Thursday 24 June 2021

தக்ஷ வேள்வியின் அழிவு | பவிஷ்ய பர்வம் பகுதி – 28

(தக்ஷயஜ்ஞவிநாஷம்)

Siva obstructs Daskha's Sacrifice and Hari fights with him | Bhavishya-Parva-Chapter-28 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : குதிரைவேள்வி செய்த தக்ஷன்; ருத்திரனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் நடந்த போர்; அவிர்ப்பாகம் பெற்ற ருத்திரன்; பௌஷ்கரப் புராணம்...

Daksha and Lord Shiva

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பாரதா, அதன் பிறகு அவர்கள் அனைவரும் அமைதியுடன் வாழ்ந்தனர், செழிப்பான அரசும் நிலைநாட்டப்பட்டது. அந்நேரத்தில் ஆன்ம அறிவியலின் அறிவைப் பொறுத்தவரையில் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாததால் அவர்கள் ஒன்றாகவே ஆத்ம ஞானத்தை விளைவித்தனர். மறுபுறத்தில் பலர் அழுதனர்; மனிதர்களால் அளிக்கப்படும் வேள்விக் காணிக்கைகளைத் தேவர்கள் ஏற்றனர்.(1,2)

தெய்வீக பிருஹஸ்பதி, தக்ஷ பிராசேதஸிடம் குதிரை வேள்வி செய்யுமாறு அறிவுறுத்திவிட்டு, ரிஷிகள் சூழ அங்கே வந்தார்.{3} தக்ஷன் அனைவருக்கும் தாய்வழி தாத்தன் ஆவான். எனவே, ஆன்ம அறிவற்ற தக்ஷனின் யஜ்ஞத்தில் ருத்திரன் நந்தியுடன் சேர்ந்து தன்னாலான தடைகளை ஏற்படுத்தினான்.{4} ருத்திரன் தானே விரும்பி தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டான். {இதன் மூலம்} பெரும் தர்மாத்மாவான நந்தி புருஷனாகப் பிறந்தான்.{5} வேதங்களில் சிறப்பாகப் பாடப்பட்டுள்ள நித்திய பிரம்மத்தை ருத்திரன் தன் யோக சக்தியின் மூலம் வெளிப்படுத்தினான்.{6}(4-6)

ஸ்வரூபன், அரூபன் {சாப்யரூபன்}, விரூபாக்ஷன், கடோதரன், ஊர்த்வநேர்தன், மஹாகாயன், விகடன், வாமனன்,{7} ஷிகி, ஜடி, திரிலோசனன் {திரையக்ஷன்}, சங்குகர்ணன், சீரதாரி, சர்மி முதலிய பல்வேறு கணங்களும், பாசக்கயிறுகளைத் தரித்தவர்களும், தண்டபாணிகளும் {முத்கரபாணிகளும்},{8} மணிகளைத் தரித்தவர்களும் {ஸகண்டாதாரிகளும், முஞ்ஜமேகலதாரிகளும்}, குண்டலங்களையும், கடகங்களையும் அணிந்தவர்களும் {கடககுண்டலதாரிகளும்},{9} டிண்டிகள், பேரிகைகள், புல்லாங்குழல்கள், மிருதங்கங்கள் ஆகியவற்றைச் சுமந்தவர்களும் சூழ தக்ஷனின் வேள்வியைத் தடுக்க ருத்திரன் விரைந்து சென்றான்.{10}

பூதகணங்கள் தங்கள் கைகளில் சங்கையும், முரஜத்தையும் {முரசையும்}, தாலபலத்தையும் கொண்டிருந்தனர். திரிசூலத்தையும், கடும் ஆயுதங்கள் பிறவற்றையும் தரித்தவனும், வேள்வி செய்பவர்களால் வழிபடப்படுபவனுமான ருத்திரன், அந்த வேள்வியில் எரியும் தழலைப் போல ஒளிர்ந்தான். அழிவை ஏற்படுத்த எரியும் நெருப்பானது {காலாக்னியானது}, அண்டத்தையே விழுங்கிவிடப் போவதாகத் தெரிந்தது.{11,12} யுகமுடிவில் காலாக்னியானது மொத்த அண்டத்தையும் உடனே எரித்துவிடுவதைப் போல, நந்தியும், பிநாகபாணியும் {சிவனும்} அந்தச் சிறந்த வேள்வியை அழிக்க இருந்தனர்.{13} இரவுலாவிகள் {கணங்கள்}, மரவுரி தரித்த முனிவர்களை அச்சுறுத்தும் வகையில் வேள்வியூபங்களைப் பிடுங்க விரைந்து சென்றன.{14} தாமிரக் கண்களைக் கொண்ட பிரமதர்கள், தங்கள் நாவுகளால் வேள்விக் காணிக்கைகளை {ஹவிஸுகளைப்} பருகினர்.{15} யானைகளின் துதிக்கைகளைப் போன்ற நீண்ட நாவுகளைக் கொண்ட பிறர், விலங்குகளை விழுங்கத் தொடங்கினர். சிலர் யூபங்களைப் பிடுங்கி விலங்குகளைத் தாக்கினர்.{16} சிலர் நெருப்புக்குள் நீரை வீசிச் சிரித்தனர்; ஜவா மலர்களைப் போல ஒளிரும் சிவந்த கண்களுடன் கூடிய சிலர் சோமச் சாற்றை அபகரித்துச் சென்றனர். சிலர், தாமரைத் தண்டுகளுக்கு ஒப்பான தங்கள் கைகளால் தர்ப்பை புற்களை வெட்டினர்.{17} சிலர், வேள்விஸ்தம்பங்களை நொறுக்கினர், வேறு சிலர் கலசங்களை வீசி எறிந்தனர். வேள்விக்களத்தை அழகூட்ட நிறுவப்பட்ட பொன்மரங்களை {காஞ்சநாந்விருக்ஷங்களைச்} சிலர் வீழ்த்தினர்.{18} சிலர், கணைகளைக் கொண்டு பொன் பாத்திரங்களை நொறுக்கினர். சிலர் பாத்திரங்களை அழித்தனர், வேறு சிலர் அரணியைப் பிடுங்கினர்.{19} சிலர் வேள்விப் பீடங்களை நொறுக்கினர், சிலர் அரிசிப் பிண்டங்களை உண்டனர், சிலர் தங்கள் நகங்களால் பல்வேறு பொருட்களை அழித்தனர்.{20} இவ்வாறு பகலும், இரவும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அந்தப் பெரும் வேள்வியானது,பெருங்கடலைப் போல முழங்கத் தொடங்கியது.{21}

மறுபுறம் பெருஞ்சக்திவாய்ந்த மஹாதேவன், சுயம்புவான பிரம்மனால் முன்பு தனக்கு வழங்கப்பட்டதும், கீசக மூங்கிலாலானதுமான வில்லை எடுத்துக் கொண்டு, அதில் கணைகளைப் பொருத்தினான்.{22} பிறகு அவன், தனது முழங்கால்களால் வில்லை வளைத்து அந்தப் பெரும் யஜ்ஞத்தைத் தாக்கினான்.{23} கணைகளால் காயமடைந்த அந்தப் பெரும் வேள்வி வானத்தில் தாவிக் குதித்தது; பிறகு ஒரு மானின் வடிவை ஏற்று உரக்க கதறியபடியே பிரம்மனை அடைந்தது.{24} கணைகளால் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்ட வேள்வியானவன், பூமியில் எங்கும் உறைவிடத்தையோ, அமைதியையோ அடையாதவனாகப் பிரம்மனின் புகலிடத்தை நாடினான்.{25}(7-25)

பிரம்மன், மானின் வடிவில் இருந்த வேள்வியிடம், இனிமையான, மங்கலமான, அடக்கமான, சக்திமிக்க, அழுத்தமான சொற்களில், "ஓ! பெரும் மானே, இவ்வாறே நீ வானத்தில் நிலைத்திருப்பாயாக.{26} பல்வேறு வண்ணங்களையும், வளைந்த முடிச்சுகளையும் கொண்ட கணையால் நீ வீழ்த்தப்பட்டாய். எனவே நீ சோமனுடன் சேர்ந்து கிரகங்களுக்குத் தலைமையாக இருக்கும் நித்தியனான ருத்ரனுடன் வாழ்வாயாக. வானத்தில் இயக்கத்தை அடைந்து நட்சத்திரங்களுடன் சேர்வாயாக.{27,28} ஒளியமைப்புகளில் {ஜோதிகளில்} நீ துருவனாக இருப்பாயாக. உன் காயத்தில் இருந்து வெளியேறுவதும், நீ ஓடிக் கொண்டிருப்பதன் விளைவால் வானத்தில் வழிந்து கொண்டிருப்பதுமான இந்தத் தெய்வீகக் குருதி பல்வேறு வண்ணங்களை ஏற்றுக் கேது லோகமாகக் கொண்டாடப்படட்டும். மழைக்காலத்தில் உயிரினங்களுக்கு அது மழைக்கான அடையாள வடிவமாகட்டும்.{29,30} உயிரினங்கள் அதைக் கண்டு மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ அடையட்டும். புலன்களில் அஃது ஓய்ந்திருப்பதன் காரணமாக வானத்தில் இந்திர வில் {வானவில்} என்ற பெயரில் அழைக்கப்படும்" என்றான் {பிரம்மன்}.{31}

ஓ! மன்னா, மேலும் அவன் {பிரம்மன், மானின் வடிவில் இருந்த வேள்வியிடம்}, "மனிதர்களின் கண்கள் அதை ஆச்சரியத்துடன் பார்க்கும். அஃது அற்புதமானதாக, பல வண்ணங்களைக் கொண்டதாக இருக்கும். மேலும் அது மனத்தால் சரியாக வகுக்கப்பட்டதாக இருக்கும்.{32} பிரம்மத்தை உணரும் இதய வானில் அது பெயரால் மட்டுமே அறியப்படும். அஃது இரவில் புலப்படாது. இந்த அற்புத நிகழ்வு பகலின் முதல் பகுதியிலேயே குறிப்பாகக் காணப்படும்.{33} அது பூமியில் இருந்து மேலே எழுந்து வானில் மறையும். அந்த நேரத்தில் வில் தரித்த ருத்திரனிடம் கொண்ட அச்சத்தில் நூற்றுக்கணக்கான தக்ஷ பிரசேதஸ்கள் ஒரே நேரத்தில் தப்பி ஓடுவார்கள்" என்றான் {பிரம்மன்}.{34}

யுகமுடிவில் தோன்றும் பிரம்மதண்டம் போல எரியும் பினாகையுடன் கூடிய நந்தி மற்ற ருத்திரர்களுடன் சேர்ந்து நின்றான்.{35} பெருந்தோள்களைக் கொண்ட விஷ்ணு, ஒரு கையில் பெரும் வில்லுடனும், மறு கையில் சக்கரத்துடனும் அங்கே நின்றான்.{36} ருத்திரனுடன் போரிட விரும்பும் அனைவருக்கும் முன்பு, மற்றொரு கையில் சங்கு மற்றும் கதாயுதத்துடனும், நான்காவது கையில் வாளுடனும் விஷ்ணு நின்று கொண்டிருந்தான்.{37}(26-37) அதன் பிறகு விஷ்ணு, தன் சாரங்க வில்லையும், உலகில் ஒப்பற்ற சங்கையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, தன் படைவீரர்களுடன் சேர்ந்து போரக்களத்தின் முகப்பில் நின்றான்.{38} அவன், தன் கையுறைகளையும், கவசங்களையும் அணிந்து கொண்டு சந்திரனுடன் கூடிய பெருங்கடலைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.{39}

பிரகாசமிக்க ஆதித்யர்களும், வசுக்களும் தங்கள் தெய்வீக ஆயுதங்கள் பலவற்றுடன் நாராயணனைச் சுற்றி நின்றனர்.{40} மருத்துகளும், விஷ்வர்களும் ருத்திரனின் பக்கம் நின்றனர். கந்தர்வர்கள், கின்னரர்கள், நாகர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள் ஆகியோரும்,{41} தண்டக்கோலைப் புறந்தள்ளிய முனிவர்களும் இரு தரப்புக்கும் நன்மையை விரும்பினர். உலகங்கள் அனைத்தின் நன்மையை விரும்பிய அவர்கள், அண்ட அமைதிக்காகத் தலைவனின் பெயரைத் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருந்தனர்.{42}

போர்க்களத்தின் முன்னணியில் நின்ற ருத்திரன், கூரிய கணைகளைக் கொண்டு விஷ்ணுவின் மார்பையும், மூட்டுகளையும் தாக்கினான்.{43} அனைவரின் ஆன்மாவாகவும், பிறப்பிடமாகவும் இருக்கும் விஷ்ணு இதனால் கலக்கமேதும் அடையவில்லை. அவன் ஆறு புலன்களையும் கொண்டிருந்தாலும் அவனது மனம் கோபத்தால் பீடிக்கப்படவில்லை.{44} அப்போது விஷ்ணு, கணைகளைப் பொருத்தி தன் வில்லை வளைத்தான். பிரம்மாயுதத்தைப் போன்ற அந்தக் கணையைக் கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் ருத்திரனின் மார்பில் ஏவினான். வஜ்ரத்தால் மந்தர மலை அசைந்தாலும் அந்தக் கணையால் காயமடைந்த மஹாதேவன் நடுங்கினானில்லை.{45,46} நித்தியனான விஷ்ணு திடீரெனக் குதித்தெழுந்து ருத்திரனின் தொண்டையைப் பற்றினான், அதன் விளைவாகவே அந்தத் தேவன் நீலத்தொண்டை கொண்டவன் {நீலகண்டன்} என்ற பட்டப்பெயரைப் பெற்றான்.{47}(38-47)

விஷ்ணு, "பிறப்பும், இறப்பும் அற்றவன் நீ. என்னைப் பொறுத்துக் கொள்வாயாக. அனைத்து உயிரினங்களுக்கும், சாத்திரங்களுக்கும் ஆசான் நீ. உன்னை நான் அறிவேன்" என்றான்.(48)

ஓ! பரதனின் வழித்தோன்றலே, செயல்கள் அனைத்தின் காரணனாகவும், எல்லையற்ற தன்மையால் பூதங்கள் அனைத்திலும் மிகச்சிறந்தவனாகவும் அந்தத் தலைவனே இருக்கிறான்.{49} அவனே அண்டத்தின் பொருள் காரணனாகவும், அதை விளைவிக்கும் காரணனாகவும் இருக்கிறான், அவன் மிக மங்கலமான பணிகளைச் செய்தவன் ஆவான்.{50} அப்போது வானத்தில் இருந்து, சித்தர்களின் வாயில் வெளிவந்த "ஓ! நித்திய தேவா, உன்னை வணங்குகிறோம்" என்ற மிக அற்புதமான சொற்களை நாங்கள் கேட்டோம்.{51}(49-51)

அதன் பிறகு, கிட்டத்தட்ட அருகில் இருந்த ருத்திரனால் பெறப்பட்டவனும், சக்திவாய்ந்தவனுமான நந்தி, தன் பினாகையை உயர்த்திக் கோபத்துடன் விஷ்ணுவின் தலையில் தாக்கினான்.{52} எல்லாம்வல்லவனான தலைவன் ஹரி, தேவர்களில் முதன்மையான நந்தியைக் கண்டு தன் புன்னகையால் அவனைக் கலங்கடித்தான்.{53} சக்தியில் எரிந்து கொண்டிருப்பவனும், வாழ்வின் உயர்ந்த பொருளைக் கொடுப்பவனும், பொறுமையுடன் கூடியவனுமான விஷ்ணு, ஒரு மலையைப் போல உறுதியாக நின்றான்.{54}

வெல்லப்பட முடியாதவனும், ஒப்பற்றவனும், செயலற்ற ஆன்மாவைக் கொண்டவனும், நித்தியனுமான அந்த ஹரி, காலாக்னியைப் போன்ற சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும், அமைதிப்படுத்தப்பட்டதால் வேள்விக்காணிக்கைகளில் ஒரு பகுதியை நுண்ணறிவுமிக்க ருத்திரனுக்குப் பங்கிட்டு அளித்தான். தேவர்களில் முதன்மையான விஷ்ணு எப்போதும் வெற்றியாளனாகவும், ஆசைகள் அற்றவனாகவும் இருக்கிறான்,{55,56} அவனால் வேள்வி மீண்டும் நிலைநாட்டப்பட்டது. ஓ! மன்னா, விஷ்ணுவுக்கும், ருத்திரனுக்கும் இடையில் நடந்த அந்தப் பயங்கரப்போரில் கணங்கள் முறையே தாங்கள் சார்ந்த தரப்புகளை விட்டு விலகவில்லை.{57} தக்ஷனின் வேள்வி அழிக்கப்பட்ட நேரத்தில் ஒரு நியாயமான போர் நடந்தது. அந்த நேரத்திலேயே வேள்விகளை அழித்தல் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது.{58} ஓ! மன்னா, ஆன்ம ஞானமற்றவனாக இருந்த தக்ஷப்ரஜாபதி, தான் செய்த வேள்வியின் பலனாகப் பரமாத்ம ஞானத்தை அடைந்தான்[1].{59}

[1] இந்த தக்ஷ வேள்வி மஹாபாரதத்தின் சாந்தி பர்வம் 283ம் அத்தியாயத்திலும் சொல்லப்படுகிறது. அங்கே வேறொரு கோணத்தில் இஃது உரைக்கப்படுகிறது. 

பெரும் விஷ்ணுவின் இந்தத் தாமரை அவதாரமானது, துவைபாயன ரிஷியால் {வியாசரால்} பௌஷ்கரப் புராணத்தில் பதியப்பட்டும், மஹாரிஷிகளால் மேலும் முறையாக மேம்படுத்தப்பட்டும் இருக்கிறது. இந்தப் புராணத்தைக் கவனத்துடன் கேட்பவன், இம்மையில் {இவ்வுலகில்} தான் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் அடைகிறான்; மேலும் மறுமையில் துன்பமற்றவனாக மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். தூய்மையடைந்தவனாகவும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனாகவும் இருக்கும் அந்தப் பேரறிவாளன், பிராமணர்கள் அனைவரையும் இந்தத் தெய்வீகக் கருப்பொருளைக் கேட்கச் செய்து, ஆன்மக் கருத்துகள் அனைத்தையும் கற்றுணர்ந்து, தேவலோகத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறான்" என்றார் {வைசம்பாயனர்}.{60-63}(52-63).

பவிஷ்ய பர்வம் பகுதி – 28ல் உள்ள சுலோகங்கள் : 63

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்