Saturday 14 November 2020

உமா விரதம் | விஷ்ணு பர்வம் பகுதி – 136 – 080

(புண்யகவ்ரதவர்ணனம்)

The same subject continued | Vishnu-Parva-Chapter-136-080 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : புண்யக நோன்பு தொடர்பான நியமங்கள், கொடைகள்; பிள்ளை வரம் முதலிய வரங்களுக்கான நியம விதிகள்; உமா விரதம்...

Uma Maheshwara wedding

உமை {அருந்ததியிடம்}, "இவ்வாறே தற்கட்டுப்பாட்டைக் கொண்டவளும், கற்புடையவளுமான ஒரு பெண், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து விதிகளின் படி ஒரு வருடத்திற்கோ, ஆறு மாதங்களுக்கோ, ஒரு மாதத்திற்கோ நோன்பை நோற்க வேண்டும்; அதன் பிறகு அவள் கற்புடைய பதினோரு பெண்மணிகளை மதிப்புடன் அழைக்க வேண்டும். ஓ! மங்கலப் பெண்ணே {அருந்ததியே}, நான் இந்தப் புனித விதியைப் பின்பற்றினேன்.(1,2)

இந்த நோன்பை நோற்கும் பெண்மணி {மூலவர்த்தினி}, கணவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கும் அந்தப் பெண்களுக்கு நீருடன் சேர்த்து காணிக்கைகளை அளிக்க வேண்டும். அவர்களுக்கு இடத்திற்கும், காலத்திற்கும் {கால, தேச, வர்த்தமானத்திற்குத்} தகுந்த ஈடான மாற்றாக அந்தக் கொடை அளிக்கப்பட வேண்டும்[1].(3) பிறகு அவள், மாத முடிவின் வளர்பிறை நவமி திதியில் துதிகளைத் துதித்துச் சடங்கை நிறைவு செய்ய வேண்டும்.(4) விரதம் செய்ய விரும்பும் பெண், அதைச் சாதிப்பதற்காக அதன் {விரதத்தின்} தொடக்கத்திலும், முடிவிலும் பகலிரவில் உண்ணா நோன்பிருக்க {அஹோராத்ரம் உபவாஸ விரதம் செய்ய} வேண்டும்.(5) அதன் பிறகு கணவனின் தலைமுடி வெட்டப்பட வேண்டும். அந்தப் பெண்ணின் நகங்கள் வெட்டப்பட வேண்டும். அதே நாளில் நோன்பின் நிறைவில் அவள் நீராட வேண்டும்[2].(6)

[1] மற்ற இரண்டு பதிப்புகளை ஒப்புநோக்கி 3ம் ஸ்லோகத்தில் வரும் இந்த வாக்கியம் மாற்றப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால், "{நோன்பு நோற்பவளான} முக்கியப் பெண்மணி, கற்புடையவர்களான அந்தப் பெண்களுக்கு உரிய காணிக்கைகளைக் கொடுத்து அவர்களின் கணவர்களிடம் இருந்து அவர்களைப் பெற்றுக் கொண்டு, நீருடன் சேர்த்து அவர்களை ஆசானுக்கு அர்ப்பணிக்க வேண்டும். பிறகு அந்த நாட்டுக்கும், நேரத்திற்கும் உரிய நடைமுறைகளின்படி அந்த ஆசானுக்குரிய கட்டணத்தை {தக்ஷிணையைக்} கொடுத்து அவரிடம் இருந்து அவர்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, மீண்டும் அவள் அவர்களை அவர்களின் கணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று இருக்கும். சித்திரசாலை பதிப்பிலும், உ.வே.எஸ் ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் ஆசானுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற செய்தி இல்லை. பிபேக்திப்ராயின் பதிப்பில் கோவர்த்தன மலை போர், பாரிஜாதம், புண்யகவிரதம் குறித்த அத்தியாயங்கள் ஏதும் இடம்பெறவில்லை.

[2] மற்ற இரண்டு பதிப்புகளை ஒப்புநோக்கி 6ம் ஸ்லோகத்தில் வரும் இந்த வாக்கியம் மாற்றப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால், "இவ்வாறு விரதம் முடியும்போது அவள் தன் கணவனின் நகங்களையும், முடியையும் வெட்டிக் கொள்ளச் செய்ய வேண்டும். அவளும் அதையே தனக்குச் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறே ஸ்ருதியில் {வேதத்தில்} விதிக்கப்பட்டிருக்கிறது" என்று இருக்கும்.

அதன்பிறகு, ஓ! மங்கலப் பெண்ணே, அவள் நீராடிவிட்டு, திருமண நிகழ்வின் போது அலங்கரிக்கப்படுவதைப் போல ஆபரணங்களாலும், மாலைகளாலும் தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.(7) அவள், பின் வரும் மந்திரத்தை உரைத்த பிறகு, மனத்தாலோ சொற்களாலோ கணவனின் பாதங்களை வணங்கி, குடத்தில் உள்ள நீரைக் கொண்டு நீராட வேண்டும்.(8) {அந்த மந்திரம்}, "நீரின் தேவியே {ஜலதேவியே} ரிஷிகளைப் பெருகச் செய்பவளும் {வளர்க்கும் தாயும்}, அண்டத்தைப் பாதுகாப்பவளுமாவாள். தேவலோகத்தில் பிறந்த அவள் (வேள்வியில்) மதந்தி {நன்மையையும், இன்பத்தையும் வளர்ப்பவள்} என்று அழைக்கப்படுகிறாள். அறத்தின் பிறப்பிடமாக இருப்பதால் அவள் மகிழ்ச்சி தருபவளாக இருக்கிறாள். அவள் தூய்மையானவளாகவும், தூய்மைப்படுத்துபவளாகவும் இருக்கிறாள். எனவே, மிக உயர்ந்த நன்மையைத் தரும் சாற்றாலும் {மங்கல ரசத்தாலும்}, அருளாலும் அவள் என்னை நிறைக்கட்டும்" {என்பது நீரின் தேவியைத் துதிக்கும் மந்திரமாகும்}[3].(9)

[3] நீருக்கான இந்த மந்திரம் மன்மதநாததத்தரின் பதிப்பில் அஃறிணையில் சொல்லப்பட்டுள்ளது. பிற பதிப்புகளை ஒப்புநோக்கி இஃது உயர்திணையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அதையே, "ரிஷிகளைப் பெருகச் செய்பவளும், அண்டத்தைப் பாதுகாப்பவளுமான நீரின் தேவியே, தேவலோகத்தில் பிறந்தவள் நீயே, நன்மையையும், இன்பத்தையும் வளர்க்கும் மதந்தி என்று வேள்வியில் அழைக்கப்படுபவள் நீயே. அறத்தின் பிறப்பிடமும், மகிழ்ச்சியைத் தருபவளும் நீயே. தூய்மையானவளும், தூய்மைப்படுத்துபவளும் நீயே. ஓ நீரின் தேவியே, மிக உயர்ந்த நன்மையைத் தரும் உன்னுடைய மங்கலச் சாற்றாலும், அருளாலும் என்னை நிறைப்பாயாக" என்றும் படிக்கலாம்.

நீருக்கான {சொல்லப்படும்} இந்த மந்திரம் எங்கும் கேட்கப்படுகிறது. ஓ! முற்றிலும் அழகிய அங்கங்களைக் கொண்டவளே {அருந்ததி}, பெண்களுக்கெனப் புராணங்களில் அனுமதிக்கப்படும் பின் வரும் மந்திரங்களைக் கேட்பாயாக.(10) {அந்த மந்திரங்கள் பின்வருமாறு}, "நான் என் கணவனுக்கு நன்மை செய்வேனாக, நான் செல்வத்தை வீணாக்காமல் இருப்பேனாக, நான் திறன்மிக்கவளாக இருந்து, என் கணவருடன் சேர்ந்து அறச்சடங்குகளைச் செய்து வரத்திற்காக ஓர் அடிமையைப் போல அவருக்குத் தொண்டு செய்வேனாக. செயல்களாலோ, மனத்தாலோ, சொற்களாலோ நான் என் கணவரை அலட்சியம் செய்யாதிருப்பேனாக. கோபத்துடன் இருந்தாலும் அவரை நான் பின்பற்றுவேனாக.(11) என் கணவரின் பிற மனைவியருக்கு மேலானவளாகவும், அழகிய வடிவத்தைக் கொடையாகக் கொண்டவளாகவும், நற்பேறு பெற்றவளாகவும், மகன்களுடன் கூடிய அன்னையாகவும், உணவைப் பகிர்ந்தளிப்பதில் தாராளம் கொண்டவளாகவும், பிறரின் சாதனைகளைச் சொல்பவளாகவும், அனைத்து வகையிலும் வறுமையில் இருந்து விடுபட்டவளாகவும் இருப்பேனாக.(12) என் கணவர் அழகிய முகத்துடன் இருக்கட்டும்; அவர் என்னைச் சார்ந்தவராகவும், என்னில் நிலைத்த மனம் கொண்டவராகவும், என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவராகவும், என்னைப் பின்பற்றுபவராகவும் இருக்கட்டும். சக்கரவாகப் பறவைகளின் இணையைப் போல எங்கள் அன்பும் இருக்கட்டும்; எங்களுக்கிடையில் பற்றில்லாமை வளராதிருக்கட்டும், மங்கலநிலையால் நாங்கள் மகுடம் சூட்டப்படுவோமாக.(13) கணவரிடம் கொண்ட அர்ப்பணிப்பின் மூலம் மிக உயர்ந்த பண்பை அடைந்து, தங்கள் தந்தையின் குடும்பத்தையும், கணவரின் குடும்பத்தையும் தூய்மையாக்கி, மொத்த அண்டத்தையும் நிலைநிறுத்தி வரும் கற்புடைய மிகச் சிறந்த பெண்மணிகளின் உலகிற்கு நான் செல்வேனாக.(14) இருக்கும் நிலம், காற்று, நீர், ஆகாயம், நெருப்பு, வானம், ஆன்மா, இயற்கை {பிரக்ருதி}, பெருமை மற்றும் அகங்காரக் கோட்பாடுகள் {மஹத்தத்வம், அஹங்காரம்} ஆகியவையும், முனிவர்களும் என் சாட்சிகளாக இருந்து, என் தவங்களையும், மதிப்புமிக்க நம்பிக்கையையும் {என்னுடைய இந்த விரதத்தை} நினைவில் கொள்ளட்டும்.(15) உயிரினங்களின் பணிகளில் ஈடுபடுபவர்களும், மனிதர்களுக்குப் பிறந்தவர்களும், பிற உயிரினங்களுக்குப் பிறந்தவர்களும், சத்வம் முதலிய குணங்களைக் கொண்டவர்களும், உயிரினங்களின் உடல்களைப் படைத்தவர்களும், எங்கும் இருப்பவர்களுமான அடிப்படை படைப்பாளிகள் {தேவர்கள்} என்னுடைய விரதத்தையும், மதிப்புமிக்க நம்பிக்கையையும் சாட்சியாகக் காண்பார்களாக.(16) புனிதச்செயல்களின் சாட்சிகளான சூரிய சந்திரரும், யமனும், பத்து திக்குகளும், என் மனமும் என் தவங்களுக்கும், உறுதிக்கும் சாட்சிகளாக இருக்கட்டும்" {என்பவையே அந்த மந்திரங்கள்}.(17)

ஒரு விரதத்தின் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் அனைத்துப் பொருட்களும் இந்த மந்திரத்தால் ஊட்டமளிக்கப்பட {மந்திரிக்கப்பட} வேண்டும் என்று புராணங்களில் விதிக்கப்பட்டிருக்கிறது.(18) ஓ! மங்கல அருந்ததி, இவ்வாறு நீராடிய அவள் தன் கையால் செய்யப்பட்ட இரண்டு உடைகளைத் தன் கணவனுக்குக் கொடுக்க வேண்டும். ஏதோ தடையால் தன் கையால் இரண்டு உடைகளைச் செய்ய முடியவில்லையெனில், அவள் தன் கையால் பின்னப்பட்ட நூலுடன் சேர்த்து வெள்ளை நிறத்திலான மற்றொரு புத்தாடையைக் கொடுக்க வேண்டும்.(19,20) ஓ! இளம்பெண்ணே, அதன் பிறகு அவள் தன் கணவனுடன் சேர்த்து, பகுத்தறியும் ஞானம் கொண்டவரும், தற்கட்டுப்பாட்டுடன் கூடியவரும், தூய்மையானவருமான மற்றொரு பிராமணருக்கும் தன் சக்திக்குத் தகுந்த வகையில் உணவளிக்க வேண்டும்.(21) அவள் அந்தப் பிராமணருக்கு, இரண்டு உடைகளையும், படுக்கைகளையும், வாகனங்களையும், தானியங்களையும், ஆண், பெண் பணியாட்களைக் கொண்ட ஒரு வீட்டையும் கொடுக்க வேண்டும்.(22) மேலும் அவள், தன் சக்திக்குத் தகுந்த வகையில் ஆபரணங்களையும், பல்வேறு வகையான தானியங்களையும், குறிப்பாக எள் கலந்த ரத்தின மலையையும் கொடுக்க வேண்டும்.(23)

அவள் பல்வேறு வண்ண விரிப்புகளால் மறைக்கப்பட்ட யானைகளையும், குதிரைகளையும், பசுக்களையும் கொடையளிக்க வேண்டும்.(24) மேலும் அவள் உப்பு, வெண்ணெய், பாகு {வெல்லம்}, தேன், பொன்,(25) பல்வேறு நறுமணப் பொருட்கள், சாறுகள், மலர்கள், வெள்ளி, தாமிரப் பாத்திரங்கள், அனைத்து வகைக் கனிகள், ஆடைகள்,(26,27) மரம் {மரத்தாலான சிலைகள்}, கல் {கல்லாலான சிலைகள்}, தயிர், பால், தெளிந்த நெய், தூர்வம் {அருகம்புல்} ஆகியவற்றையும், தான் விரும்பும் பிற பொருட்களையும் கொடையளிக்க வேண்டும்.(28) அவள் அவற்றுடன் சேர்த்து உமை, மஹேஷ்வரரின அழகிய சிலைகளையும் அவற்றைப்போன்ற ஓவியங்களையும் கொடையளிக்க வேண்டும். ஓ! கற்புக்கரசியே, கணவனின் விருப்பப்படியும், அவனது வாழ்வுக்கான வழிமுறைகள், நாடு, காலம் ஆகியவற்றுக்கு இணக்கமானபடியும் மட்டுமே சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ கொடைகளனைத்தும் அளிக்கப்பட வேண்டும்.(29) கணவன் அனுமதி தந்தால் அவள் எள் நிறைந்த பாத்திரங்களையும், வெண்கலப்பாத்திரங்களையும், கபிலை பசுவையும் கொடையளிக்க வேண்டும்.(30) ஓ! குற்றமற்றவளே, நல்லூழ் கொண்ட காரிகையே {சௌபாக்யவதி}, எள், ஆடைகள், கண்ணாடி, மான் தோல் ஆகியவற்றுடன் ஒரு கருப்பு மான் தோலைக் கொடுத்தால் அவள் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவாள்.(31)

ஓ! அழகிய முகம் கொண்டவளே, ஒரு பெண் இவ்வாறு ஒரு விரதத்தை (நோன்பை) நிறைவேற்றினால், அவள் பெண்களில் முதன்மையானவளாகவும், நல்லூழ் பெற்றவளாகவும், மகன்களின் அன்னையாகவும், அழகியாகவும், தயாள குணமும், செல்வச் செழிப்பும், தாமரைக் கண்களையும் கொண்டவளாகவும் திகழ்வாள். அவள், தன் இதயம் விரும்பும் திறனுடனும், அழகுடனும் கூடிய ஒரு மகளையும் பெறுவாள்.(32,33) இவ்வழியில் கொடையளிப்பவர்கள் நல்லூழுடைய பெண்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாகவும், மகன்களின் அன்னையாகவும், செல்வச்செழிப்பும், திறனும், நற்குணமும் கொண்டவர்களாகவும் திகழ்வார்கள்.(34) ஓ! அருந்ததி, நானே இந்த விரதத்தை முதலில் செய்தவளாக இருப்பதால் இஃது உமா விரதம் என்ற பெயரை உலகில் பெற்றது.(35) ஓ! குற்றமற்ற பெண்ணே, இதுவே பெண்கள் செய்யும் விரதங்களில் சிறந்த விரதமாகும். மேலும் இந்த விரதத்திற்கான விதிமுறைகளின்படி கொடைகளை அளித்தால் அவர்கள் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவார்கள்.(36)

ஓ! மென்மையான பெண்ணே {அருந்ததியே}, தேவர்களின் தேவரும், காளையைச் செலுத்துபவருமான சிவன், இந்த விரதத்தைச் செய்ததால் நிறைவடைந்து தம்முடைய பட்டத்துராணியாக என்னைத் தேர்ந்தெடுத்தார்.(37) விரத்தின் நிறைவில் அந்தந்த நாட்டில், அந்தந்த நேரத்தில் கிட்டக்கூடிய உணவுப் பொருட்களையும், பிற பொருட்களையும் கொடுக்க வேண்டும்.(38) ஓ! அழகியே பெண்ணே, விரதத்திற்கான பொருட்களைப் பிராமணர்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அவர்கள் விரும்பிய உணவையும் கொடைகளுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.(39) இந்த விரதத்தில் பாயசம் கொடுக்கப்பட வேண்டும். அது தனிப் பலனைக் கொடுக்கவல்லது. எனினும், இதில் விலங்குகள் பலியிடப்படக் கூடாது. இவ்வாறே புராணங்களில் விதிக்கப்பட்டிருக்கிறது.(40)

ஓ! சோமனின் மங்கல மகளே {அருந்ததியே}, மஹாதேவரின் தயவால் நான் அறிந்து கொண்ட இரண்டாவது விரதத்தையும் நான் இப்போது சொல்லப் போகிறேன்.(41) ஒரு மகனே பெண்கள் விரும்பும் ஒரே பலன் எனக் கல்விமான்கள் கருதுகிறார்கள். மகன்களைப் பெற விரும்புகிறவர்கள் சிறு பாத்திரங்களைக் கொடையளிக்க வேண்டும்.(42) ஆனி, ஆடி ஆகிய இரண்டு மங்கல மாதங்களிலோ, தனியே ஆனியிலோ, ஆடியிலோ முன்பு சொன்ன விதிமுறைகளை நோற்க வேண்டும்.(43) ஓ! அழகிய பெண்ணே, குறிப்பிட்ட அந்த இரண்டு மாதங்களோ, ஒரு மாதமோ முடியும்போது பானகம் நிறைந்த சிறிய பாத்திரத்தைக் கொடையளிக்க வேண்டும்.(44) ஓ! சந்திரப் பிரகாசம் கொண்டவளே, அதே போல அவள் தெளிந்த நெய், தயிர், பால், தேன், குடுவைகள் நிறைந்த நீர் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும்.(45) அவள் எத்தனை மகன்களை விரும்புகிறாளோ அத்தனை அளவுக்கான சிறிய பாத்திரங்களைத் தற்கட்டுப்பாட்டைக் கொண்டவரும், உறுதியான நோன்புகளை நோற்பவரும், ஞானத்தில் பழுத்தவருமான ஒரு பிராமணருக்கு அவள் கொடையளிக்க வேண்டும்.(46)

மகளைப் பெற விரும்பும் எந்தப் பெண்ணும், ஒரு பிராமணருக்கு எந்தப் பொருளையும் தானே விரும்பிக் கொடுத்தால் நிச்சயம் மகளைப்பெறுவாள்.(47) ஓ! தூய புன்னகை கொண்டவளே, விரிப்புகள், பசு, பொன் ஆகியவை கொடைகளில் சிறந்தவையாகும். அறிவுள்ள தூய்மையான பெண்ணொருத்தி, இந்த விரதத்தில், மகன்களைப் பெறுவதற்கு அளிக்கப்படும் சிறு பாத்திரங்களின் கொடை தொடர்பான விதிமுறைகளின்படியே பூணூல்களையும் கொடையளிக்க வேண்டும்.(48,49) விரதத்தின் விதிகளைக் கடைப்பிடிக்கும் பெண், (மகனுக்கோ, மகளுக்கோ உகந்த) மங்கல நட்சத்திரங்களில்[4] ஒரு வருடம் முழுவதும் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(50) ஓ! வாய்மை நிறைந்த அருந்ததி, ஒரு வருடம் நிறைவடைந்ததும் அவள் தன் கணவனின் அனுமதியின் பேரில் சிறு பாத்திரங்களைக் கொடையளிக்க வேண்டும்.(51) அவள், கார்த்திகை மாத பௌர்ணமியில் விரதத்தை முடித்துக் கொண்டு, ஒரு பிராமணருக்குப் பூணூலையும், தங்கப் பூணூலையும் கொடையளிக்க வேண்டும்.(52)

[4] "புஷ்யம் முதலிய சில நட்சத்திரங்கள் மகனைப் பெறுவதற்கும், ரோஹிணி முதலிய சில நட்சத்திரங்கள் மகனைப் பெறுவதற்கும் உகந்த நட்சத்திரங்களாகும். ஒரு மகனைப் பெற விரும்பும் பெண், புஷ்யம் முதலிய நட்சத்திரங்களில் கொடைகளை அளிக்க வேண்டும்; மகனை விரும்பும் பெண், ரோஹிணி முதலிய நட்சத்திரங்களில் கொடையளிக்க வேண்டும். பொருளைத் தெளிவாக உணர்த்தும் வகையில் நாம் இந்த ஸ்லோகத்தைச் சுதந்திரமாக மொழிபெயர்த்திருக்கிறோம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பில், "(ஆண் நட்சத்திரங்களில் மகன்களை விரும்பியும், பெண் நட்சத்திரங்களில் மகள்களை விரும்பியும்) அபத்யாக்யான யோகத்தின் அடிப்படையில் நோன்பின் விதிகளைப் பின்பற்றி நோற்கும் பெண் ஒரு வருடம் முழுவதும் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அபத்யாக்யான யோகத்தால் தான் விரும்பும் பெண் ப்ரஜை, புருஷ ப்ரஜைக் கேற்ப ஸங்கற்பம் செய்து கொண்டு முறையே ரோஹிணி முதலிய ஸ்த்ரீ லிங்க நக்ஷத்ரங்களிலும், புஷ்யம், ஹஸ்தம், திருவோணம் ஆகிய புல்லிங்க நக்ஷத்ரங்களிலும் வருஷ முடிவில் பர்த்தாவின் அனுமதி பேரில் புனித வ்ரத முறையளாய் நன்கு நிறைந்த ஒரு வருஷ காலம், வ்ரதத் தர்மங்களை நடத்திக் கொண்டு (இறுதியில்) ப்ராஹ்மணர்களுக்குக் கமண்டலங்களையும், மற்றவையையும் தானம் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.

கற்புடைய ஒரு பெண் தன் சக்திக்குத் தக்கடி ஒரு பிராமணருக்குப் பூணூலையும், சிறு பாத்திரங்களையும், தக்ஷிணையையும் கொடுத்தால் அவள் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவாள்.(53) ஒரு பெண் எவ்வளவு காலம் இந்த நோன்பை நோற்பாளோ அவ்வளவு காலம் புதிய அரிசி தானியங்களையோ, கனிகளையோ உண்ணக் கூடாது, மலர்களையும் சூடிக் கொள்ளக்கூடாது.(54) ஓ! அறநெறிகளை அறிந்தவளே, ஒரு பெண் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்டு புண்யகச் சடங்கைச் செய்ய வேண்டும். அதே வகையில் அவள் பிராமணர்களுக்கும், தன் கணவனுக்கும் உணவளிக்க வேண்டும்.(55) ஒரு பெண் இவ்வழியில் முழுமையாக ஒரு வருட காலம் நோன்பை நோற்றால், அவள் நற்பேறு பெற்றவளாகவும், அழகு நிறைந்தவளாகவும், செல்வச் சீமாட்டியாகவும் ஆவாள், ஒருபோதும் விதவையாகமாட்டாள்.(56)

ஓ! அருந்ததி, ஒரு வருடம் முழுவதும் கத்தரிக்காய் உண்ணாத பெண் ஒருபோதும் தன் மகனின் அழிவைக் காணமாட்டாள்; இதை உறுதியாக அறிவாயாக.(57) ஒரு பெண் முயல், அல்லது மானின் இறைச்சியை உண்ணாதிருந்தால் அவள் கற்புடையவளாகவும், நீண்ட வாழ்நாளைக் கொண்டவளாகவும் இருப்பாள்.(58) தன் கணவனின் நலத்தை நாடும் பெண், சுரைக்காய், கலவைக்கீரை, மஞ்சள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.(59) ஒரு வருடம் நிறைவடைந்ததும், தொடக்கத்திலிருந்தே செல்வத்துடன் சேர்த்து காய்கறிகளையும் கொடையளிக்கும் பெண், மகன்களைக் கொண்ட பெண்களில் முதன்மையானவளாவாள்.(60) தொடக்கத்திலிருந்தே தன் கால்களைத் தானே கழுவி கொள்ளும் பெண் புகழை அடைவாள், ஒருபோதும் கவலை அடைய மாட்டாள்.(61)

ஒரு வருடம் முழுவதும் இரவில் உணவை உண்ணாமல், பகலில் மட்டுமே உண்ணும் கற்புடைய பெண், நற்பேறு பெறுவாள், ஒரு போதும் அவளது மகன்கள் மாளாதிருப்பார்கள். அவள் தன் கணவனின் பிற மனைவியரைவிட நிச்சயம் மேன்மையடைவாள்.(62,63) இவ்வழியில் ஒரு வருடம் நிறைவடைந்ததும், அவள் தன் இதய விருப்பத்துடன் தங்கத்தாலான ஒரு சூரியப் பிரதிமையை ஒரு சிறப்புமிக்கப் பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும்.(64) இவ்வாறு விரதம் நோற்கும் அறம்சார்ந்த பெண், சூரியன் மறைவதற்கு முன் மலர்களையும், கனிகளையும், பிற உணவுப் பொருட்களையும் கொடையளிக்க வேண்டும்.(65)

ஓ! அழகிய பெண்ணே {அருந்ததியே}, இதே போல ஒருவருடம் முழுவதும் சூரியன் மறைந்த பிறகு உணவை உண்ணும் கற்புள்ள பெண், சந்திரனாலும், நட்சத்திரங்களாலும் தூய்மையாக்கபட்ட உணவுப் பொருட்களையும், தங்கத்தாலான சந்திரன், நட்சத்திரங்கள், கோள்களையும், உப்பால் மறைக்கப்பட்ட ஆடைகளையும் குறிப்பிட்ட பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும்.(66,67) ஓ! தேவியைப் போன்ற வண்ணம் கொண்டவளே, இவ்வாறு செய்வதால் ஒரு பெண் நற்பேறு பெற்றவளாகவும், அழகியாகவும், அனைவராலும் காணத்தகுந்தவளாகவும் ஆவாள். அவளது உடல் சந்திரனைப் போலக் குளிர்ந்திருக்கும்.(68) கார்த்திகை மாத வளர்பிறையில், குசப்புல்லால் பாதங்கழுவுவதற்குரிய தீண்டப்படாத நீரையும், தயிரோடு கூடிய கோதுமை உருண்டைகளையும், தேவர்களுக்குக் காணிக்கையளிக்கும் பெண் தான் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவாள்.(69,70) தெளிந்த நாளென்றாலும், மேகமூட்டமுள்ள நாளென்றாலும் சூரியனைக் காணாமல் உணவை உண்ணாத பெண் தன் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறப் பெறுவாள்.(71) தன் சக்திக்கு ஏற்ற வகையில் ஒரு பிராமணனுக்குத் தங்கத்தைக் கொடையளிக்கும் பெண், நற்பேறு பெற்றவளாகவும், அழகியாகவும், அனைவராலும் காணத்தகுந்தவளாகவும் ஆகிறாள்" என்றாள் {உமாதேவி}.(72)

விஷ்ணு பர்வம் பகுதி – 136 – 080ல் உள்ள சுலோகங்கள் : 72
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்