(பித்ரு கல்பம் - 4 | பூஜனீயோபாக்யானம் - சடகாக்யானம்)
Account of Brahmadatta and the strange bird | Harivamsa-Parva-Chapter-20 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : பிருஹத்க்ஷத்ரனின் குலத்தில் தோன்றிய நீபனின் நூறு மகன்கள்; நீபனின் குலத்தில் தோன்றிய அணுஹனின் மகன் பிரம்மதத்தன்; பிரம்மதத்தனின் குலத்தில் தோன்றிய மற்றொரு நீபனால் அந்த நீப குலத்துக்கு நேர்ந்த பேரழிவு; அஜமீடனின் குலத்தில் தோன்றிய கிருதன்; கிருதனின் மகன் உக்ராயுதன்; உக்ராயுதனால் அழிந்த நீபர்கள்; சத்யவதியைத் தனக்கு மனைவியாகக் கொடுக்குமாறு பீஷ்மரை மிரட்டிய உக்ராயுதன்; உக்ராயுதனிடம் இருந்த சக்கராயுதம்; உக்ராயுதனைக் கொன்ற பீஷ்மர்; பிரம்மதத்தன் மற்றும் பூஜனி என்ற பறவையின் கதை...
மார்க்கண்டேயர் {பீஷ்மரிடம்}, "அந்தத் தேவன் {சனத்குமாரர்} மறைந்ததும், அந்தத் தலைவனின் சொற்களுக்கிணங்க நான் தெய்வீகப் பார்வையுடன் கூடிய பகுத்தறிவு ஞானத்தை {பவ்யவிஜ்ஞானத்தை} அடைந்தேன்.(1) ஓ! கங்கையின் மைந்தா, அந்தத் தலைவர் (சனத்குமாரர்) என்னிடம் சொன்னவர்களும், கௌசிக வழித்தோன்றல்களுமான அந்தப் பிராமணர்கள் அனைவரையும் நான் குருக்ஷேத்திரத்தில் கண்டேன்.(2) அவர்களில் ஏழாவது பிராமணரே, மன்னன் பிரம்மதத்தனானான். அவனது பெயர், குணம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் மூலம் அவன் பித்ருதத்தன் {பித்ருவர்தி} என்ற பெயரில் கொண்டாடப்படலானான்.(3) மன்னர்களில் முதன்மையானவனான அணுஹன் {அணுஹு}, காம்பில்யம் என்ற பெயரைக் கொண்ட ஒரு சிறந்த நகரத்தில், சுகரின் மகளான கிருத்வியிடம் {கீர்த்திமதியிடம்} அந்த ஏகாதிபதியை {பிரம்மதத்தனைப்} பெற்றான்" என்றார்".(4)
