Monday, 19 April 2021

ஒற்றைப் பெருங்கடலாக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 09

(ஏகார்ணவவிதி꞉)

The work of dissolution described | Bhavishya-Parva-Chapter-09 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஒற்றைப் பெருங்கடலில் நாராயணன்...


Narayana in ekArnava

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஏழு வடிவங்களைக் கொண்டவனும், யோகியுமான நாராயணன், நெருப்பின் வடிவை ஏற்று எரியும் தழல்களைக் கொண்டு பெருங்கடல்களை வற்ற செய்வான்.{1} ஆறுகள், பெருங்கடல்களின் வடிவில் உள்ள ஆசைகள் அனைத்தையும், மலைகளின் வடிவில் இருக்கும் அவற்றின் சக்திகளையும் தன் சக்தியால் அழிப்பான்.{2} திரளாகவும் {ஸ்தூலமாகவும்}, நுட்பமாகவும் {சூக்ஷுமமாகவும்} உள்ள இரண்டையும் அவன் அழிப்பான். அந்த இரண்டின் வேராக இருக்கும் பிரம்மத்தில் அனைத்தையும் நிலைநிறுத்தி மீண்டும் அண்டத்தைப் படைப்பதற்காகக் குணங்கள் அனைத்தையும் வற்ற செய்வான்.{3} விளைவுகளை உண்டாக்கும் காரணியான பிரம்மத்தில் இருக்கும் சிறப்பை அவன் உயிரினங்களுக்குக் கொடுப்பான். அந்த நேரத்தில் அவன் இவை அனைத்தையும் அழிப்பான்.{4} ஹரியானவன், காற்றைப் போலச் சக்தி நிறைந்தவனாக இருப்பினும், மொத்த அண்டத்தையும் வென்று, ஐந்து உயிர் மூச்சுகளையும், ஐம்புலன்களையும் மேல்நோக்கி இழுப்பான்.{5}

அதன்பிறகு, தேவர்களின் ஐம்புலன்களும், பிற உயிரினங்களின் ஐம்புலன்களும், அவற்றின் பொருள்களான {புலன்நுகர் பொருட்களான} மணம் {வாசனை}, உடல் முதலியவையும் (தங்கள் இருப்புக்காக) பூமியை அடையும்.{6}(1-6) சுவையின் புலனான நாக்கும், அதன் பொருளான சாறும் நீருக்குச் செல்லும். பார்வையின் புலனான கண்ணும், அதன் பொருளான நிறமும், ஒளியுடல்களிடம் {ஜோதிகளிடம்} செல்லும்.{7} தீண்டலின் புலனான தோலும், அதன் பொருளான தீண்டலும், உயிர் மூச்சும், அதன் பணியும், இயக்கமும் காற்றிடம் செல்லும். மேலும் இவை அனைத்தும் சரடைப் போல இருக்கும் ரிஷிகேசனிடம் நிலைத்திருக்கும்.{8}(7,8) அனைத்தையும் அறிந்தவனான தலைவன், அண்டச் சரடில் உள்ள நுட்பமான திறன்கள் {ஆற்றல்கள்}, புலன்கள், அதன் பொருள்கள் ஆகியவை சீரான நிலையில் தேவர்களிடம் நிறைந்திருக்கும் வகையில் அவை யாவற்றையும் காற்றின் மூலம் ஈர்ப்பான்.{9} அப்போது, நிறம், தீண்டல் முதலியவற்றின் தொடர்பால் உண்டாவதும், அண்டத்தின் காரணமாக இருப்பதுமான பயங்கரம் நிறைந்த சம்வர்த்தக நெருப்பானது, நூறு தழல்களுடன் கூடியதாக மொத்த உலகையும் எரிக்கும்.{10} அந்த நெருப்பானது, மலைகள், மரங்கள், சோலைகள், கொடிகள், கொப்புகள், தெய்வீகத் தேர்கள் {விமானங்கள்}, நகரங்கள், ஆசிரமங்கள் {முனிவர்களின் குடில்கள்}, தெய்வீகக் கட்டடங்கள், பிற வசிப்பிடங்கள் ஆகியவற்றைச் சாம்பலாக்கிய பிறகு, உலகின் ஆசானான ஹரி, செயலெனும் நீரால் அதை {அந்த சம்வர்த்தக நெருப்பை} அணைப்பான்.{11,12}

பிறகு, ஆயிரங்கண்களைக் கொண்டவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான கிருஷ்ணன், பெரும் மேகத்தின் வடிவை ஏற்றுத் தூய நீரால் பூமியை நிறைவடையச் செய்வான்.{13} உயர்ந்ததும், மங்கலமானதும், புனிதமானதும், இனிமையானதும், அமுதத்தைப் போன்றதுமான நீரால் பூமியானது பெரிதும் அமைதியடைந்திருக்கும் போது,{14} மலைகளும், மரங்களும் நீருக்கடியில் கிடக்கும்போது, மேகங்கள் நீருண்டவையாக இருக்கும்போது,{15} பூமியானது ஒரே பரப்பிலான நீராக {ஒற்றைப் பெருங்கடலாக} மாறி உயிரினங்களேதும் அற்றதாகியிருக்கும்போது,{16} சூரியனும், ஆகாயமும், உயிரினங்களும் இல்லாத நுட்பமான இடத்தில் கிடக்கும் ரிஷிகேசனில் பெரும்பூதங்கள் அனைத்தும் மூழ்கியிருக்கும்.{17}(9-17) இவ்வாறு அளவற்ற புத்தியைக் கொண்ட அந்த நித்திய புருஷன், மொத்த படைப்பையும் வற்ற செய்து, எரித்துக் கலங்கடித்துப் பருகிய பிறகு, தன் புராதன வடிவில் மட்டுமே நீடித்திருப்பான். அனைத்தையும் மறைக்கும் பெருங்கடலில் அந்தப் பெரும் யோகியானவன், யோகத் துயிலில் கிடக்கும்போது, நித்தியமாக நிலைத்திருக்கும் பூதங்கள் அனைத்தும் அந்தத் தூய பிரம்மத்துடன் ஐக்கியமாகிக் கிடக்கும்.{18} வெளிப்படாத புருஷனானவன், அந்த ஒற்றைப் பெருங்கடலில் {ஏகார்ணவத்தில்} ஆயிரம் அயுதா ஆண்டுகள் {அயுதாநாம் ஸஹஸ்ராணி} கிடக்கும்போது, அவனை எவராலும் வெளிப்படையாக உணர முடியாது" என்றார் {வைசம்பாயனர்}{19}.(18,19)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "நீர் விளக்கிய ஒற்றைப் பெருங்கடல் யாது? இந்தப் புருஷன் எவன்? யோகம் யாது? ஒரு யோகியானவன் எவன்?" என்று கேட்டான்.(20)

வைசம்பாயனர், "தலைவன் அனைத்தையும் ஒற்றைப் பெருங்கடலாக {ஏகார்ணவமாக} {எவ்வளவு காலத்தில்} மாற்றுவான் என்பதை எவ்வளவு காலம் காத்திருந்தாலும் எவராலும் புரிந்து கொள்ள முடியாது. அந்த நேரத்தில் தலைவனே அனைத்தையும் அளப்பான், அனைத்தையும் காண்பான், அனைத்தையும் அறிவான்; வேறு எதுவும் {எவருக்கும்} புலப்படாது.{21} தலைவனானவன் {இறைவனானவன்}, வானம், பூமி, காற்று, பூதங்கள் ஆகியவற்றைத் தன் புத்தியால் ஊடுருவியும், தேவர்களின் தலைவனும், மனோ ஆற்றல்களுடன் கூடியவனுமான பிரம்மனைத் தன்னில் மூழ்கச் செய்தும், தன் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்திக் கொண்டும் தண்ணீரில் உறங்கிக் கொண்டிருப்பான்" என்றார் {வைசம்பாயனர்}.{22}(21,22)

பவிஷ்ய பர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 22

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்