Showing posts with label வஸுதேவன். Show all posts
Showing posts with label வஸுதேவன். Show all posts

Sunday, 27 February 2022

ஹிடிம்பன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 101

(ஹிடிம்பேந ஸாகம் வஸுதேவோக்ரஸேநயோர்யுத்தம் பலபத்ரேண ஹிடிம்பபராபவஷ்ச)

Hidimba | Bhavishya-Parva-Chapter-101 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: ஹிடிம்பனுடன் போரிட்ட வசுதேவரும், உக்ரசேனனும்; ஹிடிம்பனை வீழ்த்திய பலராமன்...


Balarama and hidimba

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவரும், உக்ரசேனனும் நரைமுடியும், சுருங்கிய தோலும் கொண்ட கிழவர்களாக இருந்தாலும், அவர்களும் மகிழ்ச்சியாக அந்தப் போரில் ஈடுபட்டனர்.(1) ஞானத்திலும், அதன் நடைமுறை பயன்பாட்டிலும் முன்னேற்றம் அடைந்தவர்களான அவர்கள் இருவரும், அரச வகையின் கடமைகளை முழுமையாக அறிந்திருந்தனர். ராக்ஷசனான அந்தத் துராத்மாவிற்கு {ஹிடிம்பனுக்கு} எதிரான போரில் அவர்கள் இருவரும் ஒன்றுகூடிப் போரிட்டனர்.(2) ராக்ஷசேந்திரனும், துராத்மாவுமான ஹிடிம்பன் மீது ஆயிரக்கணக்கான கணைகளை ஏவி அவனை அவர்கள் துன்புறுத்தினர்.(3)

Friday, 20 November 2020

யாகத்தடை செய்த அசுரர்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 140 – 084

(யஷவிஸ்தரோ துஷ்டநிக்ரஹஷ்ச)

The Asuras obstructing a Yajna | Vishnu-Parva-Chapter-140-084 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரம்மதத்தர் செய்த யாகம்; யாகத்தைக் காத்த வசுதேவன்; யாகக் காணிக்கையில் பங்கு கேட்ட அசுரர்கள்; பிரம்மதத்தரின் மகள்களைக் கடத்திச் சென்ற அசுரர்கள்; அசுரர்களுக்கு அலோசனை வழங்கிய நாரதர்...

Narada Muni

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்த நேரத்தில், ஓ மன்னா, யாஜ்ஞவல்கியரின் சீடரும், நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் நன்கு அறிந்தவரும், அறநெறி சார்ந்தவரும்,(1) பிரம்மதத்தன் என்ற பெயரைக் கொண்டவருமான வாஜஸ்நேய பிராமணர் ஒருவர்,(2) ஷத்புர நகரத்தில் முனிவர்களால் அடையப்பட்ட ஆவர்த்தகை எனும் நல்லாற்றின் புனிதக்கரையில் ஓராண்டு காலம் நீளும் யஜ்ஞம் செய்யும் தீக்ஷை பெற்றார்[1].(3) 

Tuesday, 18 August 2020

மதுரா வந்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 101 – 045

(ராமக்ருஷ்ணயோர்மதுராகமனம்)

Krishna's arrival at Mathura | Vishnu-Parva-Chapter-101-045 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கரவீரபுரத்திலிருந்து மதுரா திரும்பிய ராமனும், கிருஷ்ணனும்; அவர்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு...

Krishna and Balarama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவனின் வீர மகன்கள் {பலராமன், கிருஷ்ணன்} இருவரும் தமகோஷனுடன் சேர்ந்து வழியில் பயணிகளின் விதிகளுக்கு இணங்க ஐந்து இரவுகளை ஓரிரவைப் போலக் கழித்தனர். மதுரா நகரை அவர்கள் அடைந்த போது, உக்ரசேனனின் தலைமையிலான யாதவர்கள் அனைவரும் அவர்களை வரவேற்பதற்காக நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(1-3) மதுராவைச் சேர்ந்த வணிகர்கள், குடிமக்கள், அமைச்சர்கள், சிறுவர்கள், முதியவர்கள் அனைவரும் அவர்களை வரவேற்பதற்காக வெளியே வந்தனர்.(4)

Friday, 31 July 2020

யதுவின் மகன்களும், வெற்றிப்பேறுகளும் | விஷ்ணு பர்வம் பகுதி – 94 – 038

(யாதவோத்பத்தி தேஷாம் பராக்ரமாதிசம்)

The sons of Yadhu and their conquests | Vishnu-Parva-Chapter-94-038 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : மன்னன் யதுவின் சந்ததி; மாஹிஷ்மதி, புரிகம், கரவீரம், கிரௌஞ்சம், மதுரா ஆகிய நகரங்கள் அமைந்த வரலாறு; யாதவர்களின் உட்பகை ஆகியவற்றைக் கிருஷ்ணனுக்கு விளக்கிச் சொன்ன விகத்ரு...

Bahubali Movie Visualisation Scene of Mahishmati

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{விகத்ரு கிருஷ்ணனிடம் தொடர்ந்தான்} நீண்ட காலத்திற்குப் [பிறகு மன்னன் யது, நாக மன்னனின் அந்த ஐந்து மகள்களிடமும், நீண்ட கரங்களைக் கொண்டவர்களும், முசுகுந்தன்[1], பத்மவர்ணன், மாதவன், ஸாரஸன், ஹரிதன் என்ற பெயர்களைக் கொண்டவர்களும், தன் குலக் கொழுந்துகளுமான ஐந்து அரசமகன்களைப் பெற்றான்.(1,2) ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட அந்த மன்னன் {யது}, ஐம்பூதங்களைப் போன்ற அந்த ஐந்து மகன்களையும் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டான்.(3)

Tuesday, 30 June 2020

கம்ஸனுக்கு அறிவுரை கூறிய அந்தகன் | விஷ்ணு பர்வம் பகுதி – 78 – 023

(அந்தகவசனம்)

Andhaka's advise to Kansa | Vishnu-Parva-Chapter-78-023 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  வஸுதேவனை நிந்தித்த கம்ஸனுக்கு அறிவுரை கூறிய அந்தகன்; கம்ஸனுக்கு அழிவுக்காலம் வந்துவிட்டதெனச் சொன்னது...

Zoroaster and king vishtaspa

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வஸுதேவன் இவ்வாறு அவமதிக்கப்பட்டதைக் கண்ட முன்னணி யாதவர்கள், தங்கள் கைகளால் காதுகளைப் பொத்திக் கொண்டு, அவனது {கம்ஸனின்} வாழ்நாள் காலம் முடிந்ததென நினைத்தனர்.(1) பேசுபவர்களில் முதன்மையான அந்தகன், தன் மனம் கவலையடைந்திருந்தாலும் பொறுமையுடன் கூடியவனாக, அந்தச் சபையின் மத்தியில் வலுவான மென்சொற்களில்,(2) "ஓ! மகனே {கம்ஸா}, இத்தகைய சொற்களைச் சொல்வது உனக்குத் தகாது. உறவினர்களிடம் இத்தகைய சொற்களைப் பயன்படுத்துவது தகாததென்றும், குற்றமுடையதென்றும் நல்லோரால் கருதப்படுகிறது.(3) ஓ! வீரா, நீ உன்னை யாதவர்களின் குலத்தில் பிறக்காதவனெனக் கருதினால், நான் சொல்வதைக் கேட்பாயாக. யாதவர்கள் தங்களில் ஒருவனாக உன்னைக் கருத நிச்சயம் விரும்பவில்லை.(4) மாறாக உன்னைப் போன்ற ஒருவன் அவர்களின் தலைவனானதால்தான் அனைவராலும் அவர்கள் {யாதவர்கள்} நிந்திக்கப்படுகின்றனர். இக்ஷ்வாகு குலத்தின் அசமஞ்ச மன்னனே உன் வடிவில் திரும்பி வந்திருப்பதாகத் தெரிகிறது[1].(5)

Monday, 29 June 2020

அக்ரூரன் மூலம் கிருஷ்ணனை அழைத்த கம்ஸன் | விஷ்ணு பர்வம் பகுதி – 77 – 022

(அக்ரூரப்ரஸ்தானம்)

Kansa invites Krishna and sends Akrura to bring him | Vishnu-Parva-Chapter-77-022 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  மாட்டுத் தொழுவங்களில் இருந்தோரை அச்சுறுத்திய அசுரக் காளை; அரிஷ்டனின் அட்டகாசங்கள்; அரிஷ்டனைக் கொன்ற கிருஷ்ணன்...

Kamsa in his Sabha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "விரஜத்தில் கிருஷ்ணன் நெருப்பு போலச் சக்தியில் பெருகி வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட கம்ஸன், அவனிடம் அச்சம் கொண்டவனாகக் கவலையில் நிறைந்தான்.(1) பூதனை கொல்லப்பட்டது, சிறுவனைப் போன்ற செயல்களைச் செய்யாத சிறுவனால் இரு மரங்கள் இழுக்கப்பட்டது, காளியன் வெல்லப்பட்டது, தேனுகன் கொல்லப்பட்டது, பிரலம்பன் வீழ்த்தப்பட்டது, கோவர்த்தன மலை தூக்கப்பட்டது, இந்திரனின் கட்டளை அலட்சியம் செய்யப்பட்டது, பொறாமைபடத்தக்க {விரும்பத்தக்க} செயல்களால் பசுக்கள் பாதுகாக்கப்பட்டது, ககுத்மி {திமில் கொண்ட காளையான} அரிஷ்டன் அழிக்கப்பட்டது ஆகியவற்றால் கோபர்கள் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தனர். மதுராவின் மன்னனான கம்ஸன், தனக்கு வரப்போகும் மரணத்தைக் குறிக்கும் இந்தப் பயங்கரமிக்கச் சகுனங்களையும், பெருகி வரும் தன் பகைவரின் மத்தியில் நேரும் நினைத்தற்கரிய அருஞ்செயல்களையும் கண்டு மரணத்தின் ஆளுகைக்குள் தான் கொண்டுவரப்பட்டதாகக் கருதினான். உணர்விழந்த புலன்களையும், மனத்தையும் கொண்டிருந்த அவன் இறந்தவனைப் போலத் தெரிந்தான்.(2-6)

Friday, 12 June 2020

விரஜ கிராம விவரிப்பு | விஷ்ணு பர்வம் பகுதி – 60 – 005

(கோவ்ரஜகமனம் - நந்தவ்ரஜகமனம்)

A description of village Vraja | Vishnu-Parva-Chapter-60-005 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : குழந்தைகள் இருவரின் பாதுகாப்பு குறித்து நந்தகோபனை எச்சரித்து அனுப்பிய வஸுதேவன்; கோகுலத்திற்குச் சென்ற நந்தகோபன்...

Vraja village Gokulam

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வஸுதேவன், விரஜ கிராமத்தில் {கோகுலத்தில் / இடைச்சேரியில்}[1] சந்திரனைவிட அழகான ஒரு மகனை {பலராமனை} ரோஹிணி பெற்றாள் என்பதை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தான்.(1) அவன் {வஸுதேவன்} தாமதமேதும் செய்யாமல் நந்தகோபனிடம், இனிய சொற்களில், "யசோதையுடன் சேர்ந்து விரஜத்திற்கு விரைந்து செல்வாயாக[2]. அவ்விரு சிறுவர்களின் பிறப்பின் விளைவாகச் செய்ய வேண்டிய {ஜாதகர்மம் உள்ளிட்ட} பல்வேறு சடங்குகளைச் செய்து, அவர்களை விரஜத்தில் {கோகுலத்தில்} மகிழ்ச்சியுடன் வளர்ப்பாயாக.(2,3) ரோஹிணி பெற்ற என் மகனை {பலராமனை} விரஜத்தில் கவனமாகப் பாதுகாப்பாயாக. அப்போதுதான் பித்ருக்களின் பட்டியலில் மகனைக் கொண்டவனாக என் பெயர் குறிப்பிடப்படும்[3].(4) ஐயோ, என் ஒரே மகனின் முகத்தையும் நான் காண இயலாதவனானேன். நான் விவேகத்துடன் கூடியவனாக இருப்பினும், இஃது {இந்நிலை} என் ஞானத்தைக் களவாடுகிறது.(5)

[1] இங்கே குறிப்பிடப்படும் விரஜம் எனும் கிராமம், கோகுலம், இடைச்சேரி, ஆய்ப்பாடி, ஆயர்பாடி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இடையர்கள் / ஆயர்கள் / கோபாலர்கள் / மேய்ப்பர்கள் இருக்கும் இடம் என்பதைக் குறிக்கும் பொதுப்பெயராக இஃது இருக்க வேண்டும்.

[2] இந்த அத்தியாயத்தின் தொடக்க வரிகளைக் கொண்டு நந்தகோபன் அதுவரை மதுராவில் இருந்தான் என்பதும், வஸுதேவனின் மற்றொரு மனைவியான ரோஹிணி கோகுலத்தில் இருந்தாள் என்பதும், மதுராவில் இருந்த நந்தகோபனை கோகுலம் சென்று விடுமாறு வஸுதேவன் பணித்தான் என்பதும் தெரிகிறது. மேலும் மூலத்தின் இந்த அத்தியாயத்தின் தலைப்பாக நந்தவ்ரஜகமனம் என்றிருக்கிறது. அதை விரஜத்திற்கு இடம்பெயர்ந்த நந்தன் என்று மொழிபெயர்க்கலாம்.

[3] சித்திரசாலைப் பதிப்பில், "சிறுவனும் என் மகனுமான ரோஹிணேயனை விரஜத்தில் கவனமாகப் பாதுகாப்பாயாக. நான், குழந்தை கொண்டவர்களின் விவாதப் பொருள் ஆவேன். (ஒரு தந்தையின் கடமைகளைச் செய்யாததற்காக நான் அவர்களால் பழிக்கப்படுவேன்)" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், விரஜம் சென்றதும் அவர்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பாயாக. ரோஹிணியின் மகனையும் என் மகனையும் விரஜத்தில் பாதுகாப்பாயாக. குழந்தைப் பருவத்தில் அனைவரும் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். மனிதர்கள் குழந்தைப்பருவத்தில் மூடர்களாகவும் இருப்பார்கள். குழந்தைப்பருவத்தில் அனைவரும் கடுமைமிக்கவர்களாகவும் இருப்பார்கள். எனவே கவனத்துடன் இருப்பாயாக. பிள்ளைகளைக் கொண்டோரின் மத்தில் பித்ருபக்ஷத்தில் நான் விவாதத்திற்குரிய பொருளாவேன்" என்றிருக்கிறது. விரஜத்தில் பாதுகாப்பாயாக என்பதன் அடிக்குறிப்பில், "ரோஹிணியின் மகன் என்று சொல்வதில் பலராமனையும், தன் மகன் என்று சொல்வதில் கிருஷ்ணனையும் குறிப்பிடுகிறார் வஸுதேவன்" என்றிருக்கிறது. பித்ருபக்ஷம் என்பதன் அடிக்குறிப்பில், "இது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் ஈமச் சடங்குகள் நடைபெறும் காலம்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ரோஹிணி பெற்ற என் பிள்ளையையும் கோகுலத்தில் நன்கு காப்பீராக. நான் ஒரே குழந்தையின் முகத்தைப் பார்க்கவில்லையென்று புத்ரர்களுடைய ஜ்ஞாதிகளால் நிந்திக்கப்படுபவன்" என்றிருக்கிறது.

தீயவனான இந்தக் கம்ஸன், குறிப்பாகக் குழந்தைகளைக் கொல்லும்போது சற்றும் இரக்கம் கொள்வதில்லை என்பதால் நான் அஞ்சுகிறேன். அதையுந்தவிர, இவ்வுலகில் குழந்தைகளைப் பல்வேறு ஆபத்துகளும் அச்சுறுத்துகின்றன. எனவே, ஓ! நந்தா, உன் மகனை {கிருஷ்ணனைக்} கவனித்துக் கொள்வதைப் போலவே ரோஹிணியின் மகனையும் {பலராமனையும்} கவனித்துக் கொள்வாயாக.(6,7) என் மகன் மூத்தவன், உன் மகன் இளையவன். அவர்களுடைய பெயர்கள் ஒரே பொருளைக் கொண்டவை. எனவே, அவர்களை நிகரான கவனத்துடன் வளர்ப்பாயாக.(8) அவர்கள் இருவரும் நிகர்வயது கொண்டவர்கள். ஓ! கோபாலா, உன்னுடைய கவனமான வளர்ப்பிலும், விரஜத்தின் {கோகுலத்தின்} அருளிலும் அவர்கள் வளருமாறு கவனித்துக் கொள்வாயாக.(9) குழந்தைப்பருவத்தில் ஒவ்வொருவரும் தங்கள் வழியில் செயல்பட்டுக் குறும்புகளையும், தவறுகளையும் செய்கிறார்கள். எனவே அவர்களைப் பெருங்கவனத்துடன் பயிற்றுவிப்பாயாக.(10) தீயவனான கேசியினாலும், ஊர்வன மற்றும் பூச்சிகள் {புழுக்கள்} பலவற்றாலும், கழுகுகளாலும் அனைத்து வகை அச்சமும் ஏற்படும் என்பதால் பிருந்தாவனத்தில் உன் பசுத்தொழுவங்களை அமைக்காதே. பசுத்தொழுவத்தில் பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளிடம் இருந்து அந்தச் சிறுவர்கள் இருவரையும் பாதுகாப்பாயாக.(11,12) ஓ! நந்தா, கிட்டத்தட்ட இரவு முடியப் போகிறது. விரஜத்திற்கு விரைந்து செல்வாயாக. தெற்கில் உள்ள பறவைகளும் உன்னிடம் அதையே செய்யுமாறு கேட்டுக் கொள்வதைக் காண்பாயாக" என்றான் {வஸுதேவன்}.(13)

நந்தன், பெரும் மனம் கொண்ட வஸுதேவனின் இந்த ரகசிய செய்தியைக் கேட்டுப் பெரிதும் நிறைவடைந்து, யசோதையுடன் சேர்ந்து தன் வாகனத்தில் ஏறினான்.(14) அவன், மனிதர்களால் தோள்களில் சுமக்கப்படும் ஒரு வாகனத்தில் {பல்லக்கில்} குழந்தையான அந்த இளவரசனை {கிருஷ்ணனை} வைத்தான்.(15) பிறகு அவன், ஏராளமான நீர் தெளிக்கப்பட்டதும், குளிர்ந்த காற்றால் நிறைந்திருந்ததும், யமுனைக் கரையில் அமைந்ததுமான ஒரு சாலையின் வழியே சென்றான்.(16)

இவ்வாறே சற்றுத் தொலைவு சென்றதும், குளிர்ந்த காற்றால் நிறைந்திருப்பதும், கோவர்த்தன மலையின் அருகே, யமுனைக் கரையில் பசுக்களின் அழகிய கிராமமாக அமைந்ததுமான விரஜத்தை {கோகுலத்தைக்} கண்டான்.(17) அஃது இனிய குரலெழுப்பும் விலங்குகளாலும், கொடிகளால் மறைக்கப்பட்ட பெரும் மரங்களாலும், பால் கொடுப்பவையும், மேய்ந்து கொண்டிருப்பவையுமான பசுக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(18) அந்த இடம், பசுக்கள் சுகமாகத் திரியும் அளவுக்கு அழகிய சமவெளிகளைக் கொண்டதாகவும், நல்ல சமமான படிக்கட்டுகளுடன் கூடிய தடாகங்களைக் கொண்டதாகவும் இருந்தது. {அங்கே இருந்த} மரங்கள், காளைகளின் கொம்புகள் மற்றும் திமில்களால் கீறப்பட்டிருந்தன.(19) கழுகுகள், காட்டுப்பூனைகள், வல்லூறுகள், இறைச்சியை விரும்புபவையும், பின்தொடர்ந்து வருபவையுமான பிற பறவைகள், சிறுத்தைகள் மற்றும் சிங்கங்கள் ஆகியன எப்போதும் அங்கே வாழ்ந்து வந்தன. இதன் காரணமாக அந்த இடம் கொழுப்பு, மஜ்ஜை மற்றும் எலும்புகளால் நிறைந்திருந்தது.(20) ஏராளமான புற்களால் மறைக்கப்பட்டிருந்ததும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள் மற்றும் முழங்கும் புலிகளால் நிறைந்திருந்ததுமான அந்த இடம், இனிய கனிகளால் சூழபட்ட மரங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டதாகவும், பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளின் மங்கல ஒலிகளை எதிரொலிப்பதாகவும் இருந்தது. அந்த அழகிய கிராமம் {விரஜம் / கோகுலம்} கோபிகைகளால் நிறைந்திருந்தது.(21,22) வாகனங்களுக்கான சாலைகள் அகன்றவையாக இருந்தன. முட்களால் அது மறைக்கப்பட்டதாகவும், வீழ்ந்த பெரும் மரங்களால் அவற்றின் புறவெளிகள் நிறைந்தவையாகவும் இருந்தன.(23)

அதன் சுற்றளவு தோறும் நிலத்தில் கன்றுகளைக் கட்டும் கயிறுகளும், முளைகளும் பொருத்தப்பட்டிருந்தன; அங்கே பசுஞ்சாணம் நிறைந்திருந்தது. புற்களால் மறைக்கப்பட்ட குடில்களும், மடங்களும் அங்கே இருந்தன.(24) மத்து கடையும் ஒலியால் அது நிறைந்திருந்தது. செழிப்பின் அனைத்து அறிகுறிகளையும் கொண்டவர்களும், நன்கு வளர்ந்தவர்களுமான அரசு அதிகாரிகளும், மகிழ்ச்சி நிறைந்த மனிதர்களும் அங்கே எப்போதும் வாழ்ந்து வந்தனர்.(25) அங்குள்ள நிலம் மோர் சிந்தியதாகவும், தயிராடைகளால் நனைந்ததாகவும் இருந்தது. தயிர் கடையும் கோபிகைகளின் ஒலியால் அது நிறைந்திருந்தது.(26) நன்கு தடுக்கப்பட்ட கதவுகளால் பசுத்தொழுவங்கள் அனைத்தும் முறையாகப் பாதுகாக்கப்பட்டிருந்தன; அவற்றின் உள்ளே பசுக்களுக்கான கொட்டில்கள் இருந்தன. ஆயர்களின் விளையாட்டு மைதானங்களாலும், காகங்களின் இறகுகளை {காகபக்ஷம்} அணிந்த சிறுவர்களாலும் அது நிறைந்திருந்தது.(27)

நீல ஆடைகளை உடுத்திய இளமை நிறைந்த கோபிகைகள் நெய் தயாரித்தனர், இந்தக் காரணத்தால் அங்கே இனிய நறுமணம் கொண்ட காற்று வீசியது.(28) காட்டு மலர்மாலைகளால் தலை அலங்கரிக்கப்பட்டவர்களும், மார்புகளை மறைக்கும் கச்சை அணிந்தவர்களுமான கோபிகைகள், தங்கள் தலைகளில் பாற்குடங்களுடன் எப்போதும் அங்கே நடந்து கொண்டிருந்தனர்.(29) யமுனைக் கரையில் இருந்த சாலை நீர் சுமக்கும் கோபிகைகளால் நிறைந்திருந்தது. நந்தகோபன் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் இவ்வழியில் தன் கிராமத்தில் நுழைந்தபோது, அவனது குலத்தைச் சேர்ந்த மனிதர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது.(30) முதியவர்களான கோபர்களும், கோபிகைகளும் வெளியே வந்து அந்நகரத்தில் அவனை வரவேற்றனர். அவனும் அந்த இனிமை நிறைந்த இடத்திற்குத் தன் விருப்பத்தின்படியே சென்றான்.(31) அதன் பிறகு அவன் {நந்தகோபன்}, வஸுதேவனின் அன்புக்குரிய மனைவியான ரோஹிணியிடம் சென்று, உதயச் சூரியனுக்கு ஒப்பான பூடகப் புருஷனான கிருஷ்ணனை அங்கே வைத்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(32)

விஷ்ணு பர்வம் பகுதி – 60 – 005ல் உள்ள சுலோகங்கள் : 32
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Tuesday, 9 June 2020

கிருஷ்ணன் மற்றும் பலதேவனின் பிறப்பு | விஷ்ணு பர்வம் பகுதி – 59 – 004

(விஷ்ணவவதாரவர்ணம்)

Birth of Krishna and Baladeva | Vishnu-Parva-Chapter-59-004 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தேவகியின் ஆறு குழந்தைகளைக் கொன்ற கம்ஸன்; ஏழாவது கருவை ரோஹிணியின் கருவறைக்கு மாற்றிய நித்ராதேவி; கிருஷ்ணன் பிறப்பு; யசோதை மற்றும் தேவகியின் குழந்தைகள் மாற்றம்; கம்ஸன் அடைந்த ஏமாற்றம்...

Lord Krishna's birth

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவியைப் போன்றவளான தேவகி, இந்த ஏற்பாடுகளின் கீழ், ஏற்கனவே சொன்னது போல ஏழு முறை கருவுற்றாள்.(1) கம்ஸன், ஸரகர்ப்பர்கள் {ஷட்கர்ப்பர்கள்} வெளியே வந்த உடனேயே அவர்களைக் கல்லில் மோதச் செய்து கொன்றான். ஏழாவது கருத்தரிப்பின் கருவானது {நித்ராதேவியால்} ரோஹிணிக்கு மாற்றப்பட்டது.(2) நள்ளிரவில் ஒரு சமயம், ரோஹிணி உரக்க உறங்கிக் கொண்டிருந்தபோது, குருதி வெளியேறி, அதைத் தொடர்ந்து கருவும் கலைந்தது.(3) ரோஹிணி, கரு நழுவி விழுவதைக் கனவில் கண்டாள், சிறிது நேரம் கழித்து அவள் விழித்தெழுந்தபோது, அதைக் கண்டு அவள் பெரிதும் துன்புற்றாள்.(4) நடு இரவில், வஸுதேவனின் மனைவியும், சந்திரனுக்கு ஒப்பானவளுமான ரோஹிணி பெருங்கவலையடைந்தபோது, உறக்கத்தின் தேவி {நித்ராதேவி}, அவளிடம்,(5) "ஓ! அழகியே, நான் தேவகியின் கருவறையில் இருந்து கருவை எடுத்து உன்னுடைய கருவறையில் வைத்தேன். எனவே உன்னுடைய மகனான இவன் ஸங்கர்ஷணன் என்ற பெயரில் கொண்டாடப்படுவான்" என்றாள்.(6) அவள் {ரோஹிணி} அந்த மகனை {பலராமனை} அடைந்ததில் நிறைவடைந்து, சந்திரனின் அழகிய மனைவியைப் போலத் தலை கவிழ்ந்தவாறு தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.(7)

தேவகியின் ஏழாம் கருத்தரிப்பைக் குறித்த செய்திகளை அறிந்து மக்கள் கவலை அடைந்தபோது, எவன் பொருட்டுக் கம்ஸன் அவளுடைய ஏழு குழந்தைகளைக் கொன்றானோ அவனை {கிருஷ்ணனை} எட்டாம் முறையில் அவள் கருவில் கொண்டாள்.(8) எதில் தலைவன் ஹரி தன் விருப்பத்தின் பேரில் வாழ்ந்து வந்தானோ அதை {அந்தக் கருவைக்} கம்ஸனின் ஊழியர்கள் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கத் தொடங்கினர்.(9) விஷ்ணுவின் சக்திக் கூறில் பிறந்தவளும், அவனது ஆணையைச் செய்யும் நோக்கம் கொண்டவளுமான உறக்கத்தின் தேவியை {நித்ரா தேவியை} யசோதையும், தன் கருவில் கொண்டாள்.(10) கருத்தரிப்புக் காலம் நிறைவடையும் முன்பே தேவகியும், யசோதையும் எட்டாம் மாதத்தில் ஒரே நேரத்தில் தங்கள் குழந்தைகளை ஈன்றனர்.(11) விருஷ்ணிகளின் குலத்தில் கிருஷ்ணன் பிறந்த அதே இரவில், யசோதையும் தன் மகளைப் பெற்றெடுத்தாள்.(12) வஸுதேவனின் மனைவியான தேவகி, நந்தனின் மனைவியான யசோதை ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் கருவுற்றிருந்தனர்.(13) மங்கலமான அந்த நடு இரவில், அபிஜித் முஹூர்த்தத்தில், தேவகி விஷ்ணுவையும், யசோதை தன் மகளையும் {நித்ராதேவியையும்} பெற்றெடுத்தனர்.(14)

ஜனார்த்தனன் பிறந்தபோது, கடல்கள் கலக்கமடைந்தன, பூமியின் தூண்கள் {மலைகள் / தரணீதரன்} நடுங்கின, அணைந்த நெருப்புகள் எரியத் தொடங்கின,(15) மங்கலக் காற்று வீசத் தொடங்கியது, புழுதி அகன்றது, ஜோதிகள் {நட்சத்திரங்கள்} தங்களை வெளிப்படுத்திக் கொண்டன.(16) புலப்படாதவனும், நித்தியமானவனும், பலம்நிறைந்தவனும், நுட்பமான ஆன்மாவைக் கொண்டவனும், உலகிற்கு நன்மையை விளைவிப்பவனுமான தலைவன் ஹரி பிறந்தபோது, இரவு ஜயந்தியாகவும், {அஷ்டமி திதியுடன் கூடிய ரோஹிணி} நட்சத்திரம் அபிஜித்தாகவும்[1], முஹூர்த்தம் விஜயமாகவும் இருந்தது.(17) அவன் பிறந்த உடனேயே தன் பார்வைகளால் உலகங்கள் அனைத்தையும் மயங்கச் செய்தான். தேவ துந்துபிகள் முழக்கப்படாமலேயே முழங்கின, தேவர்களின் மன்னன் {இந்திரன்} ஆகாயத்தில் இருந்து மலர்களைப் பொழிந்தான்.(18) கந்தர்வர்கள் மற்றும் அப்ஸரஸ்களுடன் கூடிய பெரும் முனிவர்கள், மங்கலத் துதிகளுடன் மதுசூதனனின் மகிமைகளைப் பாடினர்.(19) ரிஷிகேசன் பிறந்தபோது மொத்த அண்டமும் இன்பப் பரவசத்தில் இருந்தது. தேவர்களுடன் சேர்ந்து இந்திரனும் மதுசூதனின் மகிமைகளைத் துதித்தான்.(20) மாயக் குறியான ஸ்ரீவத்ஸத்தையும், வேறு தெய்வீக அடையாளங்களையும் தாங்கியவனான விஷ்ணுவே[2] அந்த இரவில் தன் மகனாகப் பிறந்ததைக் கண்ட வஸுதேவன் அவனிடம் {கிருஷ்ணனிடம்},(21) "ஓ! தலைவா, உன்னுடைய இந்த வடிவை விலக்குவாயாக. ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவனே, உன் தமையன்களான என் மகன்கள் கம்ஸனால் கொல்லப்பட்டதில் பேரச்சம் கொண்டிருப்பதால் நான் இவ்வாறு பேசுகிறேன்" என்றான்".(22,23)

[1] ஹரிவம்சம் விஷ்ணு பர்வம் 2ம் அத்தியாயத்தின் [2]ம் அடிக்குறிப்பில் சொல்லப்பட்டதைப் போல இங்கே சொல்லப்படும் அபிஜித் என்பது யோகமாகவே இருக்க வேண்டும். அஃதாவது அஷ்டமி திதியுடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் அபிஜித்தாக இங்குச் சொல்லப்படுகிறது. சித்திரசாலை பதிப்பில், "ஜனார்த்தனன் பிறந்தபோது, (எட்டாவது நாளில் {அஷ்டமியில்} ரோஹிணி நட்சத்திரம் கலந்த காரணத்தால்) அபிஜித் மங்கல நட்சத்திரமாக இருந்தது, ஜயந்தி இரவாகவும், விஜயம் முகூர்த்தமாகவும் இருந்தன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இது சரியாக அபிஜித் நட்சத்திரம் எழுந்து கொண்டிருந்தபோது நள்ளிரவில் நிகழ்ந்தது" என்றிருக்கிறது. விஜய முஹூர்த்தம், ஜயந்தி இரவு என்ற குறிப்புகள் இங்கில்லை. அடிக்குறிப்புகளும் ஏதும் இல்லை. உ.வே.எஸ்.இராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஜனார்த்தனன் பிறக்கும் ஸமயம் (ரோகிணி) அபிஜித் என்னும் நக்ஷத்ரம்; ஜயந்தி என்னும் இரவு விஜயம் என்கிற முஹுர்த்தம்" என்றிருக்கிறது.

[2] "உரையில் இருக்கும் சொல் விஷ்ணுவின் பெயரான அதோக்ஷஜன் என்பதாகும். ஆசைகளைக் கைவிட்ட, அல்லது அடக்கியவர்களால் உண்டானவன் அல்லது அவர்களுக்காக உண்டானவன் என்பது இதன் உண்மைப் பொருளாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வஸுதேவனின் சொற்களைக் கேட்ட தலைவன் {விஷ்ணு}, நான்கு கரங்களைக் கொண்ட தன் வடிவை விலக்கிக் கொண்டு, தந்தையே என அவனை {வசுதேவனை} அழைத்து, நந்தகோபனின் வீட்டுக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டான்.(24) தன் மகன்களிடம் அன்பு கொண்டவனான வஸுதேவன் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு, யசோதையின் வீட்டுக்கு மிக விரைவாகச் சென்றான்.(25) அவள் அறியாதவாறு அவளது வீட்டில் தன் மகனை வைத்துவிட்டு, அவளது மகளை எடுத்துக் கொண்டு வந்து தேவகியின் படுக்கையில் வைத்தான்.(26) குழந்தைகள் பரிமாற்றம் நடந்த பிறகு, தன் பணியை நிறைவேற்றிய ஆனகதுந்துபி வஸுதேவன், தன் மனத்தில் அச்சம் நிறைந்தவனாகத் தன் வீட்டை விட்டு வெளிப்பட்டு, உக்ரஸேனனின் மகனான கம்ஸனிடம் ஓர் அழகிய மகள் பிறந்தாளெனத் தெரிவித்தான்.(27,28) பலம் நிறைந்தவனான கம்ஸன், அதைக் கேட்டு, வஸுதேவனின் வாயிலை விரைவில் அடைந்து, என்ன பிறந்தது என்பதைக் குறித்து அவனிடம் விசாரித்தான். பிறகு அவன் {கம்ஸன்}, புதிதாகப் பிறந்த குழந்தையைத் தன் கையில் ஒப்படைக்குமாறு ஆணையிட்டு, கடுமையுடன் அவனை {வஸுதேவனை} அதட்டினான்.(29,30)

இவையனைத்தையும் கேட்ட தேவகியின் குடும்பப் பெண்கள் கதறி அழுதனர். அவள் {தேவகி}, கண்ணீர் சிந்தியபடி, அவனிடம் பணிவுடன் வேண்டும் வகையில்,(31) "ஓ! தலைவா, என்னுடைய அழகிய மகன்கள் எழுவரை நீ ஏற்கனவே கொன்றுவிட்டாய். புதிதாகப் பிறந்த மகளான இவள்(32) ஏற்கனவே கொல்லப்பட்டதாக நான் கருதுகிறேன். எதை முறையென நீ நினைக்கிறாயோ அதைச் செய்வாயாக" என்றாள்.

தீயமனம் கொண்ட கம்ஸன், அந்தப் பெண்ணைக் கண்டு, அவளை இழுத்து, "ஒரு மகள் பிறக்கும்போதே அவள் கொல்லப்பட்டவளாகிறாள்" என்று சொன்னான்.(33,34)

பூமிக்கு நிகரானவளும், கருவறையில் வாழ்ந்ததால் களைத்திருந்தவளும், அதனால் தலைமுடி நனைந்திருந்தவளுமான அந்தப் பெண் அவனுக்கு முன்னால் நிலத்தில் வைக்கப்பட்டாள். கம்ஸன், அவளது கால்களைப் பிடித்து இழுத்துச் சுழற்றி ஒரு கல்லில் மோதச் செய்தான். ஏளனமாகப் பாறை மீது வீசப்பட்டாலும், தேவர்களால் நாள்தோறும் வழிபடப்படும் அந்தப் பெண் சிதைவடையவில்லை. மறுபுறம் அவள், தன் மனித வடிவைக் கைவிட்டு, தெய்வீக மலர்மாலைகள் மற்றும் {சந்தனக்} குளம்புகளாலும், ஒளிரும் மகுடத்தாலும் அலங்கரிக்கப்பட்டவளாக, தலைமயிர் விரிந்து கலைந்தவளாகக் கம்ஸனை அதட்டிக் கொண்டே வானத்தில் எழுந்தாள்.(35-38) அவள் கருநீல ஆடை அணிந்திருந்தாள், அவள் நிமிர்ந்த மார்புகளையும், தேர் போன்ற இடையையும், நான்கு கரங்களையும் கொண்டிருந்தாள். அவளது நிறம் மின்னலைப் போன்று ஒளிர்வதாகவும், அவளது கண்கள் உதயச் சூரியனைப் போன்றவையாகவும் இருந்தன, அவள் மேகத்தால் மறைக்கப்பட்ட மாலைப்பொழுதைப் போல இருந்தாள். நிலவைப் போன்ற முகத்தோற்றம் கொண்டவளும், மேகத்தைப் போன்று முழங்குபவளுமான அந்தப் பயங்கரப் பெண் {நித்ராதேவி}, பூதகணங்களால் சூழப்பட்டவளாக இருந்தாள். அந்த நள்ளிரவில் அவள் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வானத்தில் எழுந்தாள். மிகச் சிறந்த மதுவைப் பருகி, உரக்கச் சிரித்த அவள், கம்ஸனிடம்,(39-42) "ஓ! கம்ஸா, உன் அழிவுக்காகவே என்னைச் சுழற்றிக் கல்லில் மோதச் செய்தாய். எனவே, உன் மரணக் காலத்தில், உன்னை உன் பகைவன் தாக்கும்போது, நான் உன் உடலை என் கைகளால் கிழித்து உன் வெங்குருதியைப் பருகுவேன்" என்றாள்.(43,44)

அந்தத் தேவி இந்தப் பயங்கரம் நிறைந்த சொற்களைச் சொல்லிவிட்டு, தன் தொண்டர்களால் சூழப்பட்டவளாக, தான் விரும்பிய வழியில் வானத்தில் எழுந்து, அவ்வடிவிலேயே அவள் தேவலோகத்தில் திரியத் தொடங்கினாள்.(45) விருஷ்ணிகளால் வழிபடப்படும் அந்தப் பெண் அங்கேயே வளர்ந்தாள். தேவர்கள், தங்கள் மன்னனின் ஆணையின் பேரில் அவளை ஒரு குழந்தையைப் போல வளர்த்தனர்.(46) யோகத்தின் மூலம் பிரம்மனால் முன்பு படைக்கப்பட்ட அந்த மகள், கேசவனை {கிருஷ்ணனைப்} பாதுகாப்பதற்காக அந்தத் தலைவனுடன் பிறந்தாள்.(47) தெய்வீக வடிவில் இருந்து கொண்டு கேசவனைப் பாதுகாத்த அவளை நாள்தோறும் யாதவர்கள் வழிபட்டனர்[3].(48) அவள் சென்றதும், கம்ஸன் அவளைத் தன் மரணத்திற்கான கருவியாக {மிருத்யுவாகக்} கருதினான். வெட்கமடைந்த அவன் தனிமையில் தேவகியிடம் பேசினான்.(49)

[3] உ.வே.எஸ்.இராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "காப்பாற்றப்பட்ட அந்தக் கன்யை வஸுதேவர் ஆஜ்ஞையால் புத்ரனைப் போல் வ்ருஷ்ணி கூட்டத்தாரால் நன்கு பூஜிக்கப்பட்டு அங்கே (ஸ்வர்க்க லோகத்தில்) வளர்ந்தாள்.(46) ஜனமேஜயா, விஷ்ணுவின் அம்சத்திலிருந்து உண்டானவளாகவும், தனக்கென அம்சமில்லாதவளான யோக கன்யையாகவும், கேசவனின் மெய்காவலுக்காக அவதரித்தவளாகவும் இவளை நீ அறிந்து கொள்.(47)" என்றிருக்கிறது.

கம்ஸன் {தேவகியிடம்}, "ஓ! தமக்கையே {அக்கா}, மரணத்தின் கைகளில் இருந்து தப்பிக்க எல்லையற்ற முயற்சிகளைச் செய்து, உன் குழந்தைகள் பலரை நான் அழித்தேன். ஓ! தேவி, இப்போது என் மரணம் வேறொரு பகுதியில் இருந்து வந்திருக்கிறது.(50) ஐயோ, இரக்கமற்றவனாகவும், கவனமாகவும் என் உறவினர்களையே கொன்றாலும் என் ஆண்மையைக் கொண்டு என்னால் விதியை வெல்ல முடியவில்லை.(51) கெட்ட நேரத்தின் ஆதிக்கத்தில் இருந்த நான் அவர்களின் மரணத்திற்கான கருவியாக இருந்தேன். எனவே, உன் கருக்கள் அழிந்த கவலையையும், உன் மகன்கள் இறந்த துயரத்தையும் கைவிடுவாயாக.(52) காலமே அனைவரின் பகைவனாக இருந்து அவர்களுக்கு அழிவைக் கொண்டு வருகிறது. காலமே அனைத்தையும் இயக்குகிறது, என்னைப் போன்றவர்கள் வெறும் கருவிகளாகவே இருக்கிறோம்.(53) ஓ! பெண்ணே, ஒருவன் செய்யும் செயல்களின் தவிர்க்கமுடியாத விளைவுகளான பேரிடர்கள் உரிய நேரத்தில் வந்தடைகின்றன. நானே செய்கிறேன் என்பது பரிதாபத்திற்குரியது (என்று நினைப்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்).(54) உன் மகன்களுக்காக அழாதே, உன் துயரைத் துறப்பாயாக. மனிதர்களின் போக்கு இத்தகையதாகவே இருக்கிறது, யாராலும் காலத்தின் பணியை நிறுத்த முடியாது.(55) நான் உனக்கு இழைத்த துன்பங்கள் அனைத்தும் என் மனத்தில் இருக்கின்றன. நான் ஒரு மகனைப் போல என்னை உன் பாதங்களில் கிடத்திக் கொள்கிறேன். என்னிடம் கோபங்கொள்ளாதே" என்றான் {கம்ஸன்}.(56)

கம்ஸன் இதைச் சொன்னதும், கண்ணீரால் குளித்த முகத்துடன் இருந்த பரிதாபத்திற்குரிய தேவகி, தன் கணவனின் மீது பார்வையைச் செலுத்தியவாறே, "எழுவாய் தம்பி எழுவாயாக" என்றாள். அதன் பிறகு அவள் பின்வருமாறு அவனிடம் பேசினாள்.(57) தேவகி, "மெய்நிகர் காலனைப் போலவே என் கண்களுக்கு முன்பாகவே என் குழந்தைகள் அனைவரையும் நீ கொன்றாய். இதற்கு உன் மீது பழி சுமத்த முடியாது. இங்கே காலனே கருவியாக இருக்கிறான்.(58) உன் தீச்செயல்களுக்காக வருந்தி உன் தலையால் என் பாதங்களைத் தீண்டுகிறாய். எனவே, என் குழுந்தைகளை அழித்ததன் மூலம் நீ இழைத்த பாவத்தை நான் மன்னித்தேன்.(59) முதுமையென்றாலும், கருவறையில் என்றாலும் மரணம் தவிர்க்கப்பட முடியாதது. குழந்தைப் பருவத்திலும், இளமையிலும் கூட அதன் கரங்களில் இருந்து தப்புவது சிரமமே.(60) இவை யாவும் காலத்தின் பணியாகும்; நீ வெறும் கருவியாகவே இருக்கிறாய். பிறக்காத ஒருவன் காற்றைப் போலக் காணப்படுவதில்லை.(61) பிறந்த ஒருவன் பிறக்காத ஒருவனின் நிலையை அடைவதும் அவ்வாறே கருதப்படுகிறது[4]. இவை அனைத்தும் காலத்தினால் நேர்ந்தவையாகும். முதலில் காலன் அனைத்தையும் சுமந்து செல்கிறான், அடுத்ததாகத்தான் கருவி குறிப்பிடப்படுகிறது.(62) எனவே, என் குழந்தாய், என் குழந்தைகளின் மரணத்திற்கு நீ காரணமல்ல. பல்வேறு சடங்குகள்,[5] மாசற்ற செயல்கள், படைப்பின் காலம், பெற்றோரின் பணிகள் ஆகியவற்றில் ஈடுபடும்போதும் மக்கள் மரணத்தைச் சந்திக்கிறார்கள்" என்றாள் {தேவகி}.(63)

[4] "பிறக்காத மகனிடம் அன்பு கொள்ள முடியாததைப் போலவே, பிறந்தவுடன் இறந்தவனிடமும் பற்றுக் கொள்ளக்கூடாது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[5] "ஒரு குழந்தை பிறக்கும்போது செய்யப்படும் சடங்கு முதலான பல்வேறு சடங்குகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

தேவகியின் சொற்களைக் கேட்ட கம்ஸன், கோபமடைந்தவனாகவும், இதயம் எரிபவனாகவும் தன் வீட்டுக்குள் நுழைந்தான். நோக்கம் கலங்கடிக்கப்பட்ட அவன், மனந்தளர்ந்தவனாகவும், கவனமற்றவனாகவும் அங்கே சென்றான்" என்றார் {வைசம்பாயனர்}.(64-65)

விஷ்ணு பர்வம் பகுதி – 59 – 004ல் உள்ள சுலோகங்கள் : 65
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Sunday, 26 April 2020

வாசுதேவனின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 35

(கிருஷ்ண வம்ச வர்ணனம் - கிருஷ்ண ஜன்ம அனுகீர்த்தனம்)

Vasudeva's Family | Harivamsa-Parva-Chapter-35 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : வசுதேவரின் மனைவிமாரும், அவர்களின் சந்ததியும்; திரிகர்த்தர்களின் புரோஹிதருக்கும், யாதவர்களின் புரோஹிதருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு; அதனால் பிறந்த காலயவனன்; காலயவனனுக்கு அஞ்சி மதுராவில் இருந்து துவாரகைக்குச் சென்ற யாதவர்கள்...

Lord Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வஸுதேவனின் மனைவியர் பதினான்கு பேரில் முதலாமவள் பூருகுலத்தைச் சேர்ந்த ரோஹிணியும், இரண்டாமவள் மதிரா {இந்திரா}, மூன்றாமவள் வைசாகி, நான்காமவள் பத்ரை, ஐந்தாமவள் ஸுனாமை {ஸுனாம்னி}, ஆறாமவள் ஸஹதேவி, ஏழாமவள் தேவகி, எட்டாமவள் சாந்திதேவி, ஒன்பதாமவள் ஸ்ரீதேவி, பத்தாமவள் தேவரக்ஷிதை, பதினொன்றாமவள் விருகதேவி, பனிரெண்டாமவள் உபதேவி, பதிமூன்றாமவள் ஸுதனு, பதினான்காமவள் படர்வை {படவை} ஆகியோராவர். இறுதியிருவரும் அவனது பெண் பணியாட்களாவர்[1].(1-3)



[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஸுதனு மற்றும் படவை ஆகிய இருவரும் அவனுடைய பரிசாரிகைகளாக {பணிப்பெண்களாக} இருப்பினும், தாஸிகளாக {அடிமைப்பெண்களாக} இல்லாமல், போகபத்னிகளாக {கூத்திகளாக} இருந்தபடியால், அவர்களும் பதிமூன்றாம் மற்றும் பதினான்காம் மனைவிகளாக அறியப்பட்டனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த மூன்று ஸ்லோகங்களும் இல்லை.

பூரு குலத்தின் ரோஹிணி, பாஹ்லீகனின் மகளாவாள். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவளே ஆனகதுந்துபியின் {வஸுதேவனின்} பெரும் அன்புக்குரிய முதல் மனைவியாவாள்.(4) வஸுதேவன், ரோஹிணியிடம் தன் மூத்த மகன் ராமனையும் {பலராமனையும்}, ஸாரணன், சடன், துர்தமன், தமனன், சுவப்ரன், பிண்டாரகன், உசீநரன் ஆகிய மகன்களையும், சித்ரா என்ற பெயரில் ஒரு மகளையும் பெற்றான். ஓ! குருவின் வழித்தோன்றலே, இந்தச் சித்ராவே {சுபத்ரா}, ஸுபத்ரை  என்ற பெயரில் அழைக்கப்பட்டாள்.(5-6)

வஸுதேவன், {தன் ஏழாம் மனைவியான} தேவகியிடம் பெருஞ்சிறப்புமிக்கச் சௌரியைப்[2] பெற்றான். ராமன் {பலராமன்} ரேவதியிடம், தன் அன்புக்குரிய மகனான நிசடனைப் பெற்றான். அர்ஜுனன், ஸுபத்ரையிடம் வலிமைமிக்கத் தேர்வீரனான அபிமன்யுவைப் பெற்றான். அக்ரூரன், காசி மன்னனின் மகளிடம் ஸத்யகேதுவைப் பெற்றான்[3].(7-8) இனி, வசுதேவன் தன் உன்னத மனைவியர் எழுவரிடம் பெற்ற மகன்களைக் குறித்துக் கேட்பாயாக.(9)

[2] "இது கிருஷ்ணனின் பெயர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த வாக்கியம் இங்கே பொருத்தமற்றதாக இருக்கிறது" என்றிருக்கிறது.

போஜனும், வியயனும் {வஸுதேவனின் எட்டாம் மனைவியான} சாந்திதேவியின் மகன்களாவர்.

விருகதேவன் மற்றும் கதன் ஆகியோர் {வஸுதேவனின் ஐந்தாம் மனைவியான} ஸுனாமையின் மகன்களாவர்.(10)

{பத்தாம் மனைவியான} தேவரக்ஷிதை உபாஸங்கனைத் தன் மகனாக அடைந்தாள்.

திரிகர்த்த மன்னனின் மகள் {வஸுதேவனின் பதினோராம் மனைவியான} விருகதேவி உயரான்ம அகாவஹனைப் பெற்றாள். அவனுடைய {திரிகர்த்த மன்னனின்} புரோஹிதர் சைசிராயணர் (தமது மைத்துனரும், யாதவர்களின் புரோகிதருமான [கர்க்கரின் வழித்தோன்றலான] கார்க்கியரின்} ஆண்மையைச் சோதிக்க விரும்பினார்[4].(11,12)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "விருகதேவி, திரிகர்த்த மன்னனின் மகளாவாள். திரிகர்த்த மன்னனின் புரோகிதர் கார்க்கிய பிராமணக் குலத்தைச் சேர்ந்த சைசிராயணர் ஆவார். இந்தச் சைசிராயணரின் மைத்துனர், யாதவர்களின் புரோகிதரான கர்க்க பிராமணக் குலத்தைச் சேர்ந்த கர்க்கராவார். திரிகர்த்தர்களின் புரோகிதரான சைசிராயணர் ஒரு முறை தன் மைத்துனரான யாதவர்களின் புரோஹிதர் கர்க்கனின் ஆண்மையில் ஐயம் வளர்த்து, தன் கரத்தை கர்க்கரின் மறைவுப்பகுதியில் வைத்தார். இத்தகைய நடவடிக்கை யாதவர்களின் கர்க்க முனிவரிடம் எந்த நாட்டத்தையும் தூண்டாமல் அவர் தமது நோன்புகளில் உறுதியாக அதைச் சகித்துக் கொண்டார். அப்போது திரிகர்த்தர்களின் புரோகிதரான சைசிராயணர் விஷமமாக யாதவர்களின் கர்க்க முனிவரை ஓர் அலியென அழைத்தார். பின்னர் இது யாதவர்களின் சபையில் பரப்பட்டபோது, யாதவர்கள் அனைவரும் அவரை மறைமுகமாகக் குறிப்பிட்டு உரக்க நகைத்ததனால் அந்த முனிவர் பெரும் கோபம் கொண்டார்" என்றிருக்கிறது.

கார்க்கியர் தம்மீது சுமத்தப்படும் போலிக்குற்றச்சாட்டின் பேரில் கோபத்தில் நிறைந்து பனிரெண்டு ஆண்டுக் காலம் கருப்பு இரும்பைப் போல இருந்தார்[5].(13) அதன் பிறகு அவர் {கார்க்கியர்} ஒரு மாட்டிடையரின் மகளுடன் வாழ்ந்தார். கோபாலி என்ற பெயரைக் கொண்ட ஒரு தேவகன்னிகை இந்தத் தோற்றத்தில் அவரிடம் வந்தாள்.(14) சூலபாணியின்[6] ஆணையின் பேரில் கார்க்கியர், மனித வடிவில் உள்ள தமது மனைவியை, தடுக்கப்பட முடியாததும், ஒருபோதும் இறவாததுமான கருவைக் கொண்டு கருவுறச் செய்தார்.(15)

[5] "இது சொற்களை இழந்த வாக்கியம் போலத் தெரிகிறது. சைசிராயணர் தன் மைத்துனரான கார்க்கியரைச் சோதித்து, அவர் தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர் என்பதைக் கண்டறிந்தார் என்பது இங்கே கருத்து. எனினும் அவர் அந்த உண்மையைத் தவறாகக் கற்பிதம் செய்து கொண்டு அவருக்கு ஆண்மை இல்லை என்று நினைத்தார். இது கார்க்கியரின் கோபத்தைத் தூண்டி, அஃது அடங்குவதற்குப் பனிரெண்டு ஆண்டுகள் ஆனது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "கர்க்க முனிவர் முகஞ்சுழித்தாலும், அங்கேயே தன் கோபத்தை வெளிக்காட்ட முடியாமல், கருநீலமாக மாறி, அச்சுறுத்தும் வகையில் வானம் போலக் கருப்பாகத் தெரிந்து அந்த ஆண்மையின்மைக் குற்றச்சாட்டின் மூலம் புகழடைந்தார். அவர் இந்தக் கோபத்தில் இருந்து விடுபடப் பனிரெண்டு ஆண்டுகளாகின. பின்னர் ஆண்மையின்மை என்ற பழியில் இருந்து விடுபடுவதற்காக அவர் ஒரு பாற்காரியுடன் பழகினார்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "மற்றொரு வகையில் படித்தால், ’அவர் சிவனின் அருளுக்காகத் தவம் செய்த அந்தக் காலத்தில் கரும்பழுப்பு துருவை உண்டார்’ என்றும் கொள்ளலாம்" என்றிருக்கிறது.
[6] "இது சிவனின் பெயர். சூலத்தைக் கையில் தரித்தவன் என்பது இதன் பொருள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அவள் {கோபாலி என்ற அப்ரசஸ்}, காலயவனன் என்ற பெயரில் பெரும் சக்திமிக்க மன்னனைப் பெற்றாள். காளைகளைப் போன்ற தலைகளைக் கொண்ட குதிரைகள் அவனைப் போர்க்களத்திற்குக் கொண்டு சென்றன[7].(16) ஓ! மன்னா, அந்தக் குழந்தை {காலயவனன்}, குழந்தைப்பேறற்றவனான யவன மன்னனின் நகரத்தில் வளர்ந்து வந்தான்[8]. அதன்படியே அவன் காலயவனன் என்று பெயரிடப்பட்டான்.(17) போர் புகும் விருப்பத்தை வளர்த்துவந்த அந்த மன்னன் {காலயவனன்}, {அரியணையை அடைந்ததும்} இது குறித்து இருபிறப்பாளர்களிடம் கேட்டான். அனைத்துமறிந்த நாரதர், விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களைச் சார்ந்தோரிடம் போரிடுமாறு அவனைக் கேட்டுக் கொண்டார்.(18)

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "முன்பாதி காளைகளைப் போன்றும், பின்பாதி குதிரைகளைப் போன்றும் இருந்த குதிரைகளைப் போர்க்களத்தில் காலயவனன் செலுத்தினான்" என்றிருக்கிறது. மேலும் அதன் அடிக்குறிப்பில், "காலயவனன் என்பதற்கு ’வெளிநாட்டைச் சேர்ந்த கருப்பன்’ என்று பொதுவாகப் பொருள் சொல்லப்படுகிறது. ஆனால் காலயவனன் என்பதைக் காலஜவனன் என்று எடுத்துக் கொண்டால் ’காலத்தின் வேகம் கொண்ட போர்வீரன்’ என்று பொருள்தரும்" என்றிருக்கிறது.
[8] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அந்த அப்சரஸ் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்ததும் மறைந்தாள். கார்க்கியர் அந்தக் குழந்தையை யவனர்களின் மன்னனிடம் ஒப்படைத்தார். யவனர்கள் என்போர் கிரேக்கர்கள் அல்லது ஐயோனியர்கள் {கிரேக்கப் பேரினங்கள் நான்கில் ஓரினத்தைச் சேர்ந்தோர்} ஆவர்" என்றிருக்கிறது.

அதன்பேரில், ஓரக்ஷௌஹிணி படைவீரர்களுடன்[9] மதுராவுக்குப் புறப்பட்ட காலயவனன், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் வீட்டுக்குத் தன் தூதனை அனுப்பினான்.(19) அப்போது, விருஷ்ணிகளும், அந்தகர்களும், காலயவனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நுண்ணறிவுமிக்கக் கிருஷ்ணனைத் தங்கள் தலைவனாகக் கொண்டு ஆலோசித்தனர்.(20) பிறகு, பினாகிக்கு {பினாகபாணிக்கு}[10] மதிப்பளித்த அவர்கள், அழகான தங்கள் மதுரா நகரத்தில் இருந்து தப்பிச் செல்லும் தீர்மானத்தை அடைந்து, குசஸ்தலையின் துவாரகையில்[11] குடியேறும் எண்ணத்தை அடைந்தனர். கிருஷ்ணனின் பிறப்புக் கதையைத் தூய்மையுடனும், தற்கட்டுப்பாட்டுடனும் கேட்கும் ஒருவன் கல்விமானாகவும், மகிழ்ச்சியுடையவனாகவும், கடன்களில் இருந்து விடுபட்டவனாகவும் ஆகிறான்" என்றார் {வைசம்பாயனர்}.(21,22)

[9] ஓர் அக்ஷௌஹிணி என்பது "1,09,350 காலாட்படை வீரர்கள், 65,610 குதிரைகள், 21,870 தேர்கள், 31,870 குதிரைகளைக் கொண்ட ஒரு முழுமையான படை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். மஹாபாரதம், ஆதிபர்வம் 2:23-27ல் ஓர் அக்ஷௌஹிணிக்கு இதே எண்ணிக்கைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 
[10] "இது சிவனின் பெயராகும். பினாகம் அல்லது திரிசூலத்தைப் பிடித்தவன் என்ற பொருளைத் தரும்" என்று மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். பினாகம் என்பது சிவனின் வில்லாகும்.
[11] "கன்யாகுப்ஜம் அல்லது கன்னோஜ் நாட்டில் துவாரகை அமைந்துள்ளது" என்று மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். உண்மையில் கன்யாகுப்ஜம் உத்திரப்ரதேசத்தில் அமைந்திருக்கிறது. துவாரகைக்கும் இதற்கும் தொடர்பே இல்லை. மேலதிக தகவல்களுக்கு கன்யாகுப்ஜம் மற்றும் கன்னோசி குறித்த விக்கிப்பீடியா பக்கத்தைப் பார்க்கவும்.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 35ல் உள்ள சுலோகங்கள் : 22
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்