Tuesday, 18 August 2020

மதுரா வந்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 101 – 045

(ராமக்ருஷ்ணயோர்மதுராகமனம்)

Krishna's arrival at Mathura | Vishnu-Parva-Chapter-101-045 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கரவீரபுரத்திலிருந்து மதுரா திரும்பிய ராமனும், கிருஷ்ணனும்; அவர்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு...

Krishna and Balarama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவனின் வீர மகன்கள் {பலராமன், கிருஷ்ணன்} இருவரும் தமகோஷனுடன் சேர்ந்து வழியில் பயணிகளின் விதிகளுக்கு இணங்க ஐந்து இரவுகளை ஓரிரவைப் போலக் கழித்தனர். மதுரா நகரை அவர்கள் அடைந்த போது, உக்ரசேனனின் தலைமையிலான யாதவர்கள் அனைவரும் அவர்களை வரவேற்பதற்காக நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(1-3) மதுராவைச் சேர்ந்த வணிகர்கள், குடிமக்கள், அமைச்சர்கள், சிறுவர்கள், முதியவர்கள் அனைவரும் அவர்களை வரவேற்பதற்காக வெளியே வந்தனர்.(4)

நாற்சந்திகள் அனைத்தும் மாலைகளாலும், கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டன; மகிழ்ச்சியை அறிவிக்கும் எக்காளங்கள் ஒலிக்கப்பட்டன, துதிபாடிகள் மனிதர்களில் சிறந்தவர்களான அவ்விருவரின் மகிமைகளையும் பாடத் தொடங்கினர்.(5) அந்தச் சகோதரர்கள் இருவரும் திரும்பியதால் மதுரா நகர் முழுவதும் மகிழ்ச்சிமிக்கதாக, இன்பம் நிறைந்ததாக இந்திர விஜயத்தின் போது இருப்பதைப் போல அழகானதாக இருந்தது.(6) பாடகர்கள், "!ஓ! யாதவர்களே, உலகில் கொண்டாடப்படும் ராமன், கோவிந்தன் என்ற இரு சகோதரர்களும் தங்கள் நகரத்திற்குத் திரும்பியிருக்கின்றனர். மகிழ்ச்சியாக விளையாடுவீராக" என்று அறிவித்தபடியே யாதவர்களின் மகிமைகளை அதிகமாக வர்ணிக்கும் இனிய பாடல்களை நெடுஞ்சாலைகளில் பாடத் தொடங்கினர்.(7,8)


ராமனும், கிருஷ்ணனும் மதுரா நகரை அடைந்த போது, அங்கே அழுக்கடைந்த உடைகளுடன் சுயநினைவற்றவனாக வறியவன் எவனும் இல்லை.(9) பசுக்கள், குதிரைகள், யானைகள் ஆகியன மகிழ்ச்சியாக இருந்தன, பறவைகள் மங்கல ஒலிகளை வெளியிடத் தொடங்கின, ஆண்களும், பெண்களும் நல்ல ஸுகமான மனநிலையை அடைந்தனர்.(10) புழுதியற்ற மங்கலத் தென்றல் பத்துத் திக்குகளிலும் வீசத் தொடங்கியது, கோவில்களில் இருந்த தெய்வங்களின் மூர்த்திகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.(11) அவர்கள் வந்த போது, கிருத யுகத்தில் தோன்றும் அறிகுறிகள் {நற்சகுனங்கள்} அனைத்தும் மதுராவில் தோன்றின.(12)

அழகிய குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் அமர்ந்தபடி ராமனும் கேசவனும், மங்கல நேரத்தில் மதுரா நகருக்குள் நுழைந்தனர்.(13) சக்ரனைப் பின்தொடரும் தேவர்களைப் போல யாதவர்கள் ராமனையும், கோவிந்தனையும் பின்தொடர்ந்து அந்த அழகிய நகருக்குள் சென்றனர்.(14) பிறகு, {அஸ்த} மலைக்குள் நுழையும் சூரியனையும், சந்திரனையும் போல யதுவின் வழித்தோன்றல்களான அவ்விருவரும் தங்கள் தந்தையான வஸுதேவனின் வீட்டிற்குள் மகிழ்ச்சி நிறைந்த முகங்களுடன் நுழைந்தனர்.(15) வஸுதேவன் மகன்களான அவ்விருவரும், தங்கள் தங்களுக்குரிய ஆயுதங்கள் ஆங்காங்கே வைத்துவிட்டு, முழுமையான மகிழ்ச்சியை அடைந்தனர்.(16)

அதன்பிறகு அவர்கள் வஸுதேவனின் பாதங்களை வணங்கிவிட்டு, மன்னன் உக்ரசேனனுக்கும், அங்கே கூடியிருந்த முன்னணி யாதவர்களுக்கும் உரிய மதிப்பை வழங்கினர்.(17) அவர்களாலும் பதிலுக்கு வரவேற்கப்பட்ட அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் அன்னையின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தனர்.(18) மீமானிடச் செயல்களைச் செய்பவர்களும், அழகிய முகங்களைக் கொண்டவர்களுமான ராமனும், கேசவனும், இவ்வழியிலேயே உக்ரசேனனைப் பின்பற்றி மதுராவில் மகிழ்ச்சியாகச் சில நாட்களைக் கழித்தனர்" என்றார் {வைசம்பாயனர்}[1].(19)

[1] ஹரிவம்ச விஷ்ணு பர்வம் 37ம் அத்தியாயம் முதல் இந்த 45ம் அத்தியாயம் வரை உள்ள செய்திகள் பிபேக்திப்ராயின் பதிப்பில் இல்லை. 

விஷ்ணு பர்வம் பகுதி – 101 – 045ல் உள்ள சுலோகங்கள் : 19
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்