(ஹிரண்யகஷிபோர்வதோ ப்ரஹ்மக்ருதா ந்ருஸிம்ஹஸ்துதிஷ்ச )
Hiranyakashipu killed | Bhavishya-Parva-Chapter-39 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மன்; பிரம்மன் சொன்ன நரசிம்ம துதி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஆதித்யர்கள், சாத்யர்கள், விஷ்வர்கள், மருத்துகள், ருத்திரர்கள், தேவர்கள், மஹாத்மாக்கள், பெருஞ்சக்திவாய்ந்த வசுக்கள்,(1) தேவர்கள் ஆகியோர் அனைவரும் உலகின் வீழ்ச்சியால் அச்சமடைந்து, ஒடுக்கப்பட்டவர்களாகச் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த மிருகேந்திரனிடம் சென்று,(2) "ஓ! தேவா, உலகை அழிப்பவனும், ஒழுக்கங்கொண்டவனும், தீமைகளைச் செய்பவனுமான இந்தத் திதியின் மகனையும் {ஹிரண்யகசிபு}, அசுரர்கள் அனைவரையும் கொல்வாயாக.(3) ஓ! தைத்தியர்களை அழிப்பவனே, இந்தத் தைத்தியர்கள் அனைவரையும் கொல்பவன் நீயே. வேறு யாரும் இல்லை. உலகின் நலத்திற்காகவும், நன்மைக்காகவும் இவர்களை அழிப்பாயாக.(4) உலகங்கள் அனைத்தின் ஆசான் நீயே. பெரும்பாட்டனும் {பிரம்மனும்}, இந்திரனும் நீயே. உண்மையில், கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் உன்னையன்றி வேறு புகலிடம் ஏதும் கிடையாது" என்றனர்.(5)





