Thursday 16 December 2021

விஷ்ணுவின் சிவத்துதி | பவிஷ்ய பர்வம் பகுதி – 62

(ஸ்ரீ விஷ்ணுக்ருதா ஷிவஸ்துதி)

Krishna's Hymn to Shiva | Bhavishya-Parva-Chapter-62 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சிவனைத் துதித்த கிருஷ்ணன்...

Lord Shiva சிவன்

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "இவ்வாறு பகவான் ருத்திரன், தன் காளை வாகனத்தைச் செலுத்திக் கொண்டும், பூதங்களின் துணையுடனும், எண்ணற்ற பிசாசங்கள், உரகங்கள் ஆகியவற்றுடன் அங்கே வந்தான்.(1) தேவேசனான விஷ்ணு உத்தம தவம் செய்து கொண்டும், விதிப்படி வேள்வி நெருப்பில் புனித ஆகுதிகளைச் செலுத்திக் கொண்டும் இருப்பதை அவன் கண்டான்.(2) தலைவன் கிருஷ்ணன் ஒரு வேட்டியையும், சாதரத்தையும் {துண்டையும்} அணிந்திருந்தான், அவனது முடி சடையாக இருந்தது. கருடன் அவனுக்கு விறகுகளைக் கொண்டு வந்தான், சக்கரம் மலர்களைக் கொண்டு வந்தது, திரிசூலம் குசப்புற்களைக் கொண்டு வந்தது. கதாயுதம் பிற தொண்டுகளைச் செய்து வந்தது. அந்தத் தலைவன் இந்திரன் தலைமையிலான தேவர்களாலும், பெரும் முனிவர்களாலும் சூழப்பட்டிருந்தான்.(3,4)

அப்போது பிரபுவான பகவான் {கிருஷ்ணன்} சர்வபூதங்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஏதோவொன்றைத் தியானித்துக் கொண்டிருந்தான். முக்கண்ணனும், அமைதிமிக்கவனும், மகத்தானவனுமான உமாபதி {சிவன்}, அவனை {கிருஷ்ணனைக்} கண்டு தன் வாகனத்தில் இருந்து கீழே இறங்கினான். பெரும் நிறைவடைந்த தலைவன் சிவன், பூதங்கள், பிசாசங்கள், ராக்ஷசர்கள், குஹ்யகர்கள்,{5,6} முனிவர்கள், விப்ரர்கள் ஆகியோருடன் சேர்ந்து, "தேவா {கிருஷ்ணா}, ஜகந்நாதா, உனக்கு ஜயம் உண்டாகட்டும். ருத்திரனாக விரிவடையும் ஜனார்த்தனா, உனக்கு ஜயம் உண்டாகட்டும்.(5-7) விஷ்ணுவே {நீக்கமற நிறைந்தவனே}, ரிஷிகேசா {புலன்களை வென்றவனே}, நாராயணா, உனக்கு ஜயம் உண்டாகட்டும். பராயணா {தஞ்சம் அளிப்பவனே}, புராணாத்மா {புராதன தேவா}, ஹரேஷ்வர {சிவனுக்குத் தலைவனான} தேவா, உனக்கு ஜயம் உண்டாகட்டும்.(8) ஆதிதேவா, ஜகந்நாதா, உனக்கு ஜயம் உண்டாக்கடும். சங்கரப் பாவனா {சங்கரனின் பிறப்பிடமே, உயிரினங்களைக் காப்பவனே}, உனக்கு ஜயம் உண்டாகட்டும். கௌஸ்துப மணியால் ஒளிரும் அங்கங்களைக் கொண்டவனே, உனக்கு ஜயம் உண்டாகட்டும். பஸ்மவிராஜிதா {சாம்பல் பூசிய உடல் கொண்டவனே} உனக்கு ஜயம் உண்டாகட்டும்.(9) சக்கரகதாபாணியே, உனக்கு ஜயம் உண்டாகட்டும். சூலிந்திரிலோசனா {சூலம் தரித்தவனே, முக்கண்ணனே}, உனக்கு ஜயம் உண்டாகட்டும். மௌக்திகமுத்துக்களால் அங்கங்கள் ஒளிர்பவனே, உனக்கு ஜயம் உண்டாகட்டும். நாகவிபூஷணா {பாம்புகளின் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனே}, உனக்கு ஜயம் உண்டாகட்டும்" {என்றான் சிவன்}.(10)

முனிவர்கள் இந்த வணக்கமொழிகளைச் சொல்லிவிட்டு அந்த ஹரியை வணங்கினர். பகவான் {கிருஷ்ணன்}, செந்நீல வண்ணனும், பொருளின் இயல்பை ஆள்பவனும், பாவங்களை அழிப்பவனும், காளையைக் கொடியாகக் கொண்டவனுமான சங்கரனைக் கண்டபோது இதயம் நிறைவடைந்தவனாக மஹாதேவனைப் பின்வருமாறு துதித்தான்:(11,12)

பகவான் {கிருஷ்ணன்} சொன்னான்: "நஞ்சுண்டு கண்டம் {தொண்டை} நீலமடைந்த நீலகண்டா, படைப்பவனும், பிரகாசம் கொண்டவனும், உபவாசங்களில் சிறந்தவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(13) இந்த அண்டத்தில் அனைத்தையும் ஆள்பவனே, கதாதாரியே, ரிஷப ரூபம் கொண்ட மொத்த அண்டத்தையே உடலகாகக் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(14)

பொருள் வடிவமற்றவனே, பிநாகாபாணியே, துன்புற்றவர்களின் உற்ற நண்பனே, மங்கல வடிவம் கொண்ட சிவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(15) தன்னில் நிறைவடைந்தவனாக இருந்தாலும், பொல்லாதவர்களைக் கொல்பவனே, மலைகளில் வசிப்பவனே, முற்றான அமைதியாகவும், பெரும் மங்கலனாகவும் திகழ்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(16)

ஹரனே, ஹரிஹரனே, கோரனே {பயங்கரனே}, அகோரனே {பயங்கரமற்ற மென்மையானவனே}, கோரனுக்கும், அகோரனுக்கும் பிரியனே, உன்னை நான் வணங்குகிறேன்.(17) கால ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவனே, காலத்தைக் கட்டுப்படுத்துபவனே, இரண்டாம் நிலை படைப்பாளிகளைப் படைப்பவனே, கிரிகளில் வசிப்பவனே, சாந்தமானவனே, மங்கலமான சிவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(18)

பெரு வடிவம் கொண்டவனே, புனிதத்தலங்களை மாசடையச் செய்யும் அசுரர்களை அழிப்பவனே, பரம வசிப்பிடமே, இருப்பில் உள்ள அனைத்தின் மூல வித்தே, எட்டு வடிவங்களில் வெளிப்படுபவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(19) புலித்தோலுடுத்தியவனே, பினாகாபாணியே, திரிசூலந்தரித்தவனே, கட்வாங்கம் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(20)

தேவதேவனே, ஆகாசமூர்த்தியே, ஹரனே, ஹரிரூபனே, பேரொளி படைத்தவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(21) பக்தனே, பக்தனுக்குப் பிரியமானவனே, பக்தர்களுக்கு அருள்பவனே, வான விரிவையே வடிவமாகக் கொண்ட ஜகன்மூர்த்தியே, உன்னை நான் வணங்குகிறேன்.(22)

சந்திரதேவா, சூரியதேவா, பிரதான தேவனே, பூதபதியே உன்னை நான் வணங்குகிறேன்.(23) சடாமுடியுடன் பயங்கர வடிவம் கொண்டவனே, வழக்கத்திற்கு மாறான அலங்காரம் கொண்டவனே, பூதங்களுக்கு {உயிரினங்களுக்கு} நன்மை செய்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(24)

சூரியக்கதிர்களைப் போன்ற பிரகாசமான கேசத்தைக் கொண்டவனே, வில் தரிப்பவர்களில் முதன்மையானவனே, பக்தர்களின் இதயங்களில் உள்ள அச்சங்களை விலக்குபவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(25) பகைவரின் இதயங்களில் அச்சத்தை உண்டாக்கும் ஹரனே, தக்ஷனின் வேள்வியை அழித்தவனே, பகனின் கண்களைப் பறித்தவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(26)

பவனென அறியப்படும் உமாபதியே, கைலாயத்தில் வசிப்பவனே, படைப்பின் ஆதி தேவா, அண்டத்தைப் புறவடிவாகக் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(27) கபாலத்தைக் கைகளில் தாங்கியவனே, பிரம்மனின் ஐந்தாம் தலையைக் கொய்தவனே, முக்கண்களைக் கொண்டதால் திரையம்பகன் என்று அழைக்கப்படும் சிவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(28)

சந்திரசேகரா, வரம் வேண்டுபவருக்கு வரம் அருள்பவனே, வேள்வியில் விறகாகவும், அரிசியாகவும், நெய்யாகவும், குசப்புல்லாகவும் இருப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(29) எல்லையற்ற சக்தி கொண்டவனே, நாகபாசத்தை ஆயுதமாகக் கொண்டவனே, துதிக்கத்தக்க பல்வேறு வடிவங்களைக் கொண்டவனே, பத்ரபானத்தை விரும்புபவனே, உன்னைநான் வணங்குகிறேன்.(30)

சுடலையில் வசிப்பவனே, ஜயசப்தத்தை விரும்புபவனே, இதுவரை இல்லாத ஆற்றலை வெளிப்படுத்த விரும்புபவனே, பலம், வீரம் ஆகியவற்றின் உடல்வடிவமாகத் திகழ்பவனே,(31) மங்கலப் பொருட்களை விரும்புபவனே, மங்கலமிக்கவனே, மஹாகோரமாக இருந்தாலும் கவர்ச்சிமிக்க மங்கல வடிவைக் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(32)

மணிகளை விரும்புபவனே, உன்னையும், உன் தேரையும் மணிகளால் அலங்கரிப்பவனே, பகைவரை எதிர்க்கும்போது கடும் வடிவை வெளிப்படுத்த விரும்புபவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(33) உடையற்ற வடிவில் நிறைவடைந்து உடையின்றிச் செல்பவனே, உயிரினங்கள் அனைத்தின் உறைவிடமாகத் திகழ்பவனே, எங்கும் இன்பமாக வசிப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(34) உயிரினங்கள் அனைத்தின் உயிராகவும், ஆன்மாவாகவும் திகழ்பவனே, உன்னை வழிபடுபவர்களுக்கு அனைத்து வகை மாய வளங்களையும் அருள்பவனே, வாமனதேவா, மஹாதேவா, உன்னை நான் வணங்குகிறேன்.(35)

எந்தச் சொற்களால் உன் மகிமைகளை முழுமையாகச் சொல்ல முடியும்? எவனால் உன் மகிமைகளை முழுமையாகச் சொல்ல முடியும்? எவனுடைய நாவால் உன் புகழை முறையாய் விளக்க முடியும்?(36) ஹரனே, பகவானே, என் குற்றங்களைப் பொறுப்பாயாக. நான் உன் பக்தன் என்பதை அறிந்து என்னைக் காப்பாயாக. சர்வபூதேசா, சர்வாத்மனா, உலகில் உள்ள அனைவரின் நன்மைக்காக நீ செயல்படுவாயாக. பக்தர்களிடம் அன்பு கொண்ட நீ அவர்களுக்குப் புகலிடம் அளிப்பாயாக" {என்றான் கிருஷ்ணன்}".(37,38) 

பவிஷ்ய பர்வம் பகுதி – 62ல் உள்ள சுலோகங்கள் : 38

மூலம் - Source

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்