Tuesday 14 April 2020

பறவைகளின் கதை | ஹரிவம்ச பர்வம் பகுதி – 23

(பித்ரு கல்பம் - 7 | ஹம்ஸ வர்ணனம்)

The story of the birds | Harivamsa-Parva-Chapter-23 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பறவைகளின் யோக நிலையைக் கண்டு நாணமடைந்த மன்னன் விப்ராஜன்; தன் மகன் அணுஹனை அரியணையில் ஏற்றியது; பிரம்மதத்தனைப் பெற்ற அணுஹன்; பிரம்மதத்தனின் அமைச்சர்கள்; ஸ்ரோத்ரிய பிராமணர்களாகப் பிறந்த மற்ற நான்கு வாத்துகள்; தந்தையைப் பிரம்மதத்தனிடம் செல்லுமாறு தூண்டிவிட்டு நற்கதியை அடைந்த நால்வர்...

மார்க்கண்டேயர் {பீஷ்மரிடம்}, "எப்போதும் யோகம் பயில்பவையும், மானஸத் தடாகத்தில் திரிபவையும், பத்மகர்ப்பன், அரவிந்தாக்ஷன், க்ஷீரகர்ப்பன், ஸுலோசனன், உருபிந்து, ஸுபிந்து, ஹைமகர்ப்பன் என்ற பெயர்களைக் கொண்ட அந்த ஏழு வாத்துகளும் {அன்னப்பறவைகளும்}, எப்போதும் காற்றையும், நீரையும் உண்டு தங்கள் உடல்களைப் பேணி வாழ்பவையாக இருந்தன[1].(1,2) அந்த நேரத்தில், மன்னன் {விப்ராஜன்} தன் மேனி எழிலில் ஒளிர்ந்து கொண்டிருப்பவனும், தன்னுடைய பெண் துணைவிகளால் சூழப்பட்டவனுமாக, நந்தனம் எனும் இன்பத் தோட்டத்தில் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போல அந்தக் காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(3) அந்தப் பறவைகளின் பேராவல் மற்றும் வேறு புற அடையாளங்கள் ஆகியவற்றின் மூலம் அவை யோகியர் என்பதை அந்த மன்னன் {விப்ராஜன்} கண்டான். பிறகு வெட்கத்தாலும்[2], அதை நினைத்துப் பார்த்தும் தன் நகரத்திற்குத் திரும்பிச் சென்றான்.(4)



[1] ஹரிவம்சபர்வம் 21ம் பகுதி 36ம் ஸ்லோகத்தில் இந்த வாத்துகளுக்கு ஏற்கனவே வேறு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. இப்போது மீண்டும் இவற்றுக்கு ஏன் புதிய பெயர்கள் சொல்லப்படுகின்றன என்பது தெரியவில்லை. ஒருவேளை இஃது அந்த வாத்துகளின் மறுபெயர்களா என்பதும் தெரியவில்லை. தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில் இங்கே மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளது போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் மேலே குறிப்பிடப்படும் பெயர்கள் ஏதும் சொல்லப்படவில்லை. 
[2] "அவன் ’இவை பறவைகள், மேலும் இவை யோகம் பயில்கின்றன, அதே வேளையில் மனிதனான நான் இன்பத்தை மட்டுமே நாடுகிறேன்’ என்று நினைத்தான். இவ்வாறு தன்னொழுக்கத்தில் வெட்கமடைந்தவனாக அவன் தன் நகரத்திற்குத் திரும்பிச் சென்றான்" என்று மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அவனுக்கு {விப்ராஜனுக்கு} அணுஹன் {அணுஹு} என்ற பெயரில் பெரும் பக்திமானான ஒரு மகன் இருந்தான். அவன் அறநெறியின் சிறு தகவலிலும் தன் கண்களைக் கொண்டவனாக நம்பிக்கையின் பாதுகாவலனாக இருந்தான்.(5) சுகர், திறன்பெற்றவளும், வழிபடத்தகுந்தவளும், அனைத்து மங்கலக் குறிகளையும் கொடையாகக் கொண்டவளும், நல்லியல்பின் குணத்துடன் கூடியவளுமான தன் மகள் கிருத்வியை {மனைவியாக} அவனுக்கு {அணுஹனுக்கு} அளித்தார்.(6) ஓ! பீஷ்மா, முன்னர் ஸனத்குமாரர் அந்த அழகிய காரிகையை, பார்ஹிஷதஸ் என்ற பித்ருவின் மகளான பீவரி என்று குறிப்பிட்டார்.(7) அவள் வாய்மை நிறைந்தவளாகவும், கட்டுப்பாடற்ற மனங்களைக் கொண்டோரின் புத்திக்கு அப்பாற்பட்டவளாகவும், ஒரு யோகியின் மனைவியாகவும், ஒரு யோகியின் தாயாகவும், தானே ஒரு தவசியாகவும் இருந்தாள்.(8)

பித்ருக்களைக் குறித்து முன்பு சொன்னபோதே நான் இதை விளக்கிச் சொன்னேன். அணுஹனை அரியணையில் அமரச் செய்து, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் குடிமக்களை வரவேற்று, பிராமணர்களை அருள்பெறத்தக்க சடங்குகள் செய்ய வைத்த மன்னன் விப்ராஜன், அந்த வாத்துகள் திரிந்து கொண்டிருந்த மானஸத் தடாகத்திற்குக் கடுந்தவங்களைச் செய்வதற்காகச் சென்றான்.(9,10) ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, உணவைத் தவிர்த்து, காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த அவன், அந்தத் தடாகத்தின் ஒரு பக்கத்தில் தவம் செய்யத் தொடங்கினான்.(11) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அவற்றில் {அந்த வாத்துகளில்} ஒன்றுக்கு மகனாகப் பிறந்து, யோகத்தை அடைய வேண்டும் என்பது அவனது தீர்மானமாக இருந்தது.(12)

இந்தத் தீர்மானத்தைச் செய்து கொண்டு, கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கிய அவன் அங்கே சூரியனைப் போல ஒளிரத் தொடங்கினான்.(13) ஓ! குருக்களில் முதன்மையானவனே, தவசிகளான நான்கு வாத்துகளும், யோகப் பாதையில் இருந்து விலகிய மற்ற மூன்றும் உயிர்விட்ட இடமான அந்தக் காடானது விப்ராஜனால் பிரகாசமடைந்ததன் காரணமாக வைப்ராஜம் என்ற பெயரில் கொண்டாடப்பட்டது.(14,15) (பறவைகளாகப் பிறந்திருந்த) அந்த உயரான்ம மனிதர்கள் எழுவரும் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டவர்களாக, பிரம்மதத்தன் முதலிய வேறு பெயர்களில் காம்பில்ய நகரத்தில் பிறந்தனர்.(16)

அவர்களில் நால்வர், ஞானம், தியானம் மற்றும் தவம் ஆகியவற்றின் மூலம் புனித வேதங்களிலும், வேதாங்கங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக {முற்பிறவியைக் குறித்த} (நல்ல) நினைவு சக்தி கொண்டவர்களாக இருந்தனர். மற்ற மூவரும் {முற்பிறவியைக் குறித்த} அறியாமையுடனே இருந்தனர்.(17) ஸ்வதந்த்ரன் {என்ற வாத்து}[3], பிரம்மதத்தன் என்ற பெயரில் அணுஹனின் சிறப்புமிக்க மகனாகப் பிறந்தான். முற்பிறவியில் பறவையாக இருந்தபோது கொண்ட தீர்மானத்தின்படியே அவன் ஞானம், தியானம் மற்றும் தவத்துடன் கூடியவனாகவும், வேதம் மற்றும் வேதாங்கங்களில் தேர்ச்சி பெற்றவனாகவும் இருந்தான்.(18) சித்ரதர்சியும் {சித்ரதர்சனனும்}, ஸுநேத்ரனும் ஸ்ரோத்ரிய பிராமணர்களாகவும், வேதங்களையும், அதனுடன் கூடிய உபவேதங்களையும் நன்கு கற்றவர்களாகவும் பாப்ரவ்ய மற்றும் வத்ஸ குலங்களில் பிறந்தனர்.(19) முற்பிறவியில் பிரம்மதத்தனுடன் வாழ்ந்து வந்த அவர்கள் இப்போது அவனுடைய துணைவர்களானார்கள். பிறர் பாஞ்சாலன், பாஞ்சிகன், மற்றும் கண்டரீகனாகப் பிறந்தனர்[4].(20)

[3] 1ம் ஸ்லோகத்தில் வேறு பெயர் சொல்லப்பட்டாலும், இங்கே சென்ற அத்யாயத்தில் சொல்லப்பட்ட பெயரே பயன்படுத்தப்படுகிறது.
[4]தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "கௌசிகரின் ஏழு மகன்களில் ஐந்தாமவனான கவி, அனைத்துப் பிறவிகளிலும் ஐந்தாம் சகோதரனாகவே பிறந்து ஏழாம் பிறவியில் பாஞ்சாலனாகப் பிறந்தான். அதே வேளையில் ஆறாமவனான கஸ்ரூமன் கண்டரீகனாகப் பிறந்தான். இந்த இருவரும் மன்னனுடைய அமைச்சர்களின் மகன்களாகப் பிறந்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஐந்தாமவன் பாஞ்சாலன் என்று அறியப்பட்டான். ஆறாமவன் கண்டரீகன் ஆவான்" என்றிருக்கிறது. பாஞ்சாலன் என்பதன் அடிக்குறிப்பின் இவன் பாஞ்சிகன் என்றும் அழைக்கப்பட்டான்" என்றிருக்கிறது.

அவர்களில் பாஞ்சாலன் ரிக் வேதத்தை நன்கறிந்தவனாக (இருந்தபடியால்) ஓர் ஆசானின் கடமைகளைச் செய்து வந்தான். இரு வேதங்களை நன்கறிந்தவனான கண்டரீகன் சந்தயோகனாகவும் {சாமவேதம் ஓதுபவனாகவும்}, அத்வர்யுவாகவும் {யஜுர் வேதம் அறிந்த பிராமணனாகவும்} செயல்பட்டான்.(21) அணுஹனின் மகனான மன்னன் (பிரம்மதத்தன்), விலங்குகள் அனைத்தின் குரல்களையும் நன்கு அறிந்திருந்தான். அவன் பாஞ்சாலன் மற்றும் கண்டரீகனின் நல்ல நண்பனாக இருந்தான்.(22) அவர்கள் மோசமான இன்பங்களுக்கு அடிமைகளாக இருந்தாலும், மாசற்றவையான அவர்களது நற்செயல்களின் விளைகளால் அறநெறி, தற்காலிக லாபங்கள் {உலகப் பொருள்}, ஆசைகள் ஆகியவற்றை அறிந்தவர்களாக இருந்தனர்.(23) அரசமுனிகளில் முதன்மையானவனான அணுஹன், பாவமற்றவனான பிரம்மதத்தனை அரியணையில் அமர்த்திவிட்டு, மிகச் சிறந்த நிலையை அடைந்தான்.(24)

தேவலரின் மகளான பிரம்மதத்தனின் மனைவி, ஒரு சிறந்த பெண்துறவியாக இருந்தாள். அவளுடைய பெயர் ஸன்னதி ஆகும்.(25) இவ்வாறே பிரம்மதத்தன் உயர்ந்த மனம் கொண்டவளும், தவசியும், அவனுடைய மனநிலையையே கொண்டவளும், தேவலரின் மகளுமான சன்னதியை அடைந்தான்.(26) ஓ! பரதனின் வழித்தோன்றலே, பாஞ்சிகன் அவனுடைய ஏழாம் பிறவியில் ஐந்தாமவனாகவும், கண்டரீகன் ஆறாமவனாகவும், பிரம்மதத்தன் ஏழாமவனாகவும் இருந்தனர். எஞ்சிய {நான்கு} வாத்துகள் காம்பில்ய நகரத்தின் வறிய ஸ்ரோத்ரிய குடும்பத்தில் உடன் பிறந்தோராகப் பிறந்திருந்தனர்.(27,28) அவர்களுடைய பெயர்கள் திருதிமான், ஸுமனன், வித்வான் மற்றும் தத்வதர்சி என்பனவாகும். அவர்கள் வேதங்களை நன்கறிந்தவர்களாகவும், கூரிய அவதானத்தைக் கொடையாகக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(29)

அவர்கள் அனைவரும் தங்கள் மாசற்ற பிறவிகள் குறித்த நினைவைக் கொண்டிருந்தனர். அவர்கள் யோகப் பயிற்சிகளின் நிறைவை அடைந்து, தங்கள் தந்தையை அழைத்து, அவரை விட்டுச் செல்வதற்கு முன்பு, அவர் அவர்களிடம், "உண்மையில், என்னைத் துறப்பதன் மூலம் நீங்கள் பெருங்கொடுமையை இழைத்தவராவீர். என் வறுமையைப் போக்காமல், சந்ததியைப் பெருக்கி, கயையில் சிராத்தம் செய்து, (என் முதிர் வயதில்) என்னைக் கவனித்து என ஒரு மகன் செய்ய வேண்டிய கடமைகளால் என்னை நிறைவடையச் செய்யாமல் நீங்கள் (அனைவரும்) என்னை விட்டு எவ்வாறு செல்லலாம்?" என்று கேட்டார்.(30-32)

அந்த இருபிறப்பாளர்கள் தங்கள் தந்தையிடம் மீண்டும், "நீர் உயிர்வாழ்வதற்கு உரிய ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம்.(33) பாவமற்ற மன்னனான பிரம்மதத்தனிடம் நீர் சென்று, பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்லோகத்தை {இரண்டு ஸ்லோகங்களை} அவனது முன்னிலையிலும், அவனது அமைச்சர்கள் முன்னிலையிலும் உரைப்பீராக.(34) அப்போது அவன் பெரும் மகிழ்ச்சியடைந்து, கிராமங்கள் பலவற்றையும், நீர் விரும்பும் பொருட்களையும் உமக்கு அளிப்பான். எனவே, ஓ! தந்தையே, அங்கே செல்வீராக" என்றனர்.(35)

இதைச் சொல்லிவிட்டுத் தங்கள் தந்தையை வழிபட்ட அவர்கள், தங்கள் யோகப் பயிற்சிகளின் விளைவால் உண்டான பேரின்பத்தை {முக்தியை} அடைந்தனர்" {என்றார் மார்க்கண்டேயர்}.(36)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 36
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்