Monday, 7 February 2022

சந்நியாச தர்ம நிந்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 83

(ஸந்யாஸதர்மநிந்தா)

Insult to Sannyasa dharma | Bhavishya-Parva-Chapter-83 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சந்நியாச தர்மத்தை நிந்தித்த ஹம்சனும், டிம்பகனும்...


Durvasa

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பிராமணா {துர்வாசா}, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? மெய்யறிவின் சுவடொன்றேனும் உன் இதயத்தில் வசிக்கவில்லை என்றே தெரிகிறது. உன் ஆசிரமமென்ன?(1) கிருஹஸ்த ஆசிரமத்தை நிராகரிப்பதன் மூலம் எதை அடைய நீ விரும்புகிறாய்? வஞ்சகனாகவே நீ தென்படுகிறாய். பற்றறுந்தவன் போல் நடிக்கும் உன் நடிப்பை வேறு எதனால் விளக்கிவிட முடியும்?(2) மூடா, சீடர்களாக நீ கருதும் இவர்கள் அனைவரையும் நீ கெடுத்துக் கொண்டிருக்கிறாய். உண்மையில், நீ அவர்கள் அனைவரையும் நரகத்திற்கே இட்டுச் செல்கிறாய்.(3) 

மூடப் பிராமணா, நிச்சயம் இறுதியில் நீ அழிவையே அடைவாய். உன் பாதச்சுவடுகளைப் பின்பற்றும் இவர்கள் அனைவரும் உன்னையே பின்பற்றுவர். ஐயோ! ஏன் இன்னும் உன்னைப் போன்ற ஒரு வஞ்சகனை எவனும் தண்டிக்கவில்லை? இவை யாவற்றையும் உனக்குக் கற்பித்தவனும் பெரும்பாவியே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பிராமணா, இந்த ஆசிரமத்தைக் கைவிட்டுக் கிருஹஸ்தனாவாயாக. உன் மனத்தைக் கட்டுப்படுத்தி ஐவகை வேள்விகளைச் செய்தால் நீ மறுமையில் இன்புற்றிருப்பாய். கிருஹஸ்த ஆசிரமமே மங்கலத்தை அருளும் உண்மையான பாதையாகும். நீ மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், நாங்கள் சொல்வதைப் போலச் செயல்படுவாயாக" என்றனர்.

எனினும் பக்திமிக்கப் பிராமணன் ஜனார்த்தனன் இந்தச் சொற்களைக் கேட்டுப் பெரிதும் துன்புற்றான். அவன் சந்நியாசியான துர்வாசரை வெறித்துப் பார்த்து, அவரது பாதங்களை வணங்கிவிட்டுத் தன்னிரு நண்பர்களிடமும், "என் அன்புக்குரிய இளவரசர்களே, உங்கள் புத்தியும், பகுத்தறிவும் மாசடைந்திருக்கின்றன. இவ்வாறு பேசாதீர்! இவ்வாறான கேட்கத்தகாத வாக்கியங்கள் இம்மையிலும், மறுமையிலும் தீங்கிழைப்பவையே. இம்மையில் தன் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் மகிழ்ச்சியாக வசிக்க விரும்பும் எந்தப் பாவிதான் இவ்வாறு பேசுவான்?(4-9)

இந்த உயரான்மா இதோ உங்கள் முன் மரணத்தின் வடிவமாக {காலனாக} நிற்கிறார். உடனடியாக உங்கள் வீழ்ச்சி நிகழப்போகிறதெனத் தெரிகிறது. நீங்கள் இருவரும் இந்தப் பிராமணரின் கோபத்தால் ஏற்கனவே இறந்துவிட்டீர்களென்றே நான் கருதுகிறேன்[1].(10) இங்கே இருக்கும் முனிவர்கள் அனைவரும் தூய இதயம் படைத்த சந்நியாசிகளாவர். ஆழமான ஞானமெனும் தீபத்தால் இவர்களின் இதயங்கள் ஒளியூட்டப்பட்டதாலேயே தாங்கள் திரட்டிய பாவங்களை இவர்கள் சாம்பலாக எரித்திருக்கிறார்கள். இதோ அந்தத் தூய நிலையிலேயே இவர்கள் தங்கள் வாழ்வைப் பரமனின் தொண்டிற்கு அர்ப்பணித்திருக்கிறார்கள்.(11) இந்த உயரான்மாவை இவ்வாறு நிந்திக்கத் துணிபவன் உங்களைத் தவிர வேறு எவன்? உங்கள் முடிவு அருகில் வந்துவிட்டதென நான் நம்புகிறேன்.(12)

[1] ஜனார்த்தனன் வைஷ்ணவன் என்றும், துர்வாசரும், ஹம்சடிம்பகர்களும் சைவர்கள் என்றும் முன் அத்தியாயங்களில் நாம் கண்டிருக்கிறோம் என்பது இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.

என் அன்புக்குரிய மன்னர்களே, நீண்ட காலத்திற்கு முன்னர்ப் பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசமென்று அந்தக் காலச் சமூகத்தை நான்கு ஆசிரமங்களாக வகுத்தனர்.(13) அவற்றில் நான்காவதான சந்நியாச ஆசிரமமே தலைச்சிறந்தது. பெரும் நுண்ணறிவுமிக்கவனும், பெரும்பக்திமானுமான ஒருவன் மட்டுமே சந்நியாச ஆசிரமத்தை ஏற்கத் தகுந்தவனாவான்.(14) நீங்கள் இருவரும் ஒருபோதும் பெரியோருக்குக் கீழ்ப்படிந்து, வழிபட்டுத் தொண்டாற்றியதில்லை. பெரும் முனிவர்களின் உதடுகளில் உதிர்ந்த ஆழ்ந்த ஞானத்தையும் நீங்கள் கேட்டதில்லை. நல்ல தொடர்பால் ஈட்டப்பட்ட ஞானத்தை மதிக்காதவன் எவனும் உங்களைப் போலவே பேசியிருப்பான்.(15)

மன்னா {ஹம்சா}, என்னால் இதுபோன்ற அவதூறுகளைக் கேட்க சகிக்க முடியவில்லை. இருப்பினும் நீ என்னுயிர் நண்பனாக இருக்கிறாய். இஃது எனக்கான இக்கட்டான சூழ்நிலை. நான் என்ன செய்வது? இந்தச் சூழ்நிலையில் நான் ஆதரவற்றவனாக இருக்கிறேன்.(16) மன்னா {ஹம்சா}, உன் குருக்களிடம் இருந்து நீ பெற்ற அறிவனைத்தும் இப்போது உன் துன்பத்திற்கான காரணமாகியிருக்கின்றன. அறக்கோட்பாடுகளைப் பின்பற்றுகையில் அடையப்படும் ஞானம், எப்போதும் நல்ல விளைவுகளையே அருளும். எனினும், பலவந்தமாகவோ, அகங்காரத்துடனோ அடையப்படும் ஞானம் பாவங்களிலேயே ஒருவனை ஆழ்த்தும்.(17) நான் உங்களைக் கைவிடலாமா, உயர்ந்த இடத்தில் இருந்து பாறையில் விழலாமா, நஞ்சுண்ணலாமா, பெருங்கடலில் மூழ்கலாமா என்பது தெரியவில்லை.(18) ஒருவேளை உங்கள் முன்னிலையிலேயே நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமோ?" என்றான் {ஜனார்த்தனன்}. இவ்வாறே அந்த ஜனார்த்தனன், அந்த இளவரசர்கள் இருவரும் நிந்திப்பதைத் தடுத்து அழுது கொண்டிருந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(19)

பவிஷ்ய பர்வம் பகுதி – 83ல் உள்ள சுலோகங்கள் : 19

மூலம் - Source

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்