச் சிறந்த நற்பண்பை நான் வழங்குவேன். மேலும் நான் அவனுக்குச் சிறந்த வாழ்விடங்களையும், அமுதம்போன்ற உணவையும் வழங்குவேன். ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, வாய்மைநிறைந்த என்னுடைய இந்தச் சொற்களைக் கேட்பாயாக" என்றான்.(56)

ஊர்வர் {பிரம்மனிடம்}, "நான் அருளப்பட்டவன் ஆனேன். தலைவன் என் பிள்ளைக்குப் பேரருளைக் கொடுத்து, இந்த ஆதரவையும் அவனுக்குக் கொடுத்திருப்பதால் நான் பேருதவியைப் பெற்றவனானேன்.(57) என்னுடைய மகானான இவன் விரும்பத்தக்க இளமையை அடையும்போது, ஹவ்யங்களால் கௌரவிக்கப்படும் மகிழ்ச்சியை எவ்வாறு அடைவான்? அவனது வீடு {வசிப்பிடம்} எங்கே இருக்கும்? அவனது உணவாக இருக்கப்போவது எது? பலம் திரண்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான இவனுக்கு என்ன வகை உணவை ஏற்பாடு செய்வீர்?" என்று கேட்டார்.(58,59)

பிரம்மன் {ஊர்வரிடம்}, "இந்தப் பிள்ளை ஒரு பெண்குதிரைக்கு ஒப்பான பெருங்கடலின் வாய்க்குள் {துளைக்குள்} வாழ்ந்து வருவான் {எனவே படபா முகாக்னி என்றழைக்கப்படுவான்}. ஓ! விப்ரா, நான் நீரில் பிறந்தவன், எனவே இவனது உடல் நீராலானதாக இருக்கும்.(60) நான் எப்போதும் நீர் உணவை உண்டு நீரிலேயே வாழ்கிறேன். நான் உன் மகனுக்கு {நீராகிய} இந்த உணவையே கொடுப்பேன். அவன் அதை உட்கொள்ளட்டும்.(61) ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவனே, ஒரு யுகம் முடியும் வேளையில், இந்த நெருப்பு உலகங்கள் அனைத்தையும் எரிக்கும். அவனுடன் சேர்ந்து நான் உலகங்களை மீண்டும் மீண்டும் விழுங்குவேன்.(62) இந்த நெருப்பானவன், என்னால் அழிவுக்கால நீரில் வாழச் செய்யப்படுகிறான். அவன், தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்களுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தையும் எரிப்பான்" என்றான்.(63)

புனிதமாக்கப்பட்ட நெருப்பின் தழல்களால் சூழப்பட்ட ஔர்வன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, தன் தந்தையின் முன்பு தன் பிரகாசத்தைக் கைவிட்டு, பெருங்கடலின் வாய்க்குள் புகுந்தான்.(64)

அதன்பிறகு, பிரம்மனும், பெரும் முனிவர்கள் பிறரும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். அவர்கள், ஔர்வ நெருப்பின் சக்தியைக் கேட்டுத் தங்கள் தங்களுக்குரிய வழிகளில் சென்றனர்.(65) அற்புதம் நிறைந்த இந்தக் காரியத்தைக் கேட்ட ஹிரண்யகசிபு, தன் அங்கங்கள் அனைத்தையும் தரையில் கிடத்தி, ஊர்வரை வழிபட்டு, பின்வரும் சொற்களில்,(66) "ஓ! மதிப்புக்குரிய ஐயா, உலகங்கள் அனைத்தும் கண்ட இந்தக் காரியம் அற்புதம் நிறைந்தது. ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, பெரும்பாட்டன் உமது தவங்களில் நிறைவடைந்திருக்கிறார்.(67) ஓ! பெரும் நோன்புகளை நோற்பவரே, என் செயல்பாடுகளுக்காக நான் பாராட்டத் தகுந்தவனாக இருந்தால், என்னை உமது பணியாளாகவும், உமது மகனின் பணியாளாகவும் அறிவீராக.(68) உம்மை வழிபடுவதில் ஈடுபடும் என்னைக் காண்பீராக. ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, நான் தோல்வியைச் சந்தித்தால், அஃது உமது தோல்வியாகவே இருக்கும்" என்றான்.(69)

ஊர்வர், "நீ என்னை உன் ஆசானாக ஏற்றதால் நான் அருளப்பட்டவனும், கௌரவிக்கப்பட்டவனும் ஆனேன். ஓ! உறுதியான நோன்புகளை நோற்பவனே, தவங்களால் இனி உனக்கு அச்சமேதும் ஏற்படாது.(70) என் மகனை உண்டாக்கிய விறக்கற்ற நெருப்பாலும் எளிதில் தீண்டமுடியாத இந்த மாய நெருப்பை நீ எடுத்துக் கொள்வாயாக.(71) இந்த மாயை உன் குடும்பத்தின் எதிரிகளைக் கொல்ல உனக்கு உதவும்; இஃது உன் படையைப் பாதுகாத்து, பகைவரின் படையை எரிக்கும்" என்றார்.(72) தானவர்களின் மன்னனான ஹிரண்யகசிபு, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி அந்த முதன்மையான முனிவரை வணங்கிவிட்டு நிறைவடைந்தவனாகத் தேவலோகத்திற்குத் திரும்பினான்".(73)

வருணன், "இதுவே தேவர்களால் தாங்க முடியாததும், ஊர்வரின் மகனான ஔர்வரால் பழங்காலத்தில் படைக்கப்பட்டதுமான அந்த மாயையாகும்.(74) அந்தத் தைத்தியன் {ஹிரண்யகசிபு} இறந்ததும் அது தன் சக்தியை இழந்திருக்க வேண்டும். அதை {அந்த மாயாநெருப்பைப்} படைத்தவரே பழங்காலத்தில் அதற்கு ஒரு சாபத்தைக் கொடுத்திருக்கிறார்.(75) இந்த மாயைக்கு எதிராக நம்மால் போராட முடிந்தால் தேவர்களின் மன்னன் மகிழ்ச்சியடைவார்[13]. ஓ! சக்ரா {இந்திரா}, நீரில் பிறந்தவனான என் நண்பன் நிஷாகரனை {சந்திரனை} எனக்குக் கொடுப்பாயாக.(76) நான் அவனுடனும், யதோஸ்களுடனும்[14] சேர்ந்து, என் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, உன் உதவியின் முலம் நிச்சயம் இந்த மாயை அழிப்பேன்" என்றான் {வருணன்}" என்றார் {வைசம்பாயனர்}.(77)

[13] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "தேவர்கள் கூடத் தாங்கிக் கொள்ள முடியாததும், சடங்கின் நெருப்பால் உண்டானதும், ஊர்வ முனிவரால் படைக்கப்பட்டதுமான அது பயங்கரமான நரகமும், நெருப்பை உண்டாக்கும் பெருநெருப்பும் ஆகும். அந்த நெருப்பின் தீவிரம், தைத்தியனான ஹிரண்யகசிபுவின் வீழ்ச்சிக்குப் பிறகு குறைந்திருக்க வேண்டும் என்றாலும் நம்மை எதிர்கொள்ள இன்னும் அஃது உயிருடன் இருக்கிறது என்றே நான் ஐயுறுகிறேன். மேலும் பழங்காலத்தில், சந்திரனின் சக்தியில் இருந்து அதைப் படைத்தவனே அதைச் செயலிழக்கச் செய்வதற்குரிய வழியையும் ஏற்படுத்தியிருக்கிறான். அதற்கான எதிர்வினை சந்திரக் கதிர்களே ஆகும். அந்த நெருப்பை எளிதாக விரட்டுவதே நமது நோக்கமென்றால், ஓ! இந்திரா, நீரில் இருந்து எழுந்து, இரவை உண்டாக்குபவனான சந்திரனின் உதவியை எனக்குக் கொடுப்பாயாக. அவனுடனும், வேறு சில நீர்வாழ் உயிரினங்களுடனும் சேர்ந்து, உன்னுடைய நல்லருளின் துணையையும் கொண்டு அந்தச் சுழல்நெருப்பை நான் முறியடிப்பேன். இதில் ஐயமேதுமில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "தாக்குப்பிடிக்க முடியாத மாயையான இதனைத் தேவர்களாலும் எதிர்கொள்ள முடியாது. இது முன்பு ஊர்வரின் மகனான ஔர்வரால் உண்டாக்கப்பட்ட நெருப்பாகும். அந்தத் தைத்தியன் {ஹிரண்யகசிபு} சென்ற பிறகும் அந்த நெருப்பு நிச்சயம் சக்தியை இழக்கவில்லை. பழங்காலத்தில் படைப்பாளன் தன் சக்தியைப் பயன்படுத்தி நமக்காகவே இந்தச் சாபத்தைப் படைத்தான். ஓ! சக்ரா, ஓ! சிறப்புமிக்கவனே, நீ மகிழ்ச்சியடையவும், இதை எதிர்கொள்ளவும் விரும்பினால், நீரில் இருந்து பிறந்தவனும், உன் நண்பனுமான சந்திரனை எனக்குக் கொடுப்பாயாக. உன் உதவிகளின் மூலம் நான் இந்த மாயை நிச்சயம் அழிப்பேன்" என்றிருக்கிறது.

[14] "நீர்வாழ் உயிரினங்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
 
ஹரிவம்ச பர்வம் பகுதி – 45ல் உள்ள சுலோகங்கள் : 77
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்