(கம்ஸயோஷிதாம் விலாபம்)
Lamentations of Kansa's wives | Vishnu-Parva-Chapter-86-031 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கம்ஸனின் மனைவியரான அஸ்தியும், பிராப்தியும், அன்னையான பத்மாவதியும் அழுது புலம்பியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கம்ஸனின் மனைவியர்[1], கொல்லப்பட்டவனாக ஒளிமங்கும் கோள்களைப் போல வீழ்ந்து கிடக்கும் தங்கள் கணவனைச் சூழ்ந்து கொண்டனர்.(1) அவனது மனைவியர், சிங்கம்போன்ற தங்கள் அரசக் கணவன் கொல்லப்பட்டுப் பூமியில் கிடப்பதைக் கண்டு அழுது புலம்பத் தொடங்கினர்.(2) {அவர்கள்} "ஓ! நீண்ட கரங்களைக் கொண்டவரே, வீர நோன்புகளை எப்போதும் நோற்கும் உம்மைப் போன்ற வீரனின் மனைவியான நாங்கள் அனைவரும், நீர் கொல்லப்பட்டதால் நண்பர்கள் அற்றவர்களாகவும், நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டவர்களாகவும் ஆனோம்.(3) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, உமக்கு விதிக்கப்பட்ட இந்த மரணத்தைக் கண்டு நாங்கள் நம் உறவினர்களோடு சேர்ந்து அவலநிலையில் அழுது புலம்புகிறோம்.(4) ஓ! பெரும்பலம்வாய்ந்த தலைவா, நீர் மரணமடைந்ததால் உம்மால் கைவிடப்பட்ட நாங்கள் வேரறுந்தவராக இருக்கிறோம்.(5) ஐயோ, கலவியாசையால் பீடிக்கப்பட்டுக் கோபத்தில் கொடிகளைப் போல நடுங்கும் எங்களை இனி படுக்கையறைக்கு அழைத்துச் செல்லப்போவது யார்?[2](6)
