(அநிருத்தக்ருதார்யாஸ்தவோ தத்வரளாபஷ்ச)
The goddess consoles Aniruddha | Vishnu-Parva-Chapter-177-121 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : ஆர்யா தேவிக்கான துதி; கட்டில் இருந்து விடுபட்ட அநிருத்தன்; ஆர்யா துதியின் பெருமை...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பலியின் மகனான மன்னன் பாணனால் வீரன் அநிருத்தனும், உஷையும் சோணித நகரத்தில் சிறை பட்டிருந்தபோது,(1) அவன் தன் பாதுகாப்புக்காகக் கௌமாரி தேவியின் {கோடாவதி தேவியின்} புகலிடத்தை நாடி அவளது புகழைத் துதியாகப் பாடினான். {அதைக் கேட்பாயாக}.(2) எல்லையற்றவனும், சிதைவற்றவனும், நித்திய தேவனுமான தலைவன் நாராயணனை வணங்கிவிட்டு,(3) வழிபடத்தகுந்தவளும், வரம் தருபவளும், தேவர்களாலும், உலகங்களாலும் வழிபடப்படுபவளும், சண்டீ, காத்யாயனி, ஆரியா என்று அழைக்கப்படுபவளுமான தேவியை ஹரியால் துதிக்கப்பட்ட அவளது பெயர்களைக் கொண்டு பாடப் போகிறேன்.(4) தேவர்கள், முனிவர்கள், ராட்சசர்கள் ஆகியோரால் துதிக்கப்படும் மங்கலையான அந்த ஆர்யா தேவியின் மகிமையை உரைத்துவிட்டு, அனைத்திலும் படந்தூடுருவி இருப்பவளும், தேவர்கள் அனைவராலும் வணங்கப்படுபவளுமான அவளைத் துதிக்கப் போகிறேன்.(5)
