Saturday 23 May 2020

சந்தனுவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 53

(தேவ அம்ச அவதரணம்)

The account of Santanu's family | Harivamsha-Parva-Chapter-53 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பூமியின் நலத்துக்காக பிரம்மனிடம் வேண்டிய தேவர்கள்; பழங்காலத்தில் நடந்தவற்றைச் சொன்ன பிரம்மன்; பெருங்கடலுக்கும், கங்கைக்கும் சாபம் கிடைத்தது; எதிர்காலத்தில் நடக்கப்போவதையும் சொன்ன பிரம்மன்...

Lord Brahma

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பூமியின் சொற்களைக் கேட்ட பிறகு, அவளது நோக்கத்தைக் குறித்து நுட்பமாகச் சிந்தித்த தேவர்கள், பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்},(1) "ஓ! தலைவா, உயிரினங்கள் அனைத்தின் உடல்களைப் படைத்தவர் நீரே. உலகங்கள் அனைத்தின் தலைவன் நீரே. சுமையில் இருந்து பூமியை நீர் விடுவிப்பீராக.(2) ஓ! தலைவா, பேரிடரில் இருக்கும் பூமியின் நோக்கத்தை நிறைவேற்ற விரும்பினால், மஹேந்திரன், யமன், வருணன், வளங்களின் மன்னன் {குபேரன்}, நாராயணன், சந்திரன், சூரியன், காற்றானவன் {வாயு}, ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்திரர்கள், உலகின் குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்}, தெய்வீக மருத்துவர்களான அஸ்வினிகள், சாத்யஸ்கள், பிருஹஸ்பதி, சுக்ராச்சாரியர், காலன், கலி, மஹேஷ்வரன், கார்த்திகேயன் {முருகன்}, யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், சாரணர்கள் ஆகியோர் மற்றும் பெரும்பாம்புகள், பறவைகள், பெரும் மலைகள், கங்கையின் தலைமையிலான ஆறுகளின் பெரும் அலைகளைக் கொண்ட பெருங்கடல்கள் ஆகியனவும் செய்ய வேண்டிய கடமைகளைத் தாமதமில்லாமல் உறுதிசெய்வீராக.(3-8) ஓ! பெரும்பாட்டனே {பிதாமஹரே}, எங்கள் பிறவிக்கூறுகளை {அம்ஸ அவதாரங்களை} கீழே அனுப்பவது எவ்வாறு? எங்களை வானத்தில் உலவும் மன்னர்கள், பூமியில் நடக்கும் மன்னர்கள், அரசவை பிராமணர்கள் மற்றும் பிற இளவரசர்களின் குடும்பங்களில், எந்தப் பெண்ணிடமும் பிறக்காத உடல்களைப் படைக்கவிடுவீராக[1]" என்றனர்.(9-10)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஓ! பெரும்பாட்டனே, தேவர்களாகிய நாங்கள் பூமியைக் காப்பாற்றக்கூடிய முன்மாதிரியான அவதாரங்களை எவ்வழியில் எடுக்க வேண்டும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக. நாங்கள் உமது உத்தரவின் பேரில் எங்களை நாங்களே மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறோம். நீர் விரும்பும் எந்த வடிவையும் ஏற்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். எனவே, வானுலாவிகளாகப் போவது யாவர்? பூமியில் இருக்கப்போவது யாவர்? பிராமண சபைகளின் உறுப்பினர்களாகப் போவது யாவர்? மன்னர்களின் குலங்களில் பிறக்கப்போவது யாவர்? கருவறையற்ற பிறவிகொள்ளப் போவது யாவர்? யார் எந்த உடலை ஏற்க வேண்டும் என்பதை தயவுகூர்ந்து எங்களுக்குச் சொல்வீராக" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இவர்கள் எக்கூறுகளை ஏற்க வேண்டும் என்பதை விரைவாக இவர்களுக்குச் சொல்வீராக. பூமியின் பணியை நிறைவேற்றவும், மன்னர்களுக்கு மத்தியில் பிணக்கை உண்டாக்கவும் இஃது ஏற்படப்போகிறது. ஓ! பெரும்பாட்டனே, எங்களில், பல்வேறு கூறுகளாகப் பிறக்கச்செய்ய செயல்படப் போகிறவர்கள் யாவர்? சொர்க்கத்தில் எஞ்சியிருக்கப் போகிறவர்கள் யாவர்? பூமியில் மன்னர்களாகப் பிறக்கப் போகிறவர்கள் யாவர்? பிராமணர்களுக்கு மத்தியில் துணைப் புரோகிதர்களாக இருக்கப் போகிறவர்கள் யாவர்? பூமியில், கருவறைகளில் இருந்து பிறக்காத உடல்களை உண்டாக்கப் போகிறவர்கள் யாவர்?" என்றிருக்கிறது.

தேவர்கள் அனைவராலும் துதிக்கப்படுபவனும், அனைத்தின் பெரும்பாட்டனுமானவன் {பிரம்மன்}, ஒரு பொதுவான காரியத்திற்காக ஒன்று திரண்டிருக்கும் தேவர்களின் இந்தப் பெருந்தீர்மானத்தைக் கேட்டு, அவர்களிடம்,(11) "ஓ! முன்னணி தேவர்களே, உங்கள் தீர்மானத்தை நான் பெரிதும் விரும்புகிறேன். நீங்கள் உங்கள் சக்தியைக் கொண்டு பூமியில் உங்கள் உடல்களின் கூறுகளைப் படைப்பீராக {அவதாரம் செய்வீராக}.(12) முன்னணி தேவர்களான நீங்கள் அனைவரும் உங்கள் சக்தியுடன் பூமியில் இறங்குவீராக. நீங்கள், மூவுலகங்களின் செழிப்பை அடைந்து, சுமையில் இருந்து பூமியை விடுவிப்பீராக.(13) பழங்காலத்தில் அவளது சுமை குறித்து எனக்குத் தெரியவந்தபோது, அதை அகற்றுவதற்கு நான் என்ன செய்தேன் என்பதைக் கேட்பீராக.(14) 

பழங்காலத்தில் நான் கிழக்குக் கடலின் மேற்குக் கரையில் என் பேரனான பெரும் கசியபனுடன் அமர்ந்திருந்தேன்.(15) வேதங்கள் தொடர்பாக ஏற்கனவே விளக்கப்பட்ட பல்வேறு கருப்பொருட்களையும், புராணங்களில் இருந்து வேறு பகுதிகள் பலவற்றையும் {கசியபனுக்கு} நான் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.(16) இவ்வாறு நான் உரையாடிக் கொண்டிருந்தபோது, உடல்வடிவங்களுடன் கூடிய மருத்துகள், பெருங்கடல் மற்றும் கங்கையுடன் சேர்ந்து நீங்கள் அனைவரும் என்னிடம் வந்தீர்கள்.(17) சந்திரனின் துணையுடன் கூடிய பெருங்கடலானவன், நீர்வாழ் விலங்குகளுடன் கூடிய பலவண்ண உடையை உடுத்திக் கொண்டு விரையும் அலைகளுடனும், பவளங்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு, சிப்பிகள் மற்றும் முத்துகளுடன் ஒளிரும் உடலுடனும், நீர் நிறைந்த ஒரு மேகத்தைப் போல முழங்கிக் கொண்டு என்னை வீழ்த்திவிடுபவனைப் போலத் தன் கரைக்கு வந்தான். உப்பு நீரை வீசியெறிந்து அந்த இடத்தைக் கலங்கடித்தான்.(18-20)

பெருங்கடலானவன் தன் நீரால் அந்த இடத்தைத் தாக்க இருந்தபோது, நான் அவனிடம், "அமைதியாக இருப்பாயாக" என்ற சொற்களைக் கோபத்துடன் சொன்னேன்.(21) "அமைதியாக இருப்பாயாக" என்று நான் சொன்ன உடனேயே அவன் ஒரு வடிவத்தை ஏற்றான். தன் அலைகள் அனைத்துடன் அசையாமல் இருந்த அவன், நல்ல அரச அருளுடன் {நல்ல கம்பீரமான தோற்றத்துடன் / ராஜஷ்ரியஜ்வலனாக} அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(22) உங்களுக்கு நன்மையைச் செய்யவும், சுமையில் இருந்து பூமியை விடுவிக்கவும் விரும்பிய நான், பெருங்கடலையும், கங்கையையும் சபிக்கும் வகையில், "ஓ! பெருங்கடலே, நீ அரச வடிவில் வந்திருப்பதனால் நீ ஒரு மன்னனாவாயாக. பூமியில் உன் சக்தியைக் கொண்டு அருஞ்செயல்கள் பலவற்றைச் செய்யும் வகையில் பெரும் பரதனின் குலத்தில் பிறந்து மனிதர்களைக் காப்பாயாக. பொறுமையற்றவனாக இருந்தாலும் நீ அமைதியாக இருக்கும்படி நான் கேட்ட உடனேயே ஒரு வடிவத்தை ஏற்றாய். எனவே, அழகிய மேனியைக் கொடையாகக் கொண்டவனாக, சந்தனு என்ற பெயரில் நீ பூமியில் கொண்டாடப்படுவாய். மேலும் மாசற்ற அங்கங்களையும், அகன்ற விழிகளையும் கொண்டவளும், ஆறுகளில் முதன்மையானவளுமான இந்தக் கங்கை, அழகிய வடிவில் உன்னுடன் வருவாள்" என்றேன்.(23-27)

நான் இதைச் சொன்னபோது, பெருங்கடலானவன், சோர்ந்த இதயத்துடன் என்னைப் பார்த்தான். அவன் {பெருங்கடல்}, "ஓ! தலைவா, ஓ! தேவர்களின் தேவா, என்னை ஏன் சபித்தீர்? நான் உமது ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடக்கிறேன். எனவே, நான் உமது மகனாவேன். அவ்வாறிருக்கையில், பொருந்தாத சொற்களால் என்னை நீர் சபித்தது ஏன்?(28,29) ஓ! தலைவா, ஓ! தேவர்களின் தேவா, உமது தயவால் என் அலைகள் ஏற்ற இறக்கங்களுடன் பெருகியதால் நான் கலங்கினேன். ஓ! பிரம்மா, இதில் என்னை எவ்வாறு குறைகூற முடியும்?(30) அந்நேரத்தில் காற்றால் வீசப்பட்ட நீரினால் நீர் தீண்டப்பட்டிருந்தாலும் என்னைச் சபிக்க உமக்குக் காரணமேது?(31) வீசும் காற்று, பெருகும் மேகம், சந்திரனுடன் கூடிய பர்வம் {வளர்பிறைச் சந்திரன்} என்ற மூவகை கருவிகளால் நான் கலங்கியிருந்தேன்.(32) ஓ! பிரம்மா, உம்மால் செயலில் நிறுவப்பட்ட இந்த மூன்று கருவிகளால் நான் குற்றமேதும் இழைத்திருந்தால் என்னை மன்னிப்பதே உமக்குத் தகும், இந்தச் சாபத்திற்கு ஒரு முடிவு ஏற்படட்டும்.(33) ஓ! தேவர்களின் தலைவா, சான்றேதும் நீர் கண்டால், குற்றமேதும் இல்லாமலே பெற்ற சாபத்தினால் சோர்வடைந்திருக்கும் என்னிடம் இரக்கம் காட்டுவீராக.(34) ஓ! தலைவா, உமது ஆணையின் பேரில் இந்தக் கங்கை பூமியில் இறங்குவாள். நான் குற்றவாளியாக இருந்தாலும், அப்பாவியான எனக்கு நீர் இரக்கம் காட்ட வேண்டும்" என்றான்.(35)

அப்போது, விளைவுகளை அறியாத தேவர்களின் சாபத்தினால் கலங்கியவனும், அச்சமடைந்திருந்தவனுமான பெருங்கடலிடம் நான், இனிய சொற்களில், "ஓ! பெரும் மனம் கொண்டவனே, ஓ! ஆறுகளின் தலைவா, சுகமாயிருப்பாயாக, அஞ்சாதே, நான் உன்னால் நிறைவடைந்தேன். இனி இந்தச் சாபத்தில் உள்ள எதிர்கால நோக்கத்தைக் கேட்பாயாக.(36,37) ஓ! தலைவா, நீ இந்தக் கடலுடலைத் துறந்து, பாரத குலத்திற்குச் செல்வாயாக. அப்போது, ஓ! பெருங்கடலே, ஓ! பெரும் மன்னா, நீ அரச அருளால் {கம்பீரத் தோற்றத்தால்} சூழப்படுவாய். ஓ! நீரின் தலைவா, நான்கு வர்ணங்களையும் ஆட்சி செய்து நீ நிறைவையடைவாய்.(38,39) ஆறுகளில் முதன்மையானவளான இந்தக் கங்கை ஓர் அழகிய பெண் வடிவை ஏற்று உனக்குத் தொண்டு செய்வாள்.(40) என் ஆணையின் பேரில் ஜானவியுடன் {கங்கையுடன்} விளையாடும் நீ மனிதக் கவலையை அனுபவிக்க மாட்டாய்.(41) ஓ! பெருங்கடலே, விரைவில் கங்கையைத் திருமணம் செய்து கொண்டு என் ஆணையை நிறைவேற்றுவாயாக.(42) வஸுக்கள் தேவலோகத்தில் இருந்து கடத்தப்பட்டு, ரஸாதளத்திற்குள் நுழைந்திருக்கின்றனர். அவர்களை சந்ததியாகப் பெற நான் உன்னை நியமிக்கிறேன்.(43) ஜானவி {கங்கை}, நெருப்பைப் போன்ற பிரகாசமான எட்டு வசுக்களை சந்ததியாகப் பெறுவதற்காக அவர்களைக் கருவில் கொண்டு, தேவர்களின் இன்பத்தைப் பெருக்கட்டும்.(44) வசுக்களைப் பிள்ளைகளாகப் பெற்று, குரு குலத்தைப் பெருகச் செய்து, உன் மனித உடலைக் கைவிட்டு, மிக விரைவில் நீ உன்னுடைய கடலுடலை ஏற்பாய்" என்றேன்.(45)

ஓ! தேவர்களில் முதன்மையானவர்களே, இவ்வாறு பழங்காலத்தில் பூமியின் எதிர்காலச் சுமையைக் கண்டு, தேவலோகத்தில் வாழும் வசுக்கள் பிறக்கப் போகும் சந்தனுவின் குல வித்துகளை உங்கள் நன்மைக்காக நான் விதைத்தேன்.(46,47) இப்போதும் கங்கையின் மகன் {மகனாகப் போகும்} பீஷ்மன் எட்டாம் வஸுவாக தேவலோகத்தில் இருக்கிறான். மற்ற ஏழு வசுக்களும் {கங்கைக்குப் பிறந்து இறந்து} தங்கள் தங்கள் உலகங்களுக்குச் சென்றுவிட்டனர். விஷ்ணு மட்டுமே இப்போது வாழ்கிறான்[2].(48) மன்னன் சந்தனு தன் இரண்டாம் மனைவியிடம் {சத்யவதியிடம்} பெரும் பிரகாசம் கொண்டவனும், பலமிக்கவனுமான மன்னன் விசித்ரவீரியனைப் பெறுவான்.(49) விசித்ரவீரியனின் இரண்டு மகன்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு ஆகிய இருவரும் உலகில் புகழ்பெற்ற இரண்டு மன்னர்களாக இருப்பார்கள்.(50) அவர்களில் பாண்டு, இளமை நிறைந்தவர்களும், அழகியருமான இரண்டு மனைவிகளைக் கொண்டிருப்பான். முதலாமவள் குந்தி என்ற பெயரையும், இரண்டாமவள் மாத்ரி என்ற பெயரையும் கொண்டிருப்பர். அவ்விருவரும் தேவர்களின் மனைவியரைப் போன்றவர்களாக இருப்பர்.(51) திருதராஷ்டிரன், காந்தாரி என்ற பெயரில் ஒரு மனைவியைக் கொள்வான். அவள் தன் கணவனுக்கு உறுதியாகத் தொண்டு செய்ததால் உலகில் புகழ்பெற்றவளாக இருப்பாள்[3].(52) 

[2] ஒப்புநோக்கப்படும் மற்ற இரு பதிப்புகளிலும் "விஷ்ணு மட்டுமே இப்போது வாழ்கிறான்" என்ற வாக்கியம் இல்லை. எட்டாம் வஸுவான பீஷ்மன் மட்டுமே பூமியில் வாழ்வான் என்றிருக்க வேண்டும். அவ்வாறே மற்ற இரு பதிப்புகளிலும் இருக்கிறது.

[3] இங்கே 49 முதல் 52ம் ஸ்லோகம் வரை கடந்த கால வழக்கிலேயே மன்மதநாததத்தரின் உரை இருக்கிறது. தேசிராஜுஹனுமந்தராவ் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் எதிர்கால வழக்கில் இருக்கிறது. எதிர்கால வழக்கே சரியாகத் தோன்றுவதால் நான் அவ்வாறே மாற்றி அமைத்திருக்கிறேன். இதை நோக்க விரும்புவோர் ஆங்கில மொழிபெயர்ப்பைக் காண்க.

இங்கே அவ்வீடு இரண்டு பகை தரப்புகளாகப் பிரியும், அவ்விரு மன்னர்களின் மகன்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் பிளவு ஏற்படும்.(53) இந்த மன்னர்களின் உட்பிளவுகளால், அரச குடும்பங்கள் அனைத்தும் அழிக்கப்படும். அண்ட அழிவின் போது ஏற்படுவதைப் போன்ற பேரச்சம் அப்போது மேலோங்கும்.(54) படைகளுடன் கூடிய மன்னர்கள் அனைவரும், ஒருவரையொருவர் கொல்லும்போதும், நகரங்களும் நாடுகளும் தங்களில் குடியிருப்பவர்களை இழக்கும்போதும், பூமி உய்வை அனுபவிக்கும்.(55) துவாபர யுகத்தின் முடிவில் படைகளுடன் கூடிய மன்னர்கள் அனைவரும் ஆயுதங்களால் அழிக்கப்படுவார்கள் என்று புராணங்களில் நான் படித்திருக்கிறேன். அப்போது சங்கரனின் பிறவிக்கூறானவனும் {அவதாரமும்}, நெருப்பாயுதத்துடன் கூடியவனுமான அஸ்வத்தாமன்,  இரவு உறக்கத்தில் நினைவிழந்தவர்களாகப் போரில் எஞ்சிக் கிடக்கும் மனிதகுலத்தையும் எரிப்பான்.(56,57) காலனைப் போன்றவனான அந்தக் கொடுஞ்செயல்புரிபவன் நிறுத்தும்போது, துவாபர யுகம் தொடர்பான இந்தக் கதையும் முடிவுக்கு வரும்.(58) சிவனின் கூறான அஸ்வத்தாமன், மறையும்போது, மஹேஸ்வரனின் யுகமான பயங்கரம் நிறைந்த கலியுகம் தொடங்கும்.(59) இந்த யுகத்தில் மனிதர்கள் பல கொடுமைகளைச் செய்வார்கள், அறத்தின் ஒரு பகுதி மட்டுமே தழைக்கும். வாய்மை மறைந்து, பொய்மை பெருகும்.(60) இந்த யுகத்தில் மனிதர்கள் மஹேஸ்வரனையும், ஸ்கந்தனையும் மட்டுமே வழிபடுவார்கள்; முதியவர்களும், நீண்ட வாழ்நாளைக் கொண்ட மனிதர்களும் பூமியில் இருக்க மாட்டார்கள்.(61) இவ்வுலகில் மன்னர்களுக்கு மிகச்சிறப்பான அழிவு ஏற்படப்போவதை இவ்வாறு நான் விளக்கினேன். எனவே, ஓ! தேவர்களே, உங்களுக்குரிய கூறுகளுடன் {அம்சங்களுடன்} தாமதமில்லாமல் பூமியில் இறங்குவீராக {அவதரிப்பீராக}.(62) குந்தியும், மாத்ரியும் தர்மனின் கூறுகளைக் கருவில் கொள்ளட்டும்[4], காந்தாரி, பிளவுகள் அனைத்தின் கருவியான கலியைக் கருவில் கொள்ளட்டும்.(63) விதியால் தூண்டப்படும் இம்மன்னர்கள் இரண்டு தரப்புகளாக அமைவார்கள், பூமியை அடைய விரும்பும் அவர்கள் போரை நாடுவார்கள்.(64) உலகங்கள் அனைத்தையும் தாங்கும் பூமி தன் மூல இயல்புக்குள் நுழையட்டும். புனிதமானவையும், நன்கறியப்பட்டவையுமான மன்னர்களின் வழிமுறைகள் இவ்வாறே உண்டாக்கப்பட்டன" என்றான் {பிரம்மன்}.(65) பெரும்பாட்டனின் சொற்களைக் கேட்ட பூமி, மன்னர்களுக்கு அழிவை ஏற்பாடு செய்த மகிழ்ச்சியில் காலனுடன் {காலத்தை அறிந்தவளாகச்} சென்றாள்.(66)

[4] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "குந்தி தர்மதேவனின் அம்சத்துடன் ஒரு மகனையும், மாத்ரி சில அவதாரங்களையும் பெறட்டும். அதே போல காந்தாரி, தொல்லையை உண்டாக்கும் கலியைப் பெறுவாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "குந்தி தர்மன் மற்றும் பிறரின் கூறுகளைப் பெறுவாள், மாத்ரியும் அவ்வாறே பெறுவாள். சச்சரவின் அடித்தளமான கலியின் கூறு காந்தாரியின் கருவறையில் பிறக்கும்" என்றிருக்கிறது.

அதன்பிறகு பிரம்மன், பகைவர்களைக் கொல்வதற்காக தேவர்களை அனுப்பினான். புராதன ரிஷியான நரன், பூமியைத் தாங்கும் (பாம்பு) சேஷன், சனத்குமாரர், சாத்யர்கள், அக்னி, பிற தேவர்கள், வருணன், வசுக்கள், சூரியன், சந்திரன், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ருத்திரர்கள், விஷ்வர்கள், அஷ்வினி இரட்டையர்கள் ஆகியோர் அனைவரும் தங்கள் தங்கள் கூறுகளில் பூமியில் இறங்குவார்கள்.(67-69) ஏற்கனவே நான் {மஹாபாரதம், ஆதிபர்வம், அம்சாவதார பர்வத்தில்} விளக்கியதைப் போலவே, தேவர்களின் கூறுகளான அந்த முதன்மையான புருஷர்கள், பெண்களின் மூலமாகவோ, அல்லாமலோ தைத்திர்கள் மற்றும் தானவர்களை அழிப்பவர்களாப் பூமியில் பிறவியை அடைந்தனர் {அவதரித்தனர்}. அவர்களில் சிலர் தங்கள் குடும்பங்களை ஆல மரங்களைப் போலப் பெருக்கினர். மேலும் சிலர் வஜ்ரத்தைப் போன்ற கடும் உடல்களைக் கொண்டவர்களாக இருந்தனர்.(70,71) அவர்களில் சிலர் பத்து லக்ஷம் யானைகளின் பலத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். சிலர் பேராறுகளைப் போன்று பலம் நிறைந்தவர்களாகவும், சிலர் கதாயுதங்கள், பரிகங்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கையாள வல்லவர்களாகவும் இருந்தனர்.(72) அவர்கள் அனைவரும் மலைகளின் சிகரங்களை நொறுக்கவல்லவர்களாக இருந்தனர். பரிகங்களைப் போன்ற கரங்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மனிதர்கள் விருஷ்ணி குலத்தில் பிறந்தனர்.  தேவர்கள், குரு மற்றும் பாஞ்சால குலங்களில் மன்னர்களாகப் பிறந்தனர். செழிப்பு மிக்க யது குடும்பங்களிலும், பிராமணர்களின் குடும்பங்களிலும், பக்திச் செயல்பாடுகளுடன்  பல வேள்விகளைச் செய்பவர்களாகவும், சாத்திரங்களை நன்கறிந்தவர்களாகவும், வலிமைமிக்க வில்லாளிகளாகவும், வேத சடங்குகள் நோற்பவர்களாகவும், செழிப்பையும், சாதனைகளையும் கொண்டவர்களாகவும் அவர்கள் பிறந்தனர்.(73-75) கோபமடையும்போது, மலைகளையும், ஆறுகளையும், பூமியின் பரப்பையும் அசைக்கக் கூடியவர்களாகவும், வானத்தில் எழக் கூடியவர்களாகவும், பெருங்கடலையே கலங்கடிக்கக்கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தனர்.(76) 

நிகழ்காலம், கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தை ஆள்பவனும், பெரும்பாட்டனுமான பிரம்மன், தேவர்களுக்கு இவ்வாறு ஆணையிட்டு, உலகங்கள் அனைத்தையும் நாராயணனிடம் கொடுத்துவிட்டு அமைதியை அடைந்தான்.(77) எல்லாம்வல்லவனும், புனிதமான புகழைக் கொண்டவனும், செல்வம் மற்றும் உயிரின் தலைவனும், நாராயணனுமான விஷ்ணு, பூமியில் யயாதியின் வழித்தோன்றலும், நுண்ணறிவுமிக்கவனுமான வஸுதேவனின் குடும்பத்தில் {கிருஷ்ணனாகப்} பிறந்த பிறகு, உயிரினிங்களின் நன்மைக்காக என்ன செய்தான் என்பதை மீண்டும் கேட்பாயாக" என்றார் {வைசம்பாயனர்}.(78,79)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 53ல் உள்ள சுலோகங்கள் : 79
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்