(யுத்தேயக்னிகணாபயானம் ஜ்வரோத்பத்திஸ்தேன க்ருஷ்ணஸ்ய யுத்தம் ச)
Krishna goes to Sonitpura and fights with Rudra's followers on the way | Vishnu-Parva-Chapter-179-123 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பாணபுரி அக்னிகளுடனும், பெரும் முனிவர் அங்கீரசுடனும் போரிட்ட கிருஷ்ணன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சங்குகள், பேரிகைகளின் {தூரியங்களின்} முழக்கம், சூதர்கள், மாகதர்கள், வந்திகளின் ஆயிரக்கணக்கான பாடல்கள்,(1) வெற்றியை அறிவிக்கும் மனிதர்களின் வாழ்த்தொலிகள் ஆகியவை ஒலித்தபோது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, சந்திரனையும், சூரியனையும், சுக்ரனையும் போலத் தோன்றினான்.(2) ஓ! மன்னா, வினதையின் மகன் {கருடன்} வானத்தில் உயர்ந்தபோது, ஹரியின் சக்தியால் அவனுடைய அழகு பெருகி அபரிமிதமானது.(3) தாமரைக் கண்ணனான கேசவன், பாணனைக் கொல்ல விரும்பி எட்டுக் கரங்களைக் கொண்டதும், மலைக்கு ஒப்பானதுமான ஒரு வடிவத்தை ஏற்றான். அந்த நேரத்தில் சாரங்கபாணியான ஜனார்த்தனன், எண்ணற்ற தலைகளைக் கொண்டவனானான்.(4) அவன், வலக்கைகள் நான்கில் வாள், சக்கரம், கதாயுதம், கணைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தான், இடக்கைகள் நான்கில் தோல் கேடயம், சாரங்கவில், வஜ்ரம், சங்கு ஆகியவற்றைக் கொண்டிருந்தான்.(5) {சாரங்கபாணி ஆயிரம் தலைகளைக் கொண்டிருந்தான்}. சங்கர்ஷணன், ஆயிரம் வடிவங்களை ஏற்று,(6) வெண்மையான ஆயுதங்களை ஏந்தி, சிகரங்களுடன் கூடிய கைலாச மலையைப் போல உயிரினங்கள் அனைத்தினாலும் தடுக்கப்பட முடியாதவனாக உதயச் சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(7) உயரான்மப் பிரத்யும்னன், போரில் தன் ஆற்றலை வெளிப்படுத்தும் நோக்கில், சனத்குமாரனைப் போன்ற தோற்றத்தை ஏற்றான்.(8) அதன்பிறகு, பெருஞ்சக்திவாய்ந்த வினதையின் மகன் {கருடன்}, வலுவாகச் சிறகடித்து எண்ணற்ற மலைகளை நடுங்கச் செய்தபடியும், காற்றின் பாதையைத் தடுத்தபடியும் பறந்து சென்றான்.(9) மனோ வேகத்துடன் கூடிய அவன் சித்தர்கள், சாரணர்கள் ஆகியோரின் புனிதமிக்கப் பாதையைக் கடந்து சென்றான்.(10)