Wednesday 29 April 2020

பப்ருவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 37

(பப்ரு வம்ச வர்ணனம்)

Vabhru's Family | Harivamsa-Parva-Chapter-37 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சாத்வத குலத்தில் தோன்றிய தேவாவ்ருதன்; பர்ணஸை ஆற்றின் எண்ணம்; தேவாவ்ருதன் மற்றும் பப்ருவின் சிறப்புகள்; மார்த்திகாவத போஜர்கள்; ஆஹுகன் மற்றும் ஆஹுகி; ஆஹுகனின் மகன்களான தேவகன் மற்றும் உக்ரஸேனன்...

Vabhru
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, நல்லியல்பின் குணத்துடன் கூடிய சாத்வதன், கௌஸல்யையிடம், பஜினன், பஜமானன், திவ்யன், தேவாவ்ருதன், அந்தகன், துவின் மகனான {யதுகுலத்தைத் தழைக்கச் செய்த} விருஷ்ணி எனப் பல மகன்களைப் பெற்றான். அவர்களுடைய மூதாதையரைக் குறித்து விரிவாகக் கேட்பாயாக.(1,2) பஜமானன், ஸ்ருஞ்ஜயனின் மகள்களும், பாஹ்யகை, உபபாஹ்யகை என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான இரு மனைவியரைக் கொண்டிருந்தான். {பஜமானனால்} க்ருமி, க்ரமணன், த்ருஷ்டன், ஸூரன், புரஞ்ஜயன் ஆகியோர் பாஹ்யகையிடம் பெறப்பட்டனர். மேலும், அயுதாஜித், ஸஹஸ்ராஜித், சதாஜித், தாசகன் ஆகியோர் ஸ்ருஞ்ஜயனின் மகளான உபபாஹ்யகையிடம் பஜமானனால் பெறப்பட்டனர்.(3-5)



{சாத்வதனின் நான்காம் மகன்} வேள்விகளைச் செய்பவனான மன்னன் தேவாவ்ருதன், "சிறப்புகள் அனைத்துடன் கூடிய ஒரு மகனை நான் கொள்ள வேண்டும்" என்று தீர்மானித்துக் கடுந்தவங்களைச் செய்தான்.(6) அவன் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி, பர்ணசை ஆற்றில் நீராடி, அந்நீரைக் கொண்டே தன் வாயையும் அலசி வந்தான். அவனது தொடர் தீண்டலின் காரணமாக அந்த ஆறானாவள் அவன் விரும்பியதை நிறைவேற்றினாள்.(7) ஆறுகளில் முதன்மையானவளான பர்ணஸை, தனிமையில் சிந்தித்து, அந்த மன்னனுக்கு ஏதேனும் நன்மையைச் செய்யத் தீர்மானித்தாள். இவ்வாறு தியானித்த அவளால், அத்தகைய சிறப்புமிக்க மகனைப் பெறவல்ல பெண்ணின் மீது அவனது கண்களை நிலைக்கச் செய்ய முடியவில்லை. அதன்படியே, அவள் தானே அந்த மன்னனுக்கு மனைவியாவதெனத் தன் மனத்தில் தீர்மானித்தாள்[1].(8,9) எனவே அவள் {பர்ணசை ஆறு}, தானே கன்னிகையாகி, மிக அழகிய வடிவை ஏற்று, அந்த மன்னனை {தேவாவ்ருதனைத்} தன் கணவனாக ஏற்றாள். அவனும் அவளை விரும்பினான்.(10)

[1] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "’சமூகத்தின் நலனுக்கான சரியான வழித்தோன்றலாக மாறக்கூடிய சிறப்புமிக்க மகனைப் பெறவல்ல பெண்ணின் மீது இந்த மன்னன் இதுவரை தன் கண்களைச் செலுத்தவில்லை. இங்கே அவன் தவம் செய்கிறான். எனவே, நானே அவனை அணுகி, அவனை என் துணைவனாக்கிக் கொள்ளப் போகிறேன்’ என்று நினைத்தாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "’மனிதர்களின் தலைவனான இவன், நன்மையை நோக்கித் தன் மனத்தைத் திருப்பியிருக்கிறான். எனினும், அத்தகைய மகனைப் பெறக்கூடிய பெண்ணை அவன் இன்னும் அணுகவில்லை. எனவே நானே அவனை அணுகி, அவனது நோன்பில் பங்கெடுக்கப் போகிறேன்’ என்று நினைத்தாள்" என்றிருக்கிறது.

பிறகு அவள் அந்தத் தயாள மனம் கொண்ட மன்னனால் கருவுற்றாள். பத்தாம் மாதத்தில் அவள், மன்னன் தேவாவ்ருதனிடம் இருந்து, பப்ரு என்ற பெயரில் பெருஞ்சிறப்புமிக்க ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். புராணங்களை நன்கறிந்த முனிவர்கள், இந்தக் குடும்பத்தில் உன்னதனான தேவாவ்ருதனின் சிறப்புகளை விளக்கும்போது, "மன்னன் தேவாவ்ருதன், தன் மாயாசக்தியின் மூலம் பல்வேறு வடிவங்களை ஏற்று, எங்களிடம் இருந்து தொலைவிலோ, எங்கள் அருகிலோ எங்கள் முன்னிலையிலேயே திரிவதை நாங்கள் காண்கிறோம்" என்று சொல்வார்கள்[2].(11-13) மனிதர்களில் முதன்மையானாகப் பப்ருவும், தேவர்களுக்கு இணையானவனாகத் தேவாவ்ருதனும் இருந்தனர். தேவாவ்ருதன் மற்றும் பப்ருவினால் போரில் கொல்லப்பட்டு நானூற்று அறுபத்திரண்டாயிரம் {நான்கு லட்சத்து அறுபத்திரண்டாயிரம்}[3] மனிதர்கள் பிரம்மலோகத்தை அடைந்தனர். பப்ரு வேள்விகள் பலவற்றைச் செய்தான், கொடைகளைக் கொடுத்தான், கல்விமானாகவும், பிரம்மஞானத்தை அறிந்தவனாகவும் இருந்தான். அவனுடைய ஆயுதம் வலிமைமிக்கதாக இருந்தது. மேலும் அவன் மகிமையான செயல்களைச் செய்பவனாகவும், பெரும்பிரகாசம் கொண்டவனாகவும், சாத்வதர்களில் முதன்மையானவனாகவும் இருந்தான். அவனது குடும்பம் மிகப் பெரியதாக இருந்தது, அவனது {தேவாவ்ருதன் மற்றும் பப்ருவின்} வழித்தோன்றல்கள் மார்த்திகாவத போஜர்களாக இருந்தனர்.(14-16)

[2] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "எங்கள் முன்னிலையிலோ, தொலைவிலோ, தற்போதோ, மிகப் பழங்காலத்திலோ நற்குணங்களில் தேவாவ்ருதனுக்கு ஒப்பான எவனையும் நாங்கள் கண்டதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பப்ரு மனிதர்களில் சிறந்தவனாவான், தேவாவ்ருதன் தேவர்களுக்கு இணையானவனாவான். இதற்கு முன்பு இத்தகைய ஒருவனைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இத்தகைய ஒருவனை அருகிலோ, தொலைவிலோ நாங்கள் கண்டதில்லை" என்றிருக்கிறது.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், "தேவாவ்ருதனின் மகனான பப்ரு, ஏழாயிரத்து அறுபத்தாறு பகைவீரர்களை {கொன்று} சொர்க்கத்திற்கு அனுப்பினான்" என்றிருக்கிறது.

{சாத்வதன், கௌஸல்யையிடம், பெற்ற ஐந்தாவது மகனான அந்தகனிடம்} அந்தகனிடம், காசியனின் {த்ருடசிரவனின்} மகள், குகுரன், பஜமானன், சமி, மற்றும் கம்பலபர்ஹிஷன் என்ற பெயர்களைக் கொண்ட நான்கு மகன்களைப் பெற்றாள்.(17)

{அந்தகனின் முதல் மகன் குகுரனின்} குகுரனின் மகன் த்ருஷ்ணுவும், த்ருஷ்ணுவின் மகன் கபோதரோமனும் ஆவர். அவனுடைய {கபோதரோமனின்} மகன் தைத்திரி ஆவான்.(18) அவனிடம் {தைத்திரியிடம்} புனர்வஸுவும், அவனிடம் {புனர்வஸுவிடம்} அபிஜித்தும் பிறந்தர்கள், அவனுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர்.(19) ஆஹுகன் (என்ற ஒரு மகன்) மற்றும் ஆஹுகி (என்ற ஒரு மகள்) ஆகியோர் நன்கறியப்பட்டவர்களாகவும், கொண்டாடப்படுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாகவும் இருந்தனர். பின்வரும் ஸ்லோகம், ஆஹுகனைப் புகழ்ந்து பாடப்பட்டது.(20) "தூய ஆன்மா கொண்ட வழித்தோன்றல்களால் சூழப்பட்ட அவன் {ஆஹுகன்} ஓர் இளம் குதிரையைப் போல (உன்னதமானவனாகவும், சக்திமிக்கவனாகவும்) இருந்தான். அந்த மன்னன் முதலில் படையெடுத்த போது அவன் தேவர்களால் பாதுகாக்கப்பட்டான்"[4].(21)

[4] "இந்த உரைக்கு மற்றொரு பொருள் இருக்கிறது. அவன் எண்பது மனிதர்களால் இழுக்கப்பட்ட வண்டியில் வெளியே சென்றான். அசீதி என்றால் எண்பது. சர்மணா என்றால் மரவண்டி, யுக்தம் என்றால் இருக்கை என்றும் பொருள். நான் பின்பற்றியிருக்கும் பொருள் இவ்வாறே அமைக்கப்பட்டது. அசீதயர்கள் என்றால் தேவர்கள், சர்மா என்றால் கணைகளைப் பாதுகாக்கும் தோலுறை, யுக்தம் என்றால் பாதுகாக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது, தோலுறைகளில் பாதுகாக்கப்படும் கணைகளைப் போலத் தேவர்களால் அவன் பாதுகாக்கப்பட்டான். அதாவது தேவர்கள் அவனுக்குத் தோலுறைகளைப் போல இருந்தனர். இரு பொருள்களும் சரியானவையே. முன்னது அவனுடைய காந்தியைக் குறித்தும், பின்னது தேவர்கள் அவன்மீது கொண்ட நல்லெண்ணத்தையும் எடுத்துக் காட்டும்" என இங்கே மன்மதநாததத்தர் விளக்குகிறார். தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "இந்த ஸ்லோகத்திற்கு "ஆஹுகன், எப்போதும் போர்க்களத்தின் முன்னணியில் முன்னேறிச் செல்லும் இளைஞனைப் போல எண்பது தோல் கவசங்களை அணிந்து கொண்டவனாகவும், வெள்ளுடை அணிந்த படையினரால் சூழப்பட்டவனாகவும் சென்றான்" என்று பொருள் கொள்ளலாம், அல்லது, "ஆஹுகன் எண்பது மனிதர்களால் சுமக்கப்படும் வண்டியில், வெள்ளுடை உடுத்திய காவலர்களால் சூழப்பட்டவனாக ஓர் இளங்குதிரையைப் போல எப்போதும் வெளியே செல்வான்" என்றும் கொள்ளலாம், அல்லது "ஆஹுகன், தேவர்களின் பாதுகாப்புடனும், வெள்ளுடைய உடுத்திய காவலர்களுடனும் எப்போதும் வெளியே செல்வான்" என்றும் கொள்ளலாம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஆஹுகன் வெண்குதிரைகளால் சூழப்பட்டிருந்தான். அவன் பெரியவனாகவும், வடிவில் இளைஞனாகவும் இருந்தான். அவன் எண்பது கேடயங்களுடன் படையின் முன்னணியில் முன்னேறிச் சென்றான்" என்றிருக்கிறது.

இந்தப் போஜ மன்னனை {ஆஹுகனை} பின்பற்றியவர்களில் பிள்ளை இல்லாதவர்களோ, நூறு கொடைகளைக் கொடுக்காதவர்களோ, ஆயிரம் வருடம் நீடித்த வாழ்வு இல்லாதவர்களோ, தூய செயல்களைச் செய்யாதவர்களோ, யாகங்களைச் செய்யாதவர்களோ எவரும் இல்லை.(22) கொடிகள் இணைக்கப்பட்டவையும், அடியில் மரத்துண்டுகளைக் கொண்டவையும், மேகம், தங்க மற்றும் வெள்ளி சங்கிலிகளின் சிணுங்கலைப் போல ஒலியுள்ளவையும், நுகத்தடிகளைக் கொண்ட பத்தாயிரம் யானைகளுடன் கூடியவையுமான பத்தாயிரம் தேர்கள், ஆஹுகனின் ஆணையின் பேரில் கிழக்குப் பகுதியை நோக்கிச் சென்றன.(23,24) அதற்கு இணையான எண்ணிக்கையிலான தேர்களும், யானைகளும் வடக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டன. ஆஹுகன், தன் தளபதிகள் அனைவரையும் {குறுநில மன்னர்களைத் தளபதிகளாக்கி} தன் கட்டுக்குள் கொண்டுவந்து, சிறு மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தன் தேரில் தன் உற்றார் உறவினருடன் வெளியில் சென்றான்.(25)

அந்தகர்கள், ஆஹுகனுடன் பிறந்தவளான ஆஹுகியை அவந்தி மன்னனுக்கு அளித்தனர். ஆஹுகன், காசி மன்னனின் மகளிடம் இரு மகன்களைப் பெற்றான்.(26) அவர்கள் தேவர்களின் மகன்களைப் போல இருந்த தேவகனும், உக்ரஸேனனும் ஆவர்.

{ஆஹுகனின் முதல் மகனான தேவகனுக்குத்} தேவகனுக்குத் தேவர்களைப் போன்ற நான்கு மகன்கள் இருந்தனர்.(27) அவர்கள் தேவவான், உபதேவன், ஸுதேவன், தேவரக்ஷிதன் ஆகியோராவர். அவனுக்கு {தேவகனுக்கு} இருந்த ஏழு மகள்களையும் வஸுதேவனுக்கு அளித்தான். அவர்கள் தேவகி, ஸாந்திதேவி, ஸ்ரீதேவி {ஸுதேவி}, தேவரக்ஷிதை, விருகதேவி, உபதேவி, ஏழாவதாக ஸுனாமதி {ஸுனாஸி} ஆகியோராவர்.(29)

{ஆஹுகனின் இரண்டாம் மகனான உக்ரஸேனனுக்கு} உக்ரஸேனனுக்கு ஒன்பது மகன்கள் இருந்தனர், அவர்களில் கம்ஸன் மூத்தவனாவான். மற்றவர்கள் ந்யக்ரோதன், ஸுநாமன், கங்கன், சங்கு, ஸுபூமிபன், ராஷ்ட்ரபாலன், ஸுதேனு, அனாத்ருஷ்டி, புஷ்டிமான் ஆகியோராவர். அவர்களுக்கு, கம்ஸை, கம்ஸாவதி, ஸுதேனு, ராஷ்ட்ரபாலி, மற்றும் அழகிய கங்கை ஆகிய ஐந்து தங்கைகள் இருந்தனர்.

குகுர குலத்தில் பிறந்த உக்ரசேனனின் குடும்பத்தை நான் விளக்கிச் சொன்னேன்.(30-32) பெருஞ்சக்திவாய்ந்த இந்தக் குகுர குலத்தைத் தியானிக்கும் மனிதன் சந்ததியையும், பெரும் குடும்பத்தையும் அடைகிறான்" என்றார் {வைசம்பாயனர்}.(33)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 37ல் உள்ள சுலோகங்கள் : 33
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்