Saturday 1 May 2021

மதுகைடபர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 13

(மதுகைடபவரப்ரதாநம்)

The world of creation begins: The birth of Madhu and Kaitabha | Bhavishya-Parva-Chapter-13 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : மது கைடபர்களின் தோற்றமும், அழிவும்...


Madhu-Kaitabha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஆயிரம் யுகங்களின் சுழற்சிக்குப் பிறகு சத்ய யுகத்தின் தொடக்கத்தில் தாமஸ குணம் (ஒழுங்கற்ற போக்கு) நிலவியது. இந்த நேரத்தில் படைப்புக்குத் தடையாக இருக்கும் பேரசுரன் மது தன் பிறப்பை அடைந்தான்.{1} சில காலம் கழித்து, ரஜஸ குணத்தின் மூலம் மதுவுக்கு உதவி செய்வதற்காகக் கைடபன் என்ற இரண்டாம் அசுரன் படைக்கப்பட்டான்.{2} மது, கைடபன் என்ற பெயர்களைக் கொண்டவர்களும், பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்களும், முறையே ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களைக் கொண்டவர்களுமான அந்தப் பேரசுரர்கள் இருவரும் ஒற்றைப் பெருங்கடலின் நீரைக் கலங்கடிக்கத் தொடங்கினர்.{3} அவர்கள் கருநீலத்திலும், சிவப்பு நிறத்திலும் ஆடைகள் உடுத்தியிருந்தனர், எரியும் வெண்பற்களைக் கொண்டிருந்தனர், செருக்கில் மிதந்திருந்த அவர்கள் ஒளிரும் கேயூரங்களையும், கங்கணங்களையும் அணிந்திருந்தனர்.{4} 

அவர்கள் பயங்கரமான தாமிரக் கண்களையும், பரந்த மார்பையும், நீண்ட கைகளையும், பெரிய தலைகளையும் கொண்டிருந்தனர். கவசங்களால் மறைக்கப்பட்டிருந்த அந்த அசுரர்கள் இருவரும், அசையாத மலைகள் இரண்டைப் போலத் தெரிந்தனர்.{5} அவர்களுடைய நிறம் நீல மேகங்களைப் போல இருந்தது, அவர்களின் முகங்கள் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்தன, அவர்களுடைய கரங்களின் ஒளியானது மின்னலுடன் கூடிய தாமிர மேகங்களைப் போலத் தெரிந்தது.{6} அவர்கள் தங்கள் மயிர் மற்றும் பாதங்களின் அசைவாலேயே பெருங்கடலைப் பெருகச் செய்பவர்களைப் போலவும், பகைவரைக் கொல்பவனும், அங்கே கிடப்பவனுமான ஹரியை நடுங்கச் செய்பவர்கள் போலவும் பயங்கரமாகத் தெரிந்தனர்.{7}

அண்டத்தின் வாயாக இருந்த அந்தத் தாமரையில் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, யோகிகளில் முதன்மையானவனும், ஒளிரும் உடலுடன் கூடியவனுமான நித்திய பிரம்மனைக் கண்டனர்.{8} அந்தத் தாமரையில், நாராயணனின் ஆணையின் பேரில் உயிரினங்களையும், தேவர்களையும், அண்டத்தையும், மனத்தில் பிறக்கும் முனிவர்களின் மகன்களையும் பிரம்மன் படைப்பதைக் கண்டனர்.{9} அசுரர்களில் சிறந்தவர்களும், கோபத்தால் எரிந்த குருதி சிவப்புடைய கண்களுடன் கூடியவர்களுமான மதுவும், கைடபனும் பிரம்மனுடன் போரிட விரும்பி, அவனிடம்,{10} "கருப்பு மகுடம் அணிந்தவனும், நான்கு முகங்களைக் கொண்டவனுமான நீ யார்? இந்தத் தாமரையில் கவலையில்லாமல் வாழ்ந்து மூடத்தனத்தால் எங்களை நீ அவமதித்து வருகிறாய். வா, எங்களுடன் போரிடுவாயாக. நாங்கள் பெரும் வீரர்களாக இருக்கிறோம். உன்னால் போரில் எங்கள் முன்பு நிற்க இயலாது.{11} நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? உன்னை இங்கே அனுப்பிவைத்தவன் எவன்? உன்னைப் படைத்தவனும், பாதுகாப்பவனும் எவன்? எந்தப் பெயரால் மனிதர்கள் உன்னை அழைக்கின்றனர்?" என்று கேட்டனர்.{12}(1-12)

பிரம்மன், "இவ்வுலகில் அறியப்படாதவனிடம் இருந்து நான் உதித்து, யோகம் பயின்று வருகிறேன். இதை நீங்கள் அறியமாட்டீரா?" என்று கேட்டான்.(13)

மதுவும், கைடபனும், "ஓ! பெரும் முனிவனே, இவ்வுலகில் எங்களைவிடப் பெரியவன் வேறு எவனும் இல்லை. நாங்கள் இந்த அண்டத்தை ரஜஸ், மற்றும் தமஸ் குணங்களால் மறைத்திருக்கிறோம். நாங்களும் அவ்விரு குணங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறோம்,{14} தவசிகளின் முன்பு துன்பத்தில் தவிப்பவர்களைப் போலவும், பக்திமான்களின் முன்பு வஞ்சகம் நிறைந்தவர்களாகவும் தோன்றுவோம். உயிரினங்களால் அடைய முடியாத எல்லையில் இருப்பவர்களாக எங்களை அறிவாயாக.{15} நாங்கள் உலகைக் கலங்கடிப்பதற்காக ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறோம். செல்வம், விருப்பத்திற்குரிய பொருட்கள், வேள்விகள், அனைத்து வகையான கொடைகள் ஆகியன எங்கள் கட்டுப்பட்டில் இருக்கின்றன.{16} மகிழ்ச்சி, இன்பம், செழிப்பு, முன்னேற்றம், அறம் ஆகியவற்றுக்காக மக்கள் விரும்பும் எதையும் எங்களிடம் இருந்து அவர்கள் பெறலாம்" என்றனர்{17}.(14-17)

பிரம்மன், "என் மனத்தைக் குவித்து யோகிகளில் முதன்மையானவனை உண்மையில் அறிந்து, ஏற்கனவே அறிந்து வைத்திருந்த சத்வ குணத்தில் நான் வாழ்கிறேன்.{18} யோகிகளில் நித்திய சத்வ குணமாக இருப்பவனும், ரஜஸ், தமஸ் குணங்களைப் படைத்தவனும், உயிரினங்கள் பிறப்பதற்குக் காரணனும், சத்வ குணம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தும் எவனிடம் இருந்து உண்டாகுமோ அந்தத் தலைவனிடம் நீங்கள் போரில் ஈடுபட்டால் அவன் உங்களை வீழ்த்துவான்" என்றான்"{19,20}.(18-20)

வைசம்பாயனர், "அதன்பிறகு, பல யோஜனைகள் நீண்ட படுக்கையில் கிடந்த தாமரை உந்தி படைத்த ரிஷிகேசனை வணங்கி மதுவும், கைடபனும்,(21) "ஓ! புருஷோத்தமா, நீயே இந்த அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணன் என்பதை நாங்கள் அறிய வந்தோம்; உன்னை வணங்குவதற்குரிய எங்கள் ஒழுக்கமாக இதை அறிவாயாக.(22) ஓ! தலைவா, துல்லிய பார்வையைக் கொண்ட கல்விமான்கள் உன்னை அறிந்து வைத்துள்ள படியே நித்தியமான உண்மையான ஈஷ்வரனாக உன்னைக் காண நாங்களும் விரும்புகிறோம்.{23} ஓ! பகைவரைக் கொல்பவனே, நாங்கள் உன்னிடம் இருந்து வரம்பெற விரும்புகிறோம். ஓ! தலைவா, உன்னைக் காண்பதே நிச்சய வெற்றியைத் தரும். உன்னை நாங்கள் வணங்குகிறோம்" என்றனர்.{24}(23,24)

தலைவன், "ஓ! அசுரர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் விரும்பும் வரத்தை விரைந்து கேட்பீராக. உங்களுங்கு ஒதுக்கப்பட்ட காலத்தை விட அதிகக் காலம் வாழ விரும்புகிறீர்களா? ஓ! பெருஞ்சக்திவாய்ந்தவர்களான மது கைடபர்களே நீங்கள் முயன்றதை அடைந்துவிட்டீர்கள்.{25} உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றுகிறவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். எனவே, என்னால் மட்டுமே நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்ற வரத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்றான்.{26}(25,26)

மதுவும், கைடபனும், "ஓ! தேவர்களின் மன்னா, எவனும் மரணிக்காத இடத்தில் நாங்கள் கொல்லப்பட வேண்டும். (அதன் பிறகு) நாங்கள் உன் மகன்களாக வேண்டும். இதுவே நாங்கள் வேண்டும் வரம்" என்று கேட்டனர்.(27)

தலைவன், "எதிர்கால யுகத்தில் நீங்கள் என் மகன்களாகப் பிறப்பீர்கள். நான் உங்களிடம் வாய்மையைப் பேசுகிறேன், இதில் நீங்கள் ஐயங்கொள்ள வேண்டியதில்லை" என்றான்"[1].(28)

[1] இந்த மது கைடபக் கதை மஹாபாரதம் வனபர்வம் 202ம் அத்தியாயத்தில் மார்க்கண்டேயரால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. 

வைசம்பாயனர், "அண்டத்தைத் தாங்கும் நித்திய தலைவன், ரஜஸ், தமஸ் குணங்களால் உலகைப் பாதுகாக்கவல்லவர்களான மது, கைடபன் என்ற அந்த அசுரர்களில் முதன்மையானோர் இருவருக்கும் இந்த வரத்தை அளித்துவிட்டு, தன் தொடைகளில் வைத்து அவர்களைக் கொன்றான்" என்றார்.(29)

பவிஷ்ய பர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 29

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்