(வைவஸ்வதோத்பத்தி)
Account of the Sun's Offspring - Emergence of Vaivasvata Manu | Harivamsa-Parva-Chapter-09 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : சூரியனின் பிறப்பு; வைவஸ்வத மனு, யமன், யமுனையின் பிறப்பு; சஜனையின் நிழலில் பிறந்த சாயாதேவி; சாவர்ணி மனு, சனீஸ்வரன் பிறப்பு; சூரியனின் கடுமையைக் குறித்துச் செதுக்கிய விஸ்வகர்மன்; அஸ்வினி தேவர்களின் பிறப்பு; விஷ்ணுவின் சக்கரத்தை வடிவமைத்த விஸ்வகர்மன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பகைவரை அடக்குபவனே, கசியபர், தக்ஷனின் மகளான அதிதியிடம் விவஸ்வானை {சூரியனைப்} பெற்றார். அவன் {துவாஷ்டிரியின் / விஸ்வகர்மாவின் மகளான} ஸஜனா {ஸஞ்சனா} தேவியை மணந்தான்.(1) அந்த அழகிய மங்கை ஸுரேணு என்ற பெயரில் மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டாள். உயர் ஆன்மா கொண்டவனும், தெய்வீகமானவனுமான மார்த்தாண்டனின் (சூரியனின்) மனைவியும், அழகும், இளமையும் கொண்டவளுமான அவள், தன் கணவனின் அழகில் நிறைவடைந்தாளில்லை[1]. இந்தப் பூமியில் உள்ள பெண்களின் மத்தியில், ஸஜனை பெரும் தவச் சக்திகளைக் கொடையாகப் பெற்றிருந்தாள். சூரியனின் கதிர்களால் எரிந்த உடலுடன் கூடிய அவள் அழகாகத் தெரியவில்லை.(2-4) கசியபர் அறியாமையில் இருந்தவளிடம் (அதிதியிடம்) அன்புடன் "உன் கரு[2] இறக்கவில்லை" என்று சொன்னதால், அவன் மார்த்தாண்டன் என்றழைக்கப்பட்டான்.(5)
