Showing posts with label யது. Show all posts
Showing posts with label யது. Show all posts

Friday, 31 July 2020

யதுவின் மகன்களும், வெற்றிப்பேறுகளும் | விஷ்ணு பர்வம் பகுதி – 94 – 038

(யாதவோத்பத்தி தேஷாம் பராக்ரமாதிசம்)

The sons of Yadhu and their conquests | Vishnu-Parva-Chapter-94-038 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : மன்னன் யதுவின் சந்ததி; மாஹிஷ்மதி, புரிகம், கரவீரம், கிரௌஞ்சம், மதுரா ஆகிய நகரங்கள் அமைந்த வரலாறு; யாதவர்களின் உட்பகை ஆகியவற்றைக் கிருஷ்ணனுக்கு விளக்கிச் சொன்ன விகத்ரு...

Bahubali Movie Visualisation Scene of Mahishmati

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{விகத்ரு கிருஷ்ணனிடம் தொடர்ந்தான்} நீண்ட காலத்திற்குப் [பிறகு மன்னன் யது, நாக மன்னனின் அந்த ஐந்து மகள்களிடமும், நீண்ட கரங்களைக் கொண்டவர்களும், முசுகுந்தன்[1], பத்மவர்ணன், மாதவன், ஸாரஸன், ஹரிதன் என்ற பெயர்களைக் கொண்டவர்களும், தன் குலக் கொழுந்துகளுமான ஐந்து அரசமகன்களைப் பெற்றான்.(1,2) ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட அந்த மன்னன் {யது}, ஐம்பூதங்களைப் போன்ற அந்த ஐந்து மகன்களையும் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டான்.(3)

Monday, 27 July 2020

ஹரியஷ்வன் | விஷ்ணு பர்வம் பகுதி – 93 – 037

(ஹர்யஷ்வராஜகதா யதோருத்பத்திஷ்சம்)

An account of Haryashva | Vishnu-Parva-Chapter-93-037 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ஜராசந்தனிடம் கொண்ட அச்சமும், அது தீரும் வழியும்; மன்னன் ஹரியஷ்வனின் கதை; யது, யாதவர்களின் தோற்றம்...

Lavanasura killed by Satrugna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பலம்வாய்ந்தவனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, ரோஹிணியின் மகனுடன் {பலராமனுடன்} சேர்ந்து யாதவர்களால் நிறைந்த மதுரா நகரில் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்.(1) இளமை அழகுடனும், அரச செழிப்புடனும் அவனது மேனி படிப்படியாக மிளிர்ந்தது, காடுகளால் அலங்கரிக்கப்பட்ட மதுரா எங்கும் அவன் திரியத் தொடங்கினான்.(2)

ராஜகிருஹத்தின் மன்னன் ஜராசந்தன், மீண்டும் தன் மகள்கள் இருவராலும் தூண்டப்பட்டும், கம்ஸனின் மரணத்தை நினைவு கூர்ந்தும் போருக்கான ஆயத்தங்களைச் செய்தான்.(3) இவ்வகையில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான யாதவர்கள் பதினேழு முறை ஜராசந்தனுடன் போரிட்டும் அவர்களால் அவனைப் போரில் கொல்ல இயலவில்லை.(4) மகதத்தின் செழிப்புமிக்க மன்னன் {ஜராசந்தன்}, தன்னுடைய நால்வகைப் படையுடன் பதினெட்டாம் படையெடுப்புக்கான ஆயத்தங்களைச் செய்தான்.(5) பெருஞ்சக்திவாய்ந்தவனும், ராஜகிருஹத்தின் வீரமிக்க மன்னனும், ஆற்றலில் தேவர்களின் மன்னனை {இந்திரனைப்} போன்றவனும், அழகிய பேரரசனுமான ஜராசந்தன், தன்னுடைய முந்தைய தோல்விகளால் நாணமடைந்தும், கிருஷ்ணனைக் கொல்லும் நோக்குடனும் ஒரு பெரும்படையால் சூழபட்டவனாகப் புறப்பட்டுச் சென்றான்.(6,7) ஜராசந்தன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட யாதவர்கள், அவன் திரும்பிவிட்டான் {புறப்பட்டு வருகிறான்} என்பதைக் கேட்டதும் ஆலோசனை செய்யத் தொடங்கினர்.(8)

அப்போது பேரொளி கொண்டவனும், அறநெறியின் விதிகளை நன்கறிந்தவனுமான விகத்ருவானவன்[1], உக்ரஸேனனின் முன்னிலையில் வைத்துத் தாமரைக் கண்ணனான கிருஷ்ணனிடம்,(9) "ஓ! குழந்தாய் கோவிந்தா, நமது குலத்தின் தோற்றம் குறித்துக் கேட்பாயாக. உரிய நேரம் வந்துவிட்டதால் நான் இதை உரைக்கிறேன். ஓ! பக்திமானே {சாதுவே}, என் சொற்கள் முறையெனக் கருதினால் அவற்றின் படி நீ செயல்படுவாயாக.(10) ஆன்ம ஞானத்தை நன்கறிந்த வியாசரால் சொல்லப்பட்டது போல இந்த யாதவக் குலத்தினுடைய தோற்றத்தை நான் விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(11) மனுவின் குலத்தில், இக்ஷ்வாகுவுக்குப் பிறந்தவனும், மஹேந்திரனைப் போன்ற பலம்வாய்ந்தவனும், செழிப்புமிக்கவனும், ஹரியஷ்வன் என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான மன்னன் ஒருவன் இருந்தான்[2].(12) அவனுக்கு இந்திரனின் சச்சியைப் போன்றவளும், அன்புக்குரியவளும், தைத்தியன் மதுவின் மகளும், மதுமதி என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு மனைவி இருந்தாள்.(13) அவள் இளமை நிறைந்தவளாகவும், ஒப்பற்ற அழகைக் கொண்டவளாகவும், மன்னனின் விருப்பங்களை எப்போதும் நிறைவேற்றுபவளாகவும் இருந்தாள்.(14) தானவ மன்னனின் மகளான அவள், பெண்ணாக இருந்தாலும், விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவளாகவும், அழகிய இடையைக் கொண்டவளாகவும், இக்ஷ்வாகுக்களின் குலத்தில் முதன்மையானவனின் {ஹரியஷ்வனின்} விருப்பத்தை நிறைவேற்றுபவளாகவும், வானுலாவும் ரோஹிணியைப் போல ஒரே மனைவியென்ற நோன்பு {ஏகபத்னி விரதத்தை} நோற்பவளாகவும் இருந்தாள்.(15)

[1] இந்த விகத்ரு, ஹரிவம்ச விஷ்ணு பர்வம் 22ம் பகுதியின் 8ம் ஸ்லோகத்தில் சொல்லப்படும் பட்டியலில் இருக்கிறான்.

[2] இக்ஷ்வாகுவுடைய ஒன்பது மகன்களின் பெயர் பட்டியலில் ஹர்யஷ்வனின் பெயர் இல்லை. இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவன் என்பதைச் சொல்வதற்காக இக்ஷ்வாகுவுக்குப் பிறந்தவன் என்று இங்குச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். இக்ஷ்வாகு குலத்தின் பதிமூன்றாம் தலைமுறையில் ஹரியஷ்வன் என்ற மன்னன் ஒருவன் குறிப்பிடப்படுகிறான். ஹரிவம்ச பர்வம் பகுதி 12ல் அவன் திருடாஷ்வனின் மகனாகவும், துந்துமாரன் என்கிற குவலாஷ்வனின் பேரனாகவும் சொல்லப்படுகிறான். அவன் இவனாக இருக்கும் வாய்ப்பு குறைவே. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த அத்தியாயமும், இதில் உள்ள செய்திகளும் இல்லை.

ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு காலத்தில், மன்னர்களில் முதன்மையானவனும், தாமரைக் கண்ணைக் கொண்டவனும், காலஞானத்தை அறிந்தவனுமான ஹரியஷ்வன், தன் அண்ணனால் வெளியேற்றப்பட்டவனாக அயோத்யையை விட்டு அகன்றான். அவன் மிகச் சொற்பமான நபர்களுடனும், தன் அன்புக்குரிய மனைவியுடனும் காடுகளுக்குச் சென்று அங்கே வாழத் தொடங்கினான்.(16,17)

ஒரு நாள், தாமரைக் கண்களைக் கொண்டவளான மதுமதி, அண்ணனால் வெளியேற்றப்பட்ட மன்னனிடம்,(18) "ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, நீர் உமது நாட்டின் மீது கொண்ட ஆசைகள் அனைத்தையும் கைவிடுவீராக. நாமிருவரும் என் தந்தை மதுவின் வீட்டிற்குச் செல்வோம்.(19) விரும்பிய மலர்களையும், கனிகளையும் பொழியும் மரங்களைக் கொண்டதும், தேவர்களின் நகரைப் போன்றதுமான மதுவனம் அங்கே இருக்கிறது.(20) ஓ! மன்னா, நீர் என் தந்தைக்கும், அன்னைக்கும் அன்புக்குரியவராக இருக்கிறீர், என்னுடன் பிறந்த லவணனும் என் நிறைவுக்காக உமக்கன்பனாகவே இருப்பான்.(21) நாம் அவனுடன் சேர்ந்து நம் நாட்டில் இருப்பதைப் போலவே அங்கே மகிழ்ச்சியாக இன்புற்றிருப்போம். ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, நந்தனத் தோட்டத்திற்குத் தேவர்கள் செல்வதைப் போலவே நாம் அங்கே சென்று தேவர்களின் நகரத்தில் இருப்பதைப் போல இன்புற்றிருப்போம். உமக்கு நன்மை நேரட்டும்.(22) ஓ! அரசே, உமது அண்ணனை நம்புவது வீணே. அவர் நமக்கு எதிராகத் தீங்கு செய்பவராகவும், தன் நாட்டைக் குறித்து எப்போதும் செருக்குடையவராகவும் இருக்கிறார். எனவே நாம் அவரைக் கைவிட வேண்டும்.(23) ஓர் அடிமையை {பணியாளைப்} போல அண்டியிருக்க வேண்டிய அத்தகைய இழிந்த வசிப்பிடத்திற்கு ஐயோ. எனவே, ஓ! வீரரே, நாமிருவரும் என் தந்தையின் வீட்டுக்குச் செல்வோம்" என்றாள் {மதுமதி}.(24)

காமத்தால் பீடிக்கப்பட்ட அந்த மன்னன் {ஹரியஷ்வன்}, தன் மாமனாரின் உதவியின் மூலம் தன் அண்ணனை அழிக்க விரும்பவில்லை என்றாலும், தன் மனைவியின் சொற்களை விரும்பவே செய்தான்.(25) அதன் பின் மனிதர்களில் முதன்மையான மன்னன் ஹரியஷ்வன், ஆசையால் பீடிக்கப்பட்டவனாகத் தன் அழகிய மனைவியுடன் மதுவின் நகரத்திற்குச் சென்றான். தானவர்களின் மன்னன் {மது} அவனிடம் {ஹரியஷ்வனிடம்} அன்புடன், "ஓ! மகனே ஹரியஷ்வா, உனக்கு நல்வரவு. உன்னைக் கண்டதில் நான் நிறைவடைகிறேன்.(26,27) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, மதுவனம் தவிர இந்த நாடு முழுவதையும் நான் உனக்குத் தருகிறேன்; நீ இங்கேயே வாழ்வாயாக.(28) இந்தக் காட்டில் {மது வனத்தில்} லவணன் உனக்கு உதவி செய்பவனாகவும், உன் எதிரிகளை அழிப்பதில் உனக்கு வழிகாட்டியாகவும் இருப்பான்.(29) பசுக்கள் மிகுந்ததும், இடையர்கள் நிறைந்ததும், கடலின் நீரால் அலங்கரிக்கப்பட்டதுமான இந்தச் செழிப்புமிக்க நாட்டை நீ ஆள்வாயாக.(30) ஓ! மகனே {மருமகனே}, நீ இங்கே வாழ்ந்தால், பெரும் மலைக்கோட்டையை அடைவாய், செழிப்புமிக்கக் கிராமங்களையும், நகரங்களையும் கொண்ட உன்னுடைய இந்தப் பரந்த நாடு மன்னர்களின் வசிப்பிடமாக இருக்கும்[3].(31) கடலால் நீர் அளிக்கப்படும் {மழை பொழியும்} நாடு, ஆபத்துகளில் இருந்து விடுபட்டதாகும். அங்கே ஆநர்த்தம் என்ற பெயரைக் கொண்ட ஒரு பரந்த மாகாணத்தை நீ அடைவாய்.(32) ஓ! மன்னா, எனினும் காலவோட்டத்திலேயே இவற்றை நீ அடைவாய். நீ இப்போது இந்த நாட்டின் மன்னனுக்குரிய கடமைகளைச் செய்வதில் ஈடுபடுவாயாக.(33) ஓ! குழந்தாய், காலப்போக்கில் உன் குடும்பம் {குலம்} யயாதியில் இருந்து தொடங்கும் யது குலத்துடன் இரண்டறக் கலக்கும். நீ சூரிய குலத்தில் பிறந்திருந்தாலும் உன் குலம் சந்திர குலத்தின் உட்பிரிவாக அமையும்.(34) ஓ! குழந்தாய், இந்த மிகச் சிறந்த ஆட்சிப்பகுதியை உனக்கு அளித்த பிறகு, தபம் செய்வதற்கான இடமும், உப்பின் வசிப்பிடமுமான பெருங்கடலுக்கு நான் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்.(35) ஓ! மகனே, உன் குலத்தைப் பெருகச் செய்வதற்காக, செழிப்புமிக்க இந்தப் பெரிய நாட்டை லவணனுடன் சேர்ந்து ஆள்வாயாக" என்றான் {அசுரன் மது}.(36)

[3] சித்திரசாலை பதிப்பில், "மகனே, இங்கே ஆட்சி செய்யப்போகும் உனக்குக் கிரி நகரத்தின் பெருங்கோட்டையானது, நாட்டின் பெருங்காரியங்களில் ஈடுபடும் மன்னனின் வசிப்பிடமாக இருக்கும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "குழந்தாய், இங்கு வஸிக்கும் உனக்கு, பெரிய மலை ப்ரதேச அரண் உண்டு, ஸௌராஷ்ட்ர தேச ராஜா வஸிக்கும் தலைநகராகும் ஸமுத்திரம் பக்கத்திலுள்ள நீர் நிலை மிகுந்த தேசமாகையால் வ்யாதியற்றதுமாகும்" என்றிருக்கிறது.

மதுவின் இந்தச் சொற்களைக் கேட்ட ஹரியஷ்வன், "நீருக்குள் நீர் நுழைவீராக" என்று சொல்லிவிட்டு அந்த நாட்டை ஏற்றுக் கொண்டான், அந்தத் தைத்தியனும், தபசிகளின் புகலிடமான வருணனின் வசிப்பிடத்திற்குச் சென்றான்.(37) அதன் பிறகு, தேவர்களைப் போன்ற பெரும்பிரகாசம் கொண்ட ஹரியஷ்வன், அந்தச் சிறந்த மலையில் {கிரிவரத்தில்} வசிப்பதற்கான ஒரு நகரத்தை அமைத்தான்.(38) அழகிய நகரங்களையும், மதிப்புமிக்கப் பசுக்களையும் கொண்ட அந்த ஆநர்த்த நாடு விரைவில் செழிப்படைந்தது.(39) குடிமக்கள் வசித்ததும், காடுகளால் அலங்கரிக்கப்பட்டதும், கடலின் கரையில் அமைந்திருந்ததும், சுவர்களும் {மதில்களும்}, கிராமங்களும் நிறைந்ததுமான அநூப நாடு {சதுப்பு நிலத்துடன் கூடிய ஆநர்த்த நாடு}, கழனிகளாலும், தானியங்களாலும் நிறைந்திருந்தது[4].(40) பெரும் பலம்வாய்ந்த மன்னனான ஹரியஷ்வன், குடிமக்களின் இன்பத்தையும், நகரங்களின் மகிழ்ச்சியையும் அதிகரித்து, தன் அரச கடமைகளைச் செய்து புகழுடன் அந்தச் செழிப்பு மிக்க நாட்டை ஆட்சி செய்தான்.(41) உயரான்மாவான ஹரியஷ்வனின் சரியான நிர்வாகத்தால் செழிப்படைந்த அந்நாடு, ஒரு நாட்டுக்குரிய தன்மைகள் அனைத்தையும் அடைந்து, படிப்படியாகப் பரிமாணத்தில் வளர்ந்தது {அளவில் பெருகியது}.(42) ஓ! தலைவா, அரசனுக்குரிய அருஞ்செயல்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த அரசன், நாட்டில் இருந்து கொண்டு தன் ஒழுக்கத்தாலும், அறநெறியாலும் தன் குடும்பச் செழிப்பை {குல செழிப்பை} அடைந்தான்.(43)

[4] மற்ற இரண்டு பதிப்புகளிலும் அநூப நாடு என்பது குறிப்பிடப்படவில்லை. சித்திரசாலை பதிப்பில், "ஆநர்த்தம் என்ற பெயரைக் கொண்ட மங்கலமான அந்த நாடு, பசுக்களெனும் செல்வத்தால் செல்வத்தையும், வளத்தையும் மிக விரைவில் அடைந்தது. காடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தச் சதுப்பு நிலமானது, கோட்டைகளுடனும், கிரமங்களுடனும், எல்லைகளில் வினோதச் செடிகளுடனும் வளமாக இருந்தது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஆநர்த்தம் எனும் அந்தத் தேசம் நல்ல ராஜ்யமாகவும், பசுச் செல்வம் கூடியதும், குறுகிய காலத்தில் செழிப்புள்ளதாயுமாயிற்று. பயிர் நிலம் நிரம்பியதும், நீர்நிலையுள்ள வனத்தை எல்லையாகவுடையதும், சுற்றிலும் கிராமங்களையுடையதும், ஆச்சர்யமானதும், பரந்ததுமான ராஜ்யத்தை ப்ரஜைகளுக்கு ஆநந்தத்தை மூட்டியும், ராஜ்யத்தை வளர்க்கும் ராஜ தர்மத்துடனும் புகழ்பெறப் போற்றி அந்த ராஜா வளர்த்தான்" என்றிருக்கிறது.

அதன்பிறகு, நுண்ணறிவுமிக்கவனான ஹரியஷ்வன், ஒரு மகனை அடைய விரும்பி புனித நோன்புகளைப் படிப்படியாகப் பயிலத் தொடங்கினான். அவன் {ஹரியஷ்வன்} சிறப்புமிக்கத் தன் மகன் யதுவை மதுமதியிடம் பெற்றான்.(44) எக்காள முழக்கத்தைப் போன்ற குரலைக் கொண்டவனும், பகைவர்களால் தடுக்கப்பட முடியாதவனும், அரசக்குறிகள் அனைத்தையும் கொண்டவனும், பேராற்றல் படைத்தவனுமான யது படிப்படியாக வளரத் தொடங்கினான்.(45,46) அவனே {யதுவே} பூமியைச் செழிப்புடன் ஆண்டு வந்த உயரான்ம ஹரியஷ்வனின் ஒரே மகனாவான்.(47) ஹரியஷ்வன், தன் நாட்டை எந்தக் குறையுமின்றிப் பத்தாயிரம் ஆண்டுகள் பக்தியுடன் ஆண்டு, பூமியில் இருந்து மறைந்து, தேவர்களின் நகரை அடைந்தான்.(48) அதன்பிறகு குடிமக்கள் வீரமிக்க யதுவை அந்த நாட்டில் நிறுவினார்கள் {நாட்டின் அரியணையில் நிறுவினார்கள்}. இந்திரனைப் போன்ற அழகனான (எவனிடம் யாதவர்கள் பிறந்தனரோ அந்த) யது, தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, சூரியனைப் போல எழுந்து பூமியை ஆட்சி செய்தான். (அவனுடைய ஆட்சிக்காலத்தில்) கள்வர்களிடம் கொண்ட அச்சம் {குடிமக்களிடம்} அகன்றது.(49,50)

ஒரு காலத்தில், விண்மீன்களால் (சூழப்பட்ட) சந்திரனைப் போல, நற்குணங்கள் நிறைந்த தன் மனைவியருடன் நீரில் விளையாடிக் கொண்டிருந்த மன்னன் {யது}, பெருங்கடலின் நீரில் நீந்தத் தொடங்கிய போது, பாம்புகளின் பலம்வாய்ந்த மன்னனான தூம்ரவர்ணனால் திடீரெனத் தாக்கப்பட்டான்.(51,52) அவன், வைரங்களாலான தூண்களையும், கதவுகளையும் கொண்டதும், முத்துக்கள், வெண்சங்குகளின் குவியலாலும், பல்வேறு ரத்தினத் திரள்களாலும், பவளங்களாலும், இலைகளால் மறைக்கப்பட்ட மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான பாம்புகளின் மன்னனின் நகரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டான். அது கடலின் வயிற்றுக்குள் வாழும் முன்னணி பாம்புகளால் நிறைந்திருந்தது, அதன் நடுவில் பொன், அல்லது சந்திரனைப் போன்ற ஒளியுடன் கூடிய கோவில்கள் இருந்தன.(53-55) மன்னர்களின் தலைவனான அவன் {யது}, கடலின் தெளிந்த நீரில், பூமியின் பரப்பில் உள்ளதைப் போலவே கட்டப்பட்டிருந்த பாம்புத் தலைவனின் நகரத்தைக் கண்டான்.(56) மன்னன் யது, பெண் பாம்புகளால் நிறைந்திருந்த அடியற்ற நீர்ப்பரப்புக்குள் இதயம் தெளிந்தவனாக நுழைந்தான்.(57) ரத்தினங்களாலானதும், தாமரை இலைகள் பரப்பப்பட்டதும், தாமரை நூல்களால் கட்டப்பட்டதுமான மிகச் சிறந்த நீர் இருக்கை அவனுக்கு அளிக்கப்பட்டது.(58)

அந்தச் சிறந்த இருக்கையில் மன்னன் யது அமர்ந்த போது, பன்னகர்களின் மன்னனான தூம்ரவர்ணன் மதிப்புடன் வந்து,(59) "ஓ! யதுக்களில் முதன்மையானவனே, உன் தந்தை {ஹரியஷ்வன்}, இந்தப் பெருங்குலத்தைப் பூமியில் நிறுவி, பெருஞ்சக்திவாய்ந்த அரசனான உன்னைப் பெற்றுச் சொர்க்கத்திற்குச் சென்று விட்டான்.(60) ஓ! குழந்தாய், (உலகின்) நன்மைக்காக உன் தந்தையால் நிறுவப்பட்ட மன்னர்களின் சுரங்கமாகவே இருக்கும் இந்தக் குலம் உன் பெயரால் யாதவக் குலம் என்று அறியப்படும்.(61) ஓ! தலைவா, உன்னுடைய குலத்தில் தேவர்களும், ரிஷிகளும், பெரும் உரகர்களின் அழிவற்ற மகன்களும் மனிதர்களாகப் பிறப்பார்கள்.(62) எனவே, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, உன் கடமைகளைப் பின்பற்றிக் கொண்டும், குடிமுதல்வனுக்குரிய பணிகளைச் செய்து கொண்டும், யுவனாஷ்வனின்[5] தங்கையிடம் நான் பெற்ற மகள்களான இந்தக் கன்னிகையர் ஐவரையும் நீ ஏற்பாயாக. நீ வரம்பெறத் தகுந்தவன், நான் உனக்கு ஒரு வரத்தை அளிப்பேன்.(63,64) உன் குலத்தில் பிறக்கப் போகிறவர்கள், பௌமன் {பைமன்}, சாத்வதன் {குகுரர்}[6], போஜன், அந்தகன், யாதவன், தாசார்ஹன், விருஷ்ணி என்ற ஏழு (குலங்களின்) பெயர்களில் கொண்டாடப்படுவார்கள்" என்றான் {தூம்ரவர்ணன்}.(65)

[5] சூரிய குலத்தில் இக்ஷ்வாகுவில் இருந்து ஏழாம் தலைமுறையைச் சார்ந்த ஒருவன் யுவனாஷ்வன் என்ற பெயரில் ஹரிவம்ச பர்வம் 11ம் பகுதியில் குறிப்பிடப்படுகிறான். இவன் அவனாக இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவே. 

[6] மற்ற இரண்டு பதிப்புகளிலும் குகுரர்கள் என்றே இருக்கிறது.

பன்னகர்களில் முதன்மையானனும், மகளுக்கான நோன்பை {கன்யா விரதம்} நோற்றுக் கொண்டிருந்தவனுமான தூம்ரவர்ணன், இதைச் சொல்லிவிட்டுக் கைகளில் {புனித} நீருடன் தன் மகள்களை அவனுக்கு மகிழ்ச்சியாகக் கொடுத்தான். அதன் பிறகு அவன், யதுவுக்குப் பின்வரும் வரத்தை மகிழ்ச்சியுடன் அளித்தான். (66,67) {தூம்ரவர்ணன்}, "ஓ! கௌரவங்களை அளிப்பவனே, பெற்றோருக்கு நிகரான சக்தியுடன் கூடிய ஐந்து மகன்களை என்னுடைய ஐந்து மகள்களும் பெற்றெடுப்பார்கள்.(68) உன் குலத்தில் பிறந்த மன்னர்கள் அனைவரும், என் வரத்தின் சக்தியால், விரும்பிய வடிவங்களை ஏற்க வல்லவர்களாகவும், நீரில் திரிய வல்லவர்களாகவும் இருப்பார்கள்" என்றான் {என்று வரமளித்தான் தூம்ரவர்ணன்}.(69)

இவ்வாறு வரத்தையும், ஐந்து கன்னிகைகளையும் பெற்றுக் கொண்ட மன்னன் யது, நீரில் இருந்து எழும் சந்திரனைப் போல விரைவில் எழுந்தான்.(70) தெய்வீக மலர்மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தவனும், திருமண உடையுடன் இருந்தவனுமான மன்னன் {யது}, ஐந்து விண்மீன்களுக்கு மத்தியில் உள்ள சந்திரனைப் போல, ஐந்து பெண்களால் சூழப்பட்டவனாகப் பாம்புகளின் அந்தப்புரம் முழுவதும் சென்றான்.(71,72) அந்த மன்னன் {யது}, நெருப்புகளைப் போன்ற தன் மனைவியர் ஐவரையும் தேற்றி, மகிழ்ச்சியால் நிறைந்தவனாகத் தன் நகரத்திற்குத் திரும்பிச் சென்றான்" {என்றான் விகத்ரு} என்றார் {வைசம்பாயனர்}.(73)

விஷ்ணு பர்வம் பகுதி – 93 – 037ல் உள்ள சுலோகங்கள் : 73
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Friday, 24 April 2020

ஹைஹயர்களும் கார்த்தவீரியனும் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 33

(யதுவம்ச வர்ணனம் - கார்த்தவீர்யோத்பத்தி)

An account of the Haihayas and Kartavirya | Harivamsa-Parva-Chapter-33 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : யதுவின் ஐந்து மகன்கள்; முதல் மகனான ஸஹஸ்ரதனின் குலத்தில் உதித்த கார்த்தவீர்யார்ஜுனன்; அவனது தோற்றமும் அழிவும்; தாலஜங்கர்கள்; ஹைஹய குலம்; சூரசேனநாடு; யயாதியின் ஐந்து மகன்களுடைய குலங்களைக் குறித்து அறிவதால் உண்டாகும் பலன்கள்...

Karthaviryaarjuna
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "யது தேவர்களுக்கு நிகரான ஐந்து மகன்களைக் கொண்டிருந்தான். அவர்கள், ஸஹஸ்ரதன், பயோதன், க்ரோஷ்டன், நீலன் மற்றும் அஞ்ஜிகன் ஆகியோர் ஆவர். ஓ! மன்னா, ஸஹஸ்ரதனுக்கு, பெரும் பக்திமான்களான ஹைஹயன், ஹயன் மற்றும் வேணுஹயன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். ஹைஹயனின் மகன் தர்மநேத்ரன் என்ற பெயரில் கொண்டாடப்பட்டான். அவனுடைய {தர்மநேத்ரனின்} மகன் கார்த்தனும், அவனுடைய மகன் ஸாஹஞ்ஜனும் ஆவர்.(1-3) அந்த மன்னன் ஸாஹஞ்ஜனி என்ற பெயரைக் கொண்ட நகரத்தை அமைத்தான். மன்னன் மஹிஷ்மான் அவனுடைய {ஸாஹஞ்ஜனின்} மகனாவான். அவனால் மாஹிஷ்மதி நகரம் அமைக்கப்பட்டது. பலம் நிறைந்தவனான பத்ரஸேண்யன் மஹிஷ்மானின் மகனாவான். என்னால் ஏற்கனவே நினைவுகூரப்பட்ட படியே அவன் {பத்ரஸேண்யன்} வாராணஸியின் ஆட்சியாளனாக இருந்தான். பத்ரஸேண்யனின் மகன் துர்தமனாவான்.(4-6)


துர்தமனின் மகன் நுண்ணறிவுமிக்கக் கங்கன் {கனகன்} ஆவான். கங்கனுக்கு, உலகில் புகழ்பெற்றவர்களும், கிருதவீர்யன், கிருதௌஜன், கிருதவர்மன் மற்றும் கிருதாக்னி என்ற நான்கு மகன்கள் இருந்தனர். ஆயிரம் கரங்களைக் கொண்டவனும், தீவுகளான ஏழு கண்டங்களின் பேரரசனுமான அர்ஜுனன் {கார்த்தவீர்யார்ஜுனன்}, கிருதவீர்யனுக்குப் பிறந்தவனாவான். அவன் தனியாகவே, சூரியன் போன்ற பிரகாசமிக்கத் தன் தேரில் உலகை வென்றான்.(7-9) பத்து லட்சம் ஆண்டுகள் கடுந்தவம் இருந்த கீருதவீர்யன், அத்ரியின் மகனான தத்தரை {தத்தாத்ரேயரை} நிறைவடையச் செய்ததால், அவர் பெருஞ்சக்திமிக்க நான்கு வரங்களை அவனுக்கு அளித்தார். அவற்றில் முதலாவது, அவன் ஓராயிரம் கரங்களைப் பெறுவான் என்பதாகும்.(10,11) இரண்டாவது, அறமற்ற எண்ணங்களைத் தூண்டப்படுவதை முனிவர்கள் தடுப்பார்கள் {அவன் அதர்மத்தை நோக்கித் திரும்பும்போது ஓர் அறவோன் அவனைத் தடுப்பான்} என்பதாகும். மூன்றாவது, கடும் க்ஷத்திரிய ஆற்றலைக் கொண்டு உலகை வென்ற பிறகு, அவன் முறையாகத் தன் குடிமக்களை நிறைவடையச் செய்வான் என்பதாகும். நான்காவது, அவன் பல போர்களை வென்று, ஆயிரக்கணக்கான பகைவர்களை அழிக்கும்போது பெருஞ்சக்திமிக்க மனிதன் ஒருவனால் அவன் போரில் கொல்லப்படுவான் என்பதாகும்.(12,13)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அரசமுனி போரில் ஈடுபடும்போது, தன் தவச் சக்தியாலும், மாய சக்தியாலும் ஆயிரம் கரங்களை அடைந்தான். அவன் தன் பேராற்றலைக் கொண்டு, தீவுகளான ஏழு கண்டங்களையும், பல மலைகளையும், பெருங்கடல்களையும் கைப்பற்றினான். ஓ! ஜனமேஜயா, அந்த மன்னன் {கார்த்தவீரியார்ஜுனன்}, தீவுகளான ஏழு கண்டங்களிலும் முறையாக எழுநூறு யாகங்களைச் செய்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(14-16) ஓ! பெருங்கரம் கொண்டவனே, அந்த யாகங்களில் ஆயிரக்கணக்கான கொடைகள் கொடுக்கப்பட்டன. அந்த யாகங்களின், தங்கத்தாலான வேள்வி ஸ்தம்பங்களும், பீடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தெய்வீகத் தேர்களில் வந்த தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் அப்ரசஸ்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அவனுடைய யாகங்களில், கந்தர்வர்களும், {கந்தர்வனான} நாரதனும் பாடல்கள் பாடினர். அவனுடைய மகிமையைக் கண்டு வரீதாஸன் {உபபர்ஹணன்} ஆச்சரியமடைந்தான்[1].(17,18)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "வாரீதாஸன், அல்லது உபபர்ஹணன் என்றழைக்கப்படும் கந்தர்வனின் மகனும், நாரதன் என்று அழைக்கப்படுபவனுமான ஒரு கந்தர்வன், இந்த மன்னனின் வேத சடங்குகளைக் கண்டு ஆச்சரியமடைந்து, இந்த மன்னனின் மகிமையை இவ்வழியில் பாடுகிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வரீதாஸனின் மகனும், நாரதன் என்ற பெயரைக் கொண்டவனும், கல்விமானுமான ஒரு கந்தர்வன் இருந்தான். அவன் இவை அனைத்தின் மகத்துவத்தைக் கண்டு பாடத் தொடங்கினான்" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், "தெய்வீக முனிவரான நாரதரோடு இவனைக் குழப்பிக் கொள்ளக்கூடாது" என்றிருக்கிறது.

{கந்தர்வனான} நாரதன், " மன்னர்களில் எவனாலும், யாகங்கள் செய்வது, கொடைகள் அளிப்பது, ஆற்றல் மற்றும் சாத்திர ஞானம் ஆகியவற்றின் மூலம் கார்த்தவீரியனின் மகிமையை அடைய முடியாது.(20) அவன் தன் யோக சக்தியின் மூலம், ஒரே நேரத்தில், தன்னுடைய கவசம், வாள் மற்றும் வில்லுடன், ஏழு தீவுகளான கண்டங்களின் மீது தன் தேரில் திரிவதை மக்கள் கண்டனர்" என்று பாடினார்.(21) அந்தப் பெரும் மன்னன் நீதியோடு தன் குடிமக்களைக் காத்த காரணத்தால், எதையும் இழக்காதவனாக, ஒரு போதும் துயரடையாதவனாக, தவறொன்றும் செய்யாதவனாக இருந்தான்.(22) அவன் அனைத்து வகைப் பொன் ஆபரணங்களின் உரிமையாளனாவும், உயர்ந்த தலைவனாகவும் இருந்தான். அவன் எண்பத்தையாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான்.(23) அவன் பல யாகங்களைச் செய்து, பெரும்பரப்பைக் கொண்ட நிலங்களைத் தன் உடைமையாகக் கொண்டிருந்தான். அவன் அபரிமிதமாகப் பொழிவதன் காரணமாக இந்திரனைப் போன்றவனாகவும், தன் தவச் சக்திக்காக அர்ஜுனனைப் போன்றவனாகவும் இருந்தான்.(24) கூதிர் காலத்தில் ஆயிரங்கதிர்களுடன் ஒளிரும் சூரியனைப் போல அவன் கவசங்களுடன் கூடியவையும், வில்லின் நாண்கயிற்று அடிகளின் காரணமாகக் கடினமாவையுமான தன் ஆயிரம் கரங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(25)

பெரும் பிரகாசம் கொண்ட அந்த மன்னன், நாகன்[2] கார்க்கோடகனின் மகன்களை வீழ்த்திவிட்டு, மனிதர்கள் வசிப்பதற்காக மாஹிஷ்மதி என்ற பெயரைக் கொண்ட நகரத்தை {அவர்களிடமிருந்து} கைப்பற்றினான்.(26) தாமரைக் கண் கொண்ட அந்த மன்னன், மழைக்காலங்களில் நீரில் விளையாடியபோது, தன் ஆயிரம் கரங்களால் பெருங்கடலின் போக்கை மாற்றினான்.(27) நுரைமாலைகளுடன் கூடிய நர்மதை ஆற்றின் நீரில் அவன் நீராடி விளையாடும்போது, அவள் தன் ஆயிரம் அலைகளுடன் அச்சத்துடனே அவனை அணுகினாள்.(28) அவன் தன் ஆயிரம் கரங்களால் பெருங்கடலைக் கலக்கும்போது, பாதாள லோகத்தில் வாழும் பேரசுரர்கள் செயலற்றவர்களாக அமைதியுமடைந்தனர்.(29) தேவாசுரர்களால் மந்தர மலை வீசப்பட்டபோது, பாற்கடல் கலங்கியதைப் போலவே, கிருதவீரியனின் மகனான மன்னன் அர்ஜுனனும் பெருங்கடலின் அலைகளை நசுக்கி, மீன்களையும், வேறு பெரும் நீர்வாழ் விலங்குகளையும் அசைத்து, காற்றில் நுரையைச் சுழற்றி, நீரில் சுழிகளை உண்டாக்கினான். மந்தர மலையின் அசைவால் விழிப்படைந்து, அமுதம் உண்டானதன் மூலம் அச்சமடைந்து, திடீரெனக் கலங்கியதைப் போலவே, அந்தப் பெரும் உரகர்கள், இந்தப் பயங்கர மனிதனைக் கண்டதும் அசைவற்றுப் பணிந்தனர். அவர்கள் மாலைத் தென்றலில் அசையும் வாழையிலைகளைப் போல அவன் முன்பு நடுங்கினர்.(30-33)

[2] "நாகர்கள், சக்திவாய்ந்த மன்னர்கள் பலர் செழித்தோங்கிய பழங்குடி இனத்தவராவர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அவன் {கார்த்தவீர்யார்ஜுனன்}, ஆணவம் நிறைந்தவனும், லங்கையின் மன்னனுமான ராவணனையும், அவனுடைய படையையும் தன் வலிமையால் வீழ்த்தி, ஐந்து கணைகளைக் கொண்டு அவனை {ராவணனை} உணர்வற்றவனாக்கி {மயக்கமடையச் செய்து}, தன் வில்லின் நாணில் அவனைக் கட்டி, மாஹிஷ்மதி நகருக்குக் கொண்டு வந்து, அங்கே சங்கிலியில் கட்டி வைத்திருந்தான்.(34) புலஸ்தியர், தம் மகன் ராவணன் அர்ஜுனனால் {கார்த்தவீர்யார்ஜுனனால்} சங்கலியைக் கொண்டு கட்டி வைக்கப்பட்டிருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டு அவனிடம் சென்றார். கிருதவீர்யனின் மகனான அர்ஜுனன், புலஸ்தியர் வேண்டிக் கொண்டதன் பேரில் ராவணனை விடுவித்தான்[3].(35) அவன் ஆயிரங்கரங்களால் இழுத்து தன் வில்லில் எழுப்பும் நாணொலி, அண்ட அழிவுக் காலத்தில் மேகங்களுக்கு மத்தியில் எழும் இடியொலிகளுக்கு ஒப்பாக இருந்தது.(36) ஆனால், தங்கப் பனை மரங்கள் நிறைந்த காட்டுக்கு ஒப்பான அந்த மன்னனின் {கார்த்தவீர்யார்ஜுனனின்} ஆயிரம் கரங்களைப் போரில் வெட்டிய பிருகு மகனின் (பரசுராமரின்} சக்தி எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்?(37)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கார்த்தவீர்யார்ஜுனன், நர்மதையாற்றில் தன் அந்தப்புரத்து மகளிருடன் நீராடி இன்புற்றிருக்கும்போது, அந்த ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்தான். ராவணன் அந்த ஆற்றுப்படுகை உலர்ந்து போனதைச் சாதகமாகப் பயன்படுத்தி அங்கே சிவலிங்க வழிபாட்டைத் தொடங்கினான். கார்த்தவீர்யன் ஆற்றைவிட்டு வெளியேறியதும், தடங்கல் திடீரென விலகி, நீர் வேகமாகப் பாய்ந்து ராவணனையும், சிவலிங்கத்தையும் அடித்துச் சென்றது. இதனால் எரிச்சலடைந்த ராவணன், போருக்கான அறைகூவல் விடுத்தான். அதில் வீழ்த்துப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டான். புலஸ்தியர் குறுக்கிட்டுக் கார்த்தவீரியனிடம் இருந்து ராவணனை விடுவித்தார். இது காளிதாஸனின் ரகுவம்சத்தில் இருப்பது. எனினும், வாயு புராணத்தில், கார்த்தவீரியன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று ராவணனைச் சிறையில் அடைத்ததாக இருக்கிறது" என்றிருக்கிறது.

ஒரு காலத்தில் தாகத்தில் பீடிக்கப்பட்ட சித்திரபானு {அக்னிதேவன்}, {தன் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக} அவனிடம் (ஏதோவொன்றை) இரந்து கேட்டான். அந்த அர்ஜுனன், விபாவசுவிடம் {அக்னியிடம்} ஏழு தீவுகளான கண்டங்களையும் அளித்தான். நெருப்பின் தேவன் (சிறிது காலம் கழிந்ததும்) அவனுடைய நகரங்களையும், கிராமங்களையும் எரிக்க விரும்பினான். மனிதர்களில் முதன்மையான அந்தப் பெரும் கார்த்தவீரியனின் உதவியுடன் அவன் மலைகளையும், காடுகளையும் அழிப்பதில் வென்றான்.(38-40) பழங்காலத்தில் வருணனுக்கு மகனாகப் பிறந்தவரும், பிரகாசமானவருமான வசிஷ்டர், ஆபவர் என்ற மற்றொரு பெயரையும் கொண்டிருந்தார். நெருப்பின் தேவன், கார்த்தவீரியனோடு சேர்ந்து வருணன் மகனான அவருடைய அழகிய ஆசிரமத்தையும் எரித்தான். இதனால் அவர் {ஆபவர் / வசிஷ்டர்} பெருங்கோபம் அடைந்தார். கோபத்தில் இருந்த ஆபவ முனிவர், அர்ஜுனனிடம், "ஓ! ஹைஹயா, என் ஆசிரமத்தை நீ விட்டுவைக்காததால், நீ பெரும் சிரமத்துடன் அடைந்த உன் சாதனைகளை மற்றொரு மனிதன் {குந்தியின் மகனான மற்றொரு அர்ஜுனன்} அழிப்பான். முனிவனும், பலம் நிறைந்தவனும், வலிமைமிக்கவனும், பிராமணனும், பிருகு குலத்தில் ஜமதக்னிக்குப் பிறந்த மகனுமான ராமன் {பரசுராமன்}, உன்னுடைய ஆயிரங்கரங்களையும் கொய்து, உன்னையும் கொல்வான்" என்று சொல்லிச் சபித்தார்" என்றார் {வைசம்பாயனர்}.(41-45)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, ஓ! பகைவரை அடக்குபவனே, எவனுடைய நீதிமிக்க ஆட்சியின் கீழ் அவனுடைய குடிமக்களும் எதையும் இழக்கவில்லையோ, அந்தக் கிருதவீர்யனின் மகனான மன்னன் அர்ஜுனன், ஆபவ முனிவரின் சாபத்தின் காரணமாக மரணமடைந்தான்[4]. ஓ! குருவின் வழித்தோன்றலே, அவனே தத்தாத்ரேயரிடம் இவ்வரத்தை வேண்டியிருந்தான்.(46,47) அந்த உயரான்மாவின் நூறு மகன்களில் ஐவர் மட்டுமே உயிரோடு எஞ்சினர். அவர்கள் அனைவரும் சக்தி மிக்கவர்களாகவும், வீரர்களாகவும், அறம் சார்ந்தவர்களாகவும், நுண்ணறிவு மிக்கவர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டை நன்கறிந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் சூரஸேனன், சூரன், திருஷ்டோக்தன் {திருஷ்டன்}, கிருஷ்ணன், அவந்தியின் மன்னனான ஜயத்வஜன் ஆகியோராவர்.(48,49)

[4] கார்த்தவீரியன் கதை மஹாபாரதம் ஆதிபர்வம் 116 மற்றும் 117 அத்யாயங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. 

கார்த்தவீரியனின் மகன்கள் அனைவரும் பலம் நிறைந்தவர்களாகவும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாகவும் இருந்தனர். ஜயத்வஜனின் மகன் பெருஞ்சக்திமிக்கத் தாலஜங்கன் ஆவான். அவனுடைய மகன்கள் தாலஜங்கர்கள் என்ற பெயரைக் கொண்டனர். ஓ! மன்னா, உயரான்ம ஹைஹய, வீதிஹோத்ர, ஸுஜாத, போஜ, அவந்தீ குலங்களும், இன்னும் வேறு குலங்களும் {தௌண்டிகேரர்களும்} தாலஜங்கர்கள் என்ற பெயரில் அறியப்பட்டனர்.(50-52) பரதன் மற்றும் ஸுஜாதனின் {ஸுதாஜாதனின்} வழித்தோன்றல்களை விளக்குவது அவசியமற்றது[5]. ஓ!மன்னா அறவோனான விருஷன் மற்றும் பிறர் யது குலத்தில் பிறந்தவராவர்.(53) விருஷன் குடும்பத் தலைவனாவான், அவனுடைய மகன் மது ஆவான். அவனுக்கு நூறு மகன்கள் இருந்தனர், அவர்களில் விருஷணன், குலத்தைத் தழைக்கச் செய்தான். விருஷணனில் இருந்து விருஷ்ணிகளும், மதுவில் இருந்து மாதவர்களும், யதுவில் இருந்து யாதவர்களும் பிறந்தனர். இவையே ஹைஹய குடும்பத்தின் பல்வேறு கிளைகளாகும்[6].(54,55)

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஹைஹய குலத்தில் வீதிஹோத்ரர்கள், ஸுஜாதர்கள், போஜர்கள், அவந்தீகள், தௌண்டிகேரர்கள் போன்றோர் பெரும் க்ஷத்திரிய வம்சங்களாக உருவெடுத்தனர். தாலஜங்கர்கள் மற்றும் பாரதர்களும் அதே போன்றவர்களே. பாரதர்கள் எண்ணிலடங்காதவர்களாக இருப்பதால் அவர்களை இங்கே திரும்பக் கூறவில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், " வீதிஹோத்ர, ஸுஜாத, போஜ, அவந்தீ, தொண்டிகேரர்கள் ஆகியோர் புகழ்பெற்ற தாலஜங்கர்களும், பேரான்ம ஹைஹயர்களின் குலத்தில் வந்தவர்களுமாவர். பாரதர்களின் குலத்தில் பிறந்த உன்னதமான பலரின் பெயர்கள் மீண்டும் சொல்லப்பட்டுள்ளன" என்றிருக்கிறது.
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆயிரம் வழிகளில் கொடையளிப்பவனும், யதுவின் முதல் மகனுமான ஸஹஸ்ரதனின் வம்சத்தைச் சொன்ன பிறகு, இனி வம்சத்தின் இரண்டாவது மகனான பயோதன் கணக்கில் கொள்ளப் படுகிறான். பயஹ்+தன் = நீர், கொடையளிப்பவன்; மேகம், விருஷ்ணி என்பது வார்ஷணன் என்பதும் மழை என்ற பொருளைத் தரும்" என்றிருக்கிறது.

சூரன், சூரஸேனன், சூரவீரன் போன்றோரும் ஹைஹயர்கள் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். அந்த உயரான்மாக்களின் நாடு, சூரசேனம் {சூரசேனதேசம்/ சூரராஷ்டிரம்/ சௌராஷ்டிரம்/ இன்றைய குஜராத்} என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இவ்வுலகில் நாள்தோறும் கிருதவீர்யனின் மகனான அர்ஜுனனுடைய பிறப்பைக் குறித்து நினைவுகூர்பவன், தன் உடைமையை இழக்கமாட்டான். ஒருவேளை அவன் அதை இழந்தாலும் மீண்டும் அடைவான்.(56,57) ஓ! மன்னா, நான் இவ்வாறு உலகில் கொண்டாடப்படும் யயாதியின் ஐந்து மகன்களுடைய குடும்பங்களைக் குறித்து உனக்குச் சொன்னேன். அவர்கள் அசையும் மற்றும் அசையா படைப்புகளைப் பாதுகாக்கும் ஐம்பூதங்களைப் போன்றவர்களாவர்.(58) வேதங்களையும், வேறு அற சாத்திரங்களையும் நன்கறிந்த ஒரு மன்னன், அந்த ஐந்து மன்னர்களின் பல்வேறு படைப்புகளைக் குறித்துக் கேட்டால், ஐம்புலன்களின் ஆட்சியாளனாகவும், தேவனைப் போன்றவனாகவும் மாறி, இவ்வுலகில் கிடைத்தற்கரிதான ஐந்து வரங்களை அடைவான். இந்த அனைத்து மன்னர்களின் குடும்பங்களைக் குறித்துக் கேட்டதன் மேலும் ஆயு, பெரும்புகழையும், வளங்களையும், மகன்களையும், சக்தி மற்றும் செழிப்பையும் அடைந்தான்.(59,60)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இனி, யாகங்களைச் செய்தவனும், யது குலத்தின் தலைவனும், {யதுவின் மூன்றாம் மகனும்}, அறவோனுமான குரோஷ்டுவின் மிகச் சிறந்த, சக்திமிக்கக் குடும்பத்தை {குலத்தைக்} கேட்பாயாக. விருஷ்ணி குலத்தின் தலைவனான இவனுடைய குடும்பத்திலேயே கிருஷ்ணனாக விஷ்ணு பிறந்தான். குரோஷ்டுவின் குடும்பக் கதையைக் கேட்பதன் மூலம் ஒரு மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்" {என்றார் வைசம்பாயனர்}.(61,62)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 33ல் உள்ள சுலோகங்கள் : 62
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Monday, 20 April 2020

மன்னன் யயாதி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 30

(யயாதி சரித்ர கதனம்)

Account of the king Yayati | Harivamsa-Parva-Chapter-30 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நஹுஷனின் மகன்கள்; யயாதி அடைந்த தெய்வீகத் தேர்; ஜராஸந்தனிடம் இருந்த அந்தத் தேரை பீமன் கிருஷ்ணனுக்கு அளித்தது; யயாதியின் மகன்கள்; யயாதியின் முதுமையை ஏற்றுக் கொண்ட பூரு; யயாதி சொன்ன அனுபவ மொழி; சொர்க்கத்தை அடைந்த யயாதி...

Golden Chariot of Indra
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சக்திமிக்க நஹுஷன், தன் தந்தையின் மகளான {பித்ரு கன்னிகையான} விரஜையிடம் {ஸுஸ்வதையிடம்}[1], இந்திரனின் பிரகாசத்தைக் கொடையாகக் கொண்ட ஆறு மகன்களைப் பெற்றான்.(1) அவர்கள் யதி, யயாதி, ஸங்யாதி {ஸம்யாதி}, ஆயாதி {ஆயதி}, யாதி {பவன்} மற்றும் ஆறாவதாக ஸுயாதி ஆகியோராவர்; அவர்களில் யயாதி மன்னனான்.(2) யதி, அவர்கள் யாவரிலும் மூத்தவனாக இருந்தான். அவனுக்கு அடுத்தவனே யயாதி ஆவான். அறவோர் முதன்மையானவனாக இருந்ததால் அவன் கௌ என்ற பெயர் கொண்டவளான ககுஸ்தனின் மகளை அடைந்தான். யதி ஒரு முனிவனாக இருந்தான். இறுதி விடுதலையை {முக்தியை} அடைந்த அவன் பிரம்மத்தில் ஒன்று கலந்தான்.(3) மற்ற ஐவரில் யயாதி இவ்வுலகை வென்றான். அவன் சுக்ராச்சாரியரின் {உசானஸின்} மகளான தேவயானியையும், விருஷபர்வன் என்ற பெயரைக் கொண்ட ஓரசுரனின் மகளான சர்மிஷ்டையையும் மணந்து கொண்டான்.(4) தேவயானி, யது மற்றும் துர்வஸுவையும், சர்மிஷ்டை, திருஹ்யு, அனு மற்றும் பூருவையும் பெற்றனர்.(5)



[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் "தந்தையின் மகள்" என்றே இருக்கிறது. அவ்வாறெனில்தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் "பித்ருக்களின் மகள்", அதாவது "பித்ரு கன்னிகை" என்றிருக்கிறது. ஹரிவம்ச பர்வம் 18:64-67ல் "கர்தம பிரஜாபதியின் மூதாதையர்கள், பிரஜாபதியான புலஹரின் வழித்தோன்றல்களாவர். இந்தப் பித்ருக்கள் திரளாக ஸுஸ்வதர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். அவர்களின் மனத்தில் பிறந்த மகள் விரஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறாள். இவளே நஹுஷனின் மனைவியும், யயாதியின் தாயுமாவாள்" எனத் தெளிவாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அவனிடம் {யயாதியிடம்} நிறைவடைந்த சக்ரன் {இந்திரன்}, பிரகாசமானதும், தெய்வீகமானதும், தடையில்லாமல் எங்கும் செல்லவல்லதுமான ஒரு பொற்தேரைக் கொடுத்தான். மனோ வேகம் கொண்டவையும், தெய்வீகமானவையுமான சிறந்த குதிரைகள் அதில் பூட்டப்பட்டிருந்தன. அந்தத் தேரைக் கொண்டே அவன் அனைத்துப் பணிகளையும் நிறைவடைய் செய்தான். அந்தத் தேரில் ஏறிய யயாதி, போரில் தடுக்கப்பட முடியாதவனாக ஆறே இரவுகளுக்குள் மொத்த உலகத்தையும், வாசவனுடன் கூடிய தேவர்களையும் வென்றான்.(6,7) ஓ !ஜனமேஜயா, அந்தத் தேரானது ஸுநாமன் {ஜனமேஜயன்} பிறக்கும் வரை பௌரவர்களின் உடைமையாக இருந்தது.(8) குருவின் மகனான மன்னன் பரீக்ஷித், நுண்ணறிவுமிக்கக் கார்க்கியருடைய {கர்க்கருடைய} சாபத்தின் மூலம் அந்தத் தேரைத் தொலைத்தான்[2].(9)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "அந்தத் தேரானது கௌரவ அரசவம்சத்தைச் சேர்ந்த மன்னன் வசுவின் காலம் வரை பௌரவக் குலத்தின் மதிப்புமிக்க உடைமையாக இருந்தது. கௌரவக் குலத்தைச் சேர்ந்தவனும், பரீக்ஷித்தின் மகனுமான ஜனமேஜயன் காலம் வரை அஃது இவ்வுலகில் இருந்தது ஆனால் கர்க்க முனிவரின் சாபத்தினால் அது மறைந்து போனது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், உன் காலம் வரை அனைத்துப் பௌரவர்களும் அந்தத் தேரை அனுபவித்தனர். பரீக்ஷித்தின் மகனுடைய காலம் வரை அது குருவின் வழித்தோன்றல்களுடைய நாட்டில் இருந்தது. அதன் பிறகு நுண்ணறிவுமிக்கக் கர்க்கரால் அந்தத் தேர் மறைந்து போனது" என்றிருக்கிறது. மேலும் இந்தத் தேரை சுக்ரன் யயாதிக்குக் கொடுத்ததாகவும் இருக்கிறது. இங்கே மூன்று பதிப்புகள் சொல்வதும் பிழையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இங்கே சொல்லப்படுபவன் அர்ஜுனனின் பேரனான பரிக்ஷித்தோ, கொள்ளுப்பேரனான ஜனமேஜயனாகவோ இருக்க முடியாது. மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தின் 150ம் பகுதியில் பீஷ்மர் பழங்காலத்து மன்னர்களான பரீக்ஷித் மற்றும் ஜனமேஜயன் குறித்து யுதிஷ்டிரனிடம் சொல்கிறார். அப்போது அர்ஜுனனின் பேரனான பரீக்ஷித் இல்லை. இங்கே சுட்டப்படுவது அந்தப் பழங்காலத்து பரீக்ஷித்தும் ஜனமேஜயனுமாக இருக்க வேண்டும். மேலும் அர்ஜுனனின் கொள்ளுப்பேரனான ஜனமேஜயனிடம் தான் வைசம்பாயனரால் இந்தக் கதை சொல்லப்படுகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஓ! ஜனமேஜயா, அந்த மன்னன் {ஜனமேஜயன்} கடுமொழி பேசிய கார்க்கியரின் {கர்க்கரின்} மகனைக் கொன்றதால் பிராமணக்கொலை செய்த குற்றவுணர்வுடன் இருந்தான்.(10) அந்த அரசமுனி {ஜனமேஜயன்}, தன் மேனிமுழுவதும் கூடிய கடும் நாற்றத்துடன் {லோஹகந்தமெனும் இரும்பின் நாற்றத்துடன்} அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருந்தான். பிறகு, குடுமக்களாலும், கிராமவாசிகளாலும் கைவிடப்பட்டவனான அவனால் எங்கும் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லை.(11) இவ்வாறு துயரில் பீடிக்கப்பட்ட அவனால் எங்கும் உய்வை {நிவாரணத்தைப்} பெற முடியவில்லை. அப்போது அவன், சௌனக குலத்தில் பிறந்த தவசியான இந்தோரதரின் புகலிடத்தை நாடினான்[3].(12) இந்திரோதர், அந்த மன்னனைத் தூய்மையடையச் செய்வதற்காக ஒரு குதிரை வேள்வியைச் செய்வதில் ஈடுபட்டார்.(13) யாகம் முடிந்து அவன் நீராடியபோது, அவனுடைய உடலில் இருந்த அந்தக் கடும் நாற்றம் மறைந்து போனது. பிறகு, ஓ! மன்னா, தேவர்களின் தலைவன் {இந்திரன்} அந்தத் தெய்வீகத் தேரைச் சேதிகளின் மன்னனான வஸுவுக்கு {உபரிசர வஸுவுக்குக்} கொடுத்தான்; அவனிடம் இருந்து பிருஹத்ரதன் அதையடைந்தான்[4].(14) அந்தத் தேர் அவனிடம் இருந்து படிப்படியாக ஜராசந்தனின் கைகளுக்குச் சென்றது. குருவின் வழித்தோன்றலான பீமன் ஜராசந்தனைக் கொன்ற போது, அந்தத் தேரைப் பெரும் மகிழ்ச்சியுடன் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குக்} கொடுத்தான்.

[3] ஜனமேஜயன் இந்திரோதரின் புகலிடத்தை நாடிச் செல்லும் இந்தப் பகுதி மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தின் 150ம் பகுதியில் இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

[4] பிபேக்திப்ராயின் பதிப்பில், "பிருஹத்ரதன் {உபரிசர வசு என்றும் அழைக்கப்படும்} வசுவின் மகனாவான். ஜராசந்தன் இந்தப் பிருஹத்ரதனின் மகனாவான்" என்றிருக்கிறது.

யயாதி, பெருங்கடல்களுடனும், ஏழு தீவுகளான கண்டங்களுடனும் கூடிய பூமியை வென்று அதை (தன் மகன்களுக்கு மத்தியில்) பிரித்துக் கொடுத்தான். அந்த நஹுஷன் மகன் {யயாதி}, துர்வஸுவை தென்கிழக்குப் பகுதியின் மன்னனாகவும், அனு மற்றும் திருஹ்யுவை, முறையாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் மன்னர்களாகவும், மூத்தவனான யதுவை வட கிழக்கின் மன்னனாகவும், பூருவை நடுப்பகுதியின் {மத்திய பகுதியின்} மன்னனாகவும் நிறுவினான். இப்போதும் அவர்கள் {அவர்களின் சந்ததியினர்}, அவரவருக்குரிய மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்களையும், ஏழு தீவுகளான கண்டங்களுடன் கூடிய பூமியையும் நீதியுடன் ஆண்டு வருகின்றனர். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அவர்களுடைய சந்ததியை நான் பின்னர்ச் சொல்கிறேன்.(15-20)

இவ்வாறு ஐந்து மகன்களால் அருளப்பட்டவனும், தன்னுடைய விற்கள், கணைகள் மற்றும் அரசின் பொறுப்பு ஆகியவற்றை அவர்களுக்கு {தன் மகன்களுக்குக்} கொடுத்தவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்த யயாதி மன்னனை முதுமை பீடித்தது. எப்போதும் வெற்றியாளனாக இருந்த அந்த மன்னன், ஆயுதங்களை இழந்தவனாகப் பூமியின் மீது தன் கண்களைச் செலுத்திய போது, மகிழ்ச்சியை உணர்ந்தான். இவ்வாறு அவன் பூமியைப் பிரித்துக் கொடுத்தபிறகு, யதுவிடம்,(21,22) "ஓ! மகனே, உன் அலுவலில் இருந்து ஓய்வு பெற்று என்னுடைய இந்த முதுமையை உன்னில் நீ ஏற்றுக் கொள்வாயாக. என் முதுமையை உனக்குக் கொடுத்துவிட்டு, உன் இளமை மற்றும் அழகு என்ற கொடையைப் பெற்றுக் கொண்டு நான் பூமியில் திரிந்து வருவேன்" என்றான்.

அதற்கு யது,(23) "நான் ஒரு பிராமணருக்குப் பிச்சை அளிப்பதாக உறுதியளித்திருக்கிறேன். இஃது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இதை உறுதி செய்யாமல் என்னால் உமது முதுமை ஏற்றுக் கொள்ள முடியாது. உணவு மற்றும் பானம் தொடர்பான பல தொல்லைகள் முதுமையில் உண்டு. எனவே, ஓ! மன்னா, உமது முதுமை ஏற்க நான் விரும்பவில்லை.(25) ஓ! மன்னா, என்னைவிட உமது அன்புக்குரிய மற்ற மகன்களை நீர் கொண்டிருக்கிறீர். எனவே, ஓ! பக்திமிக்க மன்னா, உமது மற்ற மகன்களிடம் உமது முதுமையை ஏற்றுக் கொள்ள ஆணையிடுவீராக" என்று மறுமொழி கூறினான்.(26)

யதுவால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட மன்னன் கோபத்தில் நிறைந்தான். பேசுபவர்களில் முதன்மையானவனான யயாதி, தன் மகன் மீது குற்றஞ்சாட்டும் வகையில்,(27) "ஓ! தீய புத்தி கொண்டவனே, உன் ஆசானும், உனக்கான கல்வியைக் கொடுத்தவனுமான என்னை அலட்சியம் செய்துவிட்டு, வேறு யாரை நாடி எந்த அறத்தை உன்னால் பின்பற்ற முடியும்?" என்றான்.(28) யதுவிடம் இவ்வாறு கோபத்தில் பேசி அவன், அவனைச் சபிக்கும் வகையில், "ஓ! அற்ப மூடா, உன் மகன்கள் தங்கள் அரசை இழப்பார்கள்" என்றான்.(29)

ஓ! பாரதர்களில் முதன்மையானவனே[5], இதே போலவே துர்வஸு, திருஹ்யு, அனு ஆகியோரையும் அந்த மன்னன் வேண்டினான். அவர்கள் அனைவராலும் ஒரே மாதிரியாகவே அவமதிக்கவும் பட்டான்.(30) ஓ! அரச முனிகளில் முதன்மையானவனே, எப்போதும் வெற்றியாளனாக இருந்த யயாதி, நான் உனக்கு முன்பு {மஹாபாரதம் சொல்லிக் கொண்டிருந்தபோது} விளக்கிச் சொன்னதைப் போலவே அவர்கள் அனைவரையும் சபித்தான்.(31) ஓ! பரதனின் வழித்தோன்றலே, பூருவுக்கு முன் பிறந்த தன்னுடைய நான்கு மகன்களையும் இவ்வாறு சபித்த அந்த மன்னன், அவனிடம் {பூருவிடம்},(32) "ஓ! பூரு, நீ ஏற்றுக்கொண்டால், நான் என் முதுமையை உனக்கு மாற்றி, உன் அழகையும், இளமையையும் பெற்றுக் கொண்டு இந்த உலகத்தில் திரிவேன்" என்றான்.(33)

[5] இங்கே மன்மதநாததத்தரின் பதிப்பில் பாரதர்களில் முதன்மையான மன்னன் என்று யயாதி குறிப்பிடப்படுகிறான். பரதனோ யயாதிக்கு மிகப் பிந்தையவன். மற்ற பதிப்புகளைக் கண்டதில் இது ஜனமேஜயனைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. எனவே இங்கே நாமும் வைசம்பாயனர் ஜனமேஜயனை இவ்வாறு அழைப்பதாகக் கொண்டிருக்கிறோம்.

பலமிக்கவனும் அவனுடைய மகனுமான பூரு அவனுடைய முதுமையை ஏற்றுக் கொண்டான். யயாதியும், பூருவின் அழகுடன் கூடியவனாக உலகில் திரிந்து வந்தான்.(34) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, அந்தத் தலைவன் {யயாதி} இன்பங்களின் எல்லையைக் கண்டபடியே சைத்ரரதக் காட்டில் விஷ்ராவ்யையுடன் {அப்சரஸான விஷ்வாசியுடன்} வாழ்ந்து வந்தான்.(35) அந்த மன்னன் இன்பங்களில் தணிவடைந்தவனாகப் பூருவிடம் வந்து தன் முதுமையைத் திரும்பப் பெற்றுக் கொண்டான்.(36) ஓ! பெரும் மன்னா, அங்கே யயாதியால் பாடப்பட்ட பாடல்களைக் கேட்பாயாக. அவற்றைக் கேட்பதன் மூலம் ஓர் ஆமை தன் அங்கங்களை இழுத்துக் கொள்வதைப் போல ஒரு மனிதன் இன்பங்களில் இருந்து தன்னை இழுத்துக் கொள்வான்.(37)

{யயாதி}, "ஆசையானது அதற்குரிய பொருளை அனுபவிப்பதனால் ஒருபோதும் தணிவதில்லை. அதற்குப் பதிலாகத் தெளிந்த நெய்யூட்டப்படும் நெருப்பைப் போன்ற விகிதத்தையே அஃது அடைகிறது.(38) பூமியிலுள்ள அரிசி, வாற்கோதுமை, பொன், விலங்குகள், பெண்கள் ஆகியன ஒரு மனிதனுக்கு நிறைவளிக்கப் போதுமானவையல்ல. இதைக் கண்டும் மனிதர்கள் தங்கள் புலன்களில் நிறைவடைவதில்லை.(39) ஒரு மனிதன், தன் செயல், எண்ணம் மற்றும் சொற்களாலும் எவ்வுயிரினத்திற்கும் தீங்கிழையாமல் இருக்கும்போது அவன் பிரம்மத்துடன் ஒன்றுகலக்கிறான்.(40) ஒரு மனிதன் எவரிடமும் அச்சங்கொள்ளவில்லை எனும்போது, எவரும் அவனிடம் அச்சங்கொள்ளவில்லை எனும்போது, அவன் எந்த ஆசையையும் {விருப்பையும்}, வன்மத்தையும் {வெறுப்பையும்} வளர்க்கவில்லை எனும்போது, அவன் பிரம்மத்துடன் ஒன்றுகலக்கிறான்.(41) உண்மையில், தீயோரால் ஒருபோதும் கைவிட முடியாததும், முதுமையை அடைந்தாலும் சிதையாததும், மரணத்தைத் தரும் நோயைப் போன்றதுமான தாகத்தை {ஆசையைத்} தணித்துக் கொள்ளும்போது அவன் மகிழ்ச்சியை அடைகிறான்(42) ஒரு மனிதன் வயதால் சிதைவடையும்போது, அவனது மயிரும், பற்களும் விழுமென்றாலும், வாழ்வு மற்றும் செல்வத்தின் மீதுள்ள ஆசை மட்டும் ஒருபோதும் {அவனிடம்} மறைவதில்லை.(43) உணர்வுப் பசிகளை நிறைவேற்றிக் கொள்வதால் இவ்வுலகில் அடையப்படும் எந்த இன்பமும், இங்கேயுள்ள எந்தத் தெய்வீக இன்பமும் என இவற்றில் யாவும், ஆசையற்றுப் போவதனால் கிட்டும் இன்பத்தின் பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது" என்றான்.(44)

அரசமுனியான யயாதி இதைச் சொல்லிவிட்டு, தன் மனைவியுடன்[6] காட்டுக்குள் ஓய்ந்து சென்று, பல ஆண்டுகள் கடுந்தவம் செய்தான்.(45) அந்தப் பெருந்தவசி, பிருகு மலையில் தவம் செய்து, தன் உடலைக் கைவிட்டு, தன் மனைவியுடன் சொர்க்கத்தை அடைந்தான்.(45)

[6] யயாதிக்கு தேவயானி, சர்மிஷ்டை என்று இரு மனைவிகள். இங்கே மனைவி என்று ஒருமையில் சொல்லப்பட்டுள்ளது. தேவயானி, யயாதி சபிக்கப்படக் காரணமாக இருந்தவள். மேலும் அவளுடைய மகன்கள் இருவரில் ஒருவரும் யயாதியின் முதுமையே ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. சர்மிஷ்டையின் இளைய மகன் பூருவே அரியணை ஏற்கிறான். எனவே, இங்கே சுட்டப்படுபவள் சர்மிஷ்டையாகவே இருக்க வேண்டும்.

ஓ! பெரும் மன்னா, அவனுடைய குடும்பத்தில் ஐந்து அரசமுனிகள் பிறந்தனர். சூரியக் கதிர்களால் கைப்பற்றப்படுவதைப் போல அவர்களால் மொத்த பூமியும் கைப்பற்றப்பட்டது.(47) இனி, அரச முனிகள் அனைவராலும் மதிக்கப்படும் யதுவின் குடும்பத்தை {குலத்தைக்} குறித்துக் கேட்பாயாக. விருஷ்ணி குலத்தைத் தழைக்கச் செய்பவயும் நாராயணனான ஹரி இவனது {யதுவின்} குடும்பத்திலேயே தன் பிறப்பை அடைந்தான்.(48) ஓ! மன்னா, மன்னன் யயாதியின் புனித வாழ்க்கை வரலாற்றைக் கேட்பவன் எவனோ, அதைப் படிப்பவன் எவனோ, அவன் உடல்நலம், மக்கள்பேறு, நீண்ட வாழ்நாள் மற்றும் புகழ் ஆகியவற்றை அடைவான்" என்றார் {வைசம்பாயனர்}.(49)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 30ல் உள்ள சுலோகங்கள் : 49
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்