(ஹம்ஸடிம்பகோத்பத்தி)
Hamsa and Dimbhaka | Bhavishya-Parva-Chapter-79 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: மன்னன் பிரம்மதத்தனுக்கும், பிராமணர் மித்ரஸஹருக்கும் இடையில் இருந்த நட்பு; ஹம்சன், டிம்பகன், ஜனார்த்தனன் பிறப்பு...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, சால்வதேசத்தைத் தன் ராஜ்ஜியமாகவும், பிரம்மதத்தன் என்ற பெயரையும் கொண்ட ஓர் உத்தம மன்னன் இருந்தான். மன்னா, அவன் அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட தூய இதயம் படைத்தவனாகவும் இருந்தான்.(1) அவன் எப்போதும் தன் மனத்தையும், புலன்களையும் கவனமாகக் கட்டுப்படுத்திக் கொண்டு ஐவகை வேள்விகளை {பஞ்சயஜ்ஞங்களைச்} செய்து வந்தான். வேதங்களில் சொல்லப்படும் பிரம்மத்தைக் குறித்த அறிவியலை நன்கறிந்தவனாகவும் அவன் இருந்தான். எப்போதும் வேள்விகளில் ஈடுபடுபவனாக இருந்ததால் அவனது இருப்பே உயிரினங்கள் அனைத்திற்கும் மங்கலகரமானதாக இருந்தது.(2)