(பிரத்யும்நேந ஷம்பரஸைந்யவித்ராவணம்)
Battle between Pradyumna and Shamvara's sons | Vishnu-Parva-Chapter-162-106 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : சம்பரனின் நூறு மகன்களைக் கொன்ற பிரத்யும்னன்; கேதுமாலி, துர்தரன், சத்ருஹந்தன், பிரமர்த்தனன் ஆகியோரின் அழிவு...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு ருக்மிணியின் மகனுக்கும், சம்பரனின் மகன்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் போர் நடந்தது.(1) கோபத்தில் நிறைந்திருந்த அந்தப் பெருந்தைத்தியர்கள், பிரத்யும்னன் மீது கணைகளையும், சக்திகளையும், பராசங்களையும், தோமரங்களையும், குண்டங்களையும், புசுண்டிகளையும், கதாயுதங்களையும் அடுத்தடுத்து பொழியத் தொடங்கினர்.(2) கோபத்தில் தூண்டப்பட்டிருந்த கிருஷ்ணனின் மகனும் போரில் தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட ஐந்து ஐந்து கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.(3) இதனால் பெருங்கோபம் கொண்டவர்களும், உறுதிமிக்கவர்களுமான அந்த அசுரர்கள், பிரத்யும்னனைக் கொல்வதற்காக ஆயுதங்களின் வலைப்பின்னலை உண்டாக்கினர்.(4) கோபத்தால் தூண்டப்பட்ட அனங்கனும் {மன்மதனான பிரத்யும்னனும்} தன் வில்லை எடுத்துக் கொண்டான். அவன் பெருஞ்சக்திவாய்ந்த சம்பரனின் மகன்கள் பத்து பேரைக் கொன்றான்.(5) பெருஞ்சக்திவாய்ந்த கேசவனின் மகன், அடுத்தக் கணத்தில் கோபத்தில் நிறைந்தவனாக ஒரு பல்லத்தால் சித்திரசேனனின் தலையை அறுத்தான்.(6) சம்பரனின் எஞ்சிய மகன்கள் போர் வெறியோடு விரைந்து கணைகளை ஏவத் தொடங்கினர். அனங்கனைக் கொல்வதற்காக அவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கணைகளை ஏவிப் போரிட்டனர். (7)
