(அநிருத்தஸ்யோஷயா ஸஹ காந்தர்வேந விவாஹோ பாணதத்ஸைந்யாப்யாம் யுத்தம் ச)
Chitralekha unites Aniruddha with Usha; Anirudda's fight with Vana's Soldiers | Vishnu-Parva-Chapter-176-120 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : தாமஸ வித்தையால் அநிருத்தனை உஷையிடம் கொண்டு வந்த சித்ரலேகை; பாணனுக்கும், அநிருத்தனுக்கும் இடையில் நடந்த போர்; துவாரகைக்கு வந்த நாரதர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சித்திரலேகை துவாரகா நகரை வந்தடைந்து, வாசுதேவனின் அரண்மனையின் அருகில் இருந்து கொண்டு, பாணன் நகருக்கு அநிருத்தன் வந்த வழிமுறையை அறிந்து கொள்ளும் வழிவகைகள் குறித்துச் சிந்தித்தாள்.(1) அவள் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, நீரில் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நாரத முனிவரை அவள் கண்டாள்.(2) சித்திரலேகை அவரைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கண்கள் விரிய அவரை அணுகினாள். அவள் அவரை வணங்கிவிட்டு அவரது முன்னிலையில் தலைவணங்கி நின்றாள்.(3)


