(சிருகாலாக்யராஜவதம்)
Battle with Shrigala | Vishnu-Parva-Chapter-100-044 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணன், பலராமன், தமகோஷன் ஆகியோர் படையுடன் கரவீரபுரம் சென்றது; போரில் கொல்லப்பட்ட சிருகாலன்; சிருகாலனின் மகன் சக்ரதேவன் கரவீரபுரத்தின் அரியணை ஏறியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "போரில் பயங்கரனும், இந்திரனைப் போன்ற ஆற்றலைக் கொண்டவனுமான சிருகாலன், அவர்களின் {கிருஷ்ணன், பலராமன், தமகோஷன் ஆகியோரின்} வருகையை அறிந்தும், நகரத்தை அவர்கள் தாக்கப் போகிறார்கள் என்று நினைத்தும் (நகரத்தை விட்டு) வெளியே வந்தான்.(1) ஆயுதங்களால் நிறைந்திருப்பதும், தேர்ச்சக்கரத்தின், அச்சின் ஒலியைப் புன்னகையாகக் கொண்டதும், பலவண்ண ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதும், கடலைப் போன்று ஒலியெழுப்புவதும், வேகமாகச் செல்லும் குதிரைகளால் இழுக்கப்படுவதும், வலுவான பொன் அச்சுகளால் பளபளப்பாக இருப்பதும், கருடனைப் போலச் செல்வதும், சூரியக் கதிர்களுக்கு ஒப்பான கடிவாளங்களால் செலுத்தப்படுவதும், இந்திரனின் தேருக்கு ஒப்பானதும் சூரியனைப் போன்ற பிரகாசமிக்கதுமான தேரொன்றில் ஏறி அந்த நகரத்தைவிட்டு அவன் வெளியே வந்தான்.(2-6)


