(கிருஷ்ணம் ப்ரதி ருக்மிண்யா꞉ புத்ரப்ரார்தநாகதநம்)
Rukmini asks Krishna for a son | Bhavishya-Parva-Chapter-48 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனிடம் பிள்ளை வரம் வேண்டிய ருக்மிணி; கைலாச மலையில் மஹாதேவனைச் சந்திக்கத் தீர்மானித்த கிருஷ்ணன்; பதரிகாசிரமத்தின் மகிமை...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஒரு காலத்தில் விஷ்ணுவும், தேவதேவனுமான பகவான் ஜனார்த்தனன், சங்கரனைச் சந்திக்கக் கைலாச மலைச் சிகரத்திற்குச் சென்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.(1) தத்துவங்களில் சிறந்தவர்களும், தவச் சக்தி கொண்டவர்களுமான நாரதர் உள்ளிட்ட பெரும் தவசிகள் பலரும், செந்நீல வண்ணனான மஹாதேவனை தரிசிக்கச் சென்றனர்.(2) விப்ரரே, அங்கே நீண்ட காலத்திற்கு முன்பு கேசவன் உத்தம தவம் செய்து தேவதேவனான சங்கரனை அர்ச்சித்து வழிபட்டான் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.(3) அங்கே ஆதி தேவர்களான அவ்விருவரும் {ஹரியும், சிவனும்} ஒருவரையொருவர் தரிசித்தனர். இந்திரனின் தலைமையிலான தேவர்களும் அங்கே சென்று சங்கரனையும், ஹரியையும் வழிபட்டனர்.(4)






