Monday 7 February 2022

துர்வாசரின் எச்சரிக்கை | பவிஷ்ய பர்வம் பகுதி – 84

(துர்வாஸஸோ பாஷணம்)

Durvasa warns | Bhavishya-Parva-Chapter-84 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சந்நியாச தர்மத்தை நிந்தித்த ஹம்சனும், டிம்பகனும்...


Durvasa

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "துர்வாசர், அவ்விரு இளவரசர்களையும் சாம்பலாக்கி விடுபவரைப் போல, நெருப்புக்கு ஒப்பான தமது ஒற்றைக் கண்ணால் கோபத்துடன் அவர்களைப் பார்த்தார்.(1) மன்னா {ஜனமேஜயா}, உண்மையில் அம்முனிவர், கோபவசத்தில் மொத்த உலகத்தையும் சாம்பலாக்கப் போகிறவரைப் போல அவ்விரு இளவரசர்களையும் வெறித்துப் பார்த்தார்.(2) அன்புக்குரிய மன்னா, தமது மற்றொரு கண்ணால் பக்திமானும், நற்பேறு பெற்ற பிராமணனுமான ஜனார்த்தனனை அவர் பார்த்தார்.

பிறகு அம்முனிவர், அந்த இளவரசர்களிடம், "இங்கிருந்து உங்கள் உறவினர்களிடம் உடனே திரும்பிச் செல்வீராக.(3) தாமதிக்காமல் விரைவாக இவ்விடத்தை விட்டகல்வீராக. உங்கள் சொற்களால் உண்டான கோபத்தை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.(4) என் பார்வையில் இருந்து அகல்வீராக. நான் விரும்பினால் மொத்த உலகையும் சாம்பலாக்கிவிடுவேன் எனும் போது, மன்னர்களான உங்கள் இருவரைக் குறித்து என்ன சொல்வது? நல்லறிவுள்ள எந்த மனிதன்தான் இத்தகைய துணிச்சலுடன் என்னிடம் பேசத் துணிவான்?(5) மூட இளவரசர்களே, சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணன் வெகுவிரைவில் உங்கள் செருக்கை அழிப்பான் என்ற தகவலை மட்டும் இப்போதைக்கு உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார் {துர்வாசர்}.(6)

சந்நியாசிகளின் நற்குருவான துர்வாச முனிவர், இதைச் சொல்லிவிட்டு விலக முற்பட்ட போது ஹம்சன் வழிமறித்தான்.(7) மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, யமனைப் போன்ற கொடூரனான ஹம்சன், துர்வாசரின் கைகளைப் பிடித்து அவரது இடைக்கச்சையை {கௌபீனத்தை / கோவணத்தைக்} கிழித்தான்.(8) இதைக் கண்ட மற்ற சந்நியாசிகள் பீதையடைந்து பத்துத் திக்கிலும் தப்பி ஓடினர்.

பிராமணன் ஜனார்த்தனன், "ஐயோ, இதுவென்ன துன்பம்?" என்று கதறியும், "நீ என்ன செய்கிறாய்?" என்று தன் நண்பனான ஹம்சனிடம் சொல்லியும்,{9} அவனைத் தடுக்கத் தன்னாலான சிறந்த முயற்சியைச் செய்தான்.

துர்வாச முனிவர் ஹம்சனைக் கொல்லும் வல்லமை பெற்றவர் என்றாலும் அமைதியாக,{10} "இழிந்தவனே, அரச குடும்பத்தின் மதிப்பைக் கெடுப்பவனே, சாபத்தால் உன்னை என்னால் கொல்லமுடியும் என்றாலும், நான் துறவி என்பதால் அதைச் செய்யத் தயங்குகிறேன்.{11} யதுவின் வழித்தோன்றலும், சங்கு, சக்கர, கதாதாரியுமான ஜகந்நாதன் உன் செருக்கை விரைவில் அழிப்பான். யாதவர்களில் முதன்மையான அவன், தற்போது உன்னைப் போன்ற அசுரர்களிடம் இருந்து உலகில் நல்லவர்களைக் காப்பதில் ஈடுபட்டு வருகிறான்.{12,13} இளவரசர்களான நீங்கள் இருவரும், பரமனால் கொல்லப்பட்டு விடுதலை அடைவதால் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளே. உங்கள் நண்பனும், ஆதரவாளனுமான ஜராசந்தன், தீங்கிழைக்கும் இத்தகைய சொற்களை ஒருபோதும் சொல்ல மாட்டான்.{14} அவன் பெரும் பக்திமான். தீங்கிழைக்கும் உங்கள் நடத்தையால் ஜராசந்தன் உங்கள் பகைவனாவான். நீங்கள் செய்த குற்றங்களை அறிந்தும், உங்கள் மீது கொண்ட நட்பின் காரணமாக அவன் அமைதியாக இருந்தால் அவனும் அழிவையே அடைவான். இதில் ஐயமேதுமில்லை" என்றார் {துர்வாசர்}. துர்வாச முனிவர் இதைச் சொல்லிவிட்டு, மீண்டும் ஹம்சனிடம், "இங்கிருந்து செல். உடனே செல்வாயாக" என்று சொன்னார்.{15-17}

பிறகு சந்நியாசிகளில் சிறந்தவரான அவர், {பிராமணன்} ஜனார்த்தனனிடம், "மேன்மைவாய்ந்த பிராமணா, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} உறுதியான பக்தி கொள்வாயாக.{18} இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ நீ {சங்கு, சக்கர, கதாதாரியான} பரமனைச் சந்திப்பாய். முனிவனைப் போல எப்போதும் நீ ஒழுக்கத்தில் உறுதியாக இருப்பாய்.(9-19) சாதுக்கள் இம்மையிலோ, மறுமையிலோ ஒருபோதும் அழிவடைவதில்லை. இல்லந்திரும்பி நடந்தவை அனைத்தையும் உன் தந்தைக்கு {மித்ரஸஹருக்குச்} சொல்வாயாக" என்றார் {துர்வாசர்}".(20)

பவிஷ்ய பர்வம் பகுதி – 84ல் உள்ள சுலோகங்கள் : 20

மூலம் - Source

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்