Saturday, 18 December 2021

கிருஷ்ண ஸ்வரூபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 64

(மஹாதேவேந கிருஷ்ணஸ்வரூபவர்ணநம்)

Krishna Swaroopa | Bhavishya-Parva-Chapter-64 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: கிருஷ்ணனின் ஸ்வரூபத்தை முனிவர்களிடம் விளக்கிச் சொன்ன சிவன்...

Lord Shiva, Devas and Sages

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "சிவன், அந்தத் தேவதேவேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு முனிவர்களிடம் திரும்பி, "விப்ரர்களே, ஹரியைக் காண வந்திருக்கும் பக்தர்களான நீங்கள் அனைவரும் இவனைக் குறித்த இந்த உண்மையை அறிய வேண்டும்.(1) இந்தத் தேவனே பரம்பொருளாவான். இவனுக்கு இணையாகவோ, மேன்மையாகவோ வேறெவரும் இல்லை. இவனே நீங்கள் செய்யும் தவங்களின் இறுதி இலக்காவான். இந்த உண்மையை நீங்கள் அறிவீராக.(2) விப்ரர்களே, சிதறாத கவனத்துடன் இவனைத் தியானிப்பதையே வழக்கமான பயிற்சியாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இவனை அறிந்து கொள்வதே உங்களுக்கு முழுமையை அளிக்கும், அதுவே உங்கள் பரம தனமாகவும் இருக்கும்.(3)

இவனை அறிந்து கொள்வதே உங்கள் பிறப்பின் இறுதி வெற்றியாகவும், உங்கள் தவங்களின் பலனுமாக இருக்கும். உண்மையில் இவனை அறிந்து கொள்வதே உங்கள் புண்ணியங்களின் கொள்ளிடமும், உங்கள் சநாதன தர்மமுமாகும்.(4) இவனே உங்களுக்கு மோட்சத்தை அருள்வான். இவனே எடுத்துக்காட்டாக இருந்து இதை உங்களுக்குக் கற்பிப்பான். இவனே புண்ணியத்தை அருள்வான், இவனே உங்கள் நற்செயல்களில் பலனாகவும் இருப்பான்.(5)

ஆன்ம அறிவியலைக் கற்றறிந்த அறிஞர்கள் இவனையே துதிக்கின்றனர். இவனே மூன்று வேதங்களின் இறுதி இலக்காவான். பிரம்மத்தை அறிந்த பிரம்மவாதிகள் இவனது தாமரைப் பாதங்களை அடைய இவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர்.(6) சாங்கிய தத்துவத்தைப் பின்பற்றி மாயா யோகத்தை நித்தம் பயிலும் கல்விமான்களும் இவனையே துதிக்கின்றனர். வேதங்களை நன்கறிந்த கல்விமான்கள், தன்னை அறிந்து கொண்ட ஆன்மாக்கள் அனைத்தின் இறுதி இலக்காக இவனையே ஏற்கின்றனர்.(7) இது சச்சரவில்லா உண்மை என்பதால், இக்காரியத்தை மேலும் கருத்தில் கொள்ள ஏதுமில்லை. எப்போதும் சத்வ குணத்துடன் இருக்கும் உங்களைப் போன்ற பக்தர்கள் ஹரியையே நித்தம் தியானிக்க வேண்டும்.(8)

நீக்கமற நிறைந்திருக்கும் நாராயணனுக்கு மேலானவன் எவனுமில்லை. விப்ரர்களே, நீங்கள் எப்போதும் ஓங்காரத்தைச் சொல்லி கேசவனைத் தியானிப்பீராக.(9) அவ்வாறு செய்வதால் நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதி இலக்கை அடைவீர்கள். இதில் ஐயமேதும் இல்லை. ஒரு பக்தன் ஹரியைத் தியானித்தால் இவன் எளிதில் நிறைவடைகிறான்.(10) விப்ரர்களே, விஷ்ணு உங்களிடம் நிறைவடைந்தால், உங்களைப் பொருள் பற்றில் இருந்து விடுவிப்பான். அச்யுதனின் தொடர்பை அடைய நீங்கள் விரும்பினால் இடையறாமல் இவனைத் தியானிப்பீராக.(11)

விஷ்ணுவை உங்கள் ஆன்ம குருவாகக் கருதுவீராக. இவன், பொருள் பற்றின் காரண வேரான உங்கள் அறியாமையை அகற்றுவான். எனவே, முக்குண அவதாரங்களெனப் பிரம்மன், விஷ்ணு, சிவனை ஏற்கும் நீங்கள் எப்போதும் ஹரியை நினைத்துத் துதிக்க வேண்டும்.(12) விப்ரர்களே, தவப்பயிற்சியால் சக்தியூட்டப்பட்ட நீங்கள் எப்போதும் கவனமாக உங்கள் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் மனமும், புலன்களும் உங்களுக்குக் கட்டுப்படுவதன் மூலம் தூய்மையடைந்துவிட்டால் உங்களிடம் விஷ்ணு நிறைவடைவான்.(13)

விப்ரர்களே, நீங்கள் என்னை நினைத்தால், நான் கேசவனைக் குறித்த ஞானத்தை உங்களுக்குக் கொடுப்பேன். இவனை வழிபடுவதால், தானாகவே நானும் வழிபடப்பட்டவனாவேன்.(14) இவனை அடையும் உபாயங்களை விளக்கிச் சொன்ன என்போதனைகளில் நீங்கள் ஐயமேதும் கொள்ளாதீர். பாவம் நிறைந்த உணர்வுகள் அனைத்தையும் அழிக்கும் இந்தப் பிரபுவே மாயையின் தலைவனாவான். எனவே நீங்கள் அனைவரும் இவனது தாமரைப் பாதங்களை அடைய முயற்சி செய்ய வேண்டும்.(15) விப்ரேந்திரர்களே, உங்கள் நற்புத்தி சுட்டும் வழியில் செயல்படுவீராக, அவ்வாறு செயல்படுவதால் நீங்கள் தூய்மையடைவீர்கள். அவ்வாறே தேவனும் உங்களிடம் நிறைவடைவான்" {என்றான் சிவன்}".(16)

வைசம்பாயனர் சொன்னார், "மன்னா {ஜனமேஜயா}, சங்கரன் பேசியதைக் கேட்ட அந்தப் புண்ணியச் சீலர்கள் அனைவரும், அவனது போதனைகளை ஏற்றுத் தங்கள் மனங்களில் இருந்த ஐயங்கள் அனைத்திலிருந்தும் தெளிவடைந்தனர்.(17)

அந்த விப்ரர்கள் அனைவரும் கூப்பிய கரங்களுடன் மஹாதேவனிடம் {சிவனிடம்}, "ஹரனே, நீ சொன்னது அனைத்தும் உண்மையே. எங்கள் ஐயங்கள் மறைந்தன. உன் தீர்மானங்களை முழுமையாக நாங்கள் ஏற்கிறோம்.(18) தேவா, இந்தக் காரியத்திற்காகவே உன்னுடைய வசிப்பிடத்திற்கு இன்று நாங்கள் வந்தோம். உங்கள் இருவரையும் சந்தித்ததால், எங்கள் மாயைகள் விலகின.(19) தேவேசா, உன் போதனைகளைப் பின்பற்றுவதிலேயே எங்களுக்கான உண்மையான நன்மை இருக்கிறது. உன்னால் பரிந்துரைக்கப்பட்டபடியே நாங்கள் எப்போதும் ஹரியை நிறைவடையச்செய்ய முயற்சிப்போம்" என்றனர் {முனிவர்கள்}. பகவான் ருத்திரனிடம் இவ்வாறு சொன்ன அந்த முனிவர்கள் அனைவரும் கேசவனின் தாமரைப் பாதங்களில் விழுந்து வணங்கினர்" {என்றார் வைசம்பாயனர்}.(20) 

பவிஷ்ய பர்வம் பகுதி – 64ல் உள்ள சுலோகங்கள் : 20

மூலம் - Source

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்