Wednesday, 22 July 2020

மதுராவைத் தாக்க ஆயத்தமான ஜராசந்தன் | விஷ்ணு பர்வம் பகுதி – 89 – 034

(ஜராஸந்தேன மதுரோபரோதம்)

Jarasandha prepares to attack Madhura | Vishnu-Parva-Chapter-89-034 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  கம்ஸனின் மாமனாரான ஜராசந்தன் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து மதுராவை முற்றுகையிட்டது...

Jarasandha and his daughters Asti and prapti

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணன், ரோஹிணியின் மகனுடன் {பலராமனுடன்} சேர்ந்து யாதவர்களால் நிறைந்திருக்கும் மதுரா நகரில் சில நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்தான்.(1) இளமை அழகுடனும், அரச செழிப்புடனும் அவனது மேனி படிப்படியாக மிளிர்ந்தது, காடுகளால் அலங்கரிக்கப்பட்ட மதுரா எங்கும் அவன் திரியத் தொடங்கினான்.(2) இவ்வகையில் சில நாட்கள் கடந்ததும், ராஜகிருஹத்தின் மன்னனான ஜராசந்தன், தன் மகள்கள் இருவரின் மூலம் கம்ஸனின் மரணத்தைக் கேள்விப்பட்டான்.(3) பலம்வாய்ந்த ஜராசந்தன் இதைக் கேட்டதும் பெரும் கோபமடைந்தான். பலம்வாய்ந்தவனான ஜராசந்தன், கம்ஸனுக்குத் தான் பட்ட கடனை அடைக்கும் வகையிலும், யதுக்கள் அனைவரையும் கொல்லும் வகையிலும், ஆறு பிரிவுகளுடன்[1] கூடிய தன் படையுடன் உடனே புறப்பட்டான்.(4,5)

[1] சித்திர சாலை பதிப்பில் ஆறு பிரிவுகள் என்பதன் அருகில் அடைப்புக்குறிக்குள், "யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை, உணவுப்பிரிவு, வணிகப்பிரிவு ஆகியன" என்றிருக்கிறது.

ஓ! மன்னா, அந்த மகத மன்னனுக்கு {ஜராசந்தனுக்கு} அழகும், இளமையும் நிறைந்தவர்களும், அஸ்தி, பிராப்தி என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான மகள்கள் இருவர் இருந்தனர். {அவர்கள் மெல்லிடையையும், பருத்த முலைகளையும் கொண்டவர்களாக இருந்தனர்}[2] பிருஹத்ரதனுடைய அரச மகன் {ஜராசந்தன்} அவர்களைக் கம்ஸனுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.(5,6) அவன் {கம்ஸன்}, ஆஹுகன் மகனான தன் தந்தையைச் சங்கிலியில் பிணைத்துவிட்டு அவர்களின் {தன் மனைவியரின்} துணையில் இன்புற்றிருந்தான். சூரசேனத்தின் தலைவன் {கம்ஸன்}, ஜராந்தனை (ஜராசந்தனின் உதவியைச்} சார்ந்தவனாகவும், யாதவர்களை அடிக்கடி அவமதிப்பவனாகவும் இருந்து எவ்வாறு மன்னன் ஆனான் என்பதை நீ பலமுறை கேட்டிருக்கிறாய்.(7) வஸுதேவன், தன் உற்றார் உறவினரின் மூலம் தன் கடமைகளில் நிறைவடையவும், அவர்களின் {உற்றார் உறவினரின்} நோக்கங்களை நிறைவேற்றவும் எப்போதும் கவனமாக உக்ரஸேனனுக்கு நன்மை செய்வதில் ஈடுபட்டான். கம்ஸன் அவனையும் விட்டானில்லை.(8) தீய ஆன்மா கொண்ட கம்ஸன், ராமனாலும், கிருஷ்ணனாலும் கொல்லப்பட்டபோது, போஜர்களாலும், விருஷ்ணிகளாலும், அந்தகர்களாலும் சூழப்பட்ட உக்ரஸேனன் மன்னனானான்.(9)

[2] அடைப்புக்குறிக்குள் இருக்கும் குறிப்பு சித்திரசாலை பதிப்பிலும், பிபேக்திப்ராய், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்கார் ஆகியோர் பதிப்புகளிலும் இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் விடுபட்டிருந்தது.

அந்த வீரனின் {கம்ஸனின்} மனைவியரான அஸ்தியும், பிராப்தியும் மன்னன் ஜராசந்தனின் அன்புக்குரிய மகள்களாவர். எனவே மகதத்தின் மன்னனான அவன் {ஜராசந்தன்}, அவர்களின் தூண்டுதலின் பேரில் கோபத்தில் நெருப்பாக எரிந்து, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு மதுராவுக்குப் புறப்பட்டான்.(10) ஜராசந்தனின் ஆற்றலால் வீழ்த்தப்பட்டவர்களும், அடக்கப்பட்டவர்களும், பெருஞ்சக்திவாய்ந்த போர்வீரர்களுமான மன்னர்கள் அனைவரும், நண்பர்கள், உற்றார் உறவினர்கள், கூட்டாளிகள் அனைவரும் ஜராசந்தனை நிறைவடையச் செய்யும் நோக்கில் தங்கள் படைகள் சூழ அவனை {ஜராசந்தனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.

காரூஷ மன்னன் தந்தவக்தரன், பலம்வாய்ந்தவனான சேதி மன்னன் {சிசுபாலனின் தந்தை தமகோஷன்},[3](11-13) கலிங்க மன்னன், பலம்வாய்ந்தவர்களில் முதன்மையானவனான பௌண்ட்ரன், ஸாங்க்ருதி, கேசிகத்தின் மன்னன் {கேசிகன்}, மன்னன் பீஷ்மகன்,(14) அவனது {பீஷ்மகனின்} மகனும், வாசுதேவனையும், அர்ஜுனனையும் எப்போதும் போருக்கு அறைகூவியழைப்பவனும், வில்லாளிகளில் முதன்மையானவனுமான ருக்மி,(15) வேணுதாரி, சுருதர்வா, கிராதன், அம்சுமான், அங்கத்தையும், வங்கத்தையும் சேர்ந்த பலம்வாய்ந்த மன்னர்கள்,(16) கோசலத்தையும், காசியையும், தசார்ணத்தையும் சேர்ந்த மன்னர்கள், சும்ஹத்தின் பலம்வாய்ந்த மன்னன் {சுகேஷ்வரன்}, விதேகத்தின் தலைவன்,(17) மத்ரத்தின் பலம்வாய்ந்த மன்னன் {சல்லியன்}, திரிகர்த்தத்தின் தலைவன், ஆற்றலுடன் கூடியவனான சால்வ மன்னன், பெரும்பலம் வாய்ந்தவனான தரதன்,(18) யவனர்களின் தலைவனும், ஆற்றல்மிக்கவனுமான பகதத்தன், ஸௌவீர மன்னனான சைப்யன், பலவான்களில் முதன்மையான பாண்டியன்,(19) காந்தார மன்னனான ஸுபலன், மஹாபலன், நக்னஜித், காஷ்மீர மன்னன் கோனர்த்தன், தரத மன்னன், பெரும்பலம்வாய்ந்த துரியோதன், திருதராஷ்டிரனின் பிற மகன்கள் உள்ளிட்ட இவர்களும்,(20) பெரும் பலம் வாய்ந்த பிற மன்னர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும் ஜனார்த்தனனிடம் கொண்ட பொறாமையின் பேரில் ஜராசந்தனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(22)

[3] விஷ்ணு பர்வம் 45:2ல் ஜராசந்தனுடன் வந்த சேதி மன்னனின் பெயர் தமகோஷன் {சிசுபாலனின் தந்தை} என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது அவர்கள் ஏராளமான தானியங்களும், வைக்கோலும் நிறைந்த சூரசேன மாகாணத்தில் நுழைந்து, தங்கள் தங்களுக்குரிய படைகளை அங்கே நிறுத்திக் கொண்டு மதுரா நகரை முற்றுகையிட்டனர்" என்றார் {வைசம்பாயனர்}.(22)

விஷ்ணு பர்வம் பகுதி – 89 – 034ல் உள்ள சுலோகங்கள் : 22
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்