(தக்ஷோத்பத்தி)
The origin of men: the birth of Daksha | Harivamsa-Parva-Chapter-02 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : ஸ்வாயம்பூ மனு மற்றும் ஷதரூபை; உத்தானபாதர்; துருவனின் பிறப்பு; வேனனை அழித்த முனிவர்கள்; வேனனிடம் தோன்றிய முதல் க்ஷத்திரியன் பிருது; பூமியைக் கறந்த பிருது; பிராசேதஸ்களின் தவம்; பத்து பேரை மணந்த மாரிஷை; தக்ஷனின் பிறப்பு; பல்வேறு உயிரினங்களைப் படைத்த தக்ஷன்; பாலினக் கலவி மூலம் உயிரினங்கள் உண்டானது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குடிமுதல்வரான {பிரஜாபதியான} வசிஷ்டர், சந்ததி படைக்கும் தமது தொழில் {மனத்தால்} முடிவடைந்தபோது, எந்தப் பெண்ணில் இருந்தும் பிறக்காத ஷதரூபையைத் தமது மனைவியாக அடைந்தார்.(1) ஓ! ஏகாதிபதி, புலனுக்கு அப்பாற்பட்ட பகுதியை {உலகத்தை} மறைத்தபடி வசித்து வந்த அவர், தமது மகிமையாலும், யோக சக்தியாலும் ஷதரூபையைப் படைத்தார்.(2) ஒரு கோடி {1,00,00,000} வருடங்கள் கடுந்தவம் இருந்த அவள் {ஷதரூபை} தனல் போன்ற தவசக்தி கொண்ட தன் கணவரை அடைந்தாள்.(3) ஓ! குழந்தாய் {ஜனமேஜயா}, அந்தப் புருஷனே ஸ்வாயம்பூ மனு என்றழைக்கப்படுகிறான். இவ்வுலகில் அவனுடைய மன்வந்தரம் எழுபத்தோரு யுகங்களைக் கொண்டதாகும்.(4) அந்த அண்டப் புருஷன் {விராட்} ஷதரூபையிடம் வீரன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றான், அவன் {வீரன்} காம்யையிடம் பிரிவிரதன் மற்றும் உத்தானபாதன் என்ற பெயர்களைக் கொண்ட இரு மகன்களைப் பெற்றான்.(5)
