(உஷயா ஸஹாநிருத்தஸ்ய விவாஹ꞉ உஷாஹரணஸமாப்திஷ்ச)
Aniruddh's wedding and reception | Vishnu-Parva-Chapter-187-131 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : துவாரகையில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்த பெண்கள்; உஷை அநிருத்தனுடன் இன்புற்றிருத்தல்; விஷ்ணு மஹாத்மியம்; பலஸ்ருதி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அப்போது, பெருந்தோள்களைக் கொண்ட ஆஹுகன் {உக்ரசேனன்}, பேரொளி படைத்த கிருஷ்ணனிடம், தன் விழிகள் விரிய, "ஓ! யதுவின் வழித்தோன்றலே, நான் சொல்வதைக் கேட்பாயாக.(1) ஓ! என் குழந்தாய், நீ {அநிருத்தனும், நீயும்} நலத்துடன் திரும்பியதைக் கண்டோம். அவன் முறையாகக் கவனிக்கப்படுகிறான். அநிருத்தன் மீண்டதற்கும், திருமணம் செய்து கொண்டதற்கும் பெரும் விழா ஒன்றை {திருமண வரவேற்பை} ஏற்பாடு செய்வாயாக.(2) பெருமைமிகு உஷை, அநிருத்தனுடன் சேர்ந்தவளாகவும், தோழிகளால் சூழப்பட்டவளாகவும் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள்.(3) உயரான்மக் கும்பாண்டனின் பெருமைமிகு மகள் {ராமா / ராமை / ரமை} உஷையின் தோழியாகச் சேர்க்கப்பட வேண்டும். வைதர்ப்பி {விதர்ப்ப மன்னனின் மகள்}[1] செழித்திருக்கட்டும்.(4) எழில்மிகு கும்பாண்டன் மகளைச் சாம்பனுக்கும், எஞ்சிய கன்னிகையரை பிற இளவரசர்களுக்கும் முறையாக {திருமணம் முடித்துக்} கொடுப்பாயாக.(5)



