(ஜராஸந்தேன மதுரோபரோதம்)
Jarasandha prepares to attack Madhura | Vishnu-Parva-Chapter-89-034 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கம்ஸனின் மாமனாரான ஜராசந்தன் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து மதுராவை முற்றுகையிட்டது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணன், ரோஹிணியின் மகனுடன் {பலராமனுடன்} சேர்ந்து யாதவர்களால் நிறைந்திருக்கும் மதுரா நகரில் சில நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்தான்.(1) இளமை அழகுடனும், அரச செழிப்புடனும் அவனது மேனி படிப்படியாக மிளிர்ந்தது, காடுகளால் அலங்கரிக்கப்பட்ட மதுரா எங்கும் அவன் திரியத் தொடங்கினான்.(2) இவ்வகையில் சில நாட்கள் கடந்ததும், ராஜகிருஹத்தின் மன்னனான ஜராசந்தன், தன் மகள்கள் இருவரின் மூலம் கம்ஸனின் மரணத்தைக் கேள்விப்பட்டான்.(3) பலம்வாய்ந்த ஜராசந்தன் இதைக் கேட்டதும் பெரும் கோபமடைந்தான். பலம்வாய்ந்தவனான ஜராசந்தன், கம்ஸனுக்குத் தான் பட்ட கடனை அடைக்கும் வகையிலும், யதுக்கள் அனைவரையும் கொல்லும் வகையிலும், ஆறு பிரிவுகளுடன்[1] கூடிய தன் படையுடன் உடனே புறப்பட்டான்.(4,5)

