Showing posts with label இந்திரன். Show all posts
Showing posts with label இந்திரன். Show all posts

Wednesday, 2 March 2022

திரிபுரவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 108

(திரிபுரவதவ்ருத்தாந்தம்)

Tripura annihilated | Bhavishya-Parva-Chapter-108 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : திரிபுரமெனும் அசுரர்களின் ஆகாய நகரங்கள் மூன்றும் சிவனால் அழிக்கப்பட்டது...

Shiva in chariot and vishnu as bull

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பிராமணரே, முக்கண்ணனான மஹாதேவன் மூன்று நகரங்களுக்கு ஒப்பான விமானங்களில் வானில் பயணித்த அசுரர்களின் மகன்களை எவ்வாறு கொன்றான்? இது குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(1)

Friday, 9 July 2021

வாமனஸ்தவம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 47

(விஷ்ணோராதேஷாத் பலே꞉ பாதாலப்ரவேஷ꞉ தத்க்ருதவிஷ்ணுஸ்தவ꞉ பலிம் ப்ரதி கருடஸ்ய உக்திப்ரத்யுக்தீ வாமநஸ்தவபலகதநம் ச)

The Danavas described | Bhavishya-Parva-Chapter-47 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : போரில் தைத்தியர்களை அடக்கி பலியைப் பாதாளத்தில் கட்டிப்போட்ட விஷ்ணு; நாரதர் பலிக்குக் கற்பித்த விஷ்ணு துதியான வாமனஸ்தவம்...

Mahabali in sutala patala

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தானவர்களின் பெயர்கள், வடிவங்கள், சாதனைகள், முக்கிய ஆயுதங்கள் ஆகியவற்றை இனி கேட்பாயாக.{1} விப்ரசித்தி, சிபி, சங்கு, அயசங்கு, அயசிரன், அஷ்வசிரன், பெருஞ்சக்திவாய்ந்த ஹயக்ரீவன்,{2} {வேகவான்}, கேதுமான், உக்ரன், யுயோக்ரன், வியக்ரன், பேரசுரனான புஷ்கரன், புஷ்கலன், ஸ்வஷா, அஷ்வபதி,{3} பிரஹ்லாதன் {பிரஹ்ராதன்}, அஷ்வசிரன், கும்பன், ஸம்ஹ்ராதன், ககநப்ரியன், அனுஹ்ராதன், ஹரிஹரன், வராஹன், ஸம்ஹரன், அருஜன்,{4} விருஷபர்வன், விரூபாக்ஷன், முனீந்திரன், சந்திரலோசனன், நிஷ்பிரபன், சுப்ரபன், நிருத்ரன்,{5} ஏகவக்தரன், மஹாவக்தரன், திவிவக்தரன், சேரஸன் {காலஸம்நிபன்}, சரபன், {சலபன்}, குந்தன் {குணபன்}, குபதன் {குலபன்}, குவதன்,{6} மஹாகர்பன், சங்குகர்ணன், மஹாத்வனி, தீர்கஜிஹ்வன், அர்க்கவதனன், மிருதுசாபன் {மிருதுபாஹு}, மிருதுபிரியன்,{7} வாயு, கரிஷ்டன், நமுசி, சம்பரன், விக்ஷரன், சந்திரஹந்தன், குரோதஹந்தன், குரோதவர்தனன்,{8} காலகன், கலகாக்ஷன், விருத்ரன், குரோதவிமோக்ஷணன், கவிஷ்டன், ஹவிஷ்டன், பிரலம்பன், நரகன், பிருது,{9} சந்திரதாபனன், வாதாபி, கேதுமான், அஸிலோமன், விதோமன் {புலோமன்}, பாஸ்கலன், பிரமதன், மதன்,{10} சிருகாலவவனன், {கராலன்}, கேசி, ஏகாக்ஷன், பாகு, துஹுண்டன், ஸ்ருமலன், ஸ்ருபன் ஆகிய இவர்களும்,{11} பிற தைத்தியர்கள் பலரும் பாதங்களை வைக்க எத்தனித்த பெரும் விஷ்ணுவின் முன் தோன்றினார்கள்.{12}(1-12)

Thursday, 8 July 2021

விஷ்ணுவின் உறுதிமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 44

(கஷ்யபாதிந்ப்ரதி மஹாவிஷ்நோர்வரப்ரதாநகதாவதார꞉)

Vishnu promises help to the gods | Bhavishya-Parva-Chapter-44 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் :  பதிவின் சுருக்கம்: கசியபரும், அதிதியும் வேண்டிய வரம்; விஷ்ணு கொடுத்த உறுதிமொழி...

Promise of Vishnu

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இருபிறப்பாளர்களில் முதன்மையான கசியபரால் ஓதப்படும் மிகச் சிறந்த துதிகளைக் கேட்ட தலைவன் நாராயணன்[1], மேகங்களுடைய முழக்கங்களின் மூலம் கம்பீரமான இனிய குரலில் அந்தப் பெருந் தேவர்களிடம் பேசினான்.{1,2} சொற்கள் வானத்தில் இருந்து கேட்டாலும், எவராலும் தலைவனைக் காணமுடியவில்லை. அந்த ஈஷ்வரன் பெரும் மகிழ்ச்சியுடன் பேசினான்.{3}(1-3)

Wednesday, 7 July 2021

கசியபரிடமும், பிரம்மனிடமும் சென்ற தேவர்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 42

(தேவகணை꞉ ஸஹ கஷ்யபாதித்யோர்-ப்ரஹ்மஸதநகமநகதநம்)

The gods go to Kashyapa for finding out means for the destruction of Bali | Bhavishya-Parva-Chapter-42 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : அதிதியிடம் சென்ற இந்திரன்; தேவர்களை பிரம்மலோகம் அழைத்துச் சென்ற கசியபர்; பிரம்ம சபை வர்ணனை...

Brahmas Hall

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளர்களிலும், முனிவர்களிலும் முதன்மையானவரே, தைத்தியர்களால் {திதியின் மகன்களால்} வெல்லப்பட்ட தேவர்கள் {அதிதியின் மகன்கள்}அதன்பிறகு என்ன செய்தனர்? அவர்கள் தேவலோகத்தை எவ்வாறு மீட்டனர்?" என்று கேட்டான்.(1)

Friday, 2 July 2021

வராஹபுராணம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 36

(இந்த்ரதீநாம் மோசநம் தேஷாமாதிபத்யலாபஷ்ச)

Release of the celestials | Bhavishya-Parva-Chapter-36 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : தேவர்கள் தங்கள் நிலைகளை அடைந்தது; ஹரியின் ஆணை; வராஹ புராண மகிமை...

Varaha avatar of Lord Vishnu

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{புருஷோத்தமனான} ஹரி, இவ்வாறு அசுரர்கள் அனைவரையும் போரில் முறியடித்து, புரந்தரனையும், தேவர்கள் அனைவரையும் விடுவித்தான்.(1) தேவர்கள் அனைவரும் தங்கள் இயல்பான மனநிலையை மீண்டும் அடைந்து, புரந்தரனை முன்னிட்டுக் கொண்டு நாராயணனை அணுகினர்.(2)

Wednesday, 30 June 2021

தேவர்களுடன் போரிட அசுரர்களை ஏவிய மலைகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 34

(தேவாஸுரயுத்தோத்யோக꞉ தத்யுத்தவர்ணநம் ச)

The mountains set Asuras fighting with the Gods | Bhavishya-Parva-Chapter-34 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : தேவர்களிடம் அசுரர்கள் கோபம் கொள்ளத் தூண்டிய மலைகள்; ஹிரண்யாக்ஷனின் தலைமையிலான அசுரர்கள் தேவர்களை முறியடித்தது...

Hiranyaksha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பூமியை ஆதரிக்கும் {சிறகு படைத்த} மலைகள் ஒரு காலத்தில் தலைவனின் மாயைக்கு வசப்பட்டு அதை {பூமியைக்} கைவிட்டன.(1) அதன்பிறகு கிழக்குத் திசைக்கு வந்து, தடாகத்தில் மூழ்கும் யானைகளைப் போல ஹிரண்யாக்ஷனால் ஆளப்படும் அசுரர்களின் வசிப்பிடத்தில் விழுந்தன.(2)

அதிகாரப் பகிர்வு | பவிஷ்ய பர்வம் பகுதி – 33

(லோகாநாமாதிபத்யவ்யவஸ்தாபநம்)

Various kings are appointed by Brahma | Bhavishya-Parva-Chapter-33 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : அண்டத்தின் அரசுரிமையில் அமர்த்தப்பட்ட இந்திரன்; பல தேவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படல்...

Lord Brahma creating the univers

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பாரதா, தலைவன் {பிரம்மன்}, சூரியனைப் போன்று பிரகாசம் கொண்ட சக்ரனை {இந்திரனை} மூவுலகங்களுக்கும், தேவர்களுக்கும் மன்னனாக நியமித்தான்.(1) வஜ்ரதாரியும், கவசம் தரித்தவனுமான ஜிஷ்ணுவை அதிதி பெற்றெடுத்தாள். நுண்ணறிவுமிக்கவனும், ஸ்மிருதிகளின் புரவலனுமான அவன் அத்வர்யுக்களால் துதிக்கப்படுகிறான்.(2) தலைவன் சக்ரன், அதிதிக்குப் பிறந்ததும் குசப்புல்லால் மறைக்கப்பட்டான் என்பதால் அந்தத் தேவர்களின் மன்னன் கௌசிகன் என்ற பெயரையும் பெற்றான்.(3) பிரம்மன், ஆயிரங்கண் புரந்தரனை மேலான தலைவனாக நியமித்துவிட்டுப் பிற அரசுகளைப் படிப்படியாகப் பகிர்ந்தளித்தான்.(4)

Wednesday, 16 June 2021

மது அசுரன் - விஷ்ணு போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 24

(மோஹவிவேகயோர்யுத்தம்)

The fight between Madhu and Vishnu | Bhavishya-Parva-Chapter-24 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : இந்திரனைக் கட்டிப்போட்டு விஷ்ணுவை எதிர்த்துச் சென்ற அசுரன் மது; இசையில் மயங்கிய மது; விஷ்ணுவுக்கும் மதுவுக்கும் இடையில் நடைபெற்ற போர்; மது விஷ்ணு எனும் உருவகம்; விஷ்ணுவின் பெருமை; விஷ்ணு துதி...

Pranayama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பயங்கர சக்தியும் பேராற்றலும் மிக்கத் தைத்தியன் மது, கூரிய வடங்களைக் கொண்டு அந்த மலையில் மகேந்திரனைக் கட்டிப்போட்டான்.[1](1) இந்திரனின் கௌரவத்தை அடைய விரும்பிய மது, பிரஹ்லாதனுடைய சொற்களின்படியும், உண்மையான புத்தியின் வீழ்ச்சியாலும் திடீரென அவனை {இந்திரனை} வெல்லப்பட முடியாத இரும்பு வடங்களால் கட்டிப்போட்டான்; அதன் பிறகு தன் படைக்குத் தலைமையேற்று வெளியே வந்த அவன் {மது}, காலனால் தூண்டப்பட்டவனாகப் பேராற்றல் வாய்ந்த விஷ்ணுவைப் போருக்கு அழைத்தான்.(2-4)

Sunday, 20 December 2020

துவாரகையைச் சீரமைத்த தேவதச்சன் | விஷ்ணு பர்வம் பகுதி – 155 – 99

(புனர்விஷேஷதோ த்வாரவதீநிர்மாணம்)

The celestial architect builds Dwaraka | Vishnu-Parva-Chapter-155-099 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : துவாரகை விஷ்வகர்மனால் மிகச்சிறப்பாக நிர்மாணிக்கப்படல்; கிருஷ்ணனின் மனைவியருக்கு மாளிகைகள் அமைத்தல்; செய்குன்றுகள், ஆறுகள், குளங்கள், வனங்கள், உபவனங்கள் ஆகியவை அமைத்தல்...


A palace in Dwaraka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணன், தேவர்களின் வசிப்பிடத்திற்கு ஒப்பானதும், அனைத்துப் பக்கங்களிலும் எதிரொலிகளால் நிறைந்ததும், மணி மலை, விளையாட்டு இல்லங்கள், தோட்டங்கள், காடுகள், சபாமண்டபங்கள், கோபுரங்கள் ஆகியவற்றைக் கொண்டதுமான துவாரகா நகரத்தைக் கருடனின் முதுகில் அமர்ந்தவாறே கண்டான்.(1,2)

Friday, 18 December 2020

தேவலோகத்தை வெல்ல விரும்பிய வஜ்ரநாபன் | விஷ்ணு பர்வம் பகுதி – 153 – 97

(பிரத்யும்னதைத்யயுத்தம்)

Vajranabha wants to conquer the celestial region | Vishnu-Parva-Chapter-153-097 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : வஜ்ரநாபனை அறிவுறுத்திய கசியபர்; வஜ்ரநாபன் தன் மகள்களின் பிள்ளைகளைக் கொல்லச் சொன்னது; பிரத்யும்னன், கதன், சாம்பன் ஆகியோர் அசுரர்களை அழித்தது...


Pradyumna and Ananta against Asuras

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒப்பற்றவரான கசியபரின் வேள்வி {ஸத்ரயாகம்} நிறைவடைந்ததும், தேவர்களும், அசுரர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(1) மூவுலகங்களை வெல்ல விரும்பிய வஜ்ரநாபன், அந்த வேள்வியின் முடிவில் கசியபரிடம் சென்றான். அவர் அவனிடம்,(2) "ஓ! வஜ்ரநாபா, கேட்பதற்குத் தகுந்தவையாக என் சொற்களை நீ நினைத்தால் நான் சொல்வதைக் கேட்பாயாக. {மகனே, மக்களால் சூழப்பட்டவனாக வஜ்ரபுரத்தில் வசிப்பாயாக}.(3) உங்கள் அனைவரிலும் சக்ரன் {இந்திரன்} மூத்தவனும், திறன்களில் முதன்மையானவனும் ஆவான்; அவன் பெருந்தவச் சக்திகளுடன் கூடியவனாகவும், இயல்பிலேயே பலவானாகவும், பிராமணர்களிடம் அர்ப்பணிப்புமிக்கவனாகவும்,(4) நன்றி நிறைந்தவனாகவும், மொத்த உலகின் மன்னனாகவும், நல்லோருக்கும், அறவோருக்கும் புகலிடமாகவும் திகழ்கிறான். {மூவுலகங்களின் மன்னனான அவனே அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் முனைப்புடன் இருக்கிறான்}.(5) ஓ! வஜ்ரநாபா, உன்னால் அவனை {இந்திரனை} வெல்ல முடியாது, {இம்முயற்சியில்} நீயே கொல்லப்படுவாய். பாம்பின் கோபத்தைத் தூண்டியவன் தானே {பாம்பை மிதித்தவன்} அழிவடைவதைப் போல நீயும் உடனே அழிக்கப்படுவாய்" என்றார் {கசியபர்}.(6)

Wednesday, 2 December 2020

பிரபாவதி - வஜ்ரநாபவதம் | விஷ்ணு பர்வம் பகுதி – 148 – 92

(வஜ்ரநாபவதவ்ருத்தாந்தம்)

The destruction of Vajranabha - An account of Prabhavati | Vishnu-Parva-Chapter-148-092 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : வஜ்ரநாபன் பெற்ற வரங்கள்; பத்ரநாபன் பெற்ற வரம்; பிரபாவதியிடம் அன்னப்பறவையைத் தூதனுப்பிய இந்திரன்...


Indra Speaking to Dhartarashtra Swans

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவரே, ஓ! அறவோரில் முதன்மையானவரே, பானுமதி அபகரிக்கப்பட்டதையும், கேசவனின் வெற்றிப்பேற்றையும், ஒப்பற்ற சக்தி கொண்ட விருஷ்ணிகள் கடலில் தேவர்களைப் போல விளையாடியதையும்,(1) தேவலோகத்தில் இருந்து சாலிக்யம் கொண்டு வரப்பட்டதையும், இன்னும் பல அற்புதக் காரியங்களையும் நான் கேட்டேன்.(2) நிகும்பன் அழிக்கப்பட்டதைச் சொன்னபோது வஜ்ரநாபன் குறித்து நீர் குறிப்பிட்டீர். ஓ! முனிவரே, இப்போது அதைக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்" என்றான்.(3)

Friday, 6 November 2020

துவாரகையில் பாரிஜாத மரம் | விஷ்ணு பர்வம் பகுதி – 132 – 076

(ஸ்வர்காத்பாரிஜாதாநயனம்)

Indra fights with Krishna | Vishnu-Parva-Chapter-132-076 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனுக்கும் இந்திரனுக்கும் இடையில் மீண்டும் போர்; அமைதியை நிலைநாட்டிய கசியபரும் அதிதியும்; துவாரகை வந்த பாரிஜாதம்.

wishful tree fulfill ambition parijata tree

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உயர்ந்த ஆன்மா கொண்டவனும், மதுசூதனனுமான கிருஷ்ணன், வில்வத்துக்கும், நீருக்கும் தலைவனை {சிவனை} வணங்கிவிட்டுத் தன் தேரில் ஏறிச் சென்றான்; அவன் தன் தேரில் அமர்ந்து கொண்டு புஷ்கரையின் அருகில் தேவர்களுடன் கூடிய தேவமன்னனை {இந்திரனை} அழைத்தான்.(1,2)

Wednesday, 28 October 2020

கிருஷ்ண இந்திரப் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 130 – 074

(இந்த்ரக்ருஷ்ணயோர்யுத்தம் விஷ்ணோருத்கர்ஷஶ்ச)

The fight between Krishna and Indra | Vishnu-Parva-Chapter-130-074 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனுக்கும் இந்திரனுக்கும், பிரத்யும்னனுக்கும் ஜயந்தனுக்கும், சாத்யகிக்கும் பிரவரனுக்கும், கருடனுக்கும் ஐராவதத்துக்கும் இடையில் நடந்த போர்...

War between Krishna and Indra depicted in Hoysaleswara Temple Karnataka


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குருக்களின் வழித்தோன்றலே, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, சூரியன் உதித்த ஒரு கணத்திற்கு {ஒரு முகூர்த்த காலத்திற்குப்} பிறகு, தன் தேரில் மனிதர்களில் முதன்மையான சாத்யகியை ஏற்றிக் கொண்டு, "என்னைப் பின்தொடர்வாயாக" எனப் பிரத்யும்னனிடம் சொல்லிவிட்டு வேட்டைக்குச் செல்லும் போலிக்காரணத்தோடு ரைவதக மலைக்குச் சென்றான்.(1,2)

Monday, 19 October 2020

நாரதரின் அறிவுரை | விஷ்ணு பர்வம் பகுதி – 128 – 072

(ஶக்ரநிஶ்சயகதநார்தம் நாரதஸ்ய த்வாரகாம் ப்ரதி கமநம்)

Narada's advice | Vishnu-Parva-Chapter-128-072 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் பெருமையைச் சொன்ன நாரதர்; பாரிஜாதம் கொடுக்க மீண்டும் மறுத்த இந்திரன்...

Narada advises Indra


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நாநயமிக்கப் பேச்சாளர்களில் முதன்மையானவரான நாரதர், மஹேந்திரனின் இந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்களின் மன்னனிடம் கமுக்கமாக இந்தச் சொற்களைச் சொன்னார்.(1) நாரதர், "ஏற்புடையவை மட்டுமே மன்னர்களிடம் சொல்லப்பட வேண்டும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. ஆனால் வாய்ப்பேற்படும் தருணங்களில் ஏற்பில்லாதவையாக இருப்பினும், அவர்களுக்கு நன்மை விளைவிக்கும் சொற்களும் சொல்லப்பட வேண்டும்.(2) அனுமதியில்லாமல் மன்னனின் முன்பு தோன்றுவதும் முறையாகாது என முனிவர்கள்[1] சொல்கின்றனர்.(3) ஆனால், நீ எப்போதும் காரியங்களில் எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதில் என் அறிவுரையை நாடுபவன் என்பதால் இன்று உன்னால் வேண்டப்படாதவற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், நீ விரும்பினால் அதை ஏற்றுக்கொள்வாயாக.(4) நண்பர்கள், அதிலும் குறிப்பாகத் தங்கள் நண்பர்கள் வீழ்வதைக் காண விரும்பாத நண்பர்கள், தாங்கள் அழைக்கப்படாவிட்டாலும் சந்தர்ப்பத்திற்கேற்ற நியாயமான நல்ல ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.(5) ஒருவனுக்கு ஏற்பில்லாததாக, இனிமையற்றதாக இருப்பினும் அவனது நலனுக்கு உகந்ததையே எப்போதும் அறம் சார்ந்த நன்மக்கள் பேச வேண்டும். அன்புக்கடனில் இருந்து விடுபடுவதற்கான வழி இதுவெனக் கடந்த காலங்களில் முனிவர்கள் அறிந்திருந்தனர்.(6) அற மீறல்களாக இருக்கும் ஏற்பில்லாத, உண்மையற்ற சொற்களை (எவரும்) கேட்கமாட்டார்கள். ஏற்புடையவையாக இருப்பினும் தீங்கிழைக்கும் சொற்களை ஒருபோதும் பேசக்கூடாது என முனிவர்கள் கண்டிக்கின்றனர்.(7) ஓ! நன்றாகக் கேட்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, ஓ! அனைத்தையும் அறிந்தவனே, என் கடமையும், பொறுப்பும், உனக்கு நன்மையை விளைவிப்பதுமான என் சொற்களைக் கேட்டு அதன் படி செயல்படுவாயாக.(8)

Saturday, 17 October 2020

இந்திரனின் மறுமொழி | விஷ்ணு பர்வம் பகுதி – 127 – 071

(பாரிஜாதம் ந தாஸ்யாமீதீந்த்ரபாஷணம்)

Narada's advice and Indra's answers | Vishnu-Parva-Chapter-127-071 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் எச்சரிக்கையை நாரதர் மூலம் கேள்விப்பட்ட இந்திரன்; போர் புரியாமல் பாரிஜாதத்தைக் கொடுப்பதில்லை என உறுதியுடன் சொன்னது...

indra and narada


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நன்மனம் கொண்டவரும், அறம் சார்ந்த அறிவுடனும், நாநயத்துடனும் பேசுபவருமான நாரதர், தேவர்களின் தலைவனுடைய {தேவேந்திரனுடைய} சொற்களைக் கேட்டு இவ்வாறு பேசினார்,(1) "ஓ! பலனை {பலாசுரனைக்} கொன்றவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நான் உன்னிடம் அதிக அக்கறை கொண்டுள்ளதால் உனக்கு நன்மை விளைவிப்பதையே சொல்வேன்.(2) நான் உன் மனநிலையை ஏற்கனவே அறிந்திருந்ததால், வலிமைமிக்கத் தேவனான சிவனுக்கும் பழங்காலத்தில் நீ பாரிஜாத மரத்தைக் கொடுக்கவில்லை என்பதை வசுதேவனின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்னேன்.(3) நான் அவனிடம் (பாரிஜாத மரத்தைக் கொண்டு செல்லக் கூடாததற்கான) எண்ணற்ற காரணங்களைச் சொன்னாலும் அவன் அவற்றில் எதையும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(4) அந்தத் தாமரைக் கண்ணன், "நான் இந்திரனின் தம்பி என்பதால் அவனால் பேணி வளர்க்கப்பட வேண்டியவன் {சீராட்டத்தகுந்தவன்}" என்று என்னிடம் மறுமொழியாகச் சொன்னான்.(5)

Friday, 16 October 2020

இந்திரனிடம் பேசிய நாரதர் | விஷ்ணு பர்வம் பகுதி – 126 – 070

(இந்த்ரஸ்ய பாரிஜாததாநே(அ)ஸம்மதிம்)

The coloquy between Narada and Indra regarding the transplantation of the Parijata | Vishnu-Parva-Chapter-126-070 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சிவனைத் துதித்து இந்திரன் எடுத்த விழா; பாரிஜாதம் பெற தூதாகச் சென்ற நாரதர்; பாரிஜாதத்தைக் கொடுக்காததற்கு காரணங்களை அடுக்கிய இந்திரன்...

Narada and Indra


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பிறகு மஹேந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார் நாரத முனிவர்; அங்கே அவர் (சிவனைக் கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற) விழாவைக் கண்டு அந்த இரவைக் கழித்தார்.(1) சிறப்புமிக்க ஆதித்யர்கள், தேவர்களில் சிறந்த வசுக்கள், புண்ணியச் செயல்களின் மூலம் சொர்க்கத்தை அடைந்தவர்களும், கல்விமான்களுமான ராஜரிஷிகள்,(2) நாகர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், சாரணர்கள், தவத்துறவுகளை மேற்கொள்ளும் தவசிகள் {தபோதனர்கள்}, ஆயிரக்கணக்கான பிரம்மரிஷிகள், தேவரிகள், முனிவர்கள்,(3) உயரான்ம சுபர்ணர்கள், பெருஞ்சக்திவாய்ந்த மருத்துகள் ஆகியோரும் நூற்றுக்கணக்கான தெய்வீக உயிரினங்கள் பிறரும் அங்கே கூடியிருந்தனர்.(4)

Thursday, 25 June 2020

கிருஷ்ணனைத் துதித்த இந்திரன் | விஷ்ணு பர்வம் பகுதி – 74 – 019

(கோவிந்தாபிஷேகம்)

Indra comes and eulogises Krishna | Vishnu-Parva-Chapter-74-019 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனைத் துதித்த இந்திரன்; கிருஷ்ணனுக்கு கோவிந்தப் பட்டம் கொடுத்தது; அர்ஜுனனை அருகில் இருந்து காக்குமாறு கிருஷ்ணனை வேண்டிக்கொண்ட இந்திரன்; கிருஷ்ணன் அளித்த உறுதிமொழி...

<
Indra worships Lord Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவர்களின் மன்னனான புரந்தரன் {இந்திரன்}, இவ்வாறு கோவர்த்தன மலை உயர்த்தப்பட்டதையும், பசுக்கள் காப்பாற்றப்பட்டதையும் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்து கிருஷ்ணனைக் காண விரும்பினான்.(1) அவன், பெருகி வழியும் மதநீருடன் கூடியதும், நீரற்ற ஒரு மேகத்திற்கு ஒப்பானதுமான தன் யானை ஐராவதத்தின் மேல் அமர்ந்து கொண்டு பூமிக்கு வந்தான்.(2) களைப்பில்லாமல் செயல்புரிபவனான கிருஷ்ணன் கோவர்த்தன மலையின் அடியில் அமர்ந்திருப்பதைப் புரந்தரன் கண்டான்.(3) அழிவற்றவனான விஷ்ணு, ஓர் இடையனின் வடிவை ஏற்றுப் பெரும் பிரகாசத்துடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.(4) பல கண்களைக் கொண்டவனான சக்ரன் {இந்திரன்}, ஸ்ரீவத்ஸமெனும் மாயக்குறியையும், நீலோத்பலத்திற்கு ஒப்பான வண்ணத்தையும் கொண்ட கிருஷ்ணனைத் தன் கண்கள் அனைத்தாலும் கண்டான்.(5) சக்ரன், அழகைக் கொடையாகக் கொண்டவனும், மனிதர்களின் நிலத்தில் {உலகத்தில்} தேவனைப் போன்றவனுமான அவன் மலையின் அடிவாரத்தில் மகிழ்ச்சியாக அமர்ந்திருப்பதைக் கண்டு நாணமடைந்தான்[1].(6)

[1] சித்திரசாலை பதிப்பில், 3ம் ஸ்லோகத்தில், "கோவர்த்தன மலையின் பாறை மீது அமர்ந்திருந்த கிருஷ்ணனைக் கண்டான்" என்றும், 6ம் ஸ்லோகத்தில், "பாறை மீது சுகமாக அமர்ந்திருந்த கிருஷ்ணனைக் கண்டான்" என்றும் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், 3ம் ஸ்லோகத்தில், "கோவர்த்தனத்தின் அருகில் இருந்த பாறையில் அமர்ந்திருந்த கிருஷ்ணனைக் கண்டான்" என்றும், 6ம் ஸ்லோகத்தில், "பாறையின் மீது அமர்ந்திருந்த கிருஷ்ணனைக் கண்டான்" என்றும் இருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், 3ம் ஸ்லோகத்தில், "கிருஷ்ணன் கோவர்த்தன மலையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்" என்றும், 6ம் ஸ்லோகத்தில் "மலை முதுகில் பூமியின் தேவன் போன்று பெருமையுடன் வீற்றிருக்கும் கிருஷ்ணனைப் பார்த்தான்" என்றும் இருக்கிறது.

காட்சியில் இருந்து மறைந்திருந்தவனும், பாம்புகளை உண்பவனுமான பறவைகளில் முதன்மையானவன் (கருடன்), சுகமாக அமர்ந்திருக்கும் அவனை {கிருஷ்ணனைத்} தன் சிறகுகளைக் கொண்டு சூரியக் கதிர்களில் இருந்து பாதுகாத்துக் கொண்டிருந்தான்.(7) பலனைக் கொன்றவனான இந்திரன், தன் யானையை விட்டுவிட்டு, மனிதச் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தவனான கிருஷ்ணனை அணுகினான்.(8) சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டதும், மின்னலைப் போன்று மின்னுவதுமான மகுடத்தாலும், தெய்வீகமான இரண்டு காது குண்டலங்களாலும் அவனுடைய முகம் பளபளத்தது.(9) உடல் ஆபரணமான பத்மகாந்தத்தின் ஐந்து அடுக்குகளைக் கொண்ட ஆரத்தால் அவனது மார்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது. சக்திவாய்ந்தவனும், வஜ்ரபாணியுமான வாசவன் {இந்திரன்}, தன் ஆயிரம் கண்களாலும் வாசுதேவனைக் கண்டு, அந்த உபேந்திரனை {கிருஷ்ணனை} அணுகி தெய்வீக மாலைகளாலும், குழம்புகளாலும் பேரழகுடன் தெரிந்தான்.(10,11)

அவன் {இந்திரன்}, மேக முழக்கம் போல ஆழமானதும், தேவர்களுக்கு எப்போதும் ஆணையிடுவதுமான தன் இனிய குரலில்,(12) "ஓ! கிருஷ்ணா, ஓ! நீண்ட கரங்களைக் கொண்டவனே, ஓ! உற்றாரின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனே, உன் பசுக்களிடம் நிறைவடைந்தவனாக நீ செய்த செயல்கள் தேவர்களின் சக்திக்கும் அப்பாற்பட்டவையாகும்.(13) உலகிற்கு அழிவைக் கொண்டு வர என்னால் உண்டாக்கப்பட்ட மேகங்களிடம் இருந்து நீ பசுக்களைப் பாதுகாத்ததில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன்.(14) வானில் உள்ள வீட்டைப் போல உன் யோக சக்தியால் இந்தச் சிறந்த மலையை நீ உயர்த்தியதைக் கண்டு யாருடைய மனம்தான் ஆச்சரியமடையாது?(15) ஓ! கிருஷ்ணா, என் வேள்வியை நிறுத்தியதால் நான் கோபமடைந்தேன். எனவேதான் ஏழு இரவுகளுக்கு நீண்டதும், பசுக்களுக்கு அழிவை ஏற்படுத்துவதும், தேவர்கள் மற்றும் தானவர்களாலும் தாக்குப்பிடிக்க முடியாததுமான இந்தப் பெரிய மழையைப் பொழியச் செய்தேன். ஆனால் என் முன்னிலையிலேயே இந்தப் பயங்கர மழையை உன் சக்தியால் நீ தடுத்துவிட்டாய்.(16,17) ஓ! கிருஷ்ணா, கோபமடைந்த நீ உன் மனித வடிவத்திற்குள் முழு வைஷ்ணவ சக்தியையும் குடியேற்றியதில் நான் பெரிதும் நிறைவடைந்திருக்கிறேன்.(18)

மனித வடிவில் இருந்தாலும் நீ உன் சக்தியுடன் கூடியவனாகவே இருப்பதால் தேவர்களின் பணி நல்லபடியாக முடிந்து விட்டதாகவே தோன்றுகிறது.(19) ஓ! வீரா, தேவர்களின் பணிகளுக்குத் தலைவனாகவும், அவர்களின் வழிகாட்டியாகவும் நீ இருப்பதால், அனைத்தும் நிறைவடையும், செய்யப்படாமல் எதுவும் விடுபடாது.(20) தேவர்களிலும், பிற உலகங்கள் அனைத்திலும் நீயே நித்தியமானாவன். உன்னால் தாங்கப்படும் கனத்தைச் சுமக்கவல்ல இரண்டாமவன் எவனையும் நான் காணவில்லை.(21) ஓ! பறவையை வாகனமாகக் கொண்டவனே, சிறந்த சக்கரமானது ஒரு துருவத்தின் முன் வைக்கப்படுவதைப் போலவே துன்பக் கடலில் மூழ்கியிருக்கும் தேவர்களைத் துயரில் இருந்து விடுவிப்பதில் நீ ஈடுபடுகிறாய்[2].(22) ஓ! கிருஷ்ணா, உலோகங்களில் பொன்னைப் போலவே, பெரும்பாட்டனால் (பிரம்மனால்) படைக்கப்பட்ட இந்த அண்டமும் உன் உடலில் இருக்கிறது.(23) வேகமாக ஓடுபவனை ஒரு முடவனால் பின்தொடர முடியாததைப் போலவே, சுயம்புவான தலைவனாலும் (பிரம்மனாலும்) புத்தியினாலோ, வயதினாலோ உன்னைப் பின்தொடர {புரிந்து கொள்ள} முடியாது.(24)

[2] சித்திரசாலை பதிப்பில், "கனமான சுமைகளை இழுக்க அவற்றின் முன்னே காளைகளைப் பூட்டுவதைப் போல, துயரில் இருக்கும் தேவர்கள் (தங்களைக் காப்பதற்காக) பறவையை (கருடனை) வாகனமாகக் கொண்ட உன்னை அவர்களின் முன் நிறுத்திக் கொள்கின்றனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கடுஞ்சுமை இருக்கும்போது, சிறந்த காளைகள் பூட்டப்படுகின்றன. ஓ! பறவையை வாகனமாகக் கொண்டவனே, அதே போலவே தேவர்களும் உன்னைத் தங்கள் புகலிடமாகக் கொள்கின்றனர்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "உயர்ந்த காளை பொறுப்பேற்பதில் முதல் ஸ்தானத்தில் செலுத்தப்படுகிறது. அது போல் கருட வாகனனாகிய நீர் துன்பத்தில் மூழ்கிய தேவர்களுக்கு இருக்கிறீர்" என்றிருக்கிறது.

மலைகளில் இமயத்தைப் போலவும், நீர்ப்பரப்புகளில் பெருங்கடலைப் போலவும், பறவைகளில் கருடனைப் போலவும் தேவர்களில் நீ முதன்மையானவனாக இருக்கிறாய்.(25) ஓ! கிருஷ்ணா, இதற்கெல்லாம் அடியில் நீருலகம் இருக்கிறது; அதற்குமேலே பூமியின் தூண்கள் {மலைகள்} மிதக்கின்றன; அவற்றுக்கும் மேலே மனிதர்களின் உலகம் இருக்கிறது;(26) அதற்கும் மேலே வானுலகம் இருக்கிறது; அதற்கும் மேலே சொர்க்கத்தின் வாயிலாக அமைந்திருக்கும் பிரகாசமான சூரியலோகம் இருக்கிறது;(27) அதற்கும் மேலே தேவர்களின் வசிப்பிடமாக அமைந்திருக்கும் தேவர்களின் பேருலகம் இருக்கிறது. அங்கே நான் தேவர்களின் மன்னன் என்ற நிலையை அடைந்திருக்கிறேன்;(28) அதற்கும் மேலே பிரம்மவாதிகள் வாழ்வதும், உயரான்ம சோமனும் (சந்திரனும்), கோள்கள் பிறவும் திரிவதுமான பிரம்மலோகம் இருக்கிறது.(29) அதற்கும் மேலே உள்ள பேராகாயப் பகுதியில் கோலோகம் அமைந்திருக்கிறது. ஓ! கிருஷ்ணா, உலகங்கள் அனைத்திலும் முதன்மையான கோலோகம் சாத்யர்களால் பாதுகாக்கப்படுகிறது.(30) பெரும்பாட்டனிடம் கேட்டும் எங்களால் அறிய முடியாத தவத்தைச் செய்து கொண்டு நீ அங்கே வாழ்ந்து வருகிறாய்.(31)

இந்தப் பூமியானது, செயல்களில் ஈடுபடுவோருக்கான செயலுலகம் ஆகும். அதன் அடியில் கொடியவர்களுக்கான பயங்கர உலகம் இருக்கிறது.(32) வானுலகம் காற்று போன்ற அசையும் பொருட்களின் புகலிடமாக இருக்கிறது. சொர்க்கமானது, தற்கட்டுப்பாடு, பொறுமை என்ற குணங்களுடன் கூடிய நல்லோரின் சிறந்த புகலிடமாக இருக்கிறது.(33) பிரம்மனை வழிபடுபவர்கள் பிரம்மலோகத்தில் வாழ்கின்றனர். பசுக்கள் மட்டுமே கோலோகத்தை அடைகின்றன; கடுந்தவங்களைச் செய்தாலும் கூட எவராலும் அதை {கோலோகத்தை} அடைய முடியாது.(34) ஓ! வீரனும், நுண்ணறிவுமிக்கவனுமான கிருஷ்ணா, இந்தப் பசுக்களைப் பாதுகாப்பதற்காகவே நீ கோவர்த்தன மலையைத் தூக்கி என்னால் அனுப்பப்பட்ட பேரிடர்களைத் தடுத்தாய்.(35) எனவே, பெரும்பாட்டன் மற்றும் பசுகளின் வேண்டுகோளின்படியும், உன்னிடம் கொண்ட மதிப்பினாலும் நான் இங்கே வந்தேன்.(36) ஓ! கிருஷ்ணா, நான் பூதங்கள்[3] மற்றும் தேவர்களின் தலைவனாவேன், நான் புரந்தரனாவேன் {இந்திரனாவேன்}. நான் {முற்காலத்தில்} அதிதிக்குப் பிறந்த உன் அண்ணனாவேன்.(37) உன் சக்தியின் விளைவான மேகங்களின் வடிவில் என் சக்தியை நான் வெளிக்காட்டியதற்கு என்னை நீ மன்னிப்பாயாக.(38)

[3] "ஒரு குறிப்பிட்ட வகையைச் சார்ந்த சிறுதெய்வங்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பில், "நான் உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், தேவர்களின் மன்னனுமான புரந்தரன் ஆவேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான் உயிரினங்கள் அனைத்தின் தலைவன். நான் தேவர்களின் மன்னனான புரந்தரன்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "நான் ஜீவராசிக்குத் தலைவன், தேவர்க்குத் தலைவன் இந்திரன்" என்றிருக்கிறது.

ஓ! யானையின் நடையைக் கொண்ட கிருஷ்ணா, இப்போது உன் மென்மையான சக்தியில் மகிழ்ந்திருந்து {பொறுமையுடன்}, பிரம்மன் மற்றும் பசுக்கள் சொல்லி அனுப்பிய சொற்களைக் கேட்பாயாக.(39) உன்னுடைய தெய்வீகச் செயல்களிலும், தங்கள் மகிமைகளைப் பாடுவதிலும், {உன்னுடைய} பாதுகாப்புப் பணியிலும் நிறைவடைந்திருக்கும் தலைவன் பிரம்மனும், வானத்தின் {தெய்வீகப்} பசுக்களும் இதை உனக்குச் சொல்லி அனுப்பியிருக்கின்றனர்.(40) {அவர்கள் சொன்னது}, "பெரும் கோலோகமும், பசுக்கள் அனைத்தும் உன்னால் பாதுகாக்கப்பட்டதால், காளைகளின் மூலம் எங்கள் குலம் தன்னாலேயே பெருகும்.(41) விரும்பியபடி திரியும் நாங்கள் அனைவரும் சுமை விலங்குகளான காளைகளால் உழவர்களையும், ஹவிஸ் படையல்களால் தேவர்களையும், ஏராளமான பெரும் தானியங்களால் ஸ்ரீயையும் {லட்சுமியையும்} நிறைவடைச் செய்கிறோம்.(42) ஓ! தலைவா, ஓ! பெரும்பலம் கொண்டவனே, நீயே எங்களின் ஆசானும், மீட்பனுமாவாய்" {என்றனர்}.(43) நீயே எங்களின் மன்னனும் தலைவனுமாகி, என்னால் கொண்டுவரப்பட்டிருக்கும் பொற்குடுவை நிறைந்த தெய்வீக நீரைக் கொண்டு இன்றே என் கைகளால் தெளித்துக் கொள்வாயாக {அபிஷேகம் செய்து கொள்வாயாக}.(44)

நான் தேவர்களின் மன்னனாவேன், நீ நித்தியமானவனாக இருந்தாலும் இப்போது பசுக்களின் மன்னனாக இருக்கிறாய். எனவே, இவ்வுலகின் மக்கள் உன்னைக் கோவிந்தன் எனப் பாடுவார்கள்.(45) இந்திரன் என்ற உயர்நிலை எனக்கு அளிக்கப்பட்டதால், நீ பசுக்களின் மன்னன் {என்ற உயர்ந்த நிலையில்} இருக்கிறாய். ஓ! கிருஷ்ணா, தேவர்கள் உன்னை உபேந்திரன் என்ற பெயரில் கொண்டாடுவார்கள்[4].(46) நான்கு மாதங்களைக் கொண்ட என் மழைக்காலத்தில், கூதிர் {சரத்} காலமாக அமையும் பிற்பாதியை {இரண்டு மாதங்களை} நான் உனக்கு அளிக்கிறேன்.(47) இன்றிலிருந்து மக்கள் முதல் இரண்டு மாதங்களை என்னுடையவையாகக் கருதுவார்கள். மழை நின்ற பிறகு, அவர்கள் என் கொடியை அகற்றுவார்கள், நீ துதிகளை ஏற்பாய். உற்சாகமிழந்து, எப்போதாவது அகவும் மயில்கள், என் மேகங்களின் மூலம் அடைந்த செருக்கைக் கைவிடும். என் காலத்தில், மேகங்களைக் கண்டு இனிய ஒலிகளை வெளியிடும் பிற விலங்குகள் அனைத்தும் அமைதியடையும்.(48,49)

[4] சித்திரசாலை பதிப்பில், "நான் தேவர்களின் இந்திரனாக இருக்கிறேன். நீ பசுக்களின் மன்னனாக இருப்பாயாக. பூமியின் பரப்பில் உள்ள மொத்த மக்களும் இன்றிலிருந்து நித்தியமாக உன்னை கோவிந்தனாகத் துதிப்பார்கள்.(45) கிருஷ்ணா, பசுக்கள் எனக்கும் மேல் உன்னையே தங்கள் இந்திரனாக நிறுவியுள்ளன. சொற்க்கத்தில் தேவர்கள் உன்னை உபேந்திரனாகத் துதித்துப் பாடுவார்கள்.(46)" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "44. நான் தேவர்களுக்கு இந்த்ரன் அல்லவா, நீர் பசுக்களுக்கு இந்த்ரனாயிருக்கும் தன்மையை அடைந்துள்ளீர். உலகில் ஜனங்கள் உம்மை கோவிந்தன் என்று என்றென்றும் துதிப்பார்கள். 45. அடியேனுக்கு மேல் இந்த்ரனாக நீர் பசுக்களால் தலைவராக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆக ஸ்வர்க்கத்தில் தேவதைகள் உம்மை உபேந்த்ரன் என்று கானம் செய்வார்கள்" என்றிருக்கிறது. மேற்கண்ட இந்த உரைகளே கிருஷ்ணனின் பரத்துவத்தை விளக்கிக் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

கனோபசு {அகஸ்திய நட்சத்திரம்} என்ற நட்சத்திரத்தின் ஆட்சியாளரான அகஸ்தியர், தென் பகுதியில் ஒரு பறவையைப் போலத் திரிவார், ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியன் தன் பிரகாசத்தால் அனைவரையும் சங்கடப்படுத்துவான்.(50) இவ்வாறு கூதிர் காலம் தொடங்கியதும், மயில்கள் அமைதியடையும், பறவைகள் நீரைத் தேடிச் செல்லும், தவளைகள் குதிப்பதை நிறுத்தும்,(51) ஆறுகளின் விளிம்புகள் இனிய ஒலிகளை வெளியிடும் அன்னங்கள், ஸாரஸங்கள் மற்றும் கிரௌஞ்சங்களால் நிறைந்திருக்கும், காளைகள் உற்சாகமாகும்,(52) பசுக்கள் நிறைவடைந்து ஏராளமான பாலைத் தரும், மேகங்கள் பூமியை நீரால் நிறைத்த பிறகு மறையும்,(53) கொக்குகள் கரிய வானில் திரியும், காட்சிக்கு இனிய தடாகங்கள், குளங்கள், ஆறுகள் ஆகியன தெளிந்த நீராலும், புதிதாய் முளைத்த தாமரைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும், கருநீல வயல்கள் தானியங்களால் நிறைந்திருக்கும், ஆறுகள் தங்களுக்கு நடுவில்[5] நீர்ப்பாய்ச்சலைக் கொண்டிருக்கும், முனிவர்களின் ஆசிரமங்கள் தானியங்களால் நிறைந்து அழகாக இருக்கும், பல மாகாணங்கள் நிறைந்த பூமி, மழைக்குப் பிறகு பேரெழிலுடன் திகழ்வாள், மரங்கள் கனிகளால் மறைக்கப்பட்டிருக்கும், வீதிகள் அழகாக இருக்கும், நாடு கரும்புகளால் நிறைந்திருக்கும், வாஜபேயமும், பிற வேள்விகளும் நடைபெறும். அப்போது நீ உன் படுக்கையில் இருந்து எழுவாய். இவ்வுலகின் மனிதர்களும், தேவலோகத்தின் தேவர்களும் பூமியின் கொடிக்கம்பங்களில் என்னை மஹேந்திரனாகவும், உன்னை உபேந்திரனாகவும் வழிபடுவார்கள்.(54-59) மஹேந்திரன் மற்றும் உபேந்திரன் என்ற மகத்தான, நித்தியமான கருப்பொருளை ஓதி நம்மை வணங்கும் மனிதன் எந்தத் துயரத்திற்கும் ஆளாகமாட்டான்" என்றான் {இந்திரன்}.(60)

[5] "அதாவது நீரானது மழைக்காலத்தில் நேர்வதைப் போலக் கரைகளைக் கடந்து பாயாது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அதன்பிறகு யோகத்தை அறிந்தவனான தேவர்களின் மன்னன் {இந்திரன்}, தெய்வீக நீர் நிறைந்த அந்தக் குடுவையை எடுத்து {அதிலிருந்த நீரைக் கொண்டு} கோவிந்தன் மீது தெளித்தான் {அவனுக்கு அபிஷேகம் செய்து வைத்தான்}.(61) தேவலோகத்தில் இருந்தவையும், காளைகளுடன் கூடியவையுமான பசுக்கள், இவ்வாறு கிருஷ்ணன் நீராட்டப்படுவதை {கிருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதைக்} கண்டு, மேகங்களின் மூலமாகத் தங்கள் பாலைப் பொழிந்தன.(62) வானில் இருந்த தெளிந்த மேகங்கள் அவன் மீது அந்த அமுத மழையைப் பொழிந்தன. வானில் இருந்து உரக்க முழங்கிய தேவர்கள் மலர் மாரியைப் பொழிந்து எக்காளம் இசைத்தனர்.(63,64) எப்போதும் மந்திரங்களையே பின்தொடரும் {பாடும்} மஹரிஷிகள், நலம்பயக்கும் ஸ்லோகங்களில் அவனது மகிமைகளைப் பாடினர், பூமியின் உடலானது பரந்து விரிந்திருக்கும் பெருங்கடலில் இருந்து பிரிக்கப்பட்டது[6].(65) உலகிற்கு நன்மை நேர்வதால் கடல்கள் மகிழ்ச்சியடைந்தன, காற்று வீசத் தொடங்கியது. விண்மீன்களுடன் கூடிய சூரியனும் சந்திரனும் தங்களுக்குரிய வீதிகளில் நின்றன.(66) மன்னர்கள் தங்கள் பகைவரிடம் இருந்து விடுபட்டனர், பெருமழையினால் ஏற்பட்ட துன்பம் தணிக்கப்பட்டது. மரங்கள் இலைகளுடனும், பல்வேறு வண்ணங்களின் சக்தியுடனும் பளபளத்தன. காட்டில் மான்கள் இன்புற்றன, யானைகள் மதம்பெருக்கின, மலைகள் தங்களில் முளைத்த மரங்கள் மற்றும் உலோகங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(67,68)

[6] சித்திரசாலை பதிப்பில், "பூமியானது, ஏகார்ணவக் கடலில் இருந்து வெளிப்பட்டுத் தன் வடிவத்தை அடைந்தது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பூமியானது, ஒரே பெருங்கடல் என்ற வடிவில் இருந்து விடுபட்டு தன் வடிவை ஏற்றது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "பூமி ப்ரளய ஸமுத்ரங்கள் தெளிந்திருந்தன" என்றிருக்கிறது.

தேவலோகத்தைப் போலவே மனிதர்களின் உலகமும், அமுதம் போன்ற சாற்றால் நிறைவடைந்தது. தேவலோகத்தில் இருந்து பொழிந்த அமுத மழையின் துணையுடன் தலைவன் கிருஷ்ணனின் அரச நீராட்டு விழா நிறைவடைந்த போது,(69) தெய்வீக மலர்மாலைகளைச் சூடியவனும், பசுக்களின் அரசுரிமையில் நிறுவப்பட்டவனும், நித்தியனுமான கோவிந்தனிடம் தேவர்களின் மன்னனான புரந்தரன் {இந்திரன்},(70) "ஓ! கிருஷ்ணா, பசுக்களின் மன்னனாக {கோவிந்தனாக} உன்னை நிறுவியதில் இப்போது என் முதல் பணி நிறைவடைந்தது. நான் இங்கே வந்ததற்கான அடுத்த நோக்கத்தை இப்போது கேட்பாயாக.(71) கம்ஸன், குதிரைகளில் இழிந்த கேசி, எப்போதும் மதங்கொண்டவனான அரிஷ்டன் ஆகியோரை விரைவாகக் கொன்று உன் அரசை ஆள்வதில் நீ ஈடுபடுவாயாக.(72) என் சக்தியின் ஒரு பகுதியானவன், அர்ஜுனன் என்ற பெயரில் உன் அத்தையின் {உன் தந்தை வஸுதேவனின் அக்காளான குந்தியின்} மகனாகப் பிறந்திருக்கிறான்.(73) நீ அவனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், அவனும் உன்னுடைய ஆலோசனையின் பேரில் செயல்பட்டு, உன்னைப் பின்பற்றிப் பெரும்புகழை அடைவான்.(74) பரதனின் வழித்தோன்றல்களில் அவன் முதன்மையான வில்லாளியாகவும், உன்னைப் பின்தொடர்பவனாகவும் இருப்பான். உன் உதவி இல்லாமல் தனியாக அவன் ஒருபோதும் தன் பணியில் நிறைவடைய மாட்டான்.(75) எதிர்காலத்தில் நேரப்போகும் பாரதப் போர்[6] அவனையும், மனிதர்களில் முதன்மையான உன்னையும் சார்ந்தே இருக்கிறது. நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் மன்னர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்.(76)

[7] "உலகின் மன்னர்கள் அனைவரும் பங்கேற்ற குருக்ஷேத்திரப் போரை இது குறிக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஓ! கிருஷ்ணா, குந்தியிடம் நான் பெற்ற மகன் {அர்ஜுனன்} ஆயுதப் பயன்பாட்டில் திறன்பெற்றவனாகவும், வில்லாளிகளில் முதன்மையானவனாகவும், குருக்களில் பெரியவனாகவும் இருக்க வேண்டுமென நான் தேவர்களிடமும், ரிஷிகளிடமும் சொல்லியிருக்கிறேன். போர்வீரர்களான மன்னர்கள் அனைவரும் அவனுடைய கல்வியைக் குறித்துப் பேசுவார்கள்.(77,78) எப்போதும் க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றும் அவன் {அர்ஜுனன்} மட்டுமே போரில் திறன் பெற்ற மன்னர்களின் ஓர் அக்ஷௌஹிணியைக் கொல்லவல்லவனாக இருப்பான்.(79) ஓ! தலைவா, உன்னைத் தவிர வேறு மன்னர்களாலோ, தேவர்களாலோ அவனது வில்லின் சக்தியை பலவீனப்படுத்தவும், அவனது ஆயுதங்களின் பாதையைப் பின்பற்றவும் முடியாது.(80) ஓ! கோவிந்தா, அவன் உனக்கு நண்பனாக இருந்து போரில் துணை புரிவான். எனவே, என் வேண்டுகோளின்படி அவனுக்கு ஆன்ம அறிவைப் போதிப்பாயாக.(81) நீ அர்ஜுனனையும், உலகங்கள் அனைத்தையும் நன்கறிவாய். எனவே, நீ எப்போதும் என்னைப் போலவே அவனைக் கருதி கவனித்துக் கொள்வாயாக.(82) பெரும்போரில் நீ அவனைப் பாதுகாத்தால் மரணத்தால் {மிருத்யுவால்} அவனிடம் ஆதிக்கம் செலுத்த இயலாது.(83) ஓ! கிருஷ்ணா, அர்ஜுனனை நானாகவும், என்னை நீயாகவும் அறிவாயாக. நான் உன்னோடு ஒன்றாயிருப்பதைப் போலவே அர்ஜுனனும் ஒன்றாயிருப்பான்.(84)

நான் உன் அண்ணன் என்பதால், பழங்காலத்தில் உன் மூன்று காலடிகளைக் கொண்டு பலியிடமிருந்து மூவுலகங்களையும் அடைந்து தேவர்களின் அரசுரிமையில் என்னை நீ நிறுவினாய்.(85) வாய்மையை விரும்புபவனாகவும், வாய்மையையே ஆற்றலாகக் கொண்டவனாகவும், வாய்மையே ஆகவும் உன்னை நான் அறிவேன். தேவர்களுக்களித்த ஓர் உறுதிமொழியில் நீ அவர்களுக்குக் கட்டுப்பட்டிருப்பதால், தங்கள் பகைவரை அழிக்கும் இந்தப் பணியில் அவர்கள் {தேவர்கள்} உன்னை ஈடுபடுத்தியுள்ளனர்.(86) ஓ! கிருஷ்ணா, உன் அத்தையின் மகனான அர்ஜுனன் என் மகனாவான். பழங்காலத்தில் அவன் உன் தோழனாக இருந்ததைப் போலவே[8], இப்போதும் உன்னுடன் நட்பு கொள்வான்.(87) ஓ! மாதவா, அவன் தன் வீட்டிலோ, உன் வீட்டிலோ, பகைவரிடம் போரிடும் போர்க்களத்திலோ இருக்கும்போது நீ சுமையைச் சுமக்கும் ஒரு காளையைப் போலவே எப்போதும் அவனைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.(88) காரியங்களின் உண்மை நோக்கத்தை எப்போதும் நோற்கும் உன்னால் கம்ஸன் கொல்லப்படும்போது, மன்னர்களுக்கிடையே ஒரு பெரும்போர் நடைபெறும்.(89) அர்ஜுனன், மீமானிடச் செயல்களைச் செய்பவர்களான வீர மனிதர்களை வெல்வான், நீ மகிமையால் அவனை அலங்கரிப்பாய்.(90) ஓ! கேசவா, வாய்மையையும், என்னையும், தேவர்களையும் உனக்குப் பிடித்திருந்தால், நான் சொன்னவை அனைத்தையும் நீ செய்ய வேண்டும்" என்றான் {இந்திரன்}.(91)

[8] "விஷ்ணு நாராயணனின் வடிவை ஏற்றபோது, அர்ஜுனன் அவனுடைய தோழனான நரனாக இருந்தான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

கோபாலனாக இருந்த கிருஷ்ணன், சக்ரனின் {இந்திரனின்} இந்தச் சொற்களைக் கேட்டு, மனத்தில் மகிழ்ச்சியுடன், "ஓ! சச்சியின் தலைவா, உன்னைக் கண்டதில் நான் மகிழ்கிறேன். நீ சொன்னவற்றில் எதுவும் விடுபடாது.(93) ஓ! சக்ரா, நான் உன் இதயத்தை அறிவேன். என் அத்தை {என் தந்தையின் தமக்கை} உயர் ஆன்மப் பாண்டுவுக்கு {திருமணம் செய்து} கொடுக்கப்பட்டாள் என்பதும், அவள் அர்ஜுனனைப் பெற்றிருக்கிறாள் என்பதும் நான் அறியாதவையல்ல.(94) தர்மனால் {யமனால்} பெறப்பட்ட இளவரசர் யுதிஷ்டிரரையும் நான் அறிவேன். வாயுவின் குலத்தைப் பெருக்கவல்ல பீமசேனரையும் நான் அறிவேன். மாத்ரியிடம் அஸ்வினி இரெட்டையர்களால் பெறப்பட்ட நகுலனையும், சகாதேவனையும் நான் அறிவேன்[9].(95,96) என் அத்தையின் {குந்தியின்} கன்னிப் பருவத்தில் சூரியனால் பெறப்பட்டவனும், தேரோட்டியின் மகனாக இப்போது அறியப்படுபவனுமான கர்ணனையும் நான் அறிவேன்[10].(97)

[9] "இந்த மகன்கள் அனைவரும் பிறந்த விரிவான கதையை அறிய மஹாபாரதம் ஆதிபர்வம் அத்யாயம் 123-ஐ காணவும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். 

[10] "குந்தி, கன்னிப்பெண்ணாக இருந்த போது, அவள் எவனைத் துணைவனாக விரும்பினாலும் அவன் உடனே அவளிடம் வருவான் என்ற வரத்தை துர்வாச முனிவரிடம் இருந்து பெற்றாள். இதைச் சோதித்துப் பார்க்க அவள் சூரியனை இருப்புக்கு அழைத்தாள், அவனுடனான கலவியால் கர்ணன் பிறந்தான். அவனுடைய பிறப்பு மஹாபாரதம் ஆதிபர்வம் அத்யாயம் 111ல் இருக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். 

பாண்டு, இடிபோன்ற சாபத்தால் மரணம் அடைந்தார்[11] என்பதையும், திருதராஷ்டிரரின் மகன்கள் போரில் விருப்பமுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன்.(98) ஓ! தேவர்களின் மன்னா, இப்போது நீ தேவர்களின் தலைநகருக்குத் திரும்பிச் சென்று அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பாயாக. அர்ஜுனன் என் முன்பு இருக்கும் வரை எந்த எதிரியாலும் அவனுக்குத் தொல்லைக் கொடுக்க முடியாது.(99) பாரதப் பெரும்போர் முடிவடையும்போது, அர்ஜுனனுக்காக நான் பாண்டுவின் மகன்கள் அனைவரையும் சிறு தீங்கும் அற்றவர்களாகக் குந்தியிடம் அனுப்புவேன்.(100) ஓ! தேவர்களின் மன்னா, நான் அன்பில் கட்டப்பட்டிருப்பதால், உன் மகனான அர்ஜுனன் எனக்கு ஆணையிடும் எதையும் ஒரு பணியாளைப் போல நிறைவேற்றுவேன்" என்றான் {கிருஷ்ணன்}.(101) தேவர்களின் மன்னன் {இந்திரன்}, வாய்மை நிறைந்த கிருஷ்ணனின் இந்தச் சொற்களைக் கேட்டு தேவர்களின் தலைநகருக்குத் திரும்பினான்" என்றார் {வைசம்பாயனர்}.(102)

[11] "ஒரு காலத்தில் பாண்டு வேட்டையாடுவதற்காகக் காட்டுச் சென்றான். மானின் வடிவில் தன் இணையுடன் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு முனிவரின் மகனை அவன் தாக்கினான். அவன் பாண்டுவிடம், "ஓ! மூடா, மானின் வடிவில் நான் ஆசை நிறைந்திருக்கும்போது நீ என்னைக் கொன்றதால், எனக்கு நேர்ந்த இதே விதியை நீயும் நிச்சயம் சந்திப்பாய். என்னைப் போலவே நீயும் உன் அன்புக்குரியவளிடம் செல்லும் வேளையில் நிச்சயம் இறந்தோரின் உலகத்திற்குச் நீ செல்வாய். உன் மனைவியும் உன்னைப் பின்தொடர்வாள்" என்று சொல்லி அவனைச் சபித்தான். மஹாபாரதம் ஆதிபர்வம், சம்பவ பர்வம் அத்யாயம் 118ல் உள்ள 30 மற்றும் 31ம் ஸ்லோகங்களைப் பார்க்கவும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். 

விஷ்ணு பர்வம் பகுதி – 74 – 019ல் உள்ள சுலோகங்கள் : 102
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Wednesday, 24 June 2020

இந்திரன் தந்த தண்டனை | விஷ்ணு பர்வம் பகுதி – 73 – 018

(கோவர்த்தனதாரணம்)

Indra sends down punishment | Vishnu-Parva-Chapter-73-018 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கோவர்த்தன மலையைத் தூக்கி ஆயர்பாடியைக் காத்த கிருஷ்ணன்...

Krishna raising up Govardhana hill

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவர்களின் மன்னனான சக்ரன் {இந்திரன்}, தன்னைக் கௌரவிக்கும் விழா இவ்வகையில் தடுத்து நிறுத்தப்பட்டபோது, ஸம்வர்த்தகம் என்றழைக்கப்படும் மேகங்களை அழைத்து,(1) "ஓ! மேகங்களே, யானைகளே, உங்கள் மன்னனிடம் நீங்கள் மதிப்பேதும் கொண்டிருந்தால், நான் விரும்புவதைச் செய்வது உங்கள் கடமை என்று கருதினால், (என் சொற்களைக் கேட்பீராக).(2) இந்தப் பிருந்தாவனவாசிகள் அனைவரும் தாமோதரனிடம் {கிருஷ்ணனிடம்} பற்றுடன் இருக்கிறார்கள். நந்தனும் பிற கோபர்களும் என் விழாவுக்கு எதிராக இருக்கிறார்கள்.(3) எனவே, வாழ்நாள் முழுவதும் அவர்கள் எதைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்களோ, கோபர்கள்[1] என்ற பெயரை அவர்கள் எதனால் அடைந்தார்களோ அந்த விலைமதிப்பற்ற பசுக்களை மழை மற்றும் காற்றைக் கொண்டு ஏழு இரவுகளுக்குள் துன்பமடையச் செய்வீராக.(4) நான் (என் யானையான) ஐராவதத்தில் இருந்து கொண்டு பயங்கர மழையையும், காற்றையும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய பிரகாசமான நீரையும் வெளியிடுவேன்.(5) பயங்கர மழை மற்றும் காற்றுடன் பசுக்கள் மற்றும் விரஜவாசிகள் அனைவரையும் கொன்று, அவர்கள் அனைவரும் மண்ணை முத்தம் கொடுத்த பிறகு, அவர்களைவிட்டு அகல்வீராக" என்றான் {இந்திரன்}.(6)

[1] "கோ என்பது பசுவையும், ப என்ற வேர்ச்சொல் பாதுகாவல் என்பதையும் குறிப்பதால் {கோபன் என்ற} இச்சொல்லுக்குப் பசுக்களைக் காப்பவர்கள் என்று பொருள் கொள்ளப்படுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்கள். ஆநிரை காப்பவர்களாக இருப்பதால் இவர்கள் ஆயர்கள் என்று தமிழில் அழைக்கப்படுகிறார்கள்.

பலம்வாய்ந்தவனான பாகசாஸனன் {இந்திரன்}, தனக்கான விழா கிருஷ்ணனால் நிறுத்தப்பட்டதன் காரணமாக மேகங்களுக்கு இவ்வாறு ஆணையிட்டான்.(7) அதன்பிறகு, பயங்கரம் நிறைந்தவையும், அளவில் மலைக்கு ஒப்பானவையுமான கருநீல மேகங்கள் பயங்கரமாக முழங்கியபடியே அனைத்தைப் பக்கங்களிலும் வானத்தை மறைத்தன.(8) இந்திர வில்லால் அலங்கரிக்கப்பட்ட மேகங்கள், தொடர்ந்து மின்னல்களை உண்டாக்கியபடியே ஆகாயத்தை இருளில் மூழ்கச் செய்தன.(9) மேகங்களில் யானைகளுக்கு ஒப்பான சிலவும், மகரங்களுக்கு[2] ஒப்பான சிலவும், பாம்புகளுக்கு ஒப்பான சிலவும் என அனைத்தும் ஒன்றையொன்று தீண்டியபடியே வானத்தில் நகரத் தொடங்கின.(10) பத்து லட்சம் யானைகளுக்கு ஒப்பான மேகங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கியவையாக வானை மறைத்து, கேடுநிறைந்த நாளை உண்டாக்கியது.(11) நிகரளவு மழையைக் கொண்ட மேகங்களில், மனிதர்களின் கைகளுக்கு ஒப்பான சிலவும், யானையின் துதிக்கைகளுக்கு ஒப்பான சிலவும், மூங்கில்களுக்கு ஒப்பான சிலவும் என அனைத்தும் தங்கள் உள்ளடக்கங்களான நீரை பொழியத் தொடங்கின.(12)

[2] "முதலைக்கு ஒப்பான நீர்விலங்குக்கான ஒரு வேர்ச்சொல் இஃது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். இது புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு புராதன நீர்வீலங்கின் பெயராகும்.

கடக்கமுடியாததும், ஆழமானதும், எல்லையற்றதுமான பெருங்கடலே வானத்தில் நிலை கொண்டிருப்பதைப் போன்ற அந்தப் பருவ நிலையைக் கண்டு மக்கள் அஞ்சினர்.(13) மலைபோன்ற மேகங்களின் பயங்கர முழக்கங்களைக் கேட்டுப் பறவைகள் தங்கள் கூடுகளில் இருந்து வெளிவர இயலாமல் இருந்தன, விலங்குகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.(14) அண்ட அழிவுக்காலத்திற்கு ஒப்பான பயங்கரமான மேகங்கள் அதிகமாகப் பொழிந்த மழையால் மனிதர்களின் உடல்கள் நிறமிழந்தன.(15) கோள்களும், விண்மீன்களும் பார்வையில் இருந்து மறைந்தன, சூரிய மற்றும் சந்திரக் கதிர்களை இழந்த வானமானது தன் ஒளியை இழந்திருந்தது.(16) மேகங்களால் பொழியப்பட்ட தொடர்மழையால் அங்கே இருந்த நிலம் குளத்தின் வடிவை ஏற்றது.(17) மயில்களின் அகவல்கள் உரக்கத் தொடங்கின, பிற பறவைகளும் மென்குரலை வெளியிடத் தொடங்கின. ஆறுகள் அளவில் பெருகித் தங்கள் கரைகளில் வளர்ந்த மரங்களை அடித்துச் சென்றன.(18) மேகங்களின் முழக்கங்கள், மற்றும் வஜ்ரங்களின் இடியோசைகளால் செவியிலறையப்பட்டவை போலப் புற்களும், மரங்களும் அங்கே நடுங்கத் தொடங்கின.(19)

அச்சத்திலிருந்த ஆயர்கள், "இதோ உலகின் முடிவு நெருங்கிவிட்டது, பூமி ஒரே நீர்ப்பரப்பாகப் போகிறது" என்று தங்களுக்குள் பேசத் தொடங்கினர்.(20) அந்தப் பயங்கர மழைப் பொழிவில் பசுக்கள் பெருந்துயரடைந்தன. அவை அசைவற்றவையாக நின்று கொண்டு உரக்கக் கதறத் தொடங்கின.(21) அவற்றின் உடல்கள் நனைந்து, தொடைகளும், கால்களும் அசைவற்றிருந்தன, குளம்புகளும், வாய்களும் செயலற்றிருந்தன, மயிர் சிலிர்த்திருந்தது, அவற்றின் வயிறும் மடியும் மெலிந்தன.(22) களைப்பால் சில மடிந்தன, அச்சத்தால் சில கால் மடங்கி விழுந்தன, கன்றுகளுடன் சில உறைபனியில் மூழ்கி விழுந்தன.(23) பசியால் மெலிந்த வயிறும், களைத்த தொடைகளும் கொண்ட சில பசுக்கள், தங்கள் கன்றுகளைத் தழுவியபடியே உறங்கின.(24) இவ்வாறு மழையால் தாக்கப்பட்டு, உற்சாகமிழந்து நடுங்கிய பசுக்களும், கன்றுகளும், துயர்மிக்கப் பரிதாபகரமான முகங்களுடன் கிருஷ்ணனைப் பார்த்து, "எங்களைக் காப்பாய், எங்களைக் காப்பாயாக" என்று கதறின.(25)

இன் சொல் சொல்பவனான கிருஷ்ணன், அந்தக் கடும்புயல் பசுக்கள் மீது நடத்தும் ஒடுக்குமுறையையும், கோபர்களுக்கு நேரப்போகும் மரணத்தையும் கண்டு பெருங்கோபமடைந்தான். சிறிது நேரம் தியானித்த அவன், (26,27) "இது நேரும் என்பது நான் முன்பே அறிந்ததுதான். எவ்வாறெனினும், இம்மழையில் இருந்து பசுக்களைப் பாதுகாக்க, காடுகளையும், சோலைகளையும் கொண்டதும், மலைகளில் சிறந்ததுமான இந்தக் கோவர்த்தனத்தைப் பெயர்த்தெடுத்து, அவற்றுக்கான {பசுக்களுக்கான} புகலிடமாக இதை {இந்த மலையை} மாற்றப் போகிறேன்.(28) உண்மையில் பூமியில் ஒரு கோளாக {பூமாதேவியின் வீடு போல} இருக்கும் இம்மலை என்னால் தாங்கப்படும்போது, பசுக்களையும், ஆயர்களையும் இதனால் {இம்மலையால்} பாதுகாக்க இயலும் என்பதில் ஐயத்திற்கிடமில்லை" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.(29)

வாய்மையையே தன் ஆற்றலாகக் கொண்டவனும் {ஸத்ய பராக்ரமனும்}, சிறந்த மலைக்கு ஒப்பானவனுமான கிருஷ்ணன், இவ்வாறு தியானித்து, தன் கரங்களின் வலுவை வெளிப்படுத்தும் வகையில் தன் கைகளால் அந்த மலையைப் பெயர்த்தெடுத்தான்.(30) மேகங்களுடன் கூடிய அந்த முதன்மையான மலை, கிருஷ்ணனின் இடக்கையால் தாங்கப்பட்ட போது, தன் குகைகளுடன் ஒரு வீட்டைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(31) அந்த மலை பெயர்க்கப்பட்ட போது, அதன் மேட்டுச் சமவெளியில் இருந்த பாறைகள் அசைக்கப்பட்டு, மரங்கள் கீழே விழுந்தன.(32) அந்த மலை அசைக்கப்பட முடியாததாக இருப்பினும், சுழலும் சிகரங்களுடனும், கீழேவிழும் மரங்களுடனும், நடுங்கும் உச்சிகளுடனும் கிருஷ்ணனுடைய சக்தியால் விண்ணுக்கு உயர்ந்தது.(33) ஒன்றுகூடிய மேகங்கள் அனைத்தும், தங்கள் நீரின் உள்ளடக்கங்களை அதன் {அம்மலையின்} அருகில் பொழிந்து கொண்டிருந்தன. {அம்மலையில்} விரைவாகச் செல்லும் நீரோடைகளால் பாறைகள் தளர்த்தன, அந்த மலையும் தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தது.(34) எனினும் மழையைப் பொழியும் மேகங்களையோ, பாறைகளைப் பொழியும் மலையையோ, முழங்கும் காற்றையோ ஆயர்களால் உணர்ந்தறிய முடியவில்லை.(35)

மலையோடு இணைந்திருந்த மேகங்கள், அந்தச் சிறந்த மலையின் ஊற்றுகளை நெருங்கி, மயிலிறகுகளால் அலங்கரிக்கப்பட்டவை போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன.(36) அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வித்யாதரர்கள், உரகர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர், "கோவர்த்தன மலை சிறகுகளைக் கொடையாகக் கொண்டு உயரப் பறக்கிறது" என்று ஆச்சரியமடையத் தொடங்கினர்.(37) ஆயிரம் அடுக்குகளைக் கொண்டதும், பெயர்க்கப்பட்டதுமான அந்த மலையின் மண் அடுக்குகளிலிருந்து வெள்ளை, கடுஞ்சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களிலான கனிமப் பொருட்கள் கீழே கொட்டத் தொடங்கின.(38) அந்தச் சிறந்த மலையின் சிகரங்கள் சில தளர்ந்து தொய்ந்தன, சில நொறுங்கின, அவற்றில் மிக உயரமானவை மேகங்களுக்குள் நுழைந்தன.(39) மலையின் அசைவால் மரங்களும் நடுங்கின, அவற்றின் மலர்கள் நிலத்தில் அனைத்துப் பக்கங்களிலும் கொட்டிக் கிடந்தன.(40) பெருந்தலைகளைக் கொண்ட பாம்புகள், பாதி உடல் அலங்கரிக்கப்பட்டவையாகத் தங்கள் பொந்துகளில் இருந்து வெளிவந்தன, பறவைகள் வானில் பறக்கத் தொடங்கின.(41) பெரும் மழையாலும், மலையை உயர்த்தியதன் விளைவாகவும் உண்டான அச்சத்தில் இந்த வானுலாவிகள் {பறவைகள்} தொடர்ந்து மேலே போகவும், கீழே வரவும் தொடங்கின.(42) சிங்கங்கள் நீருண்ட மேகங்களைப் போலவும், புலிகள் கடையும் மத்துகளைப் போலவும் கோபத்தில் முழங்கத் தொடங்கின.(43)

தன் வடிவில் மாற்றமடைந்தும், சீரான, சீரற்ற, கடப்பதற்கரிதான இடங்களைக் கொண்டதுமான அம்மலை மற்றொரு மலையைப் போலத் தோன்றியது.(44) அதிகமான மழைப்பொழிவின் காரணமாக அது {கோவர்த்தன மலை} ருத்ரனால் கலங்கடிக்கப்பட்ட திரிபுரனைப் போல[3] வானில் தெரிந்தது.(45) தடி போன்ற கிருஷ்ணனின் கையால் உயர்த்தப்பட்ட அந்தப் பெருமலை, அடர்நீல மேகங்களால் மறைக்கப்பட்டு அங்கே ஒரு குடையைப் போலத் தெரிந்தது.(46) மேகமுழக்கங்கள் கனவு காணச் செய்ததால், அந்தக் கோவர்த்தனன் {அந்த மலை} குகை போன்ற தன் முகத்தைக் கிருஷ்ணனின் கரங்கள் என்ற தலையணையில் வைத்து உறங்கினான்.(47) மரங்களால் மறைக்கப்பட்ட சிகரங்களுடன் கூடிய அந்த மலையானது, பறவைகளின் இன்னிசையற்றதாக, மழையால் நனைந்ததாக, மயில்களின் அகவல்களை இழந்ததாக வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(48) அந்த மலையின் மேட்டுச்சமவெளிகள் அசைந்து நடுங்கிக் கொண்டிருந்ததால் சிகரங்களும், காடும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவை போல இருந்தன.(49) மேகங்கள், தேவர்களின் மன்னனால் அவசரப்படுத்தப்பட்டும், காற்றினால் உந்தப்பட்டும் அதன் {மலையின்} முன்பு தங்கள் உள்ளடக்கங்களைத் தொடர்ந்து பொழியத் தொடங்கின.(50) மேகங்களால் மறைக்கப்பட்டதும், கிருஷ்ணனின் கையால் தாங்கப்பட்டதுமான அந்த மலையானது, மன்னனால் ஒடுக்கப்படும்போது ஏற்படும் சக்கரக்குறிகளின் அடையாளத்தைக் கொண்ட ஒரு நாட்டைப் போலத் தெரிந்தது.(51) அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமம் தனக்கு முன் ஒரு நகரத்தைக் கொண்டிருப்பதைப் போலவே மேகங்கள் அந்த மலையைச் சூழ்ந்து நின்றன[4].(52)

[3] "தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையிலான போரில் ருத்ரன் அல்லது சிவனால் வீழ்த்தப்பட்ட தானவத் தலைவனின் பெயர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] சித்திரசாலை பதிப்பில், "மழைமேகங்களால் சூழப்பட்டுக் கிருஷ்ணனின் கையில் அமைந்திருந்த அந்த மலை, பகை மன்னர்களால் கடுந்துன்பத்துக்கு ஆளான ஒரு நாட்டைப் போல இருந்தது. அந்த மலையைச் சூழ்ந்திருந்த மழைமேகக் கூட்டங்கள், தலைநகரைச் சுற்றி இருக்கும் ஒரு நாட்டைப் போல இருந்தன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கிருஷ்ணனின் கைநுனியில் இருந்ததும், மேகங்களால் சூழப்பட்டதுமான அந்த மலையானது, ஒரு சக்கரத்தில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது. ஒரு மன்னனால் படையெடுத்து முற்றுகையிடப்பட்ட நாட்டைப் போல அஃது இருந்தது. பெரும் எண்ணிக்கையிலான மேகங்கள் அந்த மலையைத் தொடர்ந்து சூழ்ந்தன. தலைநகரைச் சூழ்ந்திருக்கும் பெரிய, செழிப்புமிக்க நாட்டைப் போல அஃது இருந்தது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "கிருஷ்ணனின் கைமுனையில் நேராக ஏந்தப்பட்ட மேகங்களுடன் கூடிய மலை சத்ரு ராஜாவால் ஆக்ரமித்து ஸேனைகளால் முற்றுகையிடப்பட்ட தேசம் போலத் தோன்றுகிறது. அந்த மலையைச் சுற்றி அந்த மேகக்கூட்டம் நின்றது. தலைநகரைச் சுற்றி விஸ்தரிக்கும் விரிவான நாடு போல் அந்த மலையைக் கையில் வைத்து (எடை நிறுப்பது போல்) தெரியக்காட்டி, ஆயர்கள் ரக்ஷகன் க்ருஷ்ணன் ப்ரஹ்மா போலிருந்து புன்சிரிப்புடன் சொன்னான்" என்றிருக்கிறது.

தலைவன் கிருஷ்ணன், பிரம்மனை {பிரஜைகளைக் காக்கும் பிரஜாபதியைப்} போலக் கோபர்களைக் காப்பதற்காக அந்த மலையை உயர்த்தி, அதைத் தன் விரலின் நுனியில் வைத்தான். அப்போது அவன் புன்னகையுடன்,(53) "காற்றும் புகமுடியாததும், பசுக்களின் புகலிடமுமான இந்த மலைவீட்டை தேவர்களாலும் புரிந்து கொள்ள முடியாத சில தெய்வீக வழிமுறைகளால் {விஷ்ணு மாயையால்} நான் கட்டியிருக்கிறேன்.(54) மாட்டுமந்தைகள், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்காக, கடுங்காற்று வீசாத இந்த இடத்திற்குள் விரைவாக நுழையட்டும்.(55) உங்கள் நிலைமேன்மைக்கும் {அந்தஸ்துக்கும்}, மந்தைகளின் எண்ணிக்கைக்கும் தகுந்த விகிதத்திலும், நீங்கள் விரும்பும் வகையிலும் இந்த இடத்தைப் பிரித்துக் கொண்டு, மழையில் இருந்து விடுபடுவீராக.(56) ஐந்து குரோசம் நீளமும், ஒரு குரோசமும் அகலமும் பரந்திருந்த இந்த மலையைப் பெயர்த்து நான் கட்டியிருக்கும் இந்தப் பெரிய வீடானது {நான் ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பெரிய வெளியானது}, மூவுலகங்களுக்கும் கூட இடமளிக்கும் எனும்போது விரஜத்தைப் பற்றிச் சொல்வானேன்?[5]" என்றான் {கிருஷ்ணன்}.(57)

[5] சித்திரசாலை பதிப்பில், "கோபர்களே, தேவர்களுக்கும் சாத்தியமற்ற என் தெய்வீக சக்தியால் உங்களுக்கும், பசுக்களுக்கும் இந்த மலையையே வீடாக்கியிருக்கிறேன். இந்த உறைவிடத்தினுள் காற்றும் புகமுடியாது. பசுக்கள் அனைத்தும் ஓய்வைப் பெற இங்கே அவற்றை விரைவாகக் கொண்டு வாருங்கள். காற்றின் தொல்லைகளுக்கு உட்படாமல் அவை இங்கே சுகமாக இருக்கட்டும். நீங்கள் இந்த இடத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். நான் மழையைத் தவிர்த்துவிட்டேன். மலையைத் தூக்கியதன் மூலம், நீங்கள் வாழ்வதற்குத் தகுந்த பெரிய இடத்தை அமைத்திருக்கிறேன். இந்தப் பெரிய இடம் ஐந்து குரோசம் நீளமும், ஒரு குரோசம் அகலமும் கொண்டதாகும். நான் மூவுலகங்களையும் காக்க இயன்றவனாக இருக்கும்போது, இந்த விரஜத்தை என்னால் காக்க முடியாதா?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தேவர்களாலும் இதைச் செய்ய இயலாது. என் தெய்வீகத் தன்மையால் நான் இதை விதித்தேன். ஓ! கோபர்களே, நான் இந்த மலையைக் கொண்டு ஒரு வீட்டை அமைத்திருக்கிறேன். புயலைக் கடந்து கால்நடைகள் இங்கே புகலிடத்தை அடையும். கால்நடைகள் அமைதியை அடையும் வகையில் மந்தைகளை விரைவாக இங்கே கொண்டு வாருங்கள். காற்றில்லாத இந்த இடத்தில் அவை மகிழ்ச்சியாக வசிக்கட்டும். எங்கே பசுமந்தைகள் இருக்குமோ, எங்கே மகிழ்ச்சி காணப்படுமோ அதுவே விரஜமாகும். நான் மழையைத் தடுத்துவிட்டேன். இந்தப் பகுதியை உங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுங்கள். மலையை உயர்த்தி இந்தப் பெரிய இடத்தை உண்டாக்கியிருக்கிறேன். நான் மூவுலகங்களையும் விழுங்கவல்லவன். இந்த இடம் எம்மாத்திரம்?" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஆயர்களே, இது தேவர்களால் நினைக்கவும் முடியாதது. திவ்ய முறைப்படி (விஷ்ணு மாயை) என்னால் செய்யப்பட்ட மலை வீடு. காற்று புகாதது. பசுக்களுக்குப் புகலிடம். பசுக்கூட்டங்கள் க்ஷேமத்தின் பொருட்டு இதில் சீக்ரம் நுழையட்டும். காற்றடிக்காத இடங்களில் ஸுக குறைவில்லாமல் வஸிக்கட்டும். என்னால் மழை தடுப்புச் செய்யப்பட்டது. அந்தஸ்து, கூட்டம், மனப்பொருத்தம், ஸுகம் இவற்றுக்குத் தக்கபடி இந்த இடம் பகிர்ந்து கொள்ளப்படட்டும். மலை பெயர்த்தெடுக்கப்பட்ட இந்தப் பெரிய இடம் என்னால் நிறுவப்பட்டது. ஐந்து க்ரோச வட்டமும், ஒரு க்ரோச குறுக்களவும் உடையது. பெரிய மூன்று லோகத்தையும் ரக்ஷிப்பதற்கு சக்தி வாய்ந்தது. ஆய்ப்பாடியை ரக்ஷிப்பதற்குக் கேட்பானேன்" என்றிருக்கிறது.

வெளியே மேகங்களின் முழக்கம் மற்றும் மாடுகளின் ஒலி ஆகியவற்றுடன் சேர்ந்து கோபர்களின் மத்தியில் பெரும் அமளி ஏற்பட்டது.(58) ஆயர்களால் வரிசைப்படுத்தப்பட்ட பசுகள் அந்தச் சிறந்த மலையின் பெருங்குகைக்குள் நுழைந்தன.(59) அந்த மலையின் அடியில் உயர்ந்த கல் தூணைப் போல நின்றிருந்த கிருஷ்ணன், அன்புக்குரிய விருந்தினனைப் போல அந்த மலையை ஒருகையில் தாங்கிக் கொண்டிருந்தான்.(60) அதன்பிறகு, மழைக்கு அஞ்சியவர்களான விரஜவாசிகள் தங்கள் வண்டிகள் மற்றும் பாத்திரங்களுடன் அந்த மலைவீட்டுக்குள் நுழைந்தனர்.(61) பலம்வாய்ந்த ஸதக்ரது {இந்திரன்}, கிருஷ்ணனின் இந்த மீமானிடச் செயலையும், தன் சொற்கள் பொய்த்ததையும் கண்டு மேகங்களை {மழைபொழியாமல்} விலகுமாறு கேட்டுக் கொண்டான்.(62) அவன், பூமியை ஏழு இரவுகளுக்கு விழாக்கள் ஏதுமற்றதாகச் செய்த மேகங்களால் சூழப்பட்டவனாகத் தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றான்.(63) இவ்வாறு ஏழு இரவுகளுக்குப் பிறகு தேவர்களின் மன்னன் விலகி, மேகங்களில் இருந்து வானம் விடுபட்டுத் தெளிவடைந்த போது, சூரியன் முழுப் பிரகாசத்துடன் உதித்தான்.(64) பசுக்களும், ஆயர்களும் தாங்கள் (குகைக்குள்) நுழைந்த அதே வழியில் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(65) வரங்களைத் தருபவனும், பூதங்கள் அனைத்துடன் அடையாளங்காணப்படுபவனுமான தலைவன் கிருஷ்ணன், உலகங்கள் அனைத்தின் நன்மைக்காக மகிழ்ச்சியான இதயத்துடன் அந்தச் சிறந்த மலையை நிறுவினான்[6]" என்றார் {வைசம்பாயனர்}.(66)

[6] "கிருஷ்ணன் கோவர்த்தன மலையைத் தன் விரல்களில் ஒன்றில் தாங்கிய அதிசயம் கிட்டத்தட்ட அனைத்துப் புராணங்களிலும், மஹாபாரதத்தின் சபா பர்வத்தில் கூட விளக்கப்படுகிறது. ஒரு மனிதன், அதுவும் பத்து வயதைக் கொண்ட ஒரு சிறுவன் கோவர்த்தனம் போன்ற ஒரு பெருமலையைத் தூக்குவது சாத்தியமற்றது என்ற நேரடி பொருளில் காணும்போது இந்நிகழ்வு நிச்சயம் நம்பமுடியாததாகவே இருக்கிறது. இது கோபர்களைப் பாதுகாப்பதற்காகக் கிருஷ்ணன் வெளிப்படுத்திய அற்புத சக்தியைக் குறிக்கும் உருவகம் என்பதில் ஐயத்திற்கிடமில்லை. பின்வரும் விளக்கத்தைக் கொண்டு அந்த உருவகத்தைப் பாதிப்பேதுன்றி உறுதி செய்யலாம். அவன் இந்திரனின் வழிபாட்டை நிறுத்தியால் அவனது தொண்டர்கள் {இந்திர வழிபாட்டாளர்கள் / மேகங்கள்} கோபர்களைத் தாக்கிய போது, கிருஷ்ணன் அவர்களையும், அவர்களது கால்நடைகள் மற்றும் பொருட்களையும் அந்த மலையில் அமர்த்திவிட்டு, இந்திரனின் தொண்டர்களுடன் போரிட்டான். இந்த அத்தியாயத்தின் பிற்பகுதியில் கோபர்கள் தங்கள் 'மலைவீடான' அந்த மலையின் குடைவரையில் நுழைந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. மலையின் பிரமாண்டமான குகைகளில் ஒன்றில் அவர்கள் தஞ்சம் புகுந்தார்கள் என்பதையும், இந்திரனை வழிபட்டவர்களின் தாக்குதலுக்கு எதிராகக் கிருஷ்ணன் அவர்களைப் பாதுகாத்தான் என்பதையும் விளக்கும் உருவகமாக ஒருவேளை இஃது இருக்கலாம். விளக்கமென்னவாக இருப்பினும், இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் ஒரு மீமானிட அருஞ்செயலைச் செய்து காட்டினான் என்பது நிச்சயம் உண்மையாகும்" என மன்தநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

விஷ்ணு பர்வம் பகுதி – 73 – 018ல் உள்ள சுலோகங்கள் : 66
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Sunday, 21 June 2020

கிருஷ்ணன் எதிர்த்த இந்திரவிழா | விஷ்ணு பர்வம் பகுதி – 71 – 016

(ஷரத்வர்ணனம்)

Krishna protests against Indra-Yajna: An account of Autumn | Vishnu-Parva-Chapter-71-016 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : இந்திர விழாவை எதிர்த்த கிருஷ்ணன்; மலை மற்றும் பசு வழிபாட்டிற்கு அவசியமான காரணங்களைச் சொல்லி வற்புறுத்தியது; கூதிர் கால வர்ணனை...

Krishna about Govardhana giri pooja to elder gopas

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இந்திரவிழாவைக் குறித்த முதிய கோபனின் சொற்களைக் கேட்ட தாமோதரன் {கிருஷ்ணன்}, சக்ரனின் {இந்திரனின்} வலிமையை நன்கறிந்தும் அவரிடம் {அந்த முதியவரிடம்}[1],(1) "காட்டில் திரிபவர்களான நாம் அனைவரும் ஆயர்களாக {கோபாலர்களாக} இருக்கிறோம். விலைமதிப்பற்ற ஆநிரைகள் நம் வாழ்வதாரமாக அமைந்திருக்கின்றன. எனவே, நாம் பசுக்களையும், மலைகளையும், காடுகளையும் வழிபட வேண்டும்.(2) உழவர்களுக்கு உழவுத் தொழிலும், வணிகர்களுக்கு வணிகப்பொருட்களும் வாழ்வாதார வழிமுறைகளாகும், நமக்கோ பசுக்களே {கோரக்ஷணம் / ஆநிரை காத்தல்} வாழ்வாதாரத்திற்கான சிறந்த வழிமுறை ஆகும். மூன்று வேதங்களையும் நன்கறிந்த அறிஞர்களால் இது விதிக்கப்பட்டிருக்கிறது.(3) ஒவ்வொரு வர்ணத்திற்கும் பெருந்தெய்வமும், வழிபாட்டுக்குரியதும், துதிக்கத்தக்கதும், அவர்களுக்கு நன்மையைச் செய்வதும் அவரவர்களுக்கு உரிய தொழிலே ஆகும்.(4) ஒன்றால் நன்மையடைந்து மற்றொன்றை வழிபடும் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் என இரண்டு வகை ஆபத்துகளைச் சந்திக்கிறான்.(5) வயல்கள் உழவுத்தொழிலால் பாதுகாக்கப்படுகின்றன, காடுகள் வயல்களால் பேணிக்காக்கப்படுகின்றன, மலைகள் காடுகளால் ஆதரிக்கப்படுகின்றன, இந்த மலைகளே நம் ஒரே புகலிடமாக இருக்கின்றன. இந்தக் காட்டில் இருக்கும் மலைகள் தாங்கள் விரும்பிய வடிவை ஏற்கின்றன என நான் கேட்டிருக்கிறேன். அவை பல்வேறு வடிவங்களை ஏற்றுத் தங்கள் மேட்டுச் சமவெளிகளில் விளையாடுகின்றன. (6) நகங்களைக் கொண்டவற்றில் முதன்மையான புலிகளின் வடிவங்களைச் சில வேளைகளிலும், பிடரிமயிருடன் கூடிய சிங்கங்களின் வடிவங்களைச் சில வேளைகளிலும் ஏற்கும் அவை, காடுகளை அழிப்பவர்களைச் சூறையாடி தங்களுக்குரிய காடுகளைப் பாதுகாக்கின்றன.(7)

[1] "இந்த அத்தியாயத்தில், மழையின் தேவனைக் கௌரவிக்கும் இந்திர வேள்வி அல்லது யாகத்தை நிறுத்த கிருஷ்ணன் முயற்சிக்கிறான். அவன் உயிரற்ற {அவசியமற்ற} சடங்குகள் மற்றும் விழாக்களை எதிர்த்தான் என்பது அவன் எதிர் பிரச்சாரம் செய்யும் விதத்தில் இருந்து தெளிவாகிறது. அவன் தன் குல மக்கள் அனைவரிடமும், தங்கள் வாழ்வாதாரத்தைச் சார்ந்த தேவையே தங்களுக்குக் கடவுள் என்பதை நம்பும்படி அறிவுறுத்துகிறான். அவன் பயனற்ற சடங்குகளையும், விழாக்களையும் ஆதரிக்கவில்லை. மேலும் நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு உயர்ந்த வடிவிலான நம்பிக்கையையே தன் நாட்டின் முன் வைக்க எப்போதும் அவன் முயற்சித்தான். ஆனால் அவன் அதை மிகவும் மென்மையான வடிவத்தில் அறிமுகப்படுத்தினான். இதன் காரணமாகவே அவன் இருப்பிலுள்ள காரியங்களின் வகைமுறைகளில் புரட்சி செய்யவில்லை. இந்திர யாகத்துக்கு எதிரான அவனது நிலைப்பாடும், அவன் அறிமுகப்படுத்திய மலை, காடு முதலியனவற்றின் வழிபாடும், அவன் பிற்கால வாழ்வில் போதித்த கடமை {தர்மம் / அறம்} எனும் பெரிய வழிபாட்டுமுறையாகத் தங்களை வளர்த்துக் கொண்டன. ஒருவன் தன் வாழ்வாதார வழிமுறைகளை வழிபடுவதில் உள்ள உருவகத்தை உரிக்கும்போது, ஒருவன் தன் கடமையைச் செய்வதையே கடவுள் வழிபாட்டைப் போலப் புனிதமானதாகக் கருத வேண்டும் என்ற பொருளை அஃது அடையும். புதிய வடிவிலான வழிபாட்டு முறையை அறிமுகம் செய்யும் இந்நிகழ்வும் அவனது மீமானிட சக்தியை உறுதிப்படுத்துகிறது. சிறுவனேயான அவன், ஏற்கனவே தன் மக்களுக்கு மத்தியில் நிறுவப்பட்டுள்ள வழிபாட்டுமுறையை விட்டுவிட்டு அவர்கள் தன்னைப் பின்பற்றும் அளவுக்கு அவர்களிடம் ஆளுமை கொண்டவனாக இருந்திருக்கிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

காட்டில் வாழும் இனத்தோர்[2] அல்லது அதன் {காட்டின்} மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை அடைவோர்[3] காட்டை உருக்குலைக்கும்போது, அவை {அந்தக் காடுகள்} ஆண்மையை உண்ணும் தங்கள் பணியால் எந்த நேரத்திலும் அவர்களை அழித்துவிடும்[4].(8) பிராமணர்கள், மந்திரங்கள் முக்கியத்துவம் பெறும் யக்ஞங்களைச் செய்கிறார்கள், உழவர்கள் உழுசாலை {கலப்பையை} கௌரவிக்கும் வகையில் வேள்வியைச் செய்ய வேண்டும், ஆயர்களான நாமோ மலைகளைக் கௌரவிக்கும் வகையிலான விழாவைக் கொண்டாட வேண்டும். நாம் காட்டில் இருக்கும் மலைகளை வழிபட வேண்டும்.(9) எனவே, ஓ! கோபர்களே {ஆயர்களே}, மலைகளைக் கௌரவிக்கும் வகையில் வேள்வியைச் செய்யப் போகும் நீங்கள் ஒரு மரத்தின் அடியிலோ, ஒரு மலையின் அடியிலோ உங்கள் இதயம் விரும்பும் செயல்களில் ஈடுபடுவீர்களாக.(10) அந்த மங்கலமான இடத்தில் கிணறுகளை வெட்டி, தொழுவங்களை அமைத்து, வேள்வியில் விலங்குகளைக் கொன்று ஆயர்கள் தங்கள் விழாவைக் கொண்டாடட்டும். இதில் விவாதங்களுக்கான அவசியமில்லை.(11) பசுக்கள், கூதிர்கால மலர்களால் பளபளக்கும் அந்தச் சிறந்த மலையை வலம் வந்து மீண்டும் விரஜத்திற்கு {பிருந்தாவனத்திற்கு மாற்றப்பட்ட கோகுலத்துக்குத்} திரும்பட்டும்.(12) மேகங்களற்றதும், பல நல்லியல்புகளைக் கொண்டதும், பசுக்களுக்கு நிறைவைக் கொடுக்கும் இனிய நீரும், புல்லும் நிறைந்ததுமான இந்த அழகிய கூதிர்காலத்தில் அனைவரும் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறார்கள்.(13)

[2] "பீலர்கள் {மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடியினர்} அல்லது காட்டில் வாழும் பிற காட்டுவாசி இனக்குழுக்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "இவர்கள் ஆயர்கள் அல்லது காட்டில் பசுக்களை மேய்த்துத் தங்கள் வாழ்வாதார வழிமுறைகளை அடையும் பிறர் அல்லது காட்டின் விளைச்சலை விற்போர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] சித்திராசாலை பதிப்பில், "காட்டைச் சார்ந்து வாழ்வோர் அழிவுகரமான செயல்களில் ஈடுபட்டால், அந்தக் காடு தகுந்த செயல்பாடுகளின் மூலம் அந்தத் தீயோரைக் கொன்றுவிடும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தீய ஒழுக்கங் கொண்டு, கொடுஞ்செயல்களைச் செய்வர்கள் இருக்கிறார்கள். காட்டில் இருந்து வாழ்வை ஈட்டியும், முறைகேடான வழியில் அவர்கள் செயல்பாட்டால் அவை {காடுகள்} அவர்களைக் கொல்லும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "வனவாஸிகள் எப்போது இவைகளைத் துன்புறுத்துகின்றனரோ, அப்போது கொடுமை செய்யும் அவர்களையே ஹிம்ஸைத் தொழிலாலேயே அழிக்கின்றன" என்றிருக்கிறது.

{கூதிர் கால வர்ணனை} ஏதோவோரிடத்தில் மலர்ந்த பிரியக மலர்களால் வெண்மையாக, ஏதோவோரிடத்தில் பாணாஸனங்களால் அடர்நீலமாக, முழுதாக வளர்ந்த புற்கள் நிறைந்ததாக, மயில்கள் அற்றதாக இருக்கும் காடு, மிக அழகானதாகத் தோன்றுகிறது.(14) நீர் மற்றும் மின்னல்கள் இல்லாத தெளிந்த மேகங்கள், யானைகளின் மந்தையைப் போல வானில் நகர்ந்து வருகின்றன.(15) புது நீர் ஈர்த்த மேகங்கள் தொடர்ந்து முழங்குவதால் புத்தம்புது பசுந்தழைகள் சூழந்த மரங்கள் நிறைவடைந்தவை போலத் தெரிந்தன.(16) வெண்மேகத்தைத் தலைப்பாகையாகக் கொண்டும், அன்னம்போன்ற சாமரங்களால் வீசப்பட்டும், முழு நிலவைக் கொடையாகக் கொண்டும் புதியாய் நிறுவப்பட்ட மன்னனைப் போல வானம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(17) மழைக்காலம் முடிந்ததும், தடாகங்கள் மற்றும் குளங்கள் அனைத்தும், அன்னப்பறவைகளின் வரிசைகளுடன் சிரித்துக் கொண்டிருப்பவை போலத் தெரிந்தன. ஸாரஸங்களின் ஒலிகளால் நிறைந்த அவை நாளுக்கு நாள் அளவில் குறைந்து வருகின்றன.(18) சக்கரவாகங்களைத் தங்கள் மார்பாகவும், கரைகளைத் தங்கள் இடையாகவும், அன்னங்களைத் தங்கள் புன்னகையாகவும் கொண்ட ஆறுகள், தங்கள் கணவர்களிடம் செல்பவை போலப் பெருங்கடலை நோக்கிப் பாய்கின்றன.(19)

முற்றாக மலர்ந்த அல்லிகளால் அழகூட்டப்பட்ட நீரும், நட்சத்திரங்களைச் சூடிய வானும், ஒன்றையொன்று கேலி செய்து கொள்பவை போல இரவில் தெரிகின்றன {சிரிக்கின்றன}.(20) கிரௌஞ்சங்களின் இசையை எதிரொலித்தும், முதிர்ந்த கமலநெற்கதிர்களால் நீலமடைந்தும் இருக்கும் காட்டின் பேரழகைக் காண்பவன் மனத்தில் பெரும் மகிழ்ச்சியை அடைகிறான்.(21) மலர்ந்த மரங்களால் பளபளக்கும் தடாகங்கள், குளங்கள், ஏரிகள், ஆறுகள், வயல்கள் ஆகியன பேரழகாகத் தெரிகின்றன.(22) தாமிர வண்ணத்திலும், கருநீல வண்ணத்திலும் தாமரைகள் புதுவெள்ளத்தில் அழகாகத் தோன்றுகின்றன.(23) மயில்கள் செருக்கில் இருந்து விடுபட்டிருக்கின்றன, வானம் மேகங்களற்றதாக இருக்கிறது, பெருங்கடல் நீரால் நிறைந்திருக்கிறது, காற்றும் படிப்படியாக விகிதங்களை ஏற்கிறது.(24) மழைக்காலத்தில் ஆடிய மயில்களால் கைவிடப்பட்ட இறகுகளின் மூலம் பூமி பல கண்களைக் கொண்டதாகத் தெரிகிறது.(25)

யமுனை ஆறானவள், சேற்றால் நிறைந்தவையும், காஸ {கோரைப்புல்} மலர்கள், மற்றும் செடிகொடிகளால் மறைக்கப்பட்டவையும், அன்னங்கள் மற்றும் ஸாரஸங்கள் நிறைந்தவையுமான கரைகளுடன் பேரெழிலாகத் தோன்றுகிறாள்.(26) உரிய காலத்தில் முதிர்ந்த தானியங்கள் நிறைந்த வயல்களிலும், காட்டிலும் திரிந்து, தானியங்களை உண்டு, நீரைப் பருகி வாழும் பறவைகள் உற்சாகத்துடன் இசையொலிகளை வெளியிடுகின்றன.(27) மழைக்காலத்தில் தங்கள் நீரைப் பொழிந்த மேகங்களால் இளம்பயிர்கள் முற்றி வளர்ந்திருக்கின்றன.(28) சந்திரன் தன் மேக ஆடையைக் கைவிட்டும், கூதிர் காலத்தால் ஒளிபெற்றும் தெளிந்த வானில் மகிழ்ச்சியான இதயத்துடன் திரிபவனைப் போலத் தெரிகிறான்.(29) இப்போது பசுக்கள் அளவில் இரண்டு மடங்கான பாலைத் தருகின்றன, காளைகள் இரண்டு மடங்கு வெறிக் கொண்டிருக்கின்றன, காடு இரண்டு மடங்கு அழகுடன் இருக்கிறது, பூமி தானியங்களால் மிகவும் நிறைந்திருக்கிறாள்.(30) மேகங்களற்ற நட்சத்திரங்கள், தாமரைகளால் அழகூட்டப்பட்ட நீர் மற்றும் மனிதர்களின் மனம் ஆகியன நாளுக்கு நாள் மகிழ்ச்சி நிறைந்தவையாகின்றன.(31) சக்திவாய்ந்த கதிர்களைக் கொண்ட சூரியன், மேகங்களற்றவனாக, கூதிர் காலப் பிரகாசத்தில் ஒளிர்பவனாக அனைத்துப் பக்கங்களிலும் தன் ஒளியைப் பரப்பி, நீரை இழுத்து வருகிறான்.(32)

பூமியின் பாதுகாவலர்களும், வெற்றியை அடைய விரும்புகிறவர்களுமான மன்னர்கள் தங்கள் படைகளின் உற்சாகத்தைத் தூண்டி ஒருவரையொருவர் எதிர்த்துச் செல்கின்றனர்.(33) சேறுகள் வறண்டும், பந்துஜீவ {செம்பருத்தி} மலர்களால் சிவந்தும், பலவண்ணங்களுடன் அழகாக இருக்கும் காடுகள் மனத்திற்கு மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன.(34) மலர்ந்த அஸனை {சரஸனை / வேங்கை / கருமருது}, ஸப்தபர்ணை {ஏழிலைப்பாலை}, காஞ்சனை {கோவிதாரை / மலையாத்தி} மரங்கள் காட்டுக்கு அழகூட்டுகின்றன. வானாஸனை {இஷுஸாவை}, தந்திவிதபம் {நிகும்பம் / காட்டாமணக்கு}, பிரியகை, ஸ்வர்ணகை {கொன்றை}, {ஸ்குமர, பிசுகை,} கேதகி {கேதகை / தாழை} மரங்கள் ஆகியவை மலர்களால் மறைக்கப்பட்டிருக்கின்றன, பெண் ஆந்தைகளும், கருவண்டுகளும் அங்கேயும் இங்கேயும் திரிந்து கொண்டிருக்கின்றன.(36) கணிகையின் அழகை ஏற்றதைப் போலக் கூதிர் காலம் விரஜத்தில் {ஆயர்ப்பாடியில்} நடக்கிறது, கடையும் மத்தொலிகளால் பசுத்தொழுவங்கள் நிறைந்திருக்கின்றன.(37) கொடியில் கருடச் சின்னத்தைக் கொண்டவனான முதன்மை தேவன் (விஷ்ணு) மழைக்காலத்தில் மகிழ்ச்சியாக உறங்கினான். இப்போது தேவர்கள் அவனை எழுப்ப முயற்சிக்கின்றனர்.(38)

ஓ! ஆயர்களே, அழகிய தானியங்கள் நிறைந்த இந்தக் கூதிர் காலத்தில், காற்றின் தேவனுடைய {வாயுவின்} வசிப்பிடத்திற்கு ஒப்பானவனும், வெள்ளை, சிவப்பு மற்றும் நீல நிறப் பறவைகளால் நாடப்படுபவனும், இந்திரவில்லால் அலங்கரிக்கப்பட்ட மேகங்களைப் போன்ற கனிகளால் நிறைந்திருப்பவனும், செடிகொடிகள் மற்றும் மரங்களுடன் கூடிய தோப்புகளைச் சூடியிருப்பவனும், பரந்த மேட்டுச் சமவெளிகளால் அலங்கரிக்கப்பட்டவனுமான மலைகளில் முதன்மையானவனை {கிரிதேவனை} நாம் வழிபடுவோம். குறிப்பாக நாம் பசுக்களை வழிபடுவோம்.(39-41) காது வளையங்களாலும், கொம்புகளில் மயில் இறகுகளாலும், கழுத்தில் தொங்கும் மணிகளாலும், கூதிர் கால மலர்களாலும் பசுக்களை அலங்கரித்து, உங்கள் நன்மைக்காக அவற்றை நீவிர் வழிபடுவீராக.(42) மேலும் மலையைக் கௌரவிக்கும் வகையில் வேள்வி நடைபெறட்டும். தேவர்களால் சக்ரன் {இந்திரன்} வழிபடப்படுவதைப் போலவே மலையைக் கௌரவிக்கும் வகையில் நாம் அந்த வேள்வியை {மலைவிழாவைக்} கொண்டாடுவோம்.(43) மேலும் பசுக்களுக்கான வேள்வியைச் செய்யுமாறும் நான் உண்மையிலேயே உங்களை வற்புறுத்துகிறேன். உங்களுக்கு என் மேல் அன்பேதும் இருந்தால், நான் உங்கள் நண்பனாக இருந்தால் நீங்கள் அனைவரும் பசுக்களை வழிபடுவீராக. இதில் ஐயமேதும் கொள்ள வேண்டாம்.(44) இணக்கத்துடன் கூடிய என்னுடைய இந்தச் சொற்களை மதித்தால் நீங்கள் நல்வாழ்வை அடைவீர்கள். எனவே, நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்தாமல் {தயக்கமில்லாமல்} என் சொற்களை {ஏற்று} நிறைவேற்றுவீராக" என்றான் {கிருஷ்ணன்}" என்றார் {வைசம்பாயனர்}.(45)

விஷ்ணு பர்வம் பகுதி – 71 – 016ல் உள்ள சுலோகங்கள் : 45
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்