(பானுமதீஹரணம் நிகும்பவதஷ்ச)
Nikumbha carries away Bhanumati | Vishnu-Parva-Chapter-147-091 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பிரத்யும்னன் செயலுக்குப் பழிதீர்க்க பானுமதியை அபகரித்த நிகும்பன்; நிகும்பனுடன் நடந்த கடும்போர்; நிகும்பன் வதம்; பானுமதியை சகாதேவனுக்கு மணமுடித்துக் கொடுத்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அறம்சார்ந்த யாதவர்கள் இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்தபோது, கொடியவனும், அணுகப்படமுடியாதவனும், தேவர்களின் பகைவனுமான தானவன் நிகும்பன், தன்னழிவை விரும்பி, ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து பானுமதி என்ற பெயரைக் கொண்டவளான பானுவின்[1] அழகிய மகளை அபகரித்தான்.(1,2) ஓ! வீரா, முற்காலத்தில் அவனது சகோதரனான வஜ்ரநாபனின் மகள் பிரபாவதியைப் பிரத்யும்னன் கடத்தியிருந்தான், வஜ்ரநாபனும் கொல்லப்பட்டான். மாயைகளில் திறன்மிக்க அவன் {நிகும்பன்}, இந்தப் பழைய பகையை நினைத்து, தன்னை மறைத்துக் கொண்டு யாதவப் பெண்களைக் குழம்பச் செய்து பானுமதியை அபகரித்துச் சென்றான்.(3,4)
