Sunday 23 August 2020

ருக்மிணியின் சுயம்வரம் | விஷ்ணு பர்வம் பகுதி – 103 – 047

(ருக்மிணீஸ்வயம்வரார்தம்)

Rukshmini's swayamvara | Vishnu-Parva-Chapter-103-047 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : விதர்ப்ப இளவரசி ருக்மிணியின் சுயம்வரம் குண்டினபுரத்தில் நடைபெறுவதை அறிந்த கிருஷணன்...

Lord Krishna riding a chariot

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்த நேரத்தில் குடிமுதல்வனின் வீட்டுக்கு ஒப்பான பலதேவனின் வீட்டில் ஒற்றர்கள்[1] கூடினர்.(1) அந்த ஒற்றர்கள், வருங்காலச் சச்சரவுகள் குறித்து அறிவிக்க விரும்பி அங்கே வந்தபோது, கிருஷ்ணனின் ஆணையின் பேரில் முன்னணி யாதவர்கள் அனைவரும் சபையில் கூடினர்.(2)

[1] சித்திரசாலை பதிப்பில், "உலகக் காரியங்களை நன்கறிந்த மனிதர்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த அத்தியாயம் முழுமையும், இதற்குப் பின்னர் வரப்போகும் அத்தியாயங்கள் பலவும் இல்லை. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஒற்றர்கள்" என்றிருக்கிறது.

முன்னணி யாதவர்கள் அனைவரும் அந்த ஆலோசனைக்கூட்டத்தில் கூடிய போது, அந்த ஒற்றர்கள், எதிர்காலத்தில் நேரப்போகும் மன்னர்களின் அழிவை அறிவிக்கும் வகையில்,(3) "ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போஜன் மகனின் {ருக்மியின்} அழைப்பின் பேரில் குண்டின நகரத்தில் {குண்டினபுரத்தில்} மன்னர்களின் பெருங்கூட்டம் நடைபெற இருக்கிறது. பல்வேறு மாகாணங்களின் மன்னர்கள் அங்கே விரைகின்றனர்.(4,5) ருக்மியின் முதல் சகோதரியான ருக்மிணிக்குச் சுயம்வரம் நடைபெறப்போகிறது என அங்குள்ள மக்கள் அறிவிப்பதை நாங்கள் கேட்டோம்.(6) ஓ! ஜனார்த்தனா, இதற்காக மன்னர்கள் அனைவரும், தங்கள் படைகளுடனும், தொண்டர்களுடனும் அங்கே செல்கின்றனர்.(7) ஓ! யாதவா, பொன்னாபரணங்களில் அலங்கரிக்கப்பட்டவளும், மூவுலகங்களிலும் அழகானவளுமான ருக்மிணியின் சுயம்வரம் இன்றிலிருந்து மூன்றாம் நாளில் நடைபெற இருக்கிறது.(8) சிங்கங்களையும், புலிகளையும் போன்ற செருக்குடையவர்களும், ஒருவரையொருவர் தாக்கிப் போர்புரிய விரும்புகிறவர்களும், மதங்கொண்ட யானையின் நடையைக் கொடையாகக் கொண்டவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களுமான அனைவரும் யானைகளிலும், குதிரைகளிலும், தேர்களிலும் சென்று அங்கே கூடப்போகின்றனர். அந்த உயரான்மாக்களின் நூற்றுக்கணக்கான முகாம்களை அங்கே நாம் காணப் போகிறோம்.(9,10) ஓ! யதுவின் வழித்தோன்றலே, பூமியின் மன்னர்கள் அனைவரும் கூடியிருக்கும்போது, நாம் ஏன் மனச்சோர்வுடன் தனித்திருக்க வேண்டும்? வெற்றியடைவதற்காக நம் படைகள் சூழ அனைவரும் புறப்படுவோம்" என்றனர்.(11)

யதுக்களில் முதன்மையான கேசவன் {கிருஷ்ணன்}, இதயத்தைத் தைக்கும் ஈட்டி போன்ற அந்தச் சொற்களைக் கேட்டுத் தன் படையுடன் உடனே புறப்பட்டான்.(12) பேராற்றல் படைத்த யாதவர்களும் போரில் ஈடுபடும் நோக்கத்துடன் தங்கள் தேர்களில் ஏறி, செருக்கில் நிறைந்த தேவர்களைப் போல அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(13) நடவடிக்கைக்குத் தயாராக இருந்த அந்தச் சக்திவாய்ந்த படையுடனும், தன் கையில் உயர்த்தப்பட்ட சக்கரம், கதாயுதத்துடனும் ஈசானனைப் போலக் கிருஷ்ணன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(14) வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்ற பிற யாதவர்கள், சூரியனைப் போன்று பிரகாசிப்பவையும், கிங்கிணி மணியொலிகளுடன் கூடியவையுமான தேர்த் திரளுடனும் அவனுடைய அழகை மேலும் அதிகரித்தனர்.(15)

முற்போக்குப் பார்வை கொண்ட கோவிந்தன் புறப்படும் நேரத்தில் உக்ரசேனனிடம், "ஓ! பாவமற்றவரே, ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, நீர் என் தமையனுடன் {பலராமனுடன்} இங்கே காத்திருப்பீராக.(16) நாங்கள் புறப்பட்டு இந்நகரம் வெறுமையாக இருக்கும்போது, வஞ்சக நடத்தை கொண்டவர்களும், விதிகளை நன்கறிந்தவர்களும், நம்மிடம் அச்சங்கொண்டிருந்தாலும் தேவலோகத்திலுள்ள தேவர்களைப் போலக் குண்டின நகரத்தில் இன்புற்றிருப்பவர்களுமான க்ஷத்திரியர்கள், ஜராசந்தனின் விருப்பத்தின் பேரில் தாக்கக்கூடும்" என்றான் {கிருஷ்ணன்}".(17,18)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சிறப்புவாய்ந்த அந்தப் போஜ மன்னன் {உக்ரசேனன்}, கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டுப் பற்றில் ஈர்க்கப்பட்ட தேன் போன்ற சொற்களில் மறுமொழி கூறும் வகையில்,(19) "ஓ! கிருஷ்ணா, ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, ஓ! யதுக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனே, ஓ! பகைவரைக் கொல்பவனே, நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக(20) நீ எங்களை விட்டுச் சென்றால், கணவனற்ற பெண்ணைப் போல இங்கேயும் {இந்நகரிலும்}, {இந்த நாட்டில்} எங்கேயும் எங்களால் மகிழ்ச்சியாக வாழ இயலாது.(21) ஓ! குழந்தாய், ஓ! கௌரவங்களை அளிப்பவனே, எங்கள் தலைவனான உன் தோள்வலிமையை நாங்கள் உறைவிடமாகக் கொண்டிருப்பதால், இந்திராதி தேவர்களுக்கே அஞ்சமாட்டோம் என்றால் மன்னர்களைக் குறித்துச் சொல்வதற்கென்ன?(22) ஓ! யதுக்களில் முதன்மையானவனே, வெற்றியடைவதற்காக நீ செல்லுமிடமெங்கும் நாங்களும் உன்னைப் பின்தொடர்ந்து வருவோம்" என்றான் {உக்ரேசேனன்}.(23)

தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, அந்த மன்னனின் {உக்ரசேனனின்} சொற்களைக் கேட்டுப் புன்னகைத்தவாறே, "நீர் விரும்பிய அனைத்தையும் நான் செய்வேன். இதில் ஐயமில்லை" என்றான் {கிருஷ்ணன்}" என்றார் {வைசம்பாயனர்}[2].(24)

[2] சித்திரசாலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் இந்த அத்தியாயம் இன்னும் தொடர்ந்து சென்று 46 ஸ்லோகங்களில் நிறைவடைகிறது. இதில் அதிகம் வரும் 22 ஸ்லோகங்கள் மன்மதநாததத்தரின் பதிப்பில் அடுத்த அத்தியாயமாக வருகிறது.

விஷ்ணு பர்வம் பகுதி – 103 – 047ல் உள்ள சுலோகங்கள் : 24
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்