(கார்திகேயாபயாநம் பாணபாஹுச்சேதநம் பாணஸ்ய ஹராத்வரளாபாதிகீர்தநம் ச)
The battle between Vana and krishna | Vishnu-Parva-Chapter-185-129 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : மயிலை ஒடுக்கிய கருடன்; பாணனுக்கு உதவிய சிவன்; சக்கர ஆயுதத்தால் கைகள் துண்டிக்கப்பட்ட பாணன்; சிவனிடம் ஐந்து வரங்களைப் பெற்ற பாணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{பின்பு பாணன், இசைக்கருவிகளின் ஒலி, பேரிகைகளின் பெரு முழுக்கம், அசுரர்களின் சிங்க முழக்கம் ஆகியவற்றுடன் போர்க்களத்தில் கிருஷ்ணனை எதிர்த்துச் சென்றான்}.(36) பாணன் புறப்பட்டு வந்து நிற்பதைக் கண்டு கிருஷ்ணனும் கருடன் மீதேறி பாணனை எதிர்த்துச் சென்றான்.(37) யது மன்னனும் ஒப்பற்ற ஆற்றல் படைத்தவனும், கருடவாகனனுமான கிருஷ்ணன் அணுகி வந்து நிற்பதைக் கண்ட பாணன் கோபத்தால் நிறைந்தவனாக வாசுதேவனிடம்,(38,39) "நில்! காத்திருப்பாயாக. இன்று என்னிடம் இருந்து நீ உயிருடன் தப்பப் போவதில்லை. உயிருடன் துவாரகை சென்று உன் நண்பர்களைக் காணப் போவதில்லை.(40) ஓ! மாதவா, நீ காலனால் தூண்டப்பட்டவனாக இருக்கிறாய். எனவே, போரில் என்னிடம் வீழ்ந்து, உன் மரணத் தருணத்தில் மரங்களின் பொன் இலைகளை நீ காண்பாய்.(41) ஓ! கருடத்வஜா, எட்டுக் கைகளைக் கொண்ட உன்னால், ஆயிரங்கைகளைக் கொண்டு என்னுடன் எவ்வாறு போரிட இயலும்?(42) இன்று நீயும், உன் நண்பர்களும் இந்தச் சோணித நகரத்தில் என்னால் கொல்லப்படுவீர்கள், நீ துவாரகையை நினைப்பாய்.(43) பல்வேறு ஆயுதங்களாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட என்னுடைய ஆயிரம் கைகளும் கோடிகளாகப் பெருகுவதை நீ இன்று காண்பாய்" என்றான்.(44)




