Showing posts with label பூமாதேவி. Show all posts
Showing posts with label பூமாதேவி. Show all posts

Saturday, 23 May 2020

சந்தனுவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 53

(தேவ அம்ச அவதரணம்)

The account of Santanu's family | Harivamsha-Parva-Chapter-53 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பூமியின் நலத்துக்காக பிரம்மனிடம் வேண்டிய தேவர்கள்; பழங்காலத்தில் நடந்தவற்றைச் சொன்ன பிரம்மன்; பெருங்கடலுக்கும், கங்கைக்கும் சாபம் கிடைத்தது; எதிர்காலத்தில் நடக்கப்போவதையும் சொன்ன பிரம்மன்...

Lord Brahma

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பூமியின் சொற்களைக் கேட்ட பிறகு, அவளது நோக்கத்தைக் குறித்து நுட்பமாகச் சிந்தித்த தேவர்கள், பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்},(1) "ஓ! தலைவா, உயிரினங்கள் அனைத்தின் உடல்களைப் படைத்தவர் நீரே. உலகங்கள் அனைத்தின் தலைவன் நீரே. சுமையில் இருந்து பூமியை நீர் விடுவிப்பீராக.(2) ஓ! தலைவா, பேரிடரில் இருக்கும் பூமியின் நோக்கத்தை நிறைவேற்ற விரும்பினால், மஹேந்திரன், யமன், வருணன், வளங்களின் மன்னன் {குபேரன்}, நாராயணன், சந்திரன், சூரியன், காற்றானவன் {வாயு}, ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்திரர்கள், உலகின் குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்}, தெய்வீக மருத்துவர்களான அஸ்வினிகள், சாத்யஸ்கள், பிருஹஸ்பதி, சுக்ராச்சாரியர், காலன், கலி, மஹேஷ்வரன், கார்த்திகேயன் {முருகன்}, யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், சாரணர்கள் ஆகியோர் மற்றும் பெரும்பாம்புகள், பறவைகள், பெரும் மலைகள், கங்கையின் தலைமையிலான ஆறுகளின் பெரும் அலைகளைக் கொண்ட பெருங்கடல்கள் ஆகியனவும் செய்ய வேண்டிய கடமைகளைத் தாமதமில்லாமல் உறுதிசெய்வீராக.(3-8) ஓ! பெரும்பாட்டனே {பிதாமஹரே}, எங்கள் பிறவிக்கூறுகளை {அம்ஸ அவதாரங்களை} கீழே அனுப்பவது எவ்வாறு? எங்களை வானத்தில் உலவும் மன்னர்கள், பூமியில் நடக்கும் மன்னர்கள், அரசவை பிராமணர்கள் மற்றும் பிற இளவரசர்களின் குடும்பங்களில், எந்தப் பெண்ணிடமும் பிறக்காத உடல்களைப் படைக்கவிடுவீராக[1]" என்றனர்.(9-10)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஓ! பெரும்பாட்டனே, தேவர்களாகிய நாங்கள் பூமியைக் காப்பாற்றக்கூடிய முன்மாதிரியான அவதாரங்களை எவ்வழியில் எடுக்க வேண்டும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக. நாங்கள் உமது உத்தரவின் பேரில் எங்களை நாங்களே மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறோம். நீர் விரும்பும் எந்த வடிவையும் ஏற்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். எனவே, வானுலாவிகளாகப் போவது யாவர்? பூமியில் இருக்கப்போவது யாவர்? பிராமண சபைகளின் உறுப்பினர்களாகப் போவது யாவர்? மன்னர்களின் குலங்களில் பிறக்கப்போவது யாவர்? கருவறையற்ற பிறவிகொள்ளப் போவது யாவர்? யார் எந்த உடலை ஏற்க வேண்டும் என்பதை தயவுகூர்ந்து எங்களுக்குச் சொல்வீராக" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இவர்கள் எக்கூறுகளை ஏற்க வேண்டும் என்பதை விரைவாக இவர்களுக்குச் சொல்வீராக. பூமியின் பணியை நிறைவேற்றவும், மன்னர்களுக்கு மத்தியில் பிணக்கை உண்டாக்கவும் இஃது ஏற்படப்போகிறது. ஓ! பெரும்பாட்டனே, எங்களில், பல்வேறு கூறுகளாகப் பிறக்கச்செய்ய செயல்படப் போகிறவர்கள் யாவர்? சொர்க்கத்தில் எஞ்சியிருக்கப் போகிறவர்கள் யாவர்? பூமியில் மன்னர்களாகப் பிறக்கப் போகிறவர்கள் யாவர்? பிராமணர்களுக்கு மத்தியில் துணைப் புரோகிதர்களாக இருக்கப் போகிறவர்கள் யாவர்? பூமியில், கருவறைகளில் இருந்து பிறக்காத உடல்களை உண்டாக்கப் போகிறவர்கள் யாவர்?" என்றிருக்கிறது.

தேவர்கள் அனைவராலும் துதிக்கப்படுபவனும், அனைத்தின் பெரும்பாட்டனுமானவன் {பிரம்மன்}, ஒரு பொதுவான காரியத்திற்காக ஒன்று திரண்டிருக்கும் தேவர்களின் இந்தப் பெருந்தீர்மானத்தைக் கேட்டு, அவர்களிடம்,(11) "ஓ! முன்னணி தேவர்களே, உங்கள் தீர்மானத்தை நான் பெரிதும் விரும்புகிறேன். நீங்கள் உங்கள் சக்தியைக் கொண்டு பூமியில் உங்கள் உடல்களின் கூறுகளைப் படைப்பீராக {அவதாரம் செய்வீராக}.(12) முன்னணி தேவர்களான நீங்கள் அனைவரும் உங்கள் சக்தியுடன் பூமியில் இறங்குவீராக. நீங்கள், மூவுலகங்களின் செழிப்பை அடைந்து, சுமையில் இருந்து பூமியை விடுவிப்பீராக.(13) பழங்காலத்தில் அவளது சுமை குறித்து எனக்குத் தெரியவந்தபோது, அதை அகற்றுவதற்கு நான் என்ன செய்தேன் என்பதைக் கேட்பீராக.(14) 

பழங்காலத்தில் நான் கிழக்குக் கடலின் மேற்குக் கரையில் என் பேரனான பெரும் கசியபனுடன் அமர்ந்திருந்தேன்.(15) வேதங்கள் தொடர்பாக ஏற்கனவே விளக்கப்பட்ட பல்வேறு கருப்பொருட்களையும், புராணங்களில் இருந்து வேறு பகுதிகள் பலவற்றையும் {கசியபனுக்கு} நான் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.(16) இவ்வாறு நான் உரையாடிக் கொண்டிருந்தபோது, உடல்வடிவங்களுடன் கூடிய மருத்துகள், பெருங்கடல் மற்றும் கங்கையுடன் சேர்ந்து நீங்கள் அனைவரும் என்னிடம் வந்தீர்கள்.(17) சந்திரனின் துணையுடன் கூடிய பெருங்கடலானவன், நீர்வாழ் விலங்குகளுடன் கூடிய பலவண்ண உடையை உடுத்திக் கொண்டு விரையும் அலைகளுடனும், பவளங்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு, சிப்பிகள் மற்றும் முத்துகளுடன் ஒளிரும் உடலுடனும், நீர் நிறைந்த ஒரு மேகத்தைப் போல முழங்கிக் கொண்டு என்னை வீழ்த்திவிடுபவனைப் போலத் தன் கரைக்கு வந்தான். உப்பு நீரை வீசியெறிந்து அந்த இடத்தைக் கலங்கடித்தான்.(18-20)

பெருங்கடலானவன் தன் நீரால் அந்த இடத்தைத் தாக்க இருந்தபோது, நான் அவனிடம், "அமைதியாக இருப்பாயாக" என்ற சொற்களைக் கோபத்துடன் சொன்னேன்.(21) "அமைதியாக இருப்பாயாக" என்று நான் சொன்ன உடனேயே அவன் ஒரு வடிவத்தை ஏற்றான். தன் அலைகள் அனைத்துடன் அசையாமல் இருந்த அவன், நல்ல அரச அருளுடன் {நல்ல கம்பீரமான தோற்றத்துடன் / ராஜஷ்ரியஜ்வலனாக} அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(22) உங்களுக்கு நன்மையைச் செய்யவும், சுமையில் இருந்து பூமியை விடுவிக்கவும் விரும்பிய நான், பெருங்கடலையும், கங்கையையும் சபிக்கும் வகையில், "ஓ! பெருங்கடலே, நீ அரச வடிவில் வந்திருப்பதனால் நீ ஒரு மன்னனாவாயாக. பூமியில் உன் சக்தியைக் கொண்டு அருஞ்செயல்கள் பலவற்றைச் செய்யும் வகையில் பெரும் பரதனின் குலத்தில் பிறந்து மனிதர்களைக் காப்பாயாக. பொறுமையற்றவனாக இருந்தாலும் நீ அமைதியாக இருக்கும்படி நான் கேட்ட உடனேயே ஒரு வடிவத்தை ஏற்றாய். எனவே, அழகிய மேனியைக் கொடையாகக் கொண்டவனாக, சந்தனு என்ற பெயரில் நீ பூமியில் கொண்டாடப்படுவாய். மேலும் மாசற்ற அங்கங்களையும், அகன்ற விழிகளையும் கொண்டவளும், ஆறுகளில் முதன்மையானவளுமான இந்தக் கங்கை, அழகிய வடிவில் உன்னுடன் வருவாள்" என்றேன்.(23-27)

நான் இதைச் சொன்னபோது, பெருங்கடலானவன், சோர்ந்த இதயத்துடன் என்னைப் பார்த்தான். அவன் {பெருங்கடல்}, "ஓ! தலைவா, ஓ! தேவர்களின் தேவா, என்னை ஏன் சபித்தீர்? நான் உமது ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடக்கிறேன். எனவே, நான் உமது மகனாவேன். அவ்வாறிருக்கையில், பொருந்தாத சொற்களால் என்னை நீர் சபித்தது ஏன்?(28,29) ஓ! தலைவா, ஓ! தேவர்களின் தேவா, உமது தயவால் என் அலைகள் ஏற்ற இறக்கங்களுடன் பெருகியதால் நான் கலங்கினேன். ஓ! பிரம்மா, இதில் என்னை எவ்வாறு குறைகூற முடியும்?(30) அந்நேரத்தில் காற்றால் வீசப்பட்ட நீரினால் நீர் தீண்டப்பட்டிருந்தாலும் என்னைச் சபிக்க உமக்குக் காரணமேது?(31) வீசும் காற்று, பெருகும் மேகம், சந்திரனுடன் கூடிய பர்வம் {வளர்பிறைச் சந்திரன்} என்ற மூவகை கருவிகளால் நான் கலங்கியிருந்தேன்.(32) ஓ! பிரம்மா, உம்மால் செயலில் நிறுவப்பட்ட இந்த மூன்று கருவிகளால் நான் குற்றமேதும் இழைத்திருந்தால் என்னை மன்னிப்பதே உமக்குத் தகும், இந்தச் சாபத்திற்கு ஒரு முடிவு ஏற்படட்டும்.(33) ஓ! தேவர்களின் தலைவா, சான்றேதும் நீர் கண்டால், குற்றமேதும் இல்லாமலே பெற்ற சாபத்தினால் சோர்வடைந்திருக்கும் என்னிடம் இரக்கம் காட்டுவீராக.(34) ஓ! தலைவா, உமது ஆணையின் பேரில் இந்தக் கங்கை பூமியில் இறங்குவாள். நான் குற்றவாளியாக இருந்தாலும், அப்பாவியான எனக்கு நீர் இரக்கம் காட்ட வேண்டும்" என்றான்.(35)

அப்போது, விளைவுகளை அறியாத தேவர்களின் சாபத்தினால் கலங்கியவனும், அச்சமடைந்திருந்தவனுமான பெருங்கடலிடம் நான், இனிய சொற்களில், "ஓ! பெரும் மனம் கொண்டவனே, ஓ! ஆறுகளின் தலைவா, சுகமாயிருப்பாயாக, அஞ்சாதே, நான் உன்னால் நிறைவடைந்தேன். இனி இந்தச் சாபத்தில் உள்ள எதிர்கால நோக்கத்தைக் கேட்பாயாக.(36,37) ஓ! தலைவா, நீ இந்தக் கடலுடலைத் துறந்து, பாரத குலத்திற்குச் செல்வாயாக. அப்போது, ஓ! பெருங்கடலே, ஓ! பெரும் மன்னா, நீ அரச அருளால் {கம்பீரத் தோற்றத்தால்} சூழப்படுவாய். ஓ! நீரின் தலைவா, நான்கு வர்ணங்களையும் ஆட்சி செய்து நீ நிறைவையடைவாய்.(38,39) ஆறுகளில் முதன்மையானவளான இந்தக் கங்கை ஓர் அழகிய பெண் வடிவை ஏற்று உனக்குத் தொண்டு செய்வாள்.(40) என் ஆணையின் பேரில் ஜானவியுடன் {கங்கையுடன்} விளையாடும் நீ மனிதக் கவலையை அனுபவிக்க மாட்டாய்.(41) ஓ! பெருங்கடலே, விரைவில் கங்கையைத் திருமணம் செய்து கொண்டு என் ஆணையை நிறைவேற்றுவாயாக.(42) வஸுக்கள் தேவலோகத்தில் இருந்து கடத்தப்பட்டு, ரஸாதளத்திற்குள் நுழைந்திருக்கின்றனர். அவர்களை சந்ததியாகப் பெற நான் உன்னை நியமிக்கிறேன்.(43) ஜானவி {கங்கை}, நெருப்பைப் போன்ற பிரகாசமான எட்டு வசுக்களை சந்ததியாகப் பெறுவதற்காக அவர்களைக் கருவில் கொண்டு, தேவர்களின் இன்பத்தைப் பெருக்கட்டும்.(44) வசுக்களைப் பிள்ளைகளாகப் பெற்று, குரு குலத்தைப் பெருகச் செய்து, உன் மனித உடலைக் கைவிட்டு, மிக விரைவில் நீ உன்னுடைய கடலுடலை ஏற்பாய்" என்றேன்.(45)

ஓ! தேவர்களில் முதன்மையானவர்களே, இவ்வாறு பழங்காலத்தில் பூமியின் எதிர்காலச் சுமையைக் கண்டு, தேவலோகத்தில் வாழும் வசுக்கள் பிறக்கப் போகும் சந்தனுவின் குல வித்துகளை உங்கள் நன்மைக்காக நான் விதைத்தேன்.(46,47) இப்போதும் கங்கையின் மகன் {மகனாகப் போகும்} பீஷ்மன் எட்டாம் வஸுவாக தேவலோகத்தில் இருக்கிறான். மற்ற ஏழு வசுக்களும் {கங்கைக்குப் பிறந்து இறந்து} தங்கள் தங்கள் உலகங்களுக்குச் சென்றுவிட்டனர். விஷ்ணு மட்டுமே இப்போது வாழ்கிறான்[2].(48) மன்னன் சந்தனு தன் இரண்டாம் மனைவியிடம் {சத்யவதியிடம்} பெரும் பிரகாசம் கொண்டவனும், பலமிக்கவனுமான மன்னன் விசித்ரவீரியனைப் பெறுவான்.(49) விசித்ரவீரியனின் இரண்டு மகன்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு ஆகிய இருவரும் உலகில் புகழ்பெற்ற இரண்டு மன்னர்களாக இருப்பார்கள்.(50) அவர்களில் பாண்டு, இளமை நிறைந்தவர்களும், அழகியருமான இரண்டு மனைவிகளைக் கொண்டிருப்பான். முதலாமவள் குந்தி என்ற பெயரையும், இரண்டாமவள் மாத்ரி என்ற பெயரையும் கொண்டிருப்பர். அவ்விருவரும் தேவர்களின் மனைவியரைப் போன்றவர்களாக இருப்பர்.(51) திருதராஷ்டிரன், காந்தாரி என்ற பெயரில் ஒரு மனைவியைக் கொள்வான். அவள் தன் கணவனுக்கு உறுதியாகத் தொண்டு செய்ததால் உலகில் புகழ்பெற்றவளாக இருப்பாள்[3].(52) 

[2] ஒப்புநோக்கப்படும் மற்ற இரு பதிப்புகளிலும் "விஷ்ணு மட்டுமே இப்போது வாழ்கிறான்" என்ற வாக்கியம் இல்லை. எட்டாம் வஸுவான பீஷ்மன் மட்டுமே பூமியில் வாழ்வான் என்றிருக்க வேண்டும். அவ்வாறே மற்ற இரு பதிப்புகளிலும் இருக்கிறது.

[3] இங்கே 49 முதல் 52ம் ஸ்லோகம் வரை கடந்த கால வழக்கிலேயே மன்மதநாததத்தரின் உரை இருக்கிறது. தேசிராஜுஹனுமந்தராவ் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் எதிர்கால வழக்கில் இருக்கிறது. எதிர்கால வழக்கே சரியாகத் தோன்றுவதால் நான் அவ்வாறே மாற்றி அமைத்திருக்கிறேன். இதை நோக்க விரும்புவோர் ஆங்கில மொழிபெயர்ப்பைக் காண்க.

இங்கே அவ்வீடு இரண்டு பகை தரப்புகளாகப் பிரியும், அவ்விரு மன்னர்களின் மகன்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் பிளவு ஏற்படும்.(53) இந்த மன்னர்களின் உட்பிளவுகளால், அரச குடும்பங்கள் அனைத்தும் அழிக்கப்படும். அண்ட அழிவின் போது ஏற்படுவதைப் போன்ற பேரச்சம் அப்போது மேலோங்கும்.(54) படைகளுடன் கூடிய மன்னர்கள் அனைவரும், ஒருவரையொருவர் கொல்லும்போதும், நகரங்களும் நாடுகளும் தங்களில் குடியிருப்பவர்களை இழக்கும்போதும், பூமி உய்வை அனுபவிக்கும்.(55) துவாபர யுகத்தின் முடிவில் படைகளுடன் கூடிய மன்னர்கள் அனைவரும் ஆயுதங்களால் அழிக்கப்படுவார்கள் என்று புராணங்களில் நான் படித்திருக்கிறேன். அப்போது சங்கரனின் பிறவிக்கூறானவனும் {அவதாரமும்}, நெருப்பாயுதத்துடன் கூடியவனுமான அஸ்வத்தாமன்,  இரவு உறக்கத்தில் நினைவிழந்தவர்களாகப் போரில் எஞ்சிக் கிடக்கும் மனிதகுலத்தையும் எரிப்பான்.(56,57) காலனைப் போன்றவனான அந்தக் கொடுஞ்செயல்புரிபவன் நிறுத்தும்போது, துவாபர யுகம் தொடர்பான இந்தக் கதையும் முடிவுக்கு வரும்.(58) சிவனின் கூறான அஸ்வத்தாமன், மறையும்போது, மஹேஸ்வரனின் யுகமான பயங்கரம் நிறைந்த கலியுகம் தொடங்கும்.(59) இந்த யுகத்தில் மனிதர்கள் பல கொடுமைகளைச் செய்வார்கள், அறத்தின் ஒரு பகுதி மட்டுமே தழைக்கும். வாய்மை மறைந்து, பொய்மை பெருகும்.(60) இந்த யுகத்தில் மனிதர்கள் மஹேஸ்வரனையும், ஸ்கந்தனையும் மட்டுமே வழிபடுவார்கள்; முதியவர்களும், நீண்ட வாழ்நாளைக் கொண்ட மனிதர்களும் பூமியில் இருக்க மாட்டார்கள்.(61) இவ்வுலகில் மன்னர்களுக்கு மிகச்சிறப்பான அழிவு ஏற்படப்போவதை இவ்வாறு நான் விளக்கினேன். எனவே, ஓ! தேவர்களே, உங்களுக்குரிய கூறுகளுடன் {அம்சங்களுடன்} தாமதமில்லாமல் பூமியில் இறங்குவீராக {அவதரிப்பீராக}.(62) குந்தியும், மாத்ரியும் தர்மனின் கூறுகளைக் கருவில் கொள்ளட்டும்[4], காந்தாரி, பிளவுகள் அனைத்தின் கருவியான கலியைக் கருவில் கொள்ளட்டும்.(63) விதியால் தூண்டப்படும் இம்மன்னர்கள் இரண்டு தரப்புகளாக அமைவார்கள், பூமியை அடைய விரும்பும் அவர்கள் போரை நாடுவார்கள்.(64) உலகங்கள் அனைத்தையும் தாங்கும் பூமி தன் மூல இயல்புக்குள் நுழையட்டும். புனிதமானவையும், நன்கறியப்பட்டவையுமான மன்னர்களின் வழிமுறைகள் இவ்வாறே உண்டாக்கப்பட்டன" என்றான் {பிரம்மன்}.(65) பெரும்பாட்டனின் சொற்களைக் கேட்ட பூமி, மன்னர்களுக்கு அழிவை ஏற்பாடு செய்த மகிழ்ச்சியில் காலனுடன் {காலத்தை அறிந்தவளாகச்} சென்றாள்.(66)

[4] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "குந்தி தர்மதேவனின் அம்சத்துடன் ஒரு மகனையும், மாத்ரி சில அவதாரங்களையும் பெறட்டும். அதே போல காந்தாரி, தொல்லையை உண்டாக்கும் கலியைப் பெறுவாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "குந்தி தர்மன் மற்றும் பிறரின் கூறுகளைப் பெறுவாள், மாத்ரியும் அவ்வாறே பெறுவாள். சச்சரவின் அடித்தளமான கலியின் கூறு காந்தாரியின் கருவறையில் பிறக்கும்" என்றிருக்கிறது.

அதன்பிறகு பிரம்மன், பகைவர்களைக் கொல்வதற்காக தேவர்களை அனுப்பினான். புராதன ரிஷியான நரன், பூமியைத் தாங்கும் (பாம்பு) சேஷன், சனத்குமாரர், சாத்யர்கள், அக்னி, பிற தேவர்கள், வருணன், வசுக்கள், சூரியன், சந்திரன், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ருத்திரர்கள், விஷ்வர்கள், அஷ்வினி இரட்டையர்கள் ஆகியோர் அனைவரும் தங்கள் தங்கள் கூறுகளில் பூமியில் இறங்குவார்கள்.(67-69) ஏற்கனவே நான் {மஹாபாரதம், ஆதிபர்வம், அம்சாவதார பர்வத்தில்} விளக்கியதைப் போலவே, தேவர்களின் கூறுகளான அந்த முதன்மையான புருஷர்கள், பெண்களின் மூலமாகவோ, அல்லாமலோ தைத்திர்கள் மற்றும் தானவர்களை அழிப்பவர்களாப் பூமியில் பிறவியை அடைந்தனர் {அவதரித்தனர்}. அவர்களில் சிலர் தங்கள் குடும்பங்களை ஆல மரங்களைப் போலப் பெருக்கினர். மேலும் சிலர் வஜ்ரத்தைப் போன்ற கடும் உடல்களைக் கொண்டவர்களாக இருந்தனர்.(70,71) அவர்களில் சிலர் பத்து லக்ஷம் யானைகளின் பலத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். சிலர் பேராறுகளைப் போன்று பலம் நிறைந்தவர்களாகவும், சிலர் கதாயுதங்கள், பரிகங்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கையாள வல்லவர்களாகவும் இருந்தனர்.(72) அவர்கள் அனைவரும் மலைகளின் சிகரங்களை நொறுக்கவல்லவர்களாக இருந்தனர். பரிகங்களைப் போன்ற கரங்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மனிதர்கள் விருஷ்ணி குலத்தில் பிறந்தனர்.  தேவர்கள், குரு மற்றும் பாஞ்சால குலங்களில் மன்னர்களாகப் பிறந்தனர். செழிப்பு மிக்க யது குடும்பங்களிலும், பிராமணர்களின் குடும்பங்களிலும், பக்திச் செயல்பாடுகளுடன்  பல வேள்விகளைச் செய்பவர்களாகவும், சாத்திரங்களை நன்கறிந்தவர்களாகவும், வலிமைமிக்க வில்லாளிகளாகவும், வேத சடங்குகள் நோற்பவர்களாகவும், செழிப்பையும், சாதனைகளையும் கொண்டவர்களாகவும் அவர்கள் பிறந்தனர்.(73-75) கோபமடையும்போது, மலைகளையும், ஆறுகளையும், பூமியின் பரப்பையும் அசைக்கக் கூடியவர்களாகவும், வானத்தில் எழக் கூடியவர்களாகவும், பெருங்கடலையே கலங்கடிக்கக்கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தனர்.(76) 

நிகழ்காலம், கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தை ஆள்பவனும், பெரும்பாட்டனுமான பிரம்மன், தேவர்களுக்கு இவ்வாறு ஆணையிட்டு, உலகங்கள் அனைத்தையும் நாராயணனிடம் கொடுத்துவிட்டு அமைதியை அடைந்தான்.(77) எல்லாம்வல்லவனும், புனிதமான புகழைக் கொண்டவனும், செல்வம் மற்றும் உயிரின் தலைவனும், நாராயணனுமான விஷ்ணு, பூமியில் யயாதியின் வழித்தோன்றலும், நுண்ணறிவுமிக்கவனுமான வஸுதேவனின் குடும்பத்தில் {கிருஷ்ணனாகப்} பிறந்த பிறகு, உயிரினிங்களின் நன்மைக்காக என்ன செய்தான் என்பதை மீண்டும் கேட்பாயாக" என்றார் {வைசம்பாயனர்}.(78,79)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 53ல் உள்ள சுலோகங்கள் : 79
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Friday, 22 May 2020

தேவர் சபைக் கூட்டம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 52

(விஷ்ணும் ப்ரதி ப்ருதிவ்யா வாக்யம்)

The assembly of gods | Harivamsha-Parva-Chapter-52 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தேவர்களுடன் மேரு மலைக்குச் சென்ற நாராயணன்; விஷ்ணுவிடம் மன்றாடிய பூமாதேவி...

Lord Vishnu and Goddess Earth

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மேகத்தின் நிறத்தைக் கொண்டவனும், செவ்வையற்ற நாளில் அதன் {மேகத்தின்} முழக்கத்தைப் போன்ற குரலைக் கொண்டவனுமான தலைவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, மேகங்களால் மறைக்கப்பட்ட ஒரு மலையைப் போலத் தேவர்களுடன் சென்றான்.(1) அந்நேரத்தில், கருநீல மேனியைக் கொண்ட ஹரி, சந்திரனுடன் கூடிய ஒரு மேகத்தைப் போல ரத்தினங்கள் மற்றும் முத்துக்கள் சூடிய ஒளிரும் சடாமுடியைத் தரித்தான்.(2) மயிர்கள் நிமிர்ந்து நிற்கும் அவனது அகன்ற மார்பில், ஸ்ரீவத்சம் எனும் மாயக்குறி இருந்தது.(3) உலகின் ஆசானான அந்த நித்திய ஹரி, இரண்டு துண்டுகளாக இருந்த மஞ்சள் உடையைச் சூடி, மாலைநேர மேகங்களால் மறைக்கப்பட்ட ஒரு மலையைப் போலத் தெரிந்தான்.(4) அவன், கருடனின் முதுகில் ஏறி செல்லத் தொடங்கியபோது, அவனில் கண்கள் நிலைத்திருந்த தேவர்களும், தாமரையில் பிறந்த தேவனும் (பிரம்மனும்) அவனைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினர்.(5) ரத்தினங்கள் நிறைந்த அந்த மலையை உடனே அடைந்த அவர்கள், அங்கே தங்கள் இதயங்களால் {தங்கள் இதய விருப்பங்களின்படி} கட்டப்பட்ட சபா மண்டபத்தைக் கண்டனர்.(6)

சுமேரு மலையின் சிகரத்தில் கட்டப்பட்டிருந்த அது, சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்தது. அதன் தூண்கள் தங்கத்தாலானவையாகவும், அதன் நுழைவாயில்கள் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டனவாகவும் இருந்தன.(7) மனத்தால் கட்டப்பட்ட அதனில் பல்வேறு ஓவியங்களும், நூற்றுக்கணக்கான தேர்களும் இருந்தன. அதன் சாளரங்கள் ரத்தினமயமான வலைகளால் மறைக்கப்பட்டிருந்தன. அது விரும்பிய எங்கும் செல்லவல்லதாகவும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது.(8) அது பலவகைப்பட்ட ரத்தினங்களாலும், பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட மலர்களாலும் நிறைந்திருந்தது. தெய்வீக மாயை நிறைந்த அந்தத் தெய்வீக சபா மண்டபம், விஷ்வகர்மனால்[1] கட்டப்பட்டதாகும்.(9) மகிழ்ச்சி நிறந்த மனங்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும், மங்கலமான அந்தச் சபா மண்டபத்தில் தங்கள் ஒவ்வொருவருக்கும் முறையாக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் சரியாக அமர்ந்தனர்.(10) தேர்கள், இருக்கைகள், பத்ராஸனங்கள்[2], பீடங்கள்[3] குத இருக்கைகள்[4] ஆகியவற்றில் அவர்கள் அமர்ந்தனர்.(11) அதன்பிறகு, பிரம்மனின் ஆணையின் பேரில் அங்கே எவ்வொலியும் எழாத வகையில் பிரபஞ்சனக் காற்றானது, அந்தச் சபா மண்டபத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சுற்றித் திரியத் தொடங்கியது.(12) அந்தத் தேவ சபையில் அனைத்தும் ஒலியற்று அமைதியாக இருந்தபோது, அவலநிலையில் இருந்த பூமியானவள், பரிதாபகரமான முறையில் அவர்களிடம் {தேவர்களிடம்} பேசத் தொடங்கினாள்.(13)

[1] "இவன் தேவர்களின் கட்டடக் கலைஞனாவான் {சிற்பி}" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[2] "மிகச் சிறந்த இருக்கை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "சீடனுக்காகக் குசப் புற்களால் முறையாக அமைக்கப்பட்ட இருக்கை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] "ஒரு வகை மரத்தாலான இருக்கைகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

பூமி, "ஓ! தேவா, என்னை நீ ஆதரிப்பாயாக. மொத்த அண்டமும் உன்னால் நிலைத்திருக்கிறது. உயிரினங்களையும், மூவுலகங்களையும் பாதுகாப்பவன் நீயே.(14) உன் ஆற்றலினாலும், பலத்தினாலும் நீ நீடிக்கச் செய்யும் எதையும், உன் உதவியின் மூலம் நான் பின்னர்த் தாங்குகிறேன்.(15) நீ தாங்கும் எதையும் நான் தாங்குகிறேன், மேலும், நீ நீடிக்கச் செய்யாத எதையும் நானும் வைத்துக் கொள்வதில்லை. உன்னால் தாங்கமுடியாத எதுவும் இந்த அண்டத்தில் இல்லை.(16) ஓ! தலைவனான நாராயணா, பல்வேறு யுகங்களில், உலகின் நன்மைக்காகச் சுமையில் இருந்து என்னை நீ விடுவித்திருக்கிறாய்.(17) நான் உன் ஆற்றலால் பீடிக்கப்பட்டு, பாதாள லோகத்திற்குச் சென்றேன். ஓ! தேவர்களில் முதன்மையானவனே, நான் உன் தயவில் இருக்கிறேன். என்னை நீ காப்பாயாக.(18) தீயவர்களான தானவர்கள் மற்றும் ராட்சசர்களால் நான் தாக்கப்பட்டிருக்கிறேன். என் நித்திய மீட்பன் நீயே, உன் தயவிலேயே எப்போதும் நான் இருக்கிறேன்.(19) சுமைகள் அனைத்திலிருந்தும் என்னை விடுவிக்கும் நாராயணனின் புகலிடத்தை நான் நாடாதவரை, பேரச்சத்தின் ஆதிக்கத்திலேயே நான் இருப்பேன் என்பதை நூறு மடங்கு {நூறு வழிகளில்} அறிந்திருக்கிறேன்.(20)

தாமரையில் உதித்த பிரம்மனால் உழவு, வணிகம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான பிற வழிமுறைகள் அமைக்கப்படுவதற்கு முன்னர், நான் பழங்காலத்தில் அளவில் சிறுத்திருந்தேன். மண்ணாலான இருபெரும் அசுரர்கள் என்னைப் பிணைத்துக் கொண்டு முன் பிறந்திருந்தனர்.(21) இந்த உயரான்ம விஷ்ணு பெருங்கடலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இவனது காதுகளில் இருந்து உண்டான அவர்கள், இரண்டு மரத்துண்டுகளைப் போல இருந்தனர்.(22) பெரும்பாட்டனால் {பிரம்மனால்} அனுப்பப்பட்ட காற்றானது {வாயு}, உயிர் மூச்சின் வடிவில் அவ்விரு தானவர்களின் உடலுக்குள் நுழைந்தது. அதன்பிறகு அந்தப் பேரசுரர்கள் இருவரும் வானத்தை மறைத்தபடி வளரத் தொடங்கினர்.(23) உயிர் மூச்சுகளைக் கொடையாகப் பெற்ற அவ்விருவரையும் பிரம்மன் கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டான். அவர்களில் ஒருவன் மென்மையானவனாகவும், மற்றவன் கடுமையானவனாகவும் தோன்றினான்.(24) நீரில் பிறந்த தலைவனான பிரம்மன், அவர்களுக்குப் பெயர்களைக் கொடுத்தான். மென்மையானவன் மது என்று பெயரிடப்பட்டான், கடுமையாக இருந்த மற்றவன் கைடபன் என்று அழைக்கப்பட்டான்.(25)

அவ்விரு தைத்தியர்கள் இவ்வாறு பெயரிடப்பட்டபோது, தங்கள் பலத்திலும், அச்சமற்ற நிலையிலும் செருக்கு மிகுந்தவர்களாக ஒரே நீர்ப்பரப்பாக மாற்றப்பட்ட உலகில் போரை நாடித் திரியத் தொடங்கினர்.(26) அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், இவ்வாறு அவர்கள் அணுகுவதைக் கண்டு, அண்டப் பெருங்கடலான நீரில் மறைந்து போனான்.(27) நான்கு முகங்களைக் கொண்ட பெரும்பாட்டன் {பிரம்மன்}, தாமரை உந்தி {பத்மநாபனான} விஷ்ணுவின் உந்தியில் உதித்த தாமரையில் கமுக்கமாக வாழ விரும்பினான்.(28) நாராயணனின் பேரர்களான மதுவும், கைடபனும் இவ்வாறு நீரில் நீண்ட பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தபோதும் கிஞ்சிற்றும் கலக்கமடையாதிருந்தனர்.(29) பல ஆண்டுகள் கழிந்த பிறகு, மது மற்றும் கைடபன் என்ற அவ்விரு அசுரர்கள், பிரம்மன் இருந்த இடத்திற்கு வந்தனர்.(30)

பிரம்மன், பயங்கரமானவர்களும், பேருடல் படைத்தவர்களும், அடக்கப்பட முடியாதவர்களுமான அவ்விரு தானவர்களையும் கண்டு, {தான் இருந்த} தாமரையின் தண்டால் நாராயணனைத் தொந்தரவு செய்தான். பெரும் பிரகாசம் கொண்டவனும், தாமரை உந்தி கொண்டவனுமான அந்தத் தேவன் இதனால் தன் படுக்கையில் இருந்து எழுந்தான்.(31) அந்த நேரத்தில் மூவுலகங்களும் நீரால் மறைக்கப்பட்டிருந்ததால், அந்த நீர்ப்பரப்பில் நாராயணனுக்கும், மதுகைடபர்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடைபெற்றது.(32) அந்தப் பயங்கரப்போர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்தது, அந்தப் போரினால் அந்தத் தானவர்கள் இருவரும் கிஞ்சிற்றும் களைப்படையவில்லை.(33) நீண்ட காலத்திற்குப் பிறகு, போரில் பயங்கரர்களான அவ்விரு தானவர்களும், இதய மகிழ்ச்சியுடம் தலைவன் நாராயணனிடம், "உன்னுடனான போரில் நாங்கள் பெரும் நிறைவடைந்தோம். பெரும் விருப்பத்திற்குரிய எங்கள் காலன் {மரணம்} நீயே. நீர் நிறையாத பூமியில் ஓரிடத்தில் எங்களுக்கு அழிவைக் கொண்டு வருவாயாக.(34,35) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, உன்னால் கொல்லப்பட்டு, போரில் எங்களை வீழ்த்தும் உனக்கே நாங்கள் மகன்களாவோம்" என்றனர்[5].(36)

[5] தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில், "நீ எங்களுடன் செய்த போரில் நாங்கள் நிறைவடைகிறோம், சூழ்நிலை அமைந்தால் எங்களுக்குக் காலனாகப் போகும் உன்னைப் பாராட்டுகிறோம். ஆனால் நாங்கள் எங்களைக் கொல்பவர்களின் மகனாவோம் என முன்பே விதிக்கப்பட்டிருக்கிறோம். எனவே, பூமியில் நீரில்லாத ஓரிடத்தில் எங்களை நீ வீழ்த்தப் பரிந்துரைக்கிறோம். அதன் மூலம் நாங்கள் உன் மகன்களாக மீண்டும் பிறப்போம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ! தேவர்களில் உயர்ந்தவனே, உன்னுடனான இந்தப் போரால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்தப் போரில் உன் கைகளால் எங்களுக்கு மரணம் ஏற்படும் என்பதில் செருக்குக் கொள்கிறோம். எனினும், நீரில்லாத ஓரிடத்தில் எங்களைக் கொல்வாயாக. நாங்கள் கொல்லப்பட்டதும், நாங்கள் உன் மகன்களாப் பிறக்க வேண்டும். போரில் எங்களை ஒருவன் வீழ்த்தினால், நாங்கள் அவனது மகன்களாக வேண்டும்" என்றிருக்கிறது.

போரில் நாராயணன், தன் இரு கைகளிலும் அவ்விரு அசுரர்களையும் பற்றி அவர்களைத் தாக்கினான். அதன் பேரில் மதுவும், கைடபனும் மரணத்தைச் சந்தித்தனர்.(37) இவ்வாறு கொல்லப்பட்ட இரு தைத்தியர்களும் நீரால் நிறைந்தனர். அவர்கள் இருவரின் உடல்களும் ஒன்றாக இணைந்தன. பிறகு, நீரின் அலைகளால் கடையப்பட்ட அவர்கள் கொழுப்பை வெளியிடத் தொடங்கினர். நீர் அந்தக் கொழுப்பால் மறைக்கப்பட்டது. ஓ! பாவமற்றவனே, அதன்பின்னர் அவர்கள் மறைந்தனர், தலைவன் நாராயணன், தன் படைப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டான்.(38-39) மது மற்றும் கைடபன் என்ற அசுரர்களின் கொழுப்பால் நான் மறைக்கப்பட்டதால் மேதினி என்ற பெயரைப் பெற்றேன். இந்தத் தாமரை உந்தி தேவனின் சக்தியால் நான் நித்திய அண்டமானேன்[6].(40)

[6] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "அப்போது நாராயணன், நீரற்ற தளமான தன் உள்ளங்கைகளெனும் கிண்ணத்திற்குள் அவர்களைத் தட்டினான்; தன் கக்கங்களுக்குள் வைத்து மது மற்றும் கைடபன் என்ற அவ்விரு அசுரர்களையும் தாக்கினான்; அவர்கள் நசுக்கிக் கொன்று, அவர்களின் எச்சங்களைத் தன்னைச் சுற்றி இருந்த நீருக்குள் வீசி எறிந்தான். இவ்வாறு கொல்லப்பட்டு, நீரில் வீசப்பட்ட அவ்விரு அசுரர்களின் சடலங்களும் நீரில் மிதந்து ஒன்றாக இணைந்தன, பிறகு அலைகளால் தாக்கப்பட்ட அந்த உடலானது தன் கொழுப்பை நீரில் வெளியிட்டு, நீரின் மொத்த பரப்பிலும் அந்தக் கொழுப்பின் நுரை பரவியதால் அவ்விரு அசுரர்களின் உடல்களும் மறைந்தன. ஓ! பாவமற்ற ஜனமேஜயா, அதன்பிறகு, நாராயணன், படைப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டான். அந்த அசுரர்களின் கொழுப்பில் கொஞ்சத்தைத் திரட்டி என்றென்றும் நான் கடினப்படுத்தப்பட்டேன். அதே வேளையில் எஞ்சிய கொழுப்பானது மறைந்து போன அந்த அசுரர்களுடன் மறைந்தே போனது. அசுரர்களின் கொழுப்பான மேதஸ் என்னை மூடியதன் விளைவால் நான் மேதினி என்ற பெயரைப் பெற்றேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தப் போரில் தைத்தியர்களைத் தன் கரங்களில் பற்றிய அவன் {நீரற்ற இடமான} அங்கேயே அவர்களை நசுக்கினான். இவ்வாறு மதுவும், கைடபனும் கொல்லப்பட்டனர். அவன் அவர்களது உடலை நீரில் வீசினான். நீரின் அலைகளில் வீசப்பட்டதும் அந்தத் தைத்தியர்களின் உடல்கள் ஒன்றாகி, கொழுப்பை வெளியிடும் வகையில் கடையப்பட்டன. அந்தக் கொழுப்பு நீரை மறைத்ததும் உடல்கள் மறைந்தன. இவ்வாறு சிறப்புமிக்க நாராயணன், குடிமக்களைப் படைக்கத் தொடங்கினான். அந்தத் தைத்தியர்களின் கொழுப்பால் படைக்கப்பட்டதாலேயே நான் மேதினி என்று அழைக்கப்பட்டு வருகிறேன்" என்றிருக்கிறது.

மீண்டும் அந்தத் தலைவன், மார்க்கண்டேய முனியின் முன்னிலையில் ஒரு பன்றியின் {வராகத்தின்} வடிவை ஏற்றுத் தன் தந்தம் ஒன்றால் நீரில் இருந்து என்னை உயர்த்தினான்.(41) மீண்டும் மற்றொரு நேரம் கனல்தெறிக்கும் உங்கள் முன்னிலையில் பலம்நிறைந்தவனான விஷ்ணு, தைத்திய தலைவன் பலியிடம் இருந்து என்னை விடுவித்தான்.(42) இப்போது ஒடுக்கப்படுகிறவளும், பாதுகாக்க யாரும் அற்றவளுமான நான், தன் பற்றார்வங்களில் எப்போதும் விருப்பம் கொண்டவனும், அண்டத்தின் தலைவனுமான கதாதரனின் புகலிடத்தை நாடுகிறேன்.(43) பொன்னுக்குக் காரணம் நெருப்பு {அக்னி}, வீண்மீன்களுக்குக் காரணம் சூரியன், அவ்வாறே எனக்கு ஆதரவு நாராயணன் ஆவான்.(44) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டத்தை நான் தனியாகவே தாங்குகிறேன். என்னால் தாங்கப்படும் இவை அனைத்தையும் கதாதரன் ஆதரிக்கிறான்.(45)

என் சுமையில் இருந்து என்னை விடுவிக்க விரும்பிய ஜமதக்னியின் மகன் ராமர் {பரசுராமர்}, என்னை இருபத்தோரு முறை க்ஷத்திரியர்கள் அற்றவளாகச் செய்தார்.(46) பிருகுவின் மகனான ராமர், ஒரு வெற்றித்தூணை எழுப்பி, தன் தந்தையின் ஈமச் சடங்கில் அரசக் குருதியைக் கொண்டு என்னைத் தணிவடையச் செய்து, பிறகு கசியபரிடம் தெரிவித்தார்.(47) கொழுப்பு, இறைச்சி, எலும்புகளில் இருந்து வெளிவரும் கெட்ட நாற்றத்தால் நிறைந்தவளாக, க்ஷத்திரியர்களின் குருதியால் நிரம்பியவளாக, மாதவிடாய் காலத்தில் இருக்கும் ஓர் இளங்காரிகையைப் போலக் கசியபரின் முன்பு நான் தோன்றினேன்.(48) அப்போது பிராமண முனிவரான கசியபர் என்னிடம், "ஓ! பூமியே, நீ ஏன் இவ்வளவு மனச்சோர்வுடன் இருக்கிறாய்? ஒரு வீரனின் மனைவியாக இருந்து கொண்டு, நீ ஏன் அவமான நோன்பை நோற்கிறாய்?" என்று கேட்டார்[7].(49) அதற்கு நான் உலகின் குடிமுதல்வரான கசியபரிடம், "ஓ! பிராமணரே, பெரும்பார்க்கவர் {பரசுராமர்} என் கணவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்.(50) ஆயுதங்களில் வாழும் பலமிக்க க்ஷத்திரியர்கள் அனைவரையும் நான் இழந்துவிட்டேன், நான் என் கணவனை இழந்துவிட்டேன். நான் என்னில் வெறுமையான நகரங்களைச் சுமக்க விரும்பவில்லை. எனவே, ஓ! மதிப்புக்குரிய ஐயா, கிராமங்கள் மற்றும் நகரங்களால் நிறைந்திருப்பவளும், கடல்களால் மாலையிடப்பட்டவளுமான என்னைப் பாதுகாக்க வல்ல மன்னனை எனக்கு அளிப்பீராக" என்று கேட்டேன்.

[7] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "பூமிப்பெண்ணே, உன் முகம் எதனால் தாழ்ந்திருக்கிறது. நீ வீரர்களின் மனைவித்தன்மை என்ற நோன்பு {வீரபத்னீவிரதத்தை} மேற்கொண்டாலும் மனந்தளர்ந்திருக்கிறாயே" என்று கேட்பதாக இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஏன் உன் முகம் தாழ்ந்திருக்கிறது? துணிச்சல்மிக்கவர்களின் மனைவியாக இருக்கும் நோன்பை நீ மேற்கொள்கிறாய். ஒரு வீரனுக்கு மனைவியாக இருக்கும் அந்நோன்பைப் பின்பற்றுவாயாக" என்றிருக்கிறது.

என் சொற்களைக் கேட்ட எல்லாம்வல்ல தலைவன் {கசியபர்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்னார். அதன்பிறகு மனிதர்களின் மன்னனான மனுவை எனக்குக் கொடுத்தார்.(53) அதன்பிறகு மனுவில் இருந்து தோன்றியவர்களும், தேவர்களைப் போன்றவர்களுமான இக்ஷ்வாகு குல மன்னர்களை அடைந்த நான், சக்திமிக்கக் காலத்தின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு மன்னனின் கைகளில் இருந்து மற்றொரு மன்னனின் கைகளுக்குக் கொடுக்கப்பட்டேன்.(54) அந்தத் தலைவன் {கசியபர்}, மனிதர்களின் மன்னனான நுண்ணறிவுமிக்க மனுவை எனக்குக் கொடுத்தபோது, பெரும் முனிவர்களின் குடும்பங்களில் பிறந்த பல மன்னர்கள் என்னை ஆட்சி செய்தனர்.(55) வீர க்ஷத்திரியர்கள் பலர் என்னை வென்று தேவலோகம் சென்றனர். காலத்தின் ஆதிக்கத்தின் கீழ் அவர்கள் என்னில் மறைந்தனர்.(56) போரில் எப்போதும் வெல்பவர்களான சக்திவாய்ந்த க்ஷத்திரியர்கள், என் நிமித்தமாக இவ்வுலகில் ஒருவரோடொருவர் போரிட்டனர், இன்னும் போரிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.(57) உன்னால் அனுப்பப்பட்ட விதியின் எல்லை இதுதான். உனக்கு என்னிடம் பரிவிரக்கம் இருந்தால், என் சுமையில் இருந்து என்னை விடுவிக்க நீ விரும்பினால், உலகின் நன்மைக்காகவும், மன்னர்களின் அழிவுக்காகவும் ஒரு போரை ஏற்பாடு செய்வாயாக. எழில்மிகுந்த சக்கரதரனே எனக்குப் பாதுகாப்பை அருள்வாயாக.(58,59) சுமையால் ஒடுக்கப்பட்டு வந்த என்னை அதலிருந்து விடுவிக்க விரும்பினால், நாராயணனே எனக்கு ஆணையிடட்டும்" என்றாள் {பூமாதேவி}" என்றார் {வைசம்பாயனர்}.(60)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 52ல் உள்ள சுலோகங்கள் : 60
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Thursday, 27 February 2020

பூமியின் தோற்றம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 06

(ப்ருதூபாக்யானம்)

origin of the earth!| Harivamsa-Parva-Chapter-06 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பிருதுவுக்கும், பூமாதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல்; பூமியைச் சமப்படுத்திய பிருது; பிருதுவின் மூலம் உண்டாகிய மூன்று தொழில்கள்; பல்வேறு காலக்கட்டங்களில் பூமாதேவியிடம் கறக்கப்பட்ட பலன்கள்; புதிய பூமி; பிருதுவின் மகள் பிருத்வி; மேதஸால் நிறைந்த மேதினி...

பிருது, "எவன் ஒருவன், தன் தரப்பைச் சார்ந்த அல்லது எதிர் தரப்பைச் சார்ந்த ஒருவனுக்காக பல உயிர்களை அழிக்கிறானோ, அவன் இம்மையில் பாவம் இழைத்தவனாவான்.(1) தீங்கு நிறைந்த ஒருவனைக் கொல்வதன் மூலம் பலர் மகிழ்ச்சியடைந்தால் அதில் சிறியதாகவோ, பெரியதாகவோ எந்தப் பாவமும் பற்றாது.(2) ஒரு தீய மனிதனை அழிப்பதன் மூலம் பலருக்கு நன்மை நேருமேயானால், அத்தகைய செயல் அறமீட்டலுக்கே வழிவகுக்கும்.(3) எனவே, ஓ! பூமியே, நான் என் குடிமக்களின் நன்மைக்காக உன்னைக் கொல்லப் போகிறேன். உலகின் நன்மைக்காக நான் இடும் இந்தக் கட்டளையை நீ  நிறைவேற்றவில்லையெனில், என் ஆணையைப் புறக்கணிக்கும் உன்னை நான் இந்தக் கணையால் கொல்வேன். என்னை நானே (பூமிக்கடியில்) புதைத்துக் கொண்டு என் குடிமக்களை நான் எப்போதும் காத்திருப்பேன்.(4,5) ஓ! அறச் சடங்குகளை எப்போதும் நோற்பவளே, என் குடிமக்களைக் காக்கவல்லவள் என்பதால், என் ஆட்சிக் காலத்தில் நீ அவர்களுக்கு உயிர் கொடுப்பாயாக.(6) நீ எனக்குப் பாலைத் தருவாயாக. அப்போது நான் உன் அழிவுக்காக எடுத்த இந்தப் பயங்கரக் கணையை விலக்கிக் கொள்வேன்" என்றான் {பிருது}.(7)

Wednesday, 26 February 2020

வேனன் மற்றும் பிருது | ஹரிவம்ச பர்வம் பகுதி – 05

(வேன சரிதம் - ப்ருதோத்பத்தி)

An account of Vena and Prithu!| Harivamsa-Parva-Chapter-05 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : வேனன் பிறப்பு; வேனனின் அறம்வழுவிய ஒழுக்கம்; வேனனின் அஹங்காரம்; முனிவர்களால் அழிக்கப்பட்ட வேனன்; வேனனின் இடது தொடையில் பிறந்த நிஷாதன்; அவனது வலது கையில் பிறந்த பிருது; உலகின் முதல் மன்னன் பிருது; பிருதுவைத் துதிக்க முனிவர்களால் நியமிக்கப்பட்ட சூதரும், மாகதரும்; பசுவாக மாறி தப்பி ஓடிய பூமாதேவி; பின்தொடர்ந்த பிருது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "முன்னர் அத்ரி குலத்தில் அவரைப் போலவே பலமிக்கவனாக இருந்த குடிமுதல்வன் அங்கன், அறப்பாதுகாவலனானான்.(1) வேனன் என்ற பெயரில் {அறத்தில் அக்கறையில்லாத} மிக இழிவான மகன் அவனுக்குப் பிறந்தான். அந்தக் குடிமுதல்வன் {வேனன்} மரணத்தின் {மிருத்யுவின்} மகளான சுனீதைக்குப் பிறந்தான்.(2) தன் தாய்வழி தாத்தாவின் குறைபாட்டை உள்வாங்கிக் கொண்ட அந்தக் காலனின் மகன் {வேனன்}, தன் கடமைகளில் இருந்து விலகி, உலகில் ஒழுக்க விடுதலையைப் போதித்தான்.(3) அந்த மன்னன் {வேனன்}, அறமில்லாவொழுங்கை நிறுவி, வேத வினைமுறைகளைப் புறக்கணித்து இழிவான செயல்களில் ஈடுபட்டான்.(4) அவனுடைய நிர்வாகத்தில், வேத கல்வி மற்றும் வேதச் சடங்குகள் இடைநிறுத்தப்பட்டன. வேள்விகளில் புனிதப்படுத்தப்பட்ட சோமச் சாறானது தேவர்களுக்குக் கிட்டவில்லை.(5) அந்தக் குடிமுதல்வனின் பயங்கர உறுதிமொழியானது, ஹோமம் அல்லது வேள்விகளை அழிவுக்காலத்திலும் கூட எவரும் செய்யாத வகையில் இருந்தது.(6)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்