Tuesday 29 December 2020

கிருஷ்ணனின் மகிமை | விஷ்ணு பர்வம் பகுதி – 159 – 103

(கிருஷ்ணஸ்துதி)

The same subject continued | Vishnu-Parva-Chapter-159-103 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் பெருமைகளை முழுமையாகவும், விரிவாகவும் சொன்ன நாரதர்...


Yashoda and Krishna

நாரதர் {உக்ரசேனனிடமும், யாதவர்களிடமும்}, "முரனின் {முருவின்} பாசக்கயிறுகள் அறுக்கப்பட்டன, நிசும்பனும், நரகனும் கொல்லப்பட்டனர், பிராக்ஜோதிஷத்திற்குச் செல்லும் சாலை ஆபத்துகள் அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டது.(1) செருக்குமிக்க உலக மன்னர்களும் கூட இந்தச் சூர குல வழித்தோன்றலுடைய (கிருஷ்ணனது) வில்லின் நாணொலியையும், பாஞ்சஜன்ய சங்கின் ஒலியையும் கேட்டுப் போரில் அச்சமடைந்தனர்.(2) விருஷ்ணிகளில் முதன்மையான இந்தக் கேசவன், தக்காண {தென்னகத்தைச் சேர்ந்த} தேர் வீர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான ருக்மியை எளிதில் வீழ்த்தி ருக்மிணியை அபகரித்துச் சென்றான்.(3) சங்கு சக்கரக் கதாதாரியான இந்த ஹரி, சூரியனைப் போன்ற பிரகாசமிக்கதும், மேக முழத்தைப் போன்ற சடசடப்பொலியை உண்டாக்குவதுமான தேரில் போஜனின் மகளை {பீஷ்மகனின் மகளான ருக்மிணியைத்} தன் வீட்டிற்குக் கொண்டு சென்று, திருமணம் செய்து கொண்டான்.(4)

இவன் ஜாருதி நகரில் ஆஹ்விருத்தி, கிராதன், சிசுபாலன் ஆகியோரை வீழ்த்தி, படைவீரர்களுடன் கூடிய தந்தவக்ரன், சததன்வன் ஆகியோரை வென்றான்.(5) இவன் கோபத்தால் தூண்டப்பட்டவனாக இந்திரத்யும்னன், யவனன் {காலயவனன்}, கசெருமான் ஆகியோரைக் கொன்றான். கனமான {சாரங்க} வில்லைக் கொண்ட இவன் (கிருஷ்ணன்) சௌபத்தின் தலைவனான மன்னன் சால்வனையும் கொன்றான்.(6) தாமரைக் கண்ணனான இந்தப் புருஷோத்தமன், ஆயிரக்கணக்கான மலைகளைச் சிதறடித்துவிட்டுத் தன் சக்கராயுதத்தால் தியுமத்சேனனைத் தாக்கினான் {கொன்றான்}.(7) புலியைப் போன்று துணிவுமிக்கவனும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மகேந்திர மலையின் சிகரத்திற்குச் செல்லவல்லவனுமான இவன், அங்கே திரிந்து கொண்டிருந்த ராவணனின் தொண்டர்களை {ராட்சசர்களைக்} கொன்றான்.(8) சாரங்கபாணியான இந்தக் கிருஷ்ணன், இராவதி நகரில் நடந்த போரில் அக்னி தேவனையும், சூரிய தேவனையும் போலப் போரிட்ட பெரும்போஜர்களான கோபதியையும், தாலகேதுவையும் கொன்றான்.(9) இந்தக் கிருஷ்ணன், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் டிம்பகன், ஹம்சன் ஆகியோரையும் அவர்களின் தொண்டர்களையும் கொன்றான்[1].(10) உயரான்மாவான இந்தக் கேசவன் (கிருஷ்ணன்), வாராணசியை {காசியை} எரித்தான். இவன் காசியின் மன்னனுடன் சேர்த்து அவனது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையும் கொன்றான்[2].(11)

[1] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "அக்ஷப்ரபாதனம் எனும் இடத்தில் வைத்துக் கொன்றான் என்று நீலகண்டர் உரை குறிப்பிடுகிறது" என்றிருக்கிறது.

[2] 6-11 வரையுள்ள ஸ்லோகங்களின் பொருள் மூன்று பதிப்புகளையும் ஒப்புநோக்கித் திருத்தப்பட்டது.

அற்புதச் செயல்களைச் செய்பவனான கிருஷ்ணன், கூர்முனை கொண்ட கணைகளால் யமனை வென்று இந்திரசேனனின் மகனை விடுவித்தான்.(12) இந்தக் கிருஷ்ணன், (நீருக்கடியில் உள்ள) லோஹிதக்கூடம் சென்று நீர்வாழ் விலங்குகள் அனைத்துடன் கூடியவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான வருணனைப் போரில் வென்றான்.(13) இந்திரனின் மாளிகைக்குச் சென்ற இவன், பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களால் பாதுகாக்கப்பட்ட பாரிஜாத மரத்தை அபகரித்துச் சென்று அவர்களின் மன்னனை {இந்திரனை} அலட்சியம் செய்தான் {அவமதித்தான்}.(14) நுண்ணறிவுமிக்க இந்த ஜனார்த்தனன், பாண்டிய, பௌண்டர, கலிங்க, மாத்ஸ்ய, வங்க மன்னர்களைக் கொன்றான்.(15) இவன் {கிருஷ்ணன்}, பெருஞ்சக்திவாய்ந்த நூற்றுக்கணக்கான மன்னர்களைக் கொன்று தன்னுடைய அழகிய ராணியான காந்தாரியை மணந்து கொண்டான்.(16) ஆனால் இந்தத் தலைவன் மதுசூதனன், காண்டீபதாரியும், பாரதர்களில் முதன்மையானவனும், குந்தியின் முன் விளையாடுபவனுமான அர்ஜுனனுக்கே வெற்றி மகுடம் சூட்டினான்[3].(17) மனிதர்களில் முதன்மையான இவன், {அர்ஜுனனின் மூலம்} போரில் துரோணர், துரௌணி {அஸ்வத்தாமன்}, கர்ணன், பீஷ்மர், சுயோதனன் {துரியோதனன்} ஆகியோரையும், பிற வீரர்களையும் வீழ்த்தினான்.(18) சக்திவாய்ந்தவனும், சங்கு சக்கரக் கதாதாரியுமான இந்த ஹரி, பப்ருவை {அக்ரூரனை} மகிழ்ச்சி கொள்ளச் செய்வதற்காகச் சௌவீர மன்னனின் மகளை வலுக்கட்டாயமாக அபகரித்துச் சென்றான்.(19) இந்தப் புருஷோத்தமன், குதிரைகள், தேர்கள், யானைகளுடன் மொத்த பூமியையும் வைணுதாரி {வேணுதாரியின் மகன்} ஒடுக்கியபோது பெருங்கவனத்துடன் அவனை வீழ்த்தினான்.(20)

[3] சித்திரசாலை பதிப்பில், "மதுசூதனனான இந்தத் தலைவன், பாரதர்களில் சிறந்தவனும், போரில் எப்போதும் விளையாடுபவனுமான காண்டீபதாரியை இதே வகையில் குந்தியின் முன் வெற்றியாளனாக்கினான்" என்றிருக்கிறது. அஃதாவது, "இவ்வளவு சாதனைகளையும் படைத்த தானே வெற்றியாளனாக இருப்பினும் அர்ஜுனனுக்கே அந்த மதிப்பை அளித்தான்" என்பது இங்கே பொருள். உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அப்படியே காண்டீப விற்கையன் விளையாடுகிற அர்ஜுனனைக் குந்தி தேவி முன்னிலையில் மதுஸூதனன் ஜயித்தான்" என்றிருக்கிறது. இவ்வாறு அர்ஜுனனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் போர் நடந்ததாக மஹாபாரதத்திலோ, இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஹரிவம்சத்திலோ சொல்லப்படவில்லை. இவ்வாறு உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில் மட்டுமே காணப்படுகிறது. சித்திரசாலை பதிப்பிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ இவ்வாறு சொல்லப்படவில்லை.

இந்த மாதவன் தன்னுடைய முற்பிறவியில் குள்ளனின் வடிவை ஏற்று {வாமனனாக} தவத்தின் மூலம் சக்தி, பலம், ஆற்றல் ஆகியவற்றை அடைந்து, பலியிடமிருந்து மூவுலகங்களையும் அபகரித்தான்.(21) பிராக்ஜோதிஷ நகரத்தில் வஜ்ரங்கள், கதாயுதங்கள், வாள்கள் ஆகியவற்றுடன் கூடிய தானவர்களால் இவன் தாக்கப்பட்டபோதும் காலனால் இவனை நெருங்க முடியவில்லை.(22) பலியின் மகனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், ஆற்றல்மிக்கவனும், செல்வந்தனுமான பாணனும் அவனுடைய தொண்டர்களும் {அசுரர்களும்} இந்தக் கிருஷ்ணனால் வீழ்த்தப்பட்டனர்.(23) பெருஞ்சக்திவாய்ந்தவனான இந்த ஜனார்த்தனன், நீண்ட கரங்களைக் கொண்ட கம்சனின் அமைச்சர்களான பீடன், பைதிகன் அஸிதோமான் ஆகியோரையும் கொன்றான்.(24) பெருஞ்சிறப்புமிக்கவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான இந்த மாதவன், மனிதர்களின் வடிவில் இருந்த ஜிரும்பன், ஐராவணன், விரூபன் என்ற தைத்தியர்களைக் கொன்றான்.(25) இந்தத் தாமரைக் கண்ணன் (கிருஷ்ணன்), பெருஞ்சக்திவாய்ந்த நாகமன்னன் காளியனை நீர்நிலையில் வீழ்த்திக் கடலுக்கு அனுப்பினான்.(26) மனிதர்களில் முதன்மையான இந்த ஹரி, விவஸ்வானின் மகனான யமனை வென்று, சாந்தீபனியின் மகனை இறந்த நிலையில் இருந்து உயிரோடு மீட்டான்.(27)

ஓ! மன்னா {உக்ரசேனா}[4], இவ்வகையிலேயே பேரான்மாவான இவன், பிராமணர்களுக்கும், தேவர்களுக்கும் தீங்கிழைக்கும் தீய ஆன்மாக்களைத் தண்டிக்கிறான்.(28) பூமியின் மகனான நரகனைக் கொன்று, {அவனிடமிருந்த} காது குண்டலங்களைக் கொண்டு வந்து, வஜ்ரதாரியை மகிழ்விப்பதற்காக அதைத் தேவர்களின் அன்னையிடம் {அதிதியிடம்} கொடுத்தான்.(29) பெருஞ்சிறப்புமிக்கவனும், உலகங்கள் அனைத்தையும் ஆள்பவனுமான தலைவன் விஷ்ணு, தைத்தியர்களுக்குப் பயங்கரனாகவும், தேவர்களுக்கு அச்சமற்ற நிலையை ஏற்படுத்துபவனுமாக இருக்கிறான்.(30) இவன், பல்வேறு வேள்விகளைச் செய்தும், தேவர்களின் பெரும்பணிகளை நிறைவேற்றியும் மனிதர்களுக்கு மத்தியில் அறத்தை நிறுவிவிட்டு தன் உலகிற்குத் திரும்பிச் செல்வான்.(31) பெருஞ்சிறப்புமிக்க இந்தக் கிருஷ்ணன், அதன் பிறகு ரிஷிகளால் விரும்பப்படும் போகவதி, துவாரகை ஆகிய நகரங்களைப் பெருங்கடல் விழுங்குமாறு செய்வான்.(32) பல்வேறு ரத்தினங்களாலும், வேள்விக்களங்களாலும் நிறைந்த துவாரகா நகரம், தன் தோட்டங்களுடன் {நந்தவனங்களுடன்} வருணனின் வசிப்பிடத்திற்குள் {கடலுக்குள்} புகும்.(33) சாரங்கபாணியான கிருஷ்ணனின் விருப்பத்தை அறிந்த பெருங்கடல், வாசுதேவனால் கட்டப்பட்டதும், சூரியனின் வசிப்பிடத்திற்கு ஒப்பானதுமான இந்தத் துவாரகா நகரத்தைப் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில் மூழ்கச் செய்யும்.(34) மதுசூதனனைத் தவிர வேறு தேவர்களாலும், அசுரர்களாலும், மனிதர்களாலும், வேறு எவராலும் இங்கே வாழ முடியாது.(35)

[4] இங்கே மன்னா என்ற சொல் நாரதர் சொல்வதாகும். எனவே இஃது உக்சேனனுக்குச் சொன்னதாகக் கொள்ளப்படுகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் ஜனமேஜயன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்ற பதிப்புகளை ஒப்பிட்டு இது திருத்தப்பட்டது.

நாராயணனான இந்த விஷ்ணு, இவ்வாறு பல்வேறு சிறந்த வழிமுறைகளைத் தாசார்ஹர்களின் மத்தியில் நிறுவிவிட்டு, சோமன், சூரியனுடன் தன்னைக் கலப்பான்.(36) சிந்தனைக்கு அப்பாற்பட்டவனும், ஒப்பற்றவனுமான இவன் விரும்பியவாறு எங்கும் செல்லவல்லவனும், புலன்களை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டவனுமாக இருக்கிறான்.(37) நீண்ட கரங்களைக் கொண்ட இந்த மதுசூதனனை எவராலும் அளவிட முடியாது; இவனது அண்ட வடிவுக்கு ஒப்பாகவோ, மேம்பட்டதாகவோ வேறு ஏதும் கிடையாது.(38) இவ்வகையிலேயே இவன் நூறாயிரம் முறை புகழ்ந்து துதிக்கப்படுகிறான். ஆனால் எவராலும் அவனது பணிகளின் எல்லையைக் காண முடிந்ததில்லை.(39) பெரும் நுண்ணறிவுமிக்கவரும், பெரும் யோகியுமான வியாசர், அனைவரின் சாட்சியாக இருந்து, தாமரைக்கண்ணனான கேசவன் குழந்தைப் பருவத்திலும், இளமையிலும் சங்கர்ஷணனின் உதவியிடன் செய்த செயல்கள் அனைத்தையும், தவச் சக்தியின் மூலம் பெருஞ்சக்தி கொண்ட தமது கண்களின் மூலம் கண்டு ஏற்கனவே உரைத்திருக்கிறார்" என்றார் {நாரதர்}.(40,41)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தெய்வீக முனிவரான நாரதர், தேவர்களின் மன்னனுடைய ஆணையின் பேரில் கோவிந்தனின் மகிமைகளை இவ்வாறு பாடிவிட்டு, யாதவர்களால் துதிக்கப்பட்டவராகத் தேவலோகத்திற்குச் சென்றார்.(42) அதன்பிறகு, மதுசூதனனான கோவிந்தன், விருஷ்ணிகளுக்கும், அந்தகர்களுக்கும் மத்தியில் செல்வங்களையும், ரத்தினங்களையும் முறையே பகிர்ந்தளித்தான்.(43) உயரான்மாக்களான யாதவர்களும் அவற்றைப் பெற்றுக் கொண்டு ஏராளமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்து கொண்டு துவாரகா நகரத்தில் வாழத்தொடங்கினர்" என்றார் {வைசம்பாயனர்}.(44)

விஷ்ணு பர்வம் பகுதி – 159 – 103ல் உள்ள சுலோகங்கள் : 44
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்