(பாணாஸுராக்யானம்)
The great asura | Vishnu-Parva-Chapter-173-117 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பாணாசுரன் வரலாறு; போரில் பெருவிருப்பம் கொண்ட பாணன்; சிவன், முருகன் ஆகியோரின் உதவியைப் பெற்றது; கும்பாண்டனின் கவலை...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, நுண்ணறிவுமிக்கவனான அந்த யது மன்னனின் {கிருஷ்ணனின்} ஒப்பற்ற செயல்கள் பலவற்றை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.(1) ஓ! அறவோரில் முதன்மையானவரே, ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, முன்னர் உம்மால் சொல்லப்பட்டதைப் போலப் பாணனிடம் வாசுதேவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை இப்போது கேட்க விரும்புகிறேன்.(2) ஓ! பிராமணரே, சங்கரனின் பாதுகாப்பையும், அந்தத் தேவதேவனின் மகன் என்ற உரிமையையும், குஹனுடைய {முருகனுடைய} பாதுகாப்பையும் அந்த அசுரனால் பெற முடிந்தது எவ்வாறு? அவனால் கணங்களுடன் வாழ முடிந்தது எவ்வாறு?(3,4) பெருஞ்சக்தி வாய்ந்த பலியின் மகனான அவன் {பாணன்}, தன் சகோதரர்களில் {பலியின் நூறு மகன்களில்} மூத்தவனும், நூற்றுக்கணக்கான தெய்வீக ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் கரங்களைக் கொண்டவனும்,(5) பேருடல் படைத்த எண்ணற்ற அசுரர்களால் சூழப்பட்டவனும், நூற்றுக்கணக்கான மாயைகள் செய்வதில் தேர்ச்சியடைந்தவனும் ஆவான். போரில் விருப்பம் கொண்டவனும்,(6) கோபத்தால் தூண்டப்பட்டவனுமான அந்தப் பாணன், போரில் வாசுதேவனால் வீழ்த்தப்பட்டது எவ்வாறு? கேசவன் அவனை உயிருடன் விட்டது ஏன்?" என்று கேட்டான்.(7)