(குவலயாபீடமாரணம்)
A description of the arena | Vishnu-Parva-Chapter-84-029 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : அரங்கத்தின் வர்ணனை; குவலயாபீடம் என்ற யானையைக் கொன்று மற்கத்திற்குள் நுழைந்த கிருஷ்ணனும், பலராமனும்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அடுத்த நாள், அந்தப் பெரும் விளையாட்டைக் காண ஆர்வமுள்ள குடிமக்களால் அந்த வட்டரங்கம் நிறைந்திருந்தது.(1) அந்தச் சபையானது, வண்ணம் பூசப்பட்ட எண்கோணத் தூண்களால் தாங்கப்பட்டதாகவும், திடல்கள், கதவுகள், ஆணிகள் பொருத்தப்பட்டதாகவும், வட்டமான அல்லது பிறை வடிவ சாளரங்களுடன் கூடியதாகவும், மெத்தைகளுடன் கூடிய இருக்கைகளைக் கொண்டதாகவும் இருந்தது;(2) பெருங்கடலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த அதில் {அந்தச் சபையில்} போரைக் காண்பதற்காகப் பொருத்தப்பட்ட போதிய அளவில் அகன்ற விதானங்கள் {காட்சிக்கூடங்கள்} பெரும் மேகங்களைப் போலத் தொங்கிக் கொண்டிருந்தன; முன்புறம் திறந்திருந்தாலும், அழகியவையும், நேர்த்தியானவையுமான திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டும், மலர்த்தோரணங்களுடன் மகுடம் சூட்டப்பட்டும் இருந்த அது {அந்த சபை} கூதிர்கால மேகங்களைப் போல ஒளியுடன் பிரகாசித்தது. மலைகளைப் போன்றவையும், பல்வேறு தரப்புகளுக்கும், குழுக்களுக்கும் உரியவையுமான காட்சிக்கூடங்கள், பல்வேறு கலைகளின் கருவிகளுடனும், சின்னங்களுடனும் கூடிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(3-5)
