Wednesday 7 July 2021

பிரம்ம வாக்கியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 43

(கஷ்யபாதீந்ப்ரதி ப்ரஹ்மவாக்யம் க்ஷிரோதஸ்யோத்தரே தீரே கஷ்யபாதேர்கமநம் தபஷ்சர்யா ச)

Brahma instructs the devas to go to Vishnu | Bhavishya-Parva-Chapter-43 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் :  பதிவின் சுருக்கம்: பிரம்மனின் சொற்கள்; கசியபரும், அதிதியும் வேண்டிய வரம்; பாற்கடலின் வடகரையில் தவமிருந்த தேவர்கள்...

Lord Vishnu and Goddess Lakshmi in Milk ocean Ksheer Sagar Parkadal

பிரம்மன் {தேவர்களிடம்}, "பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களே, உங்கள் வரவின் நோக்கத்தை நான் அறிந்தேன். ஓ! முன்னணி சூரர்களே, உங்கள் நோக்கம் நிறைவேறும்.{1} தானவர்களில் {அதிதியின் மகன்களின் வழிதோன்றலில்} முதன்மையான பலியை வெல்லப்போகும் அண்டத்தின் தலைவன், மூவுலகங்களையும் வெல்பவன் மட்டுமல்லாமல், தேவர்களாலும் வழிபடத்தகுந்தவனாக இருக்கிறான்.{2,3}

அண்டத்தின் நித்திய பிறப்பிடமான அவனே உலகங்களின் விதி சமைப்பவன் ஆவான். மக்கள் அவனை எல்லாம்வல்லவன் என்றும், ஹேமகர்பன் என்றும் அழைக்கிறார்கள்.{4} அசுரத்தலைவன் பலியையும், உலகையும் அழிக்கும் பெருந்தலைவனே, அனைத்திற்கும் பிறப்பிடமும், நம்மில் மூத்தவனும் ஆவான்.{5} அண்டத்தின் ஆன்மாவாக இருக்கும் அந்த யோகி, சிந்தனைக்கு அப்பாற்பட்டவன் ஆவான்.{6} தேவர்களும் அந்தப் பரமனை அறியமாட்டார்கள்; ஆனால் தேவர்களையும், நம்மையும், மொத்த அண்டத்தையும் அந்தப் புருஷோத்தமன் அறிவான்.{7} அவன் அருளால் நாம் நலமாக இருக்கிறோம். மக்கள் இவ்வுலகில் அவனுடன் ஐக்கியத்தை நிறுவி கடுந்தவம் செய்கிறார்கள்.{8}

ஓ! தேவர்களே, வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சிறந்த பகுதியான பாற்கடலின் வடகரையில் அமுதம் இருப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். அங்கே சென்று தற்கட்டுப்பாட்டுடன் கடந்தவம் பயில்வீராக.{9} அங்கே மிகப் புனிதமானவையும், மழைக்காலத்தில் நீருண்ட மேகங்களின் முழக்கம் போலக் கம்பீரமானவையும், பிரம்மம் தொடர்பானவையுமான தூய சொற்களைக் கேட்பீர்கள்.{10} பாவங்களை அழிக்கவல்ல அந்தத் தெய்வீக வாக்கு, தூய ஆன்மா படைத்த தேவதேவனின் வாக்காகும்.{11} உங்கள் நோன்பு நிறைவடையும்வரை அந்தப் பேரண்ட வாக்கை நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.{12} ஓ! தேவர்களே, என்னிடம் வந்திருக்கும் உங்களுக்கு வரங்களைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். என்ன வரம் வேண்டும் கேளுங்கள்" என்றான்.{பிரம்மன்}.{13-15}

கசியபரும், அதிதியும் யோகத்துடன் அடையாளங்காணப்படுபவனை {யோகாத்மனான பிரம்மனை} வணங்கி, அவனது பாதங்களைத் தீண்டி, "தலைவன் எங்கள் மகனாகப் பிறக்கட்டும்" என்ற வரத்தைக் கேட்டனர்.

அவர்கள் பெரும் மதிப்புடன் இவ்வாறு சொன்ன போது, பிரம்மன், "அவ்வாறே ஆகட்டும். அவன் தங்கள் தம்பியாகட்டும் என்று தேவர்கள் அவனிடம் வேண்டட்டும், அவனும் ஏற்பான்" என்றான்.{16-18}

இந்த வரத்தை அவனிடம் அடைந்து தங்கள் காரியத்தில் வெற்றியை அடைந்த தேவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.{19} சூரர்கள், கசியபர், அதிதி ஆகியோர் "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி பிரம்மனின் பாதங்களைத் தீண்டி வடதிசைக்குச் சென்றனர்.{20} தெய்வீக பிரம்மனால் ஆணையிடப்பட்டவாறே அவர்கள் பாற்கடலின் வடகரையைக் குறுகிய காலத்திற்குள் அடைந்தனர்.{21} அந்த முன்னணி தேவர்கள், பல பெருங்கடல்களையும், மலைகள், ஆறுகளையும் கடந்து சென்று சூரியனும், உயிரினங்களும் அற்றதும் இருளால் மறைக்கப்பட்டதுமான அந்தப் பயங்கரப் பகுதியைக் கண்டனர்.{22}

சூரர்களும், கசியபரும் அமுதம் இருந்த இடத்தை அடைந்து, ஆயிரங்கண்களைக் கொண்டவனும், நுண்ணறிவுமிக்க யோகியும், தலைமை சக்திகள் அனைத்தையும் கொண்டவனுமான நாராயணனை நிறைவடையச் செய்யும் நோக்கில் பல வருடங்கள் கடுந்தவங்களைச் செய்தனர்.{23,24} சூரர்கள், பிரம்மசரிய நோன்பையும், மௌன விரதத்தையும் நோற்று, தங்கள் புலன்களையும், அசைவுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கே கடுந்தவம் இருந்தனர்.{25} தெய்வீகரான கசியபர், தலைவன் நாராயணனை நிறைவடையச் செய்வதற்காக வேத மந்திரத் துதிகள் பலவற்றை ஓதத் தொடங்கினார்" என்றார் {வைசம்பாயனர்}.{26}(1-26))

பவிஷ்ய பர்வம் பகுதி – 43ல் உள்ள சுலோகங்கள் : 26

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்