Friday 25 February 2022

போர்க்களமான புஷ்கரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 96

(உபயஸைந்யயோ꞉ புஷ்கரதீர்தப்ரவேஷம்)

Pushkara Battlefield | Bhavishya-Parva-Chapter-96 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: புஷ்கரைக்கு வந்த ஹம்சனும், டிம்பகனும்; ஹம்ச டிம்பகர்களின் நண்பனான தானவன் விசக்ரன்; விசக்ரனின் நண்பனான தைத்தியன் ஹிடிம்பன்; இரு படைகளும் போர்க்களம் புகுந்தது...


Pushkara Lake at Rajasthan in 1878

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, அதே வேளையில் ஹம்சனும், டிம்பகனும் தங்கள் விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, அலங்காரக் கொடிகளுடன் கூடிய எண்ணற்ற தேர்கள் சூழ புஷ்கரத் தீர்த்தத்திற்கு வந்தனர்.(1) அவ்விரு இளவரசர்களின் முன்பு, மொத்த உலகத்தையும் விழுங்கப் போவதைப் போலத் தோன்றும் இரண்டு பூதங்கள் இருந்தனர். அவர்கள் {அந்தப் பூதங்கள்} மேனியெங்கும் பஸ்மத்தைப் பூசிக்கொண்டு சிங்கங்களைப் போல முழங்கிக் கொண்டிருந்தனர்.(2) மேலும் ருத்ராக்ஷங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள் தங்கள் நெற்றிகளில் மூவரி திலகங்களைச் சூடியிருந்தனர். உலகை அழிப்பதற்காக வந்திருக்கும் இரு ருத்திரர்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.(3) அந்தப் பூதங்கள் இருவரையும் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான படைவீரர்கள் வந்தனர். ஹம்சடிம்பகர்கள் பத்து அக்ஷௌஹிணி அளவுக்குப் படையைக் கொண்டிருந்தனர்.(4)

மன்னா, ஹம்சடிம்பகர்களின் பழைய நண்பனான விசக்ரன் என்ற தானவனும் அவர்களுடன் வந்தான்.(5) வஜ்ரபாணியான சக்ரனே {இந்திரனே} கூடப் போரில் எதிரில் நிற்க முடியாத அளவுக்கு அந்த விசக்ரன் பெரும்பலம்வாய்ந்த தானவனாக இருந்தான். நீண்டகாலத்திற்கு முன்பு ஒரு காலத்தில் நடைபெற்ற தேவாசுரப் போரில் அந்த விசக்ரன் தேவர்களுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்தி, தேவமன்னனை {இந்திரனை} வீழ்த்தியிருந்தான். மற்றொரு தருணத்தில் அந்தத் தானவன் {விசக்ரன்} துவாரகையில் விஷ்ணுவுடன் போரிட்டான். அந்தப் போரில் அவன் யாதவர்களைப் பெரிதும் ஒடுக்கினான்.

மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, விசக்ரனும், தண்டங்களுடன் கூடிய பல்லாயிரக்கணக்கான தானவர்கள் பிறரும், விருஷ்ணி குலத்தைப் பழிதீர்ப்பதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஹம்சடிம்பகர்களுக்குத் துணை புரிய வந்திருந்தனர். ராக்ஷசேஷ்வரனான ஹிடிம்பன், விசக்ரனின் பெரும் நண்பனாவான். உண்மையில் அந்தத் தைத்தியன் {ஹிடிம்பன்} தன்னுயிர் நண்பனுக்காக {விசக்ரனுக்காகத்} தன் உயிரையும் தர சித்தமாக இருந்தான். விசக்ரனுக்கு உதவி செய்வதற்காகப் பாறைகள், சூலங்கள், வாள்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த பல ராக்ஷசர்களுடன் ஹிடிம்பன் அவனது {விசக்ரனின்} படையில் சேர்ந்தான். மன்னா {ஜனமேஜயா}, பாறைகளையும், தண்டங்களையும் தரித்திருந்த எண்பத்தெட்டாயிரம் ராக்ஷசர்கள் போர்க்களத்தில் ஹிடிம்பனைப் பின்தொடர்ந்து வந்தனர். இந்த ராக்ஷசப் படை ஹம்சடிம்பகர்களின் பெரும்படையுடன் சேர்ந்து மூவுலகங்களையும் அச்சுறுத்தியது.(6-14)

விசக்ரனின் துணையுடனும், கேசவனைக் கொல்லும் நம்பிக்கையுடனும் ஹம்சடிம்பகர்கள் புஷ்கரத் தீர்த்தத்துக்குச் சென்றனர்.(15) மறுபுறம், ஹம்சடிம்பகர்கள் யாதவர்களுடன் போரிடப் போகிறார்கள் என்ற செய்தியைக் கேட்ட ஜராசந்தன், இது பாவம் நிறைந்தது என்று நினைத்தாலும் அவர்களுக்கு உதவி செய்யப் புறப்பட்டான்.(16) மன்னா, இவ்வாறு பல மன்னர்களின் ஆதரவு பெற்ற ஹம்சடிம்பகர்கள், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் ஆவலுடன் புண்ணியத்தலமான புஷ்கரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(17) சிங்கங்களைப் போல உரக்க முழங்கிய அவர்கள், "மன்னர்களே, நானே முதலில் கிருஷ்ணனுடன் போரிடுவேன்" என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர்.(18) இவ்வாறு ஆயிரக்கணக்கான மன்னர்கள் கேசவனுடன் போரிடும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இத்தகைய உணர்வுடனேயே அவர்கள் புஷ்கரத்தை அடைந்தனர்.(19)

மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, கடுந்தவங்களைச் செய்த பெருஞ்சக்திவாய்ந்த முனிவர்கள் பலர் அந்தப் புண்ணியத்தலத்தில் வசித்து வந்தனர். உண்மையில், அந்தப் புஷ்கரம் மூவுலகங்களிலும் உள்ள புண்ணியத்தலங்களில் முதன்மையானது என்று சொல்லப்படுகிறது.(20) புஷ்கரத் தீர்த்தத்தையும், புண்டரீகாக்ஷனான கிருஷ்ணனையும் பார்ப்பதாலோ, தீண்டுவதாலோ மட்டுமே கூட ஒருவன் செய்த பாவங்கள் அனைத்தும் மறையும்.(21) பெரும் முனிவர்கள் அனைவரும், தேவர்களில் முதன்மையானோரும் புஷ்கரத்தையும், புண்டரீகாக்ஷனையும் தொடர்ந்து சேவிக்கின்றனர்.(22) இவ்விரண்டில் கொள்ளும் தொடர்பால் ஒருவனின் பாவங்கள் அனைத்தும் மறைந்துவிடும். ஹம்சடிம்பகர்களின் தலைமையிலான மன்னர்கள் இவ்விரண்டும் இருக்கும் இடத்தை அடைந்தனர்.(23) இவ்வாறே அளவற்ற மஹிமை பொருந்திய ஹரியான விஷ்ணுவையும், பிரம்மனாலும் வழிபடப்படும் புஷ்கரமென்னும் புண்ணியத்தலத்தையும் அடுத்தடுத்து காணும் வாய்ப்பை அவர்கள் அனைவரும் அடைந்தனர்.(24)

மனிதர்களின் முதன்மையான ஆட்சியாளா, நீ புஷ்கரத் தீர்த்தத்தையும், கிருஷ்ணனையும் வணங்குவாயாக. அந்தப் பிரபுவுடன் போரிட அங்கே கூடியிருந்த படைவீரர்கள் அனைவரும் அழிவடைவார்கள் என்பதில் ஐயமில்லை. எண்ணற்ற பேரிகைகள், பணவங்கள், கொம்புகள், மணிகள், பிற இசைக்கருவிகள் ஆகியவற்றின் ஒலியும், ராக்ஷசர்களின் முழக்கமும் கலந்து அங்கே பேராரவார ஒலியை உண்டாக்கின. மன்னா, அந்தப் பெரிய ராக்ஷசப்படை புஷ்கரத்தின் கரையை அடைந்து தேவர்களின் தலைவனான கிருஷ்ணனைக் கண்டது" என்றார் {வைசம்பாயனர்}.(25-27)

பவிஷ்ய பர்வம் பகுதி – 96ல் உள்ள சுலோகங்கள் : 27

மூலம் - Source

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்