Saturday 3 July 2021

ஹிரண்யகசிபுவின் சபா மண்டபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 37அ

(ஹிரண்யகஷிபுஸபாவர்ணநம்)

The assembly hall of Hiranyakashipu | Bhavishya-Parva-Chapter-37a | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹரிண்யகசிபுவின் சபா மண்டப வர்ணனை; அங்கிருந்த அப்சரஸ்கள், கந்தர்வர்கள், தைத்தியர்கள்...

Lord Narasimha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்தச் சபாமண்டபத்தில் தைத்தியேந்திரனான தலைவன் ஹிரண்யகசிபு, நூறு முழம் சுற்றளவைக் கொண்ட ஒரு தெய்வீக அரியணையில் அமர்ந்திருந்தான்.(1) ஓ! மன்னா, சுடர்மிக்கக் காதுகுண்டலங்களை அணிந்த தலைவன் ஹிரண்யகசிபு, சூரியனைப் போன்று பிரகாசிக்கும் தெய்வீகமான அழகிய கூரையைக் கொண்ட அந்தச் சபாமண்டபத்தில் தலைமை தாங்கி நீண்ட காலம் ஆட்சி செய்து கொண்டிருந்தான்.(2) அந்தத் தைத்திய மன்னனைச் சுற்றிலும், புழுதியற்றதும், தெய்வீக நறுமணம் கமழ்வதுமான சுகமான தென்றல் மென்மையாக வீசிக் கொண்டிருந்தது.(3)

அங்கே அப்சரஸ்கள் சூழ தேவர்களும், கந்தர்வர்களும் தெய்வீகத் தாளத்தின் துணையுடன் தெய்வீகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர்.(4) விஷ்வாசி, பிரம்லோசை என்று புகழப்படும் ஸஹஜன்யை, திவ்யை, ஸௌரபேயை, ஸமீசி, புஞ்ஜிகஷ்தலை,(5) மிஷ்ரகேசி, ரம்யை, சித்திரசேனை, ஷுசிஸ்மிதை, சாருநேத்ரை, கிருதாசி, மேனகை, ஊர்வசி ஆகியோரும்,(6) பாடுவதிலும் ஆடுவதிலும் புகழ்பெற்ற இன்னும் நூற்றுக்கணக்கான அப்சரஸ்களும் மன்னன் ஹிரண்யகசிபுவுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(7) அற்புத ஆபரணங்களாலும், ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டவனும், சுடர்மிக்கக் காதுகுண்டலங்களுடன் கூடியவனுமான ஹிரண்யகசிபு, ஆயிரக்கணக்கான பெண்களால் சூழப்பட்டிருந்தான்.(8)

பெருஞ்சக்திவாய்ந்த கரங்களைக் கொண்ட தலைவன் ஹிரண்யகசிபு, அந்தச் சபாமண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, ஏற்கனவே வரங்களைப் பெற்ற திதியின் மகன்கள் அனைவரும் அங்கே அமர்ந்திருந்தனர்.(9) விரோசனன் மகனான பலி, பூமியை வென்ற நரகன், பிரஹ்லாதன், விப்ரசித்தி, மஹாசுரனான கவிஷ்டன்,(10) அஹந்தன், குரோதஹந்தன், ஸுமநன், ஸுமதி, கரன், கடோதரன், மஹாபார்ஷ்வன், கிரதநன், பிடரன்,(11) விஷ்வரூபன், ரூபன், விரூபன், மஹாத்யுதி, தசக்ரீவன் {ராவணன்}, வாலி, மேகவாஸன், மஹாரவன்,(12) கடாபன், விகடாபன், ஸம்ஹ்ராதன், இந்திரதாபநன் முதலிய தைத்திய, தானவர்கள் அனைவரும் சுடர்மிக்கக் காது குண்டலங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(13) அவர்கள் அனைவரும் மாலைகள் அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாகவும், தபங்கள் செய்த நல்ல வரலாற்றைக் கொண்டவர்களாகவும், வரங்களைப்பெற்றவர்களாகவும், வீரர்களாகவும், மரணமற்றவர்களாகவும் இருந்தனர்.(14)

தெய்வீக ஆடைகளையுடுத்தியிருந்த இந்தத் தைத்தியர்களும், இன்னும் பிற தானவர்கள் பலரும் தலைவனான ஹிரண்யகசிபுவுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(15) மாலைகளையும், ஆபரணங்களையும் அணிந்திருந்த அவர்கள், காணிக்கைகளால் சுடர்விடும் ஆகாய விமானங்கள் பலவற்றில் அந்தச் சபாமண்டபத்திற்கு வந்திருந்தனர்.(16) அவர்கள் விசித்திர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர், அழகிய ஆடைகளை உடுத்தியிருந்தனர், விசித்திர ஆயுதங்களையும், கேடயங்களையும் கொண்டிருந்தனர், விசித்திரமான கொடிக்கம்பங்களையும் வாகனங்களையும் கொண்டிருந்தனர்.(17) அவர்கள் தங்கள் தோள்களில் வானவில்களைப் போலிருந்த மிகச் சிறந்த தோள்வளைகளைப் பூண்டிருந்தனர். திதியின் மகன்களான அந்தத் தைத்தியர்கள் எப்போதும் தைத்திய மன்னனுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(18) அந்தத் தெய்வீக சபாமண்டபத்தில் மலைகளுக்கு ஒப்பாகத் திகழ்ந்த அவர்கள் அனைவரும் சூரியனைப் போன்று பளபளக்கும் பொன்மகுடங்களை அணிந்திருந்தனர்.(19)

அந்த மிருகாதிபன் {நரசிங்கன்}, பொன்னாலும் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அழகிய மேடையைக் கொண்டதும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளைக் கொண்டதும், யானைகளின் தந்தங்களாலான சாளரங்களைக் கொண்டதுமான அந்தச் சபாமண்டபத்தைக் கண்டான்.(20) அந்த மிருகாதிபன் {நரசிங்கன்}, பொன்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், சூரியனைப் போலப் பளபளக்கும் அசுரகணங்களால் தொண்டாற்றப்பட்டவனும், திதியின் மகனுமான அந்த ஹிரண்யகசிபுவைக் கண்டான்" என்றார் {வைசம்பாயனர்}[1].(21)

[1] இந்த அத்தியாயம் முழுவதும் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. இது சித்திரசாலை பதிப்பில் உள்ளது. இந்த அத்தியாயம் முழுவதும் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லாததால் இந்த அத்தியாயத்தின் எண் 37அ என்று கொடுக்கப்படுகிறது.

பவிஷ்ய பர்வம் பகுதி – 37அ_ல் உள்ள சுலோகங்கள் : 21

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்