Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

Sunday, 20 June 2021

மதுவைக் கொன்ற விஷ்ணு | பவிஷ்ய பர்வம் பகுதி – 25

(ஆத்மோபாஸநாதிகதநம்)

Vishnu kills Madhu | Bhavishya-Parva-Chapter-25 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : மலைகளைக் குறித்த வர்ணனை; ஆறுகளின் உற்பத்தி; மழைக்காலமும் வசந்த காலமும்; யோகம்; விஷ்ணு; மாயை; ஆத்மா...

Madhu Kaitabha and Vishnu

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "புஷ்கரையில் மது வீழ்ந்ததைக் கண்ட அனைத்து உயிரினங்களும் அனைத்துப்புறங்களிலும் பாடியும், ஆடியும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தன.(1) மலைகளில் முதன்மையான சுபார்ஷ்வம் பல்வேறு தாதுப்பொருட்களால் மறைக்கப்பட்ட தன் தங்கச் சிகரங்களுடன் வானத்தைப் பிளப்பதைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(2) தாதுக்களால் எங்கும் மறைக்கப்பட்டிருந்த மலைகள் மின்னலுடன் கூடிய மேகங்களைப் போன்ற உயர்ந்த சிகரங்களுடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன.(3) அவற்றின் சிகரங்கள் மண்ணாலும், காற்றில் எழுந்த சாம்பலாலும் மறைக்கப்பட்டருந்ததால் பெரும் மேகங்கள் பலவற்றைப் போல அவை தெரிந்தன.{4} மேகங்களால் மறைக்கப்பட்ட சிகரங்களைக் கொண்டவையும், ஏராளமான தங்கத்தை விளைவிக்கும் தங்கள் சிறகுகளால் {தங்கள் மேலிருந்த} மரங்களைச் சிதறடித்தவையுமான மலைகள் ஆகாயத்தில் நிலைத்திருப்பவை போலத் தெரிந்தன.{5,6} பொன் தாதுக்களால் மறைக்கப்பட்ட சிகரங்களைக் கொண்டவையும், சிறகுகள் படைத்தவையுமான மலைகள், காற்றால் மேலெழுந்து சென்று பறவைகள் அனைத்தையும் அச்சுறுத்தின. பளிங்கு {ஸ்படிகம்}, மரகதம் {சூரியகாந்தம்}, நீலமணி {சந்திரகாந்தம்} ஆகியவற்றால் அந்தப் பொன் மலைகள் மறைக்கப்பட்டிருந்தன.{7}

Wednesday, 16 June 2021

மது அசுரன் - விஷ்ணு போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 24

(மோஹவிவேகயோர்யுத்தம்)

The fight between Madhu and Vishnu | Bhavishya-Parva-Chapter-24 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : இந்திரனைக் கட்டிப்போட்டு விஷ்ணுவை எதிர்த்துச் சென்ற அசுரன் மது; இசையில் மயங்கிய மது; விஷ்ணுவுக்கும் மதுவுக்கும் இடையில் நடைபெற்ற போர்; மது விஷ்ணு எனும் உருவகம்; விஷ்ணுவின் பெருமை; விஷ்ணு துதி...

Pranayama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பயங்கர சக்தியும் பேராற்றலும் மிக்கத் தைத்தியன் மது, கூரிய வடங்களைக் கொண்டு அந்த மலையில் மகேந்திரனைக் கட்டிப்போட்டான்.[1](1) இந்திரனின் கௌரவத்தை அடைய விரும்பிய மது, பிரஹ்லாதனுடைய சொற்களின்படியும், உண்மையான புத்தியின் வீழ்ச்சியாலும் திடீரென அவனை {இந்திரனை} வெல்லப்பட முடியாத இரும்பு வடங்களால் கட்டிப்போட்டான்; அதன் பிறகு தன் படைக்குத் தலைமையேற்று வெளியே வந்த அவன் {மது}, காலனால் தூண்டப்பட்டவனாகப் பேராற்றல் வாய்ந்த விஷ்ணுவைப் போருக்கு அழைத்தான்.(2-4)

Saturday, 1 May 2021

மதுகைடபர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 13

(மதுகைடபவரப்ரதாநம்)

The world of creation begins: The birth of Madhu and Kaitabha | Bhavishya-Parva-Chapter-13 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : மது கைடபர்களின் தோற்றமும், அழிவும்...


Madhu-Kaitabha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஆயிரம் யுகங்களின் சுழற்சிக்குப் பிறகு சத்ய யுகத்தின் தொடக்கத்தில் தாமஸ குணம் (ஒழுங்கற்ற போக்கு) நிலவியது. இந்த நேரத்தில் படைப்புக்குத் தடையாக இருக்கும் பேரசுரன் மது தன் பிறப்பை அடைந்தான்.{1} சில காலம் கழித்து, ரஜஸ குணத்தின் மூலம் மதுவுக்கு உதவி செய்வதற்காகக் கைடபன் என்ற இரண்டாம் அசுரன் படைக்கப்பட்டான்.{2} மது, கைடபன் என்ற பெயர்களைக் கொண்டவர்களும், பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்களும், முறையே ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களைக் கொண்டவர்களுமான அந்தப் பேரசுரர்கள் இருவரும் ஒற்றைப் பெருங்கடலின் நீரைக் கலங்கடிக்கத் தொடங்கினர்.{3} அவர்கள் கருநீலத்திலும், சிவப்பு நிறத்திலும் ஆடைகள் உடுத்தியிருந்தனர், எரியும் வெண்பற்களைக் கொண்டிருந்தனர், செருக்கில் மிதந்திருந்த அவர்கள் ஒளிரும் கேயூரங்களையும், கங்கணங்களையும் அணிந்திருந்தனர்.{4} 

Monday, 27 July 2020

ஹரியஷ்வன் | விஷ்ணு பர்வம் பகுதி – 93 – 037

(ஹர்யஷ்வராஜகதா யதோருத்பத்திஷ்சம்)

An account of Haryashva | Vishnu-Parva-Chapter-93-037 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ஜராசந்தனிடம் கொண்ட அச்சமும், அது தீரும் வழியும்; மன்னன் ஹரியஷ்வனின் கதை; யது, யாதவர்களின் தோற்றம்...

Lavanasura killed by Satrugna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பலம்வாய்ந்தவனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, ரோஹிணியின் மகனுடன் {பலராமனுடன்} சேர்ந்து யாதவர்களால் நிறைந்த மதுரா நகரில் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்.(1) இளமை அழகுடனும், அரச செழிப்புடனும் அவனது மேனி படிப்படியாக மிளிர்ந்தது, காடுகளால் அலங்கரிக்கப்பட்ட மதுரா எங்கும் அவன் திரியத் தொடங்கினான்.(2)

ராஜகிருஹத்தின் மன்னன் ஜராசந்தன், மீண்டும் தன் மகள்கள் இருவராலும் தூண்டப்பட்டும், கம்ஸனின் மரணத்தை நினைவு கூர்ந்தும் போருக்கான ஆயத்தங்களைச் செய்தான்.(3) இவ்வகையில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான யாதவர்கள் பதினேழு முறை ஜராசந்தனுடன் போரிட்டும் அவர்களால் அவனைப் போரில் கொல்ல இயலவில்லை.(4) மகதத்தின் செழிப்புமிக்க மன்னன் {ஜராசந்தன்}, தன்னுடைய நால்வகைப் படையுடன் பதினெட்டாம் படையெடுப்புக்கான ஆயத்தங்களைச் செய்தான்.(5) பெருஞ்சக்திவாய்ந்தவனும், ராஜகிருஹத்தின் வீரமிக்க மன்னனும், ஆற்றலில் தேவர்களின் மன்னனை {இந்திரனைப்} போன்றவனும், அழகிய பேரரசனுமான ஜராசந்தன், தன்னுடைய முந்தைய தோல்விகளால் நாணமடைந்தும், கிருஷ்ணனைக் கொல்லும் நோக்குடனும் ஒரு பெரும்படையால் சூழபட்டவனாகப் புறப்பட்டுச் சென்றான்.(6,7) ஜராசந்தன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட யாதவர்கள், அவன் திரும்பிவிட்டான் {புறப்பட்டு வருகிறான்} என்பதைக் கேட்டதும் ஆலோசனை செய்யத் தொடங்கினர்.(8)

அப்போது பேரொளி கொண்டவனும், அறநெறியின் விதிகளை நன்கறிந்தவனுமான விகத்ருவானவன்[1], உக்ரஸேனனின் முன்னிலையில் வைத்துத் தாமரைக் கண்ணனான கிருஷ்ணனிடம்,(9) "ஓ! குழந்தாய் கோவிந்தா, நமது குலத்தின் தோற்றம் குறித்துக் கேட்பாயாக. உரிய நேரம் வந்துவிட்டதால் நான் இதை உரைக்கிறேன். ஓ! பக்திமானே {சாதுவே}, என் சொற்கள் முறையெனக் கருதினால் அவற்றின் படி நீ செயல்படுவாயாக.(10) ஆன்ம ஞானத்தை நன்கறிந்த வியாசரால் சொல்லப்பட்டது போல இந்த யாதவக் குலத்தினுடைய தோற்றத்தை நான் விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(11) மனுவின் குலத்தில், இக்ஷ்வாகுவுக்குப் பிறந்தவனும், மஹேந்திரனைப் போன்ற பலம்வாய்ந்தவனும், செழிப்புமிக்கவனும், ஹரியஷ்வன் என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான மன்னன் ஒருவன் இருந்தான்[2].(12) அவனுக்கு இந்திரனின் சச்சியைப் போன்றவளும், அன்புக்குரியவளும், தைத்தியன் மதுவின் மகளும், மதுமதி என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு மனைவி இருந்தாள்.(13) அவள் இளமை நிறைந்தவளாகவும், ஒப்பற்ற அழகைக் கொண்டவளாகவும், மன்னனின் விருப்பங்களை எப்போதும் நிறைவேற்றுபவளாகவும் இருந்தாள்.(14) தானவ மன்னனின் மகளான அவள், பெண்ணாக இருந்தாலும், விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவளாகவும், அழகிய இடையைக் கொண்டவளாகவும், இக்ஷ்வாகுக்களின் குலத்தில் முதன்மையானவனின் {ஹரியஷ்வனின்} விருப்பத்தை நிறைவேற்றுபவளாகவும், வானுலாவும் ரோஹிணியைப் போல ஒரே மனைவியென்ற நோன்பு {ஏகபத்னி விரதத்தை} நோற்பவளாகவும் இருந்தாள்.(15)

[1] இந்த விகத்ரு, ஹரிவம்ச விஷ்ணு பர்வம் 22ம் பகுதியின் 8ம் ஸ்லோகத்தில் சொல்லப்படும் பட்டியலில் இருக்கிறான்.

[2] இக்ஷ்வாகுவுடைய ஒன்பது மகன்களின் பெயர் பட்டியலில் ஹர்யஷ்வனின் பெயர் இல்லை. இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவன் என்பதைச் சொல்வதற்காக இக்ஷ்வாகுவுக்குப் பிறந்தவன் என்று இங்குச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். இக்ஷ்வாகு குலத்தின் பதிமூன்றாம் தலைமுறையில் ஹரியஷ்வன் என்ற மன்னன் ஒருவன் குறிப்பிடப்படுகிறான். ஹரிவம்ச பர்வம் பகுதி 12ல் அவன் திருடாஷ்வனின் மகனாகவும், துந்துமாரன் என்கிற குவலாஷ்வனின் பேரனாகவும் சொல்லப்படுகிறான். அவன் இவனாக இருக்கும் வாய்ப்பு குறைவே. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த அத்தியாயமும், இதில் உள்ள செய்திகளும் இல்லை.

ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு காலத்தில், மன்னர்களில் முதன்மையானவனும், தாமரைக் கண்ணைக் கொண்டவனும், காலஞானத்தை அறிந்தவனுமான ஹரியஷ்வன், தன் அண்ணனால் வெளியேற்றப்பட்டவனாக அயோத்யையை விட்டு அகன்றான். அவன் மிகச் சொற்பமான நபர்களுடனும், தன் அன்புக்குரிய மனைவியுடனும் காடுகளுக்குச் சென்று அங்கே வாழத் தொடங்கினான்.(16,17)

ஒரு நாள், தாமரைக் கண்களைக் கொண்டவளான மதுமதி, அண்ணனால் வெளியேற்றப்பட்ட மன்னனிடம்,(18) "ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, நீர் உமது நாட்டின் மீது கொண்ட ஆசைகள் அனைத்தையும் கைவிடுவீராக. நாமிருவரும் என் தந்தை மதுவின் வீட்டிற்குச் செல்வோம்.(19) விரும்பிய மலர்களையும், கனிகளையும் பொழியும் மரங்களைக் கொண்டதும், தேவர்களின் நகரைப் போன்றதுமான மதுவனம் அங்கே இருக்கிறது.(20) ஓ! மன்னா, நீர் என் தந்தைக்கும், அன்னைக்கும் அன்புக்குரியவராக இருக்கிறீர், என்னுடன் பிறந்த லவணனும் என் நிறைவுக்காக உமக்கன்பனாகவே இருப்பான்.(21) நாம் அவனுடன் சேர்ந்து நம் நாட்டில் இருப்பதைப் போலவே அங்கே மகிழ்ச்சியாக இன்புற்றிருப்போம். ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, நந்தனத் தோட்டத்திற்குத் தேவர்கள் செல்வதைப் போலவே நாம் அங்கே சென்று தேவர்களின் நகரத்தில் இருப்பதைப் போல இன்புற்றிருப்போம். உமக்கு நன்மை நேரட்டும்.(22) ஓ! அரசே, உமது அண்ணனை நம்புவது வீணே. அவர் நமக்கு எதிராகத் தீங்கு செய்பவராகவும், தன் நாட்டைக் குறித்து எப்போதும் செருக்குடையவராகவும் இருக்கிறார். எனவே நாம் அவரைக் கைவிட வேண்டும்.(23) ஓர் அடிமையை {பணியாளைப்} போல அண்டியிருக்க வேண்டிய அத்தகைய இழிந்த வசிப்பிடத்திற்கு ஐயோ. எனவே, ஓ! வீரரே, நாமிருவரும் என் தந்தையின் வீட்டுக்குச் செல்வோம்" என்றாள் {மதுமதி}.(24)

காமத்தால் பீடிக்கப்பட்ட அந்த மன்னன் {ஹரியஷ்வன்}, தன் மாமனாரின் உதவியின் மூலம் தன் அண்ணனை அழிக்க விரும்பவில்லை என்றாலும், தன் மனைவியின் சொற்களை விரும்பவே செய்தான்.(25) அதன் பின் மனிதர்களில் முதன்மையான மன்னன் ஹரியஷ்வன், ஆசையால் பீடிக்கப்பட்டவனாகத் தன் அழகிய மனைவியுடன் மதுவின் நகரத்திற்குச் சென்றான். தானவர்களின் மன்னன் {மது} அவனிடம் {ஹரியஷ்வனிடம்} அன்புடன், "ஓ! மகனே ஹரியஷ்வா, உனக்கு நல்வரவு. உன்னைக் கண்டதில் நான் நிறைவடைகிறேன்.(26,27) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, மதுவனம் தவிர இந்த நாடு முழுவதையும் நான் உனக்குத் தருகிறேன்; நீ இங்கேயே வாழ்வாயாக.(28) இந்தக் காட்டில் {மது வனத்தில்} லவணன் உனக்கு உதவி செய்பவனாகவும், உன் எதிரிகளை அழிப்பதில் உனக்கு வழிகாட்டியாகவும் இருப்பான்.(29) பசுக்கள் மிகுந்ததும், இடையர்கள் நிறைந்ததும், கடலின் நீரால் அலங்கரிக்கப்பட்டதுமான இந்தச் செழிப்புமிக்க நாட்டை நீ ஆள்வாயாக.(30) ஓ! மகனே {மருமகனே}, நீ இங்கே வாழ்ந்தால், பெரும் மலைக்கோட்டையை அடைவாய், செழிப்புமிக்கக் கிராமங்களையும், நகரங்களையும் கொண்ட உன்னுடைய இந்தப் பரந்த நாடு மன்னர்களின் வசிப்பிடமாக இருக்கும்[3].(31) கடலால் நீர் அளிக்கப்படும் {மழை பொழியும்} நாடு, ஆபத்துகளில் இருந்து விடுபட்டதாகும். அங்கே ஆநர்த்தம் என்ற பெயரைக் கொண்ட ஒரு பரந்த மாகாணத்தை நீ அடைவாய்.(32) ஓ! மன்னா, எனினும் காலவோட்டத்திலேயே இவற்றை நீ அடைவாய். நீ இப்போது இந்த நாட்டின் மன்னனுக்குரிய கடமைகளைச் செய்வதில் ஈடுபடுவாயாக.(33) ஓ! குழந்தாய், காலப்போக்கில் உன் குடும்பம் {குலம்} யயாதியில் இருந்து தொடங்கும் யது குலத்துடன் இரண்டறக் கலக்கும். நீ சூரிய குலத்தில் பிறந்திருந்தாலும் உன் குலம் சந்திர குலத்தின் உட்பிரிவாக அமையும்.(34) ஓ! குழந்தாய், இந்த மிகச் சிறந்த ஆட்சிப்பகுதியை உனக்கு அளித்த பிறகு, தபம் செய்வதற்கான இடமும், உப்பின் வசிப்பிடமுமான பெருங்கடலுக்கு நான் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்.(35) ஓ! மகனே, உன் குலத்தைப் பெருகச் செய்வதற்காக, செழிப்புமிக்க இந்தப் பெரிய நாட்டை லவணனுடன் சேர்ந்து ஆள்வாயாக" என்றான் {அசுரன் மது}.(36)

[3] சித்திரசாலை பதிப்பில், "மகனே, இங்கே ஆட்சி செய்யப்போகும் உனக்குக் கிரி நகரத்தின் பெருங்கோட்டையானது, நாட்டின் பெருங்காரியங்களில் ஈடுபடும் மன்னனின் வசிப்பிடமாக இருக்கும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "குழந்தாய், இங்கு வஸிக்கும் உனக்கு, பெரிய மலை ப்ரதேச அரண் உண்டு, ஸௌராஷ்ட்ர தேச ராஜா வஸிக்கும் தலைநகராகும் ஸமுத்திரம் பக்கத்திலுள்ள நீர் நிலை மிகுந்த தேசமாகையால் வ்யாதியற்றதுமாகும்" என்றிருக்கிறது.

மதுவின் இந்தச் சொற்களைக் கேட்ட ஹரியஷ்வன், "நீருக்குள் நீர் நுழைவீராக" என்று சொல்லிவிட்டு அந்த நாட்டை ஏற்றுக் கொண்டான், அந்தத் தைத்தியனும், தபசிகளின் புகலிடமான வருணனின் வசிப்பிடத்திற்குச் சென்றான்.(37) அதன் பிறகு, தேவர்களைப் போன்ற பெரும்பிரகாசம் கொண்ட ஹரியஷ்வன், அந்தச் சிறந்த மலையில் {கிரிவரத்தில்} வசிப்பதற்கான ஒரு நகரத்தை அமைத்தான்.(38) அழகிய நகரங்களையும், மதிப்புமிக்கப் பசுக்களையும் கொண்ட அந்த ஆநர்த்த நாடு விரைவில் செழிப்படைந்தது.(39) குடிமக்கள் வசித்ததும், காடுகளால் அலங்கரிக்கப்பட்டதும், கடலின் கரையில் அமைந்திருந்ததும், சுவர்களும் {மதில்களும்}, கிராமங்களும் நிறைந்ததுமான அநூப நாடு {சதுப்பு நிலத்துடன் கூடிய ஆநர்த்த நாடு}, கழனிகளாலும், தானியங்களாலும் நிறைந்திருந்தது[4].(40) பெரும் பலம்வாய்ந்த மன்னனான ஹரியஷ்வன், குடிமக்களின் இன்பத்தையும், நகரங்களின் மகிழ்ச்சியையும் அதிகரித்து, தன் அரச கடமைகளைச் செய்து புகழுடன் அந்தச் செழிப்பு மிக்க நாட்டை ஆட்சி செய்தான்.(41) உயரான்மாவான ஹரியஷ்வனின் சரியான நிர்வாகத்தால் செழிப்படைந்த அந்நாடு, ஒரு நாட்டுக்குரிய தன்மைகள் அனைத்தையும் அடைந்து, படிப்படியாகப் பரிமாணத்தில் வளர்ந்தது {அளவில் பெருகியது}.(42) ஓ! தலைவா, அரசனுக்குரிய அருஞ்செயல்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த அரசன், நாட்டில் இருந்து கொண்டு தன் ஒழுக்கத்தாலும், அறநெறியாலும் தன் குடும்பச் செழிப்பை {குல செழிப்பை} அடைந்தான்.(43)

[4] மற்ற இரண்டு பதிப்புகளிலும் அநூப நாடு என்பது குறிப்பிடப்படவில்லை. சித்திரசாலை பதிப்பில், "ஆநர்த்தம் என்ற பெயரைக் கொண்ட மங்கலமான அந்த நாடு, பசுக்களெனும் செல்வத்தால் செல்வத்தையும், வளத்தையும் மிக விரைவில் அடைந்தது. காடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தச் சதுப்பு நிலமானது, கோட்டைகளுடனும், கிரமங்களுடனும், எல்லைகளில் வினோதச் செடிகளுடனும் வளமாக இருந்தது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஆநர்த்தம் எனும் அந்தத் தேசம் நல்ல ராஜ்யமாகவும், பசுச் செல்வம் கூடியதும், குறுகிய காலத்தில் செழிப்புள்ளதாயுமாயிற்று. பயிர் நிலம் நிரம்பியதும், நீர்நிலையுள்ள வனத்தை எல்லையாகவுடையதும், சுற்றிலும் கிராமங்களையுடையதும், ஆச்சர்யமானதும், பரந்ததுமான ராஜ்யத்தை ப்ரஜைகளுக்கு ஆநந்தத்தை மூட்டியும், ராஜ்யத்தை வளர்க்கும் ராஜ தர்மத்துடனும் புகழ்பெறப் போற்றி அந்த ராஜா வளர்த்தான்" என்றிருக்கிறது.

அதன்பிறகு, நுண்ணறிவுமிக்கவனான ஹரியஷ்வன், ஒரு மகனை அடைய விரும்பி புனித நோன்புகளைப் படிப்படியாகப் பயிலத் தொடங்கினான். அவன் {ஹரியஷ்வன்} சிறப்புமிக்கத் தன் மகன் யதுவை மதுமதியிடம் பெற்றான்.(44) எக்காள முழக்கத்தைப் போன்ற குரலைக் கொண்டவனும், பகைவர்களால் தடுக்கப்பட முடியாதவனும், அரசக்குறிகள் அனைத்தையும் கொண்டவனும், பேராற்றல் படைத்தவனுமான யது படிப்படியாக வளரத் தொடங்கினான்.(45,46) அவனே {யதுவே} பூமியைச் செழிப்புடன் ஆண்டு வந்த உயரான்ம ஹரியஷ்வனின் ஒரே மகனாவான்.(47) ஹரியஷ்வன், தன் நாட்டை எந்தக் குறையுமின்றிப் பத்தாயிரம் ஆண்டுகள் பக்தியுடன் ஆண்டு, பூமியில் இருந்து மறைந்து, தேவர்களின் நகரை அடைந்தான்.(48) அதன்பிறகு குடிமக்கள் வீரமிக்க யதுவை அந்த நாட்டில் நிறுவினார்கள் {நாட்டின் அரியணையில் நிறுவினார்கள்}. இந்திரனைப் போன்ற அழகனான (எவனிடம் யாதவர்கள் பிறந்தனரோ அந்த) யது, தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, சூரியனைப் போல எழுந்து பூமியை ஆட்சி செய்தான். (அவனுடைய ஆட்சிக்காலத்தில்) கள்வர்களிடம் கொண்ட அச்சம் {குடிமக்களிடம்} அகன்றது.(49,50)

ஒரு காலத்தில், விண்மீன்களால் (சூழப்பட்ட) சந்திரனைப் போல, நற்குணங்கள் நிறைந்த தன் மனைவியருடன் நீரில் விளையாடிக் கொண்டிருந்த மன்னன் {யது}, பெருங்கடலின் நீரில் நீந்தத் தொடங்கிய போது, பாம்புகளின் பலம்வாய்ந்த மன்னனான தூம்ரவர்ணனால் திடீரெனத் தாக்கப்பட்டான்.(51,52) அவன், வைரங்களாலான தூண்களையும், கதவுகளையும் கொண்டதும், முத்துக்கள், வெண்சங்குகளின் குவியலாலும், பல்வேறு ரத்தினத் திரள்களாலும், பவளங்களாலும், இலைகளால் மறைக்கப்பட்ட மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான பாம்புகளின் மன்னனின் நகரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டான். அது கடலின் வயிற்றுக்குள் வாழும் முன்னணி பாம்புகளால் நிறைந்திருந்தது, அதன் நடுவில் பொன், அல்லது சந்திரனைப் போன்ற ஒளியுடன் கூடிய கோவில்கள் இருந்தன.(53-55) மன்னர்களின் தலைவனான அவன் {யது}, கடலின் தெளிந்த நீரில், பூமியின் பரப்பில் உள்ளதைப் போலவே கட்டப்பட்டிருந்த பாம்புத் தலைவனின் நகரத்தைக் கண்டான்.(56) மன்னன் யது, பெண் பாம்புகளால் நிறைந்திருந்த அடியற்ற நீர்ப்பரப்புக்குள் இதயம் தெளிந்தவனாக நுழைந்தான்.(57) ரத்தினங்களாலானதும், தாமரை இலைகள் பரப்பப்பட்டதும், தாமரை நூல்களால் கட்டப்பட்டதுமான மிகச் சிறந்த நீர் இருக்கை அவனுக்கு அளிக்கப்பட்டது.(58)

அந்தச் சிறந்த இருக்கையில் மன்னன் யது அமர்ந்த போது, பன்னகர்களின் மன்னனான தூம்ரவர்ணன் மதிப்புடன் வந்து,(59) "ஓ! யதுக்களில் முதன்மையானவனே, உன் தந்தை {ஹரியஷ்வன்}, இந்தப் பெருங்குலத்தைப் பூமியில் நிறுவி, பெருஞ்சக்திவாய்ந்த அரசனான உன்னைப் பெற்றுச் சொர்க்கத்திற்குச் சென்று விட்டான்.(60) ஓ! குழந்தாய், (உலகின்) நன்மைக்காக உன் தந்தையால் நிறுவப்பட்ட மன்னர்களின் சுரங்கமாகவே இருக்கும் இந்தக் குலம் உன் பெயரால் யாதவக் குலம் என்று அறியப்படும்.(61) ஓ! தலைவா, உன்னுடைய குலத்தில் தேவர்களும், ரிஷிகளும், பெரும் உரகர்களின் அழிவற்ற மகன்களும் மனிதர்களாகப் பிறப்பார்கள்.(62) எனவே, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, உன் கடமைகளைப் பின்பற்றிக் கொண்டும், குடிமுதல்வனுக்குரிய பணிகளைச் செய்து கொண்டும், யுவனாஷ்வனின்[5] தங்கையிடம் நான் பெற்ற மகள்களான இந்தக் கன்னிகையர் ஐவரையும் நீ ஏற்பாயாக. நீ வரம்பெறத் தகுந்தவன், நான் உனக்கு ஒரு வரத்தை அளிப்பேன்.(63,64) உன் குலத்தில் பிறக்கப் போகிறவர்கள், பௌமன் {பைமன்}, சாத்வதன் {குகுரர்}[6], போஜன், அந்தகன், யாதவன், தாசார்ஹன், விருஷ்ணி என்ற ஏழு (குலங்களின்) பெயர்களில் கொண்டாடப்படுவார்கள்" என்றான் {தூம்ரவர்ணன்}.(65)

[5] சூரிய குலத்தில் இக்ஷ்வாகுவில் இருந்து ஏழாம் தலைமுறையைச் சார்ந்த ஒருவன் யுவனாஷ்வன் என்ற பெயரில் ஹரிவம்ச பர்வம் 11ம் பகுதியில் குறிப்பிடப்படுகிறான். இவன் அவனாக இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவே. 

[6] மற்ற இரண்டு பதிப்புகளிலும் குகுரர்கள் என்றே இருக்கிறது.

பன்னகர்களில் முதன்மையானனும், மகளுக்கான நோன்பை {கன்யா விரதம்} நோற்றுக் கொண்டிருந்தவனுமான தூம்ரவர்ணன், இதைச் சொல்லிவிட்டுக் கைகளில் {புனித} நீருடன் தன் மகள்களை அவனுக்கு மகிழ்ச்சியாகக் கொடுத்தான். அதன் பிறகு அவன், யதுவுக்குப் பின்வரும் வரத்தை மகிழ்ச்சியுடன் அளித்தான். (66,67) {தூம்ரவர்ணன்}, "ஓ! கௌரவங்களை அளிப்பவனே, பெற்றோருக்கு நிகரான சக்தியுடன் கூடிய ஐந்து மகன்களை என்னுடைய ஐந்து மகள்களும் பெற்றெடுப்பார்கள்.(68) உன் குலத்தில் பிறந்த மன்னர்கள் அனைவரும், என் வரத்தின் சக்தியால், விரும்பிய வடிவங்களை ஏற்க வல்லவர்களாகவும், நீரில் திரிய வல்லவர்களாகவும் இருப்பார்கள்" என்றான் {என்று வரமளித்தான் தூம்ரவர்ணன்}.(69)

இவ்வாறு வரத்தையும், ஐந்து கன்னிகைகளையும் பெற்றுக் கொண்ட மன்னன் யது, நீரில் இருந்து எழும் சந்திரனைப் போல விரைவில் எழுந்தான்.(70) தெய்வீக மலர்மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தவனும், திருமண உடையுடன் இருந்தவனுமான மன்னன் {யது}, ஐந்து விண்மீன்களுக்கு மத்தியில் உள்ள சந்திரனைப் போல, ஐந்து பெண்களால் சூழப்பட்டவனாகப் பாம்புகளின் அந்தப்புரம் முழுவதும் சென்றான்.(71,72) அந்த மன்னன் {யது}, நெருப்புகளைப் போன்ற தன் மனைவியர் ஐவரையும் தேற்றி, மகிழ்ச்சியால் நிறைந்தவனாகத் தன் நகரத்திற்குத் திரும்பிச் சென்றான்" {என்றான் விகத்ரு} என்றார் {வைசம்பாயனர்}.(73)

விஷ்ணு பர்வம் பகுதி – 93 – 037ல் உள்ள சுலோகங்கள் : 73
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Wednesday, 27 May 2020

தைத்தியர்களின் பிறப்பு | ஹரிவம்ச பர்வம் பகுதி – 54

(விஷ்ணும் ப்ரதி தேவருஷே நாரத வாக்யம்)

The birth of the daityas | Harivamsha-Parva-Chapter-54 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நாராயணனைச் சந்தித்த நாரதர்; லவணனுக்கும் சத்ருக்கனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; மதுரா நகரத்தை நிறுவிய சத்ருக்னன்; பூமியில் பிறந்திருக்கும் அசுரர்கள் செய்யும் கொடுமைகளைச் சொன்னது; நாராயணன் அவதரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட நாரதர்...

Shatrugna and Lavanasura

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நாராயணன் வெற்றியடைந்ததும், பூமியில் தன் நிலையாகப் பூமியில் இருக்கும் ஒரு வீட்டுக்குச் சென்ற பிறகு, தேவர்கள் தங்கள் கூறுகளை {அம்சங்களை} பாரதக் குலத்தில் பிறக்க {அவதரிக்கச்} செய்த பிறகு, தர்மன், இந்திரன், பவனன், தெய்வீக மருத்துவர்களாக அஸ்வினி இரட்டையர், சூரியன் ஆகியோரின் கூறுகள் பூமியில் இறங்கிய பிறகு, தேவர்களின் புரோஹிதர் {பிருஹஸ்பதி} தன் கூறொன்றில் பூமியில் இறங்கிய பிறகு, வஸுக்களின் எட்டாவது கூறும் {பீஷ்மரும்} பூமியில் இறங்கிய பிறகு, காலன் மற்றும் கலியின் கூறுகள் பூமிக்கு வந்த பிறகு, சுக்ரன், வருணன், சங்கரன், மித்ரன், குபேரன், கந்தர்வர்கள், உரகர்கள், யக்ஷர்கள் ஆகியோரின் கூறுகள் பூமியில் இறங்கிய பிறகு, நாரதர் நாராயண சக்தியில் ஒரு கூறாக வெளியே வந்தார்[1].(1-6) நெருப்பைப் போன்று பிரகாசமாக இருந்த அவர், உதயச் சூரியனைப் போன்ற கண்களையும், பெரியதும், பரந்ததுமான ஜடமுடியையும் கொண்டிருந்தார். அவர் சந்திரக் கதிர்களைப் போன்ற வெள்ளை உடையை உடுத்திக் கொண்டு, பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராக இருந்தார்.(7) அவர், அறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்தோழியைப் போல இருந்த {மஹதி என்ற பெயரைக் கொண்ட} ஒரு வீணையைச்[2] சுமந்து கொண்டு, தன் உடலில் போர்த்திய மான்தோலுடனும், பொன்னாலான புனித நூலுடனும் {முப்புரிநூலுடனும்} இருந்தார். தன் கரங்களில் தண்டம் மற்றும் கமண்டலுவுடன்[3] அவர் இரண்டாவது சக்ரனை {இந்திரனைப்} போல இருந்தார்.(8)

[1] "தர்மனின் கூறு {அம்சம்} யுதிஷ்டிரன், சக்ரனின் கூறு அர்ஜுனன், பவனனின் கூறு பீமசேனன். அசுவினி இரட்டையர்கள் நகுலன் மற்றும் சகாதேவனாகப் பிறந்தனர். சூரியன் கர்ணனாகவும், தேவர்களின் புரோகிதரான பிருஹஸ்பதி துரோணராகவும், எட்டாவது வஸு, பீஷ்மராகவும், காலன் விதுரனாகவும், கலி துரியோதனனாகவும் பிறந்தனர். சோமன் அபிமன்யுவாகவும், சுக்ரன் பூரிஸ்ரவஸ் ஆகவும், வருணன் சுருதாயுவாகவும், சங்கரன் அஸ்வத்தாமனாகவும், மித்ரன் கணிகராகவும், குபேரன் திருதராஷ்டிரனாகவும், கந்தர்வர்கள் மற்றும் பிறர் உக்ரசேனன், துச்சாசனன் மற்றும் பிறராகவும் பிறவி எடுத்தனர் {அவதரித்தனர்}" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தேசிராஜுஹனுமந்த ராவின் பதிப்பில், இந்த 1 முதல் 6ம் ஸ்லோகம் வரை, "பூமி அன்னை பிரம்மனிடம் உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டு திரும்பிய போது, பாரத வம்சத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தேவர்கள் பூமியில் அவதரித்தனர்" எனத் தொடங்கி, "இவ்வாறு தேவர்கள் பூமியில் அவதரித்த போது, அவர்களை வானத்தில் இருந்து தேவ முனியான நாரதர் கண்டு, பூமியில் அவர்களுக்கு மத்தியில் விஷ்ணு இல்லாததை உணர்ந்தார்" என்று முடிகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே இருக்கிறது.

[2] "இது நரம்புகளைக் கொண்ட இசைக்கருவி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "இது நீரெடுத்துச் செல்ல பயன்படும் ஒரு பாத்திரம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

எப்போதும் சச்சரவுகளை வளர்க்கும் அந்தப் பெரும் முனிவர், கல்விமானாகவும், கந்தர்வ வேதத்தை[4] நன்கறிந்தவராகவும், இந்தப் பூமியில் ஏற்படும் பிளவுகளுக்கான ரகசிய காரணங்களைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டராகவும் இருந்தார். தம் விருப்பத்தின் பேரில் பகைவர்களை உண்டாக்கும் வழக்கம் கொண்ட அந்தப் பிராமணர் {நாரதர்}, இரண்டாவது கலியைப் போன்றிருந்தார். அந்தப் பெரும் முனிவர் தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் நிலத்தில் முதன்மைப் பேச்சாளராகவும், நான்கு வேதங்களை ஓதுபவராகவும், முதல் ரிக்கை உரைப்பவராகவும் இருந்தார்.(9-11) இறப்பிலியும், எப்போதும் பிரம்மலோகத்தில் திரிபவருமான அந்த நாரத முனிவர், {பிரம்மலோகத்தில்} தேவர்களின் கூட்டத்திற்கு மத்தியில்(12) சோர்வடைந்த இதயத்துடன் விஷ்ணுவிடம் பேசினார். {அவர்}, "ஓ! நாராயணா, மன்னர்களின் அழிவுக்காக ஏற்பட்ட தேவர்களின் பிறவிகள் {அவதாரங்கள்} பயனற்றவையாகின.(13) ஓ! தேவலோகத்தின் தலைவா, நீ இங்கிருக்கும்போது, மன்னர்களுக்குள் உண்டாகும் இந்தப் பிளவு எந்தப் பயனையும் விளைவிக்காது. நாராயணனின் யோகமில்லாமல் அவர்களின் பணி நிறைவடையாது என்றே நான் நினைக்கிறேன்.(14) ஓ! தேவர்களின் தேவா, நீ ஞானியும், பொருட்களின் உண்மையான சாரங்களை அறிந்தவனும் ஆவாய். பூமிக்காக இத்தகைய பணியை ஏற்படுத்துவது உனக்குச் சரியானதல்ல.(15) விழிகளின் பார்வையும், பலமிக்கவையின் தலைவனும் நீயே. யோகியரில் முதன்மையானவனும், அனைத்தின் புகலிடமும் நீயே.(16) பூமியில் தேவர்களின் பிறப்பைக் கண்டும், சுமையில் இருந்து பூமியை விடுவிப்பதற்காக உன் சக்திக்கூறை {அம்சத்தை} ஏன் நீ முதலில் அனுப்பவில்லை?(17) தேவர்கள் அனைவரும், உன்னைத் தங்கள் உதவியாகக் கொண்டும், உன்னால் வழிநடத்தப்பட்டு, உன்னோடு அடையாளங்காணப்பட்டும் இந்தப் பூமியல் ஒரு செயல்பாட்டில் இருந்து மற்றொன்றுக்கு நீந்திச் செல்வார்கள்.(18) ஓ! விஷ்ணு, எனவேதான் உன்னை அனுப்பி வைப்பதற்காக நான் இந்தத் தேவர்களின் கூட்டத்திற்கு விரைந்து வந்தேன்; அதற்கான காரணத்தைக் கேட்பாயாக.(19) ஓ! நாராயணா, தாரகனை வேராகக் கொண்ட போரில் உன்னால் கொல்லப்பட்டுப் பூமியின் பரப்பிற்குச் சென்ற தைத்தியர்கள் பலரின் இயக்கங்களைக் கேட்பாயாக.(20)

[4] "இஃது இசைக்கலையாகும். இது கந்தர்வர்களுக்கான சிறப்புக் கொடையாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

பூமியின் பரப்பில் மதுரா என்ற பெயரில் ஓர் எழில்மிகு நகரம் இருக்கிறது. யமுனைக் கரையில் அமைந்திருக்கும் அதனில் செழிப்புமிக்கக் கிராமங்கள் பல நிறைந்திருக்கின்றன. அங்கே போரில் தடுக்கப்பட முடியாதவனும், மது என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு பெரும் தானவன் இருந்தான். அவன் பெரும் சக்திவாய்ந்தவனாகவும் உயிரினங்கள் அனைத்தையும் அச்சுறுத்துபவனாகவும் இருந்தான். பெரும் மரங்கள் நிறைந்ததும், பயங்கரமானதும், மது என்ற பெயரைக் கொண்டதுமான ஒரு பெரிய காடு இருந்தது; முன்பு அவன் {தானவன் மது} அங்கே வாழ்ந்திருந்தான்.(23) பெருந்தானவனான லவணன், மதுவின் மகனாவான். அபரிமிதமான பலத்தைக் கொடையாகக் கொண்டிருந்த அவன் உயிரினங்கள் அனைத்தையும் அச்சுறுத்தி வந்தான்.(24) அங்கே பல ஆண்டுகள் விளையாடிக் கொண்டிருந்த அந்தத் தானவன், செருக்கால் நிறைந்தவனாகத் தேவர்கள் அனைவரையும், பிறரையும் அச்சுறுத்தி வந்தான்.(25)

தரசரதனின் பக்தியுள்ள {அறம்சார்ந்த} மகனும், ராட்சசர்களுக்குப் பயங்கரனுமான ராமன் அயோத்யாவை ஆண்டுக் கொண்டிருந்த போது, தைத்தியர்கள் அனைவராலும் துதிக்கப்பட்ட அந்தத் தானவன் {லவணன்}, அந்தப் பயங்கரமான காட்டுக்குச் சென்றான். அந்த லவணன், கடுமையாகப் பேசக்கூடிய ஒரு தூதனை ராமனிடம் அனுப்பினான். அவன் {அந்தத் தூதன்}, "ஓ! ராமா, நான் உன் நாட்டின் எல்லைக்கருகே வாழ்கிறேன். தானவன் லவணன் உன் பகைவனாவான். மன்னர்கள் ஒரு பலமிக்கப் பகைவனை வைத்துக் கொள்ள விரும்புவதில்லை.(26-28) தன் குடிமக்களின் நலத்தை நாடும் மன்னன் ஒருவன், தன் அரச கடமைகளைச் செய்து, தன் எல்லை மற்றும் வளங்களைப் பெருக்கி, தன் பகைவர்களை எப்போதும் வீழ்த்த வேண்டும்.(29) தன் குடிமக்களை நிறைவடையச் செய்ய விரும்புபவனும், முடிசூட்டு நீரால்[5] நனைத்த மயிரைக் கொண்டவனுமான மன்னன், புலன்களில் சிறப்பாளுமை கொள்வது நிச்சய வெற்றியைக் கொடுக்கும் என்பதால் முதலில் தன் புலன்கள் அனைத்தையும் வெல்ல வேண்டும்.(30) தன் நிலையை எப்போதும் வலுவாகவும், முழுமையாகவும் வைத்திருக்க விரும்பும் மன்னனைப் போன்ற ஆசான் மக்களுக்கு வேறெவனும் இல்லை என்பதால், அவன் தன் மக்களுக்கு ஒழுக்கம் சார்ந்த விதிகளைக் கற்பிக்க வேண்டும்.(31) ஒரு நுண்ணறிவுமிக்க மன்னன், ஆபத்துகளுக்கும், தீமைகளுக்கும் நடுவே இருக்கும்போது, தன் படையைப் பலப்படுத்த வேண்டுமேயன்றி தன் பகைவர்களிடம் அச்சங்கொள்ளக் கூடாது.(32) மனிதர்கள் அனைவரும், தங்களுடன் பிறந்த பலமிக்கப் பகைவர்களான தங்கள் புலன்களாலேயே கொல்லப்படுகின்றனர். பொறுமையற்ற மன்னன் ஒருவன், தங்கள் பகைவர்கள் தங்களுக்கு நன்மை செய்கிறார்கள் என்று கொள்ளும் தவறான கருத்தினால் கொல்லப்படுகிறான்.(33) நீ, உன் மனைவியின் காரணமாகவும், மடத்தனமான பற்றின் காரணமாகவும், ராவணனையும், அவனது படையையும் கொன்றாய். நீ செய்த அந்தப் பாவச்செயலை நான் பெரிதாகவோ, மதிப்பிற்குரியதாகவோ நான் கருதவில்லை.(34) காட்டில் வாழ்ந்து, நோன்பு நோற்று வந்த நீ, ஓர் அற்ப ராட்சசனைக் கொறாய். இத்தகையை நடத்தையைப் பக்திமான்களிடம் காண முடியாது.(35) சகிப்பினால் பிறக்கும் அறமானது, பக்திமான்களை ஒரு மங்கலமான, நியாயமான இடத்திற்கு இட்டுச் செல்லும். அறியாமையினால் நீ ராவணனைக் கொல்லவும், காடுறை வானரர்களைக்[6] கௌரவிக்கவும் செய்தாய்.(36) நீ நோன்பை நோற்று வந்தபோது, அற்ப மனிதர்களின் நடத்தையைப் பின்பற்றி உன் மனைவிக்காக ராவணனைப் போரில் கொன்றதால் அவன் உண்மையில் அருளப்பட்டவனென ஆகிவிட்டான்.(37) தீய மனம் கொண்டவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தாதவனுமான அந்த ராவணன் போரில் உன்னால் கொல்லப்பட்டான். எனவே, நீ போரிட வல்லவனாகிறாய். வா, இன்று என்றோடு போரிடவாயாக" என்று {லவணன் சொன்னதாக அந்தத் தூதன்} சொன்னான்.(38)

[5] "முடிசூட்டுவிழாவின் போது, மன்னனின் தலையில் புனித நீரைத் தெளிப்பது வழக்கமாகும். எனவே, இங்கே இது முடிசூட்டு விழாவைக் கண்ட மன்னன் என்ற பொருளைத் தரும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[6] "சரியாகச் சொல்வதென்றால் இங்கே சொல்லப்படுபவர்கள் குரங்குகளல்ல; அவர்கள் தென்னிந்தாவின் ஒரு மாகாணத்தில் வாழ்ந்த காட்டுமிராண்டி இனத்தைச் சேர்ந்தவர்களாவர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். ஆசிரியர் வலிந்து இந்தப் பொருள் கொள்ள வேண்டிய அவசியமேதும் இல்லை. எனினும் செய்திருக்கிறார்.

கடுமொழி உரைப்பவனான அந்தத் தூதனின் இந்தச் சொற்களைக் கேட்ட ராமன், பொறுமையுடன் புன்னகைத்தவாறே, "ஓ! தூதா, அந்த இரவுலாவியிடம் கொண்ட மதிப்பினால், என்னைப் பழிப்பதைச் சுகமாகக் கருதி நீ சொல்பவை நியாமானவையல்ல.(39,40) என் மனைவி அபகரித்துச் சென்ற அந்த ராவணன் கொல்லப்பட்டிருந்தாலும், என் மனைவி அபகரிக்கப்பட்டிருந்தாலும் , நீதியின் வழிகளைப் பின்பற்றி செல்லும் நான் கலங்கடிக்கப்பட்டிருந்தாலும் அதில் பழிப்பதற்கென்ன இருக்கிறது?[7](41)

நீதியின் வழிகளை அறவழிகளை எப்போதும் பின்பற்றும் அறவோர், தங்கள் சொற்களாலும் பிறரைப் பழிக்கமாட்டார்கள். பக்திமான்களுக்காக எப்போதும் விழித்திருக்கும் தெய்வத்தைப் போல, அதற்கு இணையாக அவனும் தீயவர்களுக்காக விழிந்திருந்தான்.(42) தூதனின் கடமையை நீ செய்தாய். தாமதம் செய்யாதே, இப்போதே செல்வாயாக. தங்களைத் தாங்களே பெரிதாகக் காட்டிக் கொள்ள விரும்பும் அற்பர்களை என்னைப் போன்ற மனிதர்கள் காயப்படுத்துவதில்லை.(43) போரில் பகைவரை ஒடுக்குபவனான என் தம்பி சத்ருக்னன் இதோ இருகிறான். தீய மனம் கொண்ட அந்தத் தைத்தியனுக்காக இவன் காத்திருப்பான்" என்றான் {ராமன்}.(44)

ராமனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், அந்த மன்னனால் ஆணையிடப்பட்டவனும் அந்தத் தூதன், சத்ருக்னனுடன் புறப்பட்டுச் சென்றான். சுமித்ரையின் மகனான சத்ருக்னன், வேகமாகச் செல்லும் ஒரு தேரில் ஏறி, பெரிதான மதுவனத்திற்குச் சென்று, போரில் ஈடுபட விரும்பியவனாக அங்கே ஒரு கூடாரத்தை அமைத்தான்.(45,46) தைத்தியன் லவணன், அந்தத் தூதனின் சொற்களைக் கேட்டுக் கோபமடைந்தான். மதுவனத்தைவிட்டுப் போருக்குப் புறப்பட்டான். பிறகு அங்கே சத்ருக்னனுக்கும், லவணனுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது. அவர்கள் இருவரும் வீரர்களாகவும், வலிமைமிக்க வில்லாளிகளாகவும் இருந்தனர். இருவரும், கூரிய கணைகளால் ஒருவரையொருவர் தாக்கினர். போர்க்களத்தைவிட்டு எவரும் பின்வாங்கவும் இல்லை, ஒருவரும் களைப்படையவும் இல்லை.(47-49) சத்ருக்னனின் கணைகளால் அந்தப் போரில் பெரிதும் தாக்கப்பட்ட தானவன் லவணன், தன் கைகளில் கதாயுதம் {ஜயசூலம்} இல்லாததால் தோல்வியைச் சந்தித்தான்.(50) அதன்பிறகு அவன், தனக்கு வரமாகக் கிடைத்ததும், உயிரினங்கள் அனைத்தையும் கலங்கடிக்கவல்லதுமான தெய்வீக அங்குசத்தை எடுத்துக் கொண்டு அந்தப் போரில் முழங்கத் தொடங்கினான்.(51) அவன் அதைக் கொண்டு சத்ருக்னனின் தலைப்பாகையைப் பற்றி, ராகவனின் தம்பியான அவனை இழுக்கத் தொடங்கினான்.(52) அப்போது சத்ருக்னன், தங்கக் கைப்பிடி கொண்டதும், மிகச் சிறந்ததுமான தன் குத்துவாளை எடுத்துக் கொண்டு, அந்தப் போரில் லவணனின் தலையை அறுத்தான்.(53) சுமித்ரையின் வீரமகனும், நண்பரைகளை மகிழ்ச்சியடையச் செய்பவனுமான அவன் {சத்ருக்னன்}, அந்தப் போரில் லவணாசுரனைக் கொன்று, தன் ஆயுதங்களால் அந்தக் காட்டை அழித்தான்.(54) சுமித்ரையின் பக்திமிக்க மகனான அந்தச் சத்ருக்னன், அந்தக் காட்டை அழித்து, அந்த மாகாணத்தின் நன்மைக்காக ஒரு நகரத்தை அமைத்து அங்கே வாழத் தொடங்கினான். பழங்காலத்தில் மதுவனத்தில் லவணாசுரனைக் கொன்ற சத்ருக்னன் அங்கே மதுரா என்ற பெயரில் ஒரு நகரத்தைக் கட்டினான்.(55,56)

அந்தப் பெரிய நகரம், சுவர்கள், நுழைவாயில்கள் மற்றும் கதவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கிராமங்கள், உயர்ந்த கட்டடங்கள் மற்றும் தோட்டங்கள் பலவற்றையும் {அஷ்டப்ரஹாரங்களை} அது கொண்டிருந்தது.(57) அதன் எல்லைகள் நன்கு அமைக்கப்பட்டு, அழகாகக் கட்டப்பட்டிருந்தன. சுவர்கள் மிக உயரமாக இருந்தன. அகழிகள், ஒரு பெண்ணின் இடையைச் சுற்றி இருக்கும் ஆபரணத்தைப் போல இருந்தன.(58) கற்களாலும், செங்கற்களாலும் அமைந்திருந்த கட்டடங்கள் கேயூரங்களைப் போல இருந்தன. அழகிய அரண்மனைகள் காது குண்டலங்களைப் போல இருந்தன. நன்கு பாதுகாக்கப்பட்ட வாயில்கள் திரைகளைப் போல இருந்தன, குறுக்குச் சாலைகளான உலாவீதிகள் {பெண்ணின்} புன்னகையைப் போல இருந்தன. நலமிக்க வீரர்கள், யானைகள், குதிரைகளையும், மற்றும் தேர்களையும் அது {அந்நகரம்} கொண்டிருந்தது. பிறை வடிவத்திற்கு ஒப்பான அது யமுனையின் கரையில் அமைந்திருந்தது. அழகிய சந்தைகளைக் கொண்டிருந்த அது, தன் ரத்தினத்திரள்களுக்கான பெருமையைக் கொண்டிருந்தது. அங்கே இருந்த வயல்கள் தானியங்களால் நிறைந்திருந்தன. தேவர்களின் மன்னன் (இந்திரன்) சரியான பருவ காலத்தில் மழையைப் பொழிந்தான். அங்கே இருந்த ஆண்களும் பெண்களும் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தனர்.(59-61) போஜர்களின் குலத்தில் பிறந்தவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான மன்னன் சூரசேனன் அங்கே ஆட்சி செய்து கொண்டிருந்தான். உக்ரசேனன் என்ற பெயரில் கொண்டாடப்படும் மஹாசேனனைப் போன்ற பலமிக்கவன் {உக்ரசேனன்}, {இப்போது} அங்கே {ஆட்சி செய்து கொண்டு} இருக்கிறான்.(62,63)

ஓ! விஷ்ணு, நீ எவனைக் கொன்றாயோ, அவன் அவனது {உக்ரசேனனின்} மகனாக இருக்கிறான். தாரகனை வேராகக் கொண்டிருந்த போரில் நீ யாரைக் கொன்றாயோ அந்தக் காலநேமி என்ற பெயரைக் கொண்ட தைத்தியன், போஜ குலக்கொழுந்தாகக் கம்ஸனாகப் பிறந்திருக்கிறான். சிங்கத்தைப் போன்ற நடையைக் கொண்ட அந்த மன்னன் உலகில் கொண்டாடப்பட்டு வருகிறான்.(64,65) அவன் உலகின் மன்னர்கள் அனைவருக்கும் பயங்கரனாகவும், உயிரினங்கள் அனைத்தையும் அச்சுறுத்துபவனாகவும் இருக்கிறான்.(66) அவன் விடா முயற்சி கொண்டவனாகவும், இரக்கமற்றவனாகவும் இருக்கிறான். அவனது குடிமக்கள் அவனைக் கண்டு மயிர்சிலிர்க்கும் அளவுக்கு அவன் செருக்கு வாய்ந்தவனாக இருக்கிறான்.(67) அவன் ஒருபோதும் தன் அரச கடமைகளைச் செய்யாதவனாகவும், தன் சொந்த மக்களுக்கே ஒருபோதும் மகிழ்ச்சி அளிக்காதவனாகவும் இருக்கிறான். அவன் தன் நாட்டுக்கென எந்த நன்மையையும் ஒருபோதும் செய்யாமல், ஒரு கொடுங்கோலனைப் போலவே எப்போதும் நடந்து கொள்கிறான்.(68) எவன், தாரகப் போரில் உன்னால் வீழ்த்தப்பட்டானோ, அவன் இப்போது போஜ குலத்தில் கம்ஸனாகப் பிறந்திருக்கிறான். இறைச்சியை உண்டு வாழும் அவன் தன் அசுர இதயத்துடன் உலகங்கள் அனைத்தையும் ஒடுக்கி வருகிறான்.(69) எவன் குதிரையைப் போன்றிருந்தானோ, ஹயக்ரீவன் என்ற பெயரால் அறியப்பட்டானோ, அவன் கம்ஸனின் தம்பியான கேசியாகப் பிறந்திருக்கிறார்.(70) உடலற்றவனும், தீயவனும், {சிங்கம் போன்ற} பிடரி மயிருடன் கூடிய அசுரனும், குதிரையைப் போலக் கனைப்பவனுமான அவன் இப்போது பிருந்தாவனத்தில் தனியாக வாழ்ந்து வருகிறான். அவன் மனித இறைச்சியை {நரமாமிசத்தை} உண்டு வாழ்ந்து வருகிறான்.(71) பலியின் மகனான அரிஷ்டன், தான் விரும்பும் வடிவங்களை ஏற்கவல்ல பேரசுரன் ககுத்மியாகப் பிறந்திருக்கிறான். காளையைப் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும் அவன், பசுக்களின் பகைவனாக இருக்கிறான்.(72) திதியின் மகனும், தானவர்களில் முதன்மையானவனுமான ரிஷ்டன், கம்ஸனின் யானையாகப் பிறந்திருக்கிறான்.(73) பயங்கரம் நிறைந்த தைத்தியன் லம்பன், பிரலம்பனாகப் பிறந்திருக்கிறான். அவன் ஓர் ஆல மரத்தினடியில் பாண்டரன் {பாண்டீரன்} என்ற பெயரில் வாழ்ந்து வருகிறான்.(74) கரன் என்ற பெயரில் அறியப்பட்டிருந்த தைத்தியன், பயங்கரம் நிறைந்த அசுரன் தேனுகனாகப் பிறந்திருக்கிறான். பனைமரக்காட்டில் வாழ்ந்து வரும் அவன் உயிரினங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறான்.(75) வராஹன் மற்றும் கிஷோரன் என்ற பெயர்களைக் கொண்ட முதன்மையான அசுரர்கள் இருவர், சாணூகன் {சாணூரன்} மற்றும் முஷ்டிகன் என்ற பெயர்களில் எப்போதும் அரங்கில் இருக்கும் மற்போர் வீரர்களாகப் பிறந்திருக்கின்றனர்.(76) தானவர்களுக்கும் அந்தகர்களாகத் தெரியும் மயன் மற்றும் தாரன் {தாரகன்} என்ற இரு தானவர்கள், பிராக்ஜ்யோதிஷம் என்ற பெயரைக் கொண்டதும், பூமியின் மகனான நரகனுக்கு உரியதுமான நகரத்தில் இப்போது வாழ்ந்து வருகின்றனர்.(77)

ஓ! நாராயணா, இந்தத் தானவர்கள் அனைவரையும் கொன்றவனும், அவர்களின் வடிவங்களை அழித்தவனும் நீயே. அவர்கள் இப்போது மனித உடல்களை ஏற்று உலகின் மக்களை ஒடுக்கி வருகின்றனர்.(78) அவர்கள் உன் பெயரைப் பாடுவதை எதிர்த்து உன்மீது பற்றுக் கொண்டவர்களை அழிக்கின்றர். உன் தயவால் மட்டுமே அவர்கள் அழிவைச் சந்திப்பார்கள்.(79) சொர்க்கத்தில் அவர்கள் உன்னைக் கண்டு அஞ்சினார்கள், கடலிலும் அவர்கள் உன்னைக் கண்டு அஞ்சினார்கள், பூமியிலும் அவர்கள் உன்னிடம் அஞ்சுவார்கள். அவர்களுக்கு அச்சத்தின் பிறப்பிடம் வேறேதும் இல்லை.(80) ஓ! ஸ்ரீதரா, அந்தத் தீய தானவர்களை நீ கொல்வாயாக; வேறு எவராலும் அவர்களைக் கொல்ல முடியாது. சொர்க்கத்தில் இருந்து அனுப்பப்பட்ட தைத்தியர்கள் பூமியில் புகலிடத்தைக் காண்கின்றனர்.(81)

ஓ! கேசவா, நீ விழித்திருப்பதால், தேவலோகத்தில் உன்னால் கொல்லப்பட்ட அந்தத் தைத்தியன் சொர்க்கத்திற்குச் செல்வது கடினம் என்பதால், அவன் மனித உடலை ஏற்று மீண்டும் எழுந்திருக்கிறான்.(82) எனவே, ஓ! நாராயணா, உலகிற்கு நீ வருவாயாக. நாங்களும் பூமியில் இறங்குகிறோம். தானவர்களின் அழிவுக்காக நீ உன்னைப் படைப்பாயாக.(83) வெளிப்படாத உன் வடிவங்கள், தேவர்களுக்குப் புலப்படுவதும், புலப்படாதவையுமாக இருக்கின்றன. உன்னால் படைக்கப்பட்ட தேவர்கள் அந்த வடிவங்களில் பூமியில் இறங்குவார்கள்.(84) ஓ! விஷ்ணு, நீ பூமிக்கு இறங்கி வரும்போது, கம்ஸனால் ஆள இயலாது, பூமி எதற்காக வந்தாளோ அந்த நோக்கமும் நிறைவேறும்.(85) பாரத நிலத்தில் தொழில்கள் அனைத்தின் ஆசான் நீயே, அனைத்தின் விழிகளும், உயர்ந்த புகலிடமும் நீயே. எனவே, ஓ! ரிஷிகேசா, நீ பூமிக்கு வந்து, தீயவர்களான அந்தத் தானவர்களைக் கொல்வாயாக" என்றார் {நாரதர்}".(86)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 54ல் உள்ள சுலோகங்கள் : 86
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Monday, 27 April 2020

குரோஷ்டுவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 36

(க்ரோஷ்டு வம்ச வர்ணனம்)

Kroushthu's Family | Harivamsa-Parva-Chapter-36 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : குரோஷ்டுவின் சந்ததி; விதர்ப்பர்கள், மது குலத்தவர்; சாத்வத குலத்தவர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சிறப்பு வாய்ந்த விருஜினீவான் குரோஷ்டுவின் மகனாவான்[1]. அவனுடைய {விருஜினீவானின்} மகன் யாகங்களைச் செய்பவர்களில் முதன்மையான ஸ்வாஹி ஆவான்.(1) ஸ்வாஹியின் மகன் பேசுபவர்களில் முதன்மையானவனான மன்னன் உஷத்கு {ருஷத்கு} ஆவான். மிகச் சிறந்த மகனை விரும்பிய அவன் {உஷத்கு}, அபரிமிதமான கொடைகளுடன் கூடிய மகத்தான வேள்விகளைப் பலவற்றைச் செய்து தேவர்களைத் தணித்தான். பல்வேறு அற விழாக்களைச் செய்ததன் மூலம் அவன் சித்ரரதன் என்ற பெயரில் ஒரு மகனை அடைந்தான்.(2,3) அவனுடைய {சித்ரரதனின்} மகன் அபரிமிதமான கொடைகளை அளிப்பவனும், முறையாக யாகங்களைச் செய்பவனும், வீரனுமான அரசமுனி சசபிந்து ஆவான்.(4)



[1] குரோஷ்டுவுக்கு இரண்டு மனைவிகள் என்பதை 34:1ல் கண்டோம். இந்த விருஜினீவான் அவர்களில் யாருக்குப் பிறந்தவன் என்ற குறிப்பு, மன்மதநாததத்தர், தேசிராஜு ஹனுமந்தராவ் மற்றும் பிபேக்திப்ராய் ஆகிய மூவரின் பதிப்புகளிலும் இல்லை.

பெருஞ்சிறப்புவாய்ந்த மன்னன் பிருதுசிரவன், சசபிந்துவின் மகனாவான். புராணங்களை நன்கறிந்த முனிவர்கள், பிருதுசிரவனின் மகனாக ஆந்தரனை {உத்தரனை} நியமித்தனர். அவனுடைய {உத்தரனின்} மகன் ஸுயஜ்ஞனும், அவனுடைய {ஸுயஜ்ஞனின்} மகன் உசதனும் ஆவர். அவரவர் வகைக்குப் பரிந்துரைத்தபடியே வேள்விகளைச் செய்ய விரும்பும் மனிதர்கள் அனைவரிலும் அவன் {உசதன்} முதன்மையானவனாக இருந்தான்.(5,6) பகைவரை ஒடுக்குபவனான சினேயு, உசதனின் மகனாவான். அரசமுனியான மருத்தன், சினேயுவின் மகனாவான்.(7) மருத்தன், கம்பலபர்ஹிஷனைத் தன் மூத்த மகனாக அடைந்தான்.அவன் கோபத்துடன், மறுமையில் சிறந்த பலன்களை அடையவற்கு அறச் சடங்குகள் பலவற்றைச் செய்தான்.(8)

கம்பலபர்ஹிஷன், ஸுதப்ரஸூதியைத் தன் மகனாகவும், அவன் {ஸூதப்ரஸுதி}, ருக்மகவசனைத் தன் மகனாகவும் பெற்றனர்.(9) ஸூதப்ரஸுதி, நூறு கவசங்களை அணிந்த ஒரு புத்திசாலி போர்வீரனைக் கூரிய கணைகளால் போரில் கொன்று பெருஞ்செழிப்பை அடைந்தான்[2].(10) பகைவீரர்களைக் கொல்பவனான பராஜித், ருக்மகவசனுக்குப் பிறந்தான். ருக்மேஷு, பிருதுருக்மன், ஜியாமோகன், பாலிதன் மற்றும் ஹரி என்ற பெருஞ்சக்திவாய்ந்த ஐந்து மகன்களைப் பராஜித் பெற்றான். அவர்களின் தந்தை பாலிதனையும், ஹரியையும், விதேஹ மன்னனுக்குக் கொடுத்தான்.(11,12)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "கம்பலபர்ஹிஷன், ஒவ்வொரு பிரசவத்தின் போதும் மகனையே விரும்பினான் என்பதால், அவன் நூறு மகன்களுக்கும் பிறகு பெற்ற மகன் ஸூதப்ரஸுதி என்ற பெயிரில் அழைக்கப்பட்டான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "கம்பலபர்ஹிஷன் நூறு மகன்களை விரும்பினான். அந்த நூறு மகன்களுக்குப் பிறகு அவன் ருக்மகவசனை ஒரு மகனாக அடைந்தான்" என்றிருக்கிறது.

ருக்மேஷு, பிருதுருக்மனின் துணையுடன் மன்னனானான். ஜியாமோகன் அவர்கள் இருவராலும் நாடு கடத்தப்பட்டு ஓர் ஆசிரமத்தில் வாழ்ந்தான்.(13) காட்டில் வாழ்ந்து வந்த அவன் {ஜியாமோகன்}, உள்ளச்சமநிலையை அடைந்ததும், பிராமணர்களால் கற்பிக்கப்பட்டான். அதன்பேரில் அந்தத் தேர்வீரன் வெளிநாடுகளைக் கைப்பற்றி, நர்மதை ஆற்றின் கரையில் அமைந்திருந்த மிருத்திகாவதி நகரத்தில் தனியாக வாழ்ந்து வந்தான். பிறகு அவன் {ஜியாமோகன்}, ருக்ஷவத மலையைக் கைப்பற்றி, சுக்திமதி நகரில் வாழ்ந்தான்.(14,15) ஜியாமோகனின் மனைவியான சைப்யை உறுதிமிக்கவளாகவும், கற்பிற்சிறந்தவளாகவும் இருந்தாள். அந்த மன்னனுக்குச் சந்ததி இல்லையென்றாலும், அவன் மற்றொரு மனைவியைக் கொண்டானில்லை.(16)

அவன் {ஜியாமோகன்} ஒரு குறிப்பிட்ட போரில் வெற்றியடைந்து அங்கே ஒரு மகளைப் பெற்றான். அப்போது அந்த மன்னன் வெகு சிக்கிரமாகத் தன் மனைவியிடம் {சைப்யையிடம்}, "இவள் உன் மருமகளாவாள்" என்றான். இதைக் கேட்ட அந்த ராணி, "இவள் யாருடைய மருமகளாவாள்?" என்று கேட்டாள். அதற்கு மன்னர்களில் முதன்மையானவனான அந்த ஜியாமோகன், "இந்த உபதானவி, உனக்குப் பிறக்கப் போகும் மகனின் {விதர்ப்பனின்} மனைவி ஆவாள்" என்றான். அந்தப் பெண் {உபதானவி} கடுந்தவங்களைச் செய்த காரணத்தால், நற்பேற்றைப் பெற்ற சைப்யை, தன் முதிய வயதில், விதர்ப்பன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றாள்.(17-19) விதர்ப்பன் அந்தப் பெண்ணிடம் {உபதானவியிடம்}, வீரர்களும், கல்விமான்களும், போர்க்கலையின் பல்வேறு வழிமுறைகளை அறிந்தவர்களும், கிராதன் {கிரதன்} மற்றும் கைசிகன் {கௌசிகன்} என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான மகன்களைப் பெற்றான்.(20)

அவனுடைய {விதர்ப்பனின்} மூன்றாவது மகன் பெரும்பக்திமானான லோம்பாதன் ஆவான். அவனுடைய {லோம்பாதனின்} மகன் பப்ருவும், அவனுடைய {பப்ருவின்} மகன் ஆஹ்விருதியும் {ஆஹ்வதியும்} ஆவர். கைசிகன் {கௌசிகன்} என்ற அவருடைய மகன், கல்விமானாகவும், பெரும்பக்திமானாகவும் இருந்தான். அவனுடைய {கௌசிகனின்} மகன் சேதியின் பெயரையே சைத்ய குல மன்னர்களும் பெற்றனர்.(21,22) விதர்ப்பனின் மகன் பீமனும், அவனுடைய {பீமனின்} மகன் குந்தியும் ஆவர். அவன் {குந்தி}, திருஷ்டன் மற்றும் பலமிக்க ஆனதிருஷ்டன் என்ற பெயர்களில் இரு மகன்களைப் பெற்றான். திருஷ்டனுக்கு, பக்திமான்களான, ஆவந்தன், தசார்ஹன், பலமிக்க விஷஹரன் என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான மூன்று வீரமகன்கள் இருந்தனர். தசார்ஹனின் மகன் வியோமனும், அவனுடைய மகன் ஜீமுதனும் ஆவர்.(23,24)

அவனுடைய {ஜீமுதனின்} மகன் பிரேஹதியும் {பிருஹதியும்}, அவனுடைய {பிருஹதியின்} மகன் பீமரதனும் ஆவர். அவனுடைய {பீமரதனின்} மகன் நவரதன் ஆவான்.(25) அவனுடைய {நவரதனின்} மகன் தசரதனும், அவனுடைய {தசரதனின்} மகன் சகுனியும் ஆவர். பின்னவனிடம் {சகுனியிடம்} கரம்பன் பிறந்தான். மன்னன் தேவராதன், கரம்பனின் மகனாவான். அவனுடைய {தேவராதனின்} மகன் தேவக்ஷத்ரன் ஆவான். பெருஞ்சிறப்புமிக்கவனும், தேவனைப் போன்றவனும், இனிய வாக்கைக் கொண்டவனும், தன் குலத்திற்கு மகிமை சேர்ப்பவனுமான மன்னன் மது, தேவக்ஷத்ரனின் மகனாவான். மது தன் மனைவியான விதர்பியிடம் மருவஸன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான்.(26-28)

மனிதர்களில் முதன்மையான புருத்வானன் {புருத்வான்}, மருவஸனின் மகனாவான். ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே} அவன் {புருத்வானன்}, வி/வைதர்ப்பர்களின் குலத்தில் பிறந்தவளான தன் மனைவி பத்ராவதியிடம், மது என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான்.(29) மது, இக்ஷ்வாகு குலத்தில் ஒரு பெண்ணை மணந்து கொண்டு அவளிடம் ஸத்வானன் {ஸத்வான்} என்ற மகனைப் பெற்றான். அவன் நல்லியல்பின் குணத்தைக் கொண்டவனாகவும், சாத்வதர்களின் குல மகிமையை அதிகரிப்பவனாகவும் இருந்தான்.(30) உயரான்ம ஜியாமோகனின் இந்தக் குடும்பக் கதையை அறிந்த மனிதன் சந்ததியையும், உயர்ந்த இன்பத்தையும் அடைவான்" என்றார் {வைசம்பாயனர்}.(31)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 36ல் உள்ள சுலோகங்கள் : 31
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்